Tuesday, February 24, 2009

லேசான சரிவுடன் முடிந்த பங்கு சந்தை

சர்வதேச அளவில் பங்கு சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இன்று காலை பெரும் சரிவுடன் ஆரம்பித்த மும்பை பங்கு சந்தை, மதியத்திற்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பின்னர் ஓரளவு சரியானது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 21.15 புள்ளிகள் ( 0.24 சதவீதம் ) மட்டும் குறைந்து 8,822.06 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 2.55 புள்ளிகள் ( 0.09 சதவீதம் ) மட்டும் குறைந்து 2,733.90 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ஹெச்.டி.எஃப்.சி., செய்ல், பார்தி ஏர்டெல், எஸ்.பி.ஐ, டி.சி.எஸ், ஹெச்.டி.எஃப்.சி.பேங்க், டாடா ஸ்டீல், விப்ரோ, மற்றும் ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ் ஆகிய நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. ஓ.என்.ஜி.சி.,என்.டி.பி.சி., டி.எல்.எஃப், பெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரான்பாக்ஸி, கிராசிம், மாருதி, ஐசிஐசிஐ பேங்க், டாடா பவர், அம்புஜா சிமென்ட்ஸ், மற்றும் எல் அண்ட் டி நிறுவன பங்குகள் விலை உயர்ந்திருந்தன.
நன்றி : தினமலர்


12 வருடங்களுக்குப்பின் அமெரிக்க பங்கு சந்தைகளில் கடும் சரிவு

வீழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்க வங்கிகளை காப்பாற்றும் முயற்சியில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தும் கூட, அந்நாட்டின் பங்கு சந்தைகள் நேற்று கடும் வீழ்ச்சியை சந்தித்தன. கடந்த அக்டோபர் 28, 1997 க்குப்பிறகு மிகப்பெரிய சரிவாக, டவ் ஜோன்ஸ் இன்டஸ்டிரியல் ஆவரேஜ் 250.9 புள்ளிகள் ( அல்லது 3.41 சதவீதம் ) சரிந்திருந்தது. ஆனால் வங்கிகளின் பங்குகள் விலை உயர்ந்து தான் இருந்தது. சிட்டி பேங்க் இன் பங்குகள் 10 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. பேங்க் ஆப் அமெரிக்காவின் பங்குகள் 3 சதவீதம் உயர்ந்திருந்தது. அமெரிக்க வங்கிகளை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்ற அமெரிக்க அரசு முடிவு செய்திருந்த போதும் கூட, வங்கிகள் தனியார் வசமே இருக்கட்டும் என்று தான் விரும்புகின்றன. ஏற்கனவே வந்த தகவலின் படி, சிட்டி குரூப்பின் குறிப்பிடப்பட்ட பங்குகளை அமெரிக்க அரசு வாங்கிக்கொண்டு அதை தேசியமயமாக்கி விடும் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது அவ்வாறு சொல்லவில்லை. டெக்னாலஜி துறையை சார்ந்திருக்கும் நாஸ்டாக்கிலும் நேற்கு 53.5 புள்ளிகள் ( அல்லது 3.71 சதவீதம் ) குறைந்திருந்தது. ஐரோப்பிய சந்தைகளான லண்டன் எஃப் டி எஸ் ஸி 100 ன் புள்ளிகள் 1 சதவீதமும், பிரான்சின் கேக் 0.8 சதவீதமும், பிராங்பர்ட்டின் டாக்ஸ் 2 சதவீதமும் குறைந்திருந்தன.
நன்றி : தினமலர்


புதுச்சேரி எம்.ஆர்.எஃப். நிறுவனத்தில் லாக் அவுட்

சென்னையை சேர்ந்த எம்.ஆர்.எஃப்.டயர் கம்பெனி, அதன் புதுச்சேரி தொழிற்சாலையில் லாக்அவுட் செய்திருக்கிறது. தொழிற்சாலையில் ஏற்பட்டிருக்கும் தொழிலாளர்கள் பிரச்னை காரணமாக லாக் அவுட் செய்திருப்பதாக மும்பை பங்கு சந்தையில் அது அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 22 ம் தேதி இரண்டாவது ஷிப்ட்டில் இருந்து லாக்அவுட் செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. எம்.ஆர்.எஃப்.,நிறுவனத்திற்கு சென்னை, அரக்கோணம், புதுச்சேரி, கேரளாவில் கோட்டயம், ஆந்திராவில் மேடக் மற்றும் கோவாவில் தொழிற்சாலைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் இருக்கும் அதன் தொழிற்சாலைகளில் ஒரு வருடத்திற்கு மேலாக தொழிலாளர் பிரச்னை இருந்து வருகிறது. அதன் திருவெற்றியூர் தொழிற்சாலை கடந்த 2007 டிசம்பர் மாதத்தில் இருந்தே மூடப்பட்டிருக்கிறது. அங்கு எம்.ஆர்.எஃப்., நிர்வாகம் கொண்டுவந்த நிரந்தர லாக் அவுட் திட்டத்தை தடை செய்ய தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சியை சென்னை ஐகோர்ட் கடந்த வாரத்தில் நிறுத்தி வைத்தது.
நன்றி :தினமலர்