Thursday, October 22, 2009

பெங்களூரூ, கோவை, கொச்சிக்கு பைப் மூலம் சமையல் காஸ்

2010ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் பெங்களூரூ, கோவை, கொச்சி ஆகிய நகரங்களுக்கு பைப் மூலம் சமையல் காஸ் வழங்கப்படும் என கொச்சின் போர்ட் டிரஸ்ட் சேர்மன் எம். ராமசந்திரன் தெரிவித்துள்ளார். பெங்களூரு, கொச்சின், கோவை ஆகிய நகரங்களுக்கு பைப் மூலம் சமையல் காஸ் வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொச்சின் துறைமுகத்தில் இருக்கும் எல்.என்.ஜி., டெர்மினலில் இருந்து (பி.என்.ஜி., - பைபட் நேச்சுரல் காஸ் ) விநியோகிக்கபடும் என அவர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


6500 பேர் நீக்கம்: மகிந்திரா சத்யம் திடீர் அறிவிப்பு

6500 பேரை திடீரென நீக்கியுள்ளது மகிந்திரா சத்யம் நிறுவனம். சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு செய்த மோசடி காரணமாக தவித்து வந்த அந்நிறுவன ஊழியர்கள், சத்யம் நிறுவனத்தை மகிந்திரா நிறுவனம் நடத்த இருப்பதாக வந்த செய்தியை கேட்டு சந்தோஷம் அடைந்தனர். ஆனால், சத்யம் நிறுவனம் மகிந்திரா நிறுவனத்திற்கு கைமாறிய சில தினங்களில் 8 ஆயிரம் பேரை கட்டாய விடுப்பில் அனுப்பியது மகிந்திரா நிறுவனம். அதன் பின் 1500 பேரை மட்டும் மீண்டும் அழைந்து கொண்ட நிர்வாகம், தற்போது மீதாமுள்ள 6500 பேருக்கு இமெயிலில் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாகவும், அவர்களின் கணக்குகளை முடிந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப் பட்டு இருந்தது. இதுகுறித்த அந்நிறுவனம் தெரிவிக்கும் போது, ஊழியர்களை தற்காலிகமாகவே வேலையில் இருந்து நீக்கி உள்ளோம் என்று கூறியுள்ளது.
நன்றி : தினமலர்


கோடிகளைக் குவிக்கும் குவாத்ரோச்சி!

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த குடும்பத்தினரைச் சுற்றிச்சுற்றி வந்த போஃபர்ஸ் ஊழல் வழக்கு தொடர்பான உண்மைகளைக் குழிதோண்டிப் புதைப்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் சிக்னலுக்காகக் காத்திருக்கிறது மத்திய அரசு.

போஃபர்ஸ் ஊழல் விவகாரத்தில் இத்தாலிய வர்த்தகரான குவாத்ரோச்சி மீதான வழக்கை விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளதாக கடந்த செப்டம்பர் 29-ம் தேதி மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டிவிட்டால் போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் மூலம் இந்தியப் பணத்தை கொள்ளையடித்த ஒரு கும்பலின் கதை எளிதில் முடிந்துவிடும்.

அரசுத் தரப்பினரே குற்றவாளிகளுடன் சேர்ந்துகொண்டு இந்த ஊழல் விவகாரத்தை மூடி மறைக்க நினைக்கும்போது உச்ச நீதிமன்றம் உள்பட எந்த நீதிமன்றம்தான் நீதியை நிலைநாட்ட முடியும்?

உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுவிட்டால் ஊழல் பேர்வழிகள் உச்ச நீதிமன்றமே எங்களுக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது; இது எங்களுக்குக் கிடைத்த வெற்றி; பொய் வழக்குப் போட்டு அரசியல் ரீதியில் எங்களைப் பழிவாங்க நினைத்தவர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள் என்று பேசக்கூடும்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது போஃபர்ஸ் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை வெளிப்படையாகவே பாதுகாத்து வந்தார். ஆனால், 1991-ம் ஆண்டு பிரதமராக வந்த பி.வி. நரசிம்மராவ், ஒருபுறம் குவாத்ரோச்சியைப் பிடிக்க வேண்டும் என்ற சிபிஐயின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்ததுடன் மறுபுறம் குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பியோடவும் உதவினார்.

பின்னர் 1999-ல் குவாத்ரோச்சிக்கு நெருக்கமானவரான சோனியா காந்தி அரசியலில் நுழைந்தார். தனது நாட்டைச் சேர்ந்தவரான குவாத்ரோச்சி நேர்மையானவர் என்று சான்றிதழ் அளித்தார். பின்னர் பத்திரிகையாளர்கள் சோனியா காந்தியைச் சந்தித்தபோது, போஃபர்ஸ் ஊழல் வழக்கில் குவாத்ரோச்சியின் பெயர் அடிபடுகிறதே என்று கேட்டதற்கு, "அவரைச் சந்தேகத்துக்குரிய நபராகத்தான் சிபிஐ கருதுகிறதே தவிர, அவருக்கு இதில் நேரடித் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை' என்று கூறினார்.

மேலும் குவாத்ரோச்சி குற்றவாளி என்பதற்கான ஆதாரங்களை ஆளுங்கட்சியினர்தான் (தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு) அளிக்க வேண்டும் என்றார் சோனியா. போஃபர்ஸ் விவகாரத்தில் குவாத்ரோச்சி பணம் பெற்ற விவகாரம் ஆதாரங்களுடன் இருந்தபோதிலும் வழக்கு பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டது.

இனி போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் குவாத்ரோச்சி பணம் பெற்றது, அதற்கான ஆதாரங்கள் உள்ளிட்ட தகவல்களைச் சற்று நினைவுபடுத்திப் பார்ப்போம்.

1985-ல் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு, பிரிட்டன், ஆஸ்திரியா, ஸ்வீடன் ஆகிய மூன்றில் எந்த நாட்டு பீரங்கிகளை வாங்குவது என்பது தெரியாமல் குழப்பத்தில் இருந்தது. இந்நிலையில் சுவீடனைச் சேர்ந்த போஃபர்ஸ் நிறுவனம் இரண்டு தரகர்கள் மூலம் பேரத்தை முடிக்கத் திட்டமிட்டது. ஆனால், அதன் முயற்சி உடனடியாகப் பலிக்கவில்லை. ஆனால், அந்த ஆண்டின் பிற்பகுதியில் லண்டனைச் சேர்ந்த ஏஇ சர்வீசஸ் (ஏஇஎஸ்) என்ற நிறுவனம் போஃபர்ஸ் நிறுவனத்தை அணுகி ஆயுதப் பேரத்தைச் சுமுகமாக முடித்துத் தருவதாக உறுதியளித்தது.

அதாவது, 1986-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் ஆயுத பேரத்தை முடித்துக் கொடுத்தால் 3 சதவிகித கமிஷன் தர வேண்டும் என்றும் அப்படியில்லை எனில் எதுவும் தர வேண்டாம் என்று, ஏஇஎஸ் நிறுவனம் கூறியது. இதை போஃபர்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இது தொடர்பாக இரு நிறுவனத்துக்கும் இடையே 1985-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி உடன்பாடு ஏற்பட்டது.

ஏஇஎஸ் நிறுவனத்தின் பின்னணியில் ஓர் ஆணோ அல்லது பெண்ணோ செயல்படுகிறார்கள். அவர்களால் ராஜீவ் காந்தி அரசிடமிருந்து ஆயுத விற்பனைக்கான கான்ட்ராக்டைப் பெற்றுத் தர முடியும் என்பது உறுதியாகத் தெரிந்ததால்தான் போஃபர்ஸ் நிறுவனம் அதனுடன் உடன்பாடு செய்துகொண்டது.

சொல்லிவைத்தபடியே ஏஇஎஸ் நிறுவனம் கெடு தேதிக்கு 7 நாள்கள் முன்னதாக, அதாவது மார்ச் 22-ம் தேதி ஆயுத விற்பனை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் பெற்றுவிட்டது. அடுத்த 6 மாதத்துக்குள் அந்த நிறுவனம் முதல்கட்டமாக 7.3 மில்லியன் டாலரைக் கமிஷனாகப் பெற்றது. இந்தப் பேரத்துக்காக அந்த நிறுவனத்துக்குக் கிடைக்க வேண்டிய தொகை 36.5 மில்லியன் டாலர். கமிஷன் பணம் இத்தாலிய வர்த்தகரான குவாத்ரோச்சிக்குச் சென்றதும், பேரத்தின் பின்னணியில் அவர் செயல்பட்டதும் பின்னர் தெரியவந்தது.

போஃபர்ஸ் நிறுவனம் 1986-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி, ஜூரிச்சிலுள்ள நார்டுபினான்ஸ் வங்கியில், ஏஇஎஸ் நிறுவனக் கணக்கில் (வங்கிக் கணக்கு எண்: 18051-53) 7.3 மில்லியன் டாலரைச் செலுத்தியது.

இதற்கு இரண்டு வாரங்கள் கழித்து, அதாவது செப்டம்பர் 16-ம் தேதி ஏஇஎஸ் நிறுவனம் அதிலிருந்து 7 மில்லியன் டாலரை எடுத்து குவாத்ரோச்சி மற்றும் மரியா இருவரின் கட்டுப்பாட்டில் உள்ள கால்பர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் கணக்கில் சேர்த்தது.

1988-ல் போஃபர்ஸ் ஊழல் விவகாரம் விசுவரூபம் எடுத்ததும் குவாத்ரோச்சியும், மரியாவும் அந்தப் பணத்தை வட்டியுடன் எடுத்து வேறு இடங்களில் மறைத்து வைத்தனர். 1988-ம் ஆண்டு ஜூலை 25-ல் 7.9 மில்லியன் டாலரை கால்பர் நிறுவனத்திலிருந்து எடுத்து ஜெனீவாவில் உள்ள வெடல்ஸன் ஓவர்சீஸ் எஸ்ஏ என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தனர். 1990 மே 21-ம் தேதி 9.2 மில்லியன் டாலரை அங்கிருந்து எடுத்து சானல் தீவுகளில் உள்ள ஐஐடிசிஎல் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தனர். பின்னர் அதே ஆண்டு ஜூன் 5-ம் தேதி 2.4 மில்லியன் டாலரை ஸ்விஸ் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்து கார்ஃபின்கோ என்ற வங்கியில் ரோபஸ்டா என்ற ரகசியக் கணக்கில் போட்டனர். ஜூன் 12-ம் தேதி 5.3 மில்லியன் டாலர் ஆஸ்திரியாவில் உள்ள வங்கியில் "அராபிகா', "ரொபஸ்டா', "லக்ஸர்' என்ற ரகசிய கணக்கில் போடப்பட்டது.

பின்னர் 2003 ஜூனில் இன்டர்போல் அமைப்பு குவாத்ரோச்சி, மரியா இருவருக்கும் லண்டனில் உள்ள ஸ்விஸ் வங்கிக் கிளையில் இரண்டு கணக்குகள் 5அ5151516க, 5அ5151516ங மூலம் முறையே 3 மில்லியன் டாலர், 1 மில்லியன் டாலர் இருப்பதைக் கண்டுபிடித்தது. சிபிஐ வேண்டுகோளின் பெயரில் இவ்விரு கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முதன்முறையாகப் பதவியேற்றதும் செய்த முதல்வேலை முடக்கி வைக்கப்பட்ட இந்த வங்கிக் கணக்கை விடுவித்ததுதான். அடுத்த கட்டமாக ஆர்ஜென்டினாவில் பிடித்து வைக்கப்பட்ட குவாத்ரோச்சி தப்பிக்க வழிசெய்தது.

இப்போது இரண்டாவது முறையாகப் பதவியேற்றுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு போஃபர்ஸ் ஊழல் வழக்கை முழுமையாகக் குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதுவும் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன். குவாத்ரோச்சியைப் பாதுகாக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம் அல்ல; இந்த விவகாரத்தின் மூலம் சோனியாவுக்கு எந்தத் தொந்தரவும் வந்துவிடக்கூடாது என்கிற எண்ணம்தான் முக்கிய காரணம்.

1993-ல் குவாத்ரோச்சியின் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனையின்போது சோனியா, மரியா, குவாத்ரோச்சி ஆகிய மூவரும் நெருங்கிய குடும்ப நண்பர்கள் எனத் தெரியவந்தது. அவர்கள் அனைவரும் விடுமுறையை ஒன்றாகக் கழித்ததும், ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்டதும், ஒன்றாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டதும், ஒருவரின் குழந்தைகள் மற்றொருவர் அரவணைப்பில் இருந்து வந்ததும் தெரியவந்தது.

இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் மேலும் சிக்கல் ஏற்படுமே என்பது தெரிந்துதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்த வழக்கைக் கைவிட முடிவு செய்தது.

சுவீடனில் போஃபர்ஸ் வழக்கை விசாரித்த சுவீடன் நாட்டுப் புலனாய்வு அதிகாரியான ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம், இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக சோனியா காந்தியிடம் விசாரிக்க வேண்டும், அவருக்கும் குவாத்ரோச்சிக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஏற்கெனவே இந்திய அரசிடம் தெரிவித்திருந்தார். ஆனால், அதுகுறித்து மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இந்த வழக்கை மூடிமறைப்பதிலேயே ஆர்வம் காட்டி வருகிறது.

இப்போது உள்ள இளந்தலைமுறையினர் போஃபர்ஸ் ஊழல் விவகாரம் வெளியானபோது குழந்தைகளாக இருந்திருப்பார்கள். எனவே அவர்களுக்கு போஃபர்ஸ் ஊழல் 320 மில்லியன் டாலர் தொடர்புடையது என்பது தெரியாது. ஏஇஎஸ் நிறுவனத்துக்கான கமிஷன் 36.5 மில்லியன் டாலர் தொகையும் இதில் அடங்கும். இந்த ஊழல் விவகாரம் வெளியானபோது 20 சதவிகிதத் தொகையே அதாவது 64 மில்லியன் டாலரே வழங்கப்பட்டிருந்தது. ஆயுத ஒப்பந்தத்துக்கான மொத்தத் தொகையில் அப்போது இந்திய அரசு 20 சதவிகிதம் மட்டுமே கொடுத்திருந்ததால் அப்போது வழங்கப்பட்ட கமிஷன் தொகையும் 20 சதவிகிதம்தான். இந்த ஊழல் விவகாரம் வெளியானதால் இந்திய அரசு பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டது. இதையடுத்து கமிஷன் பணமும் கொடுக்கப்படவில்லை.

இப்போது குவாத்ரோச்சி மீதான வழக்கை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் போஃபர்ஸ் நிறுவனத்துக்குச் சேரவேண்டிய 227 மில்லியன் டாலரும், குவாத்ரோச்சிக்கு கமிஷன் பாக்கி 29 மில்லியன் டாலரும் கிடைக்க வழியேற்பட்டுள்ளது.

அதாவது குவாத்ரோச்சிக்கு 29 மில்லியன் டாலர் கமிஷனாகக் கிடைக்கும் என்றால் இந்திய ரூபாயில் அவருக்குக் கிடைக்க இருப்பது ரூ. 140 கோடி. இந்த ஊழல் விவகாரத்தில் கிடைக்கும் மொத்த லஞ்சப் பணத்தை ரூபாயில் கணக்கிட்டால் அது ரூ.600 கோடியைத் தாண்டிவிடும். இதற்காக 20 ஆண்டுகள் காத்திருந்ததில் நஷ்டம் ஒன்றும் இல்லையே?
கட்டுரையாளர் : எஸ். குருமூர்த்தி
நன்றி : தினமணி

மந்திரிக்கு அழகு...

மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல் என்பது மூதுரை. ஆனால் மத்திய அரசில் இடம் பெற்றுள்ள கபில் சிபல், ஜெய்ராம் ரமேஷ் ஆகிய இரு பெரும் அமைச்சர்களின் சமீபத்திய பேச்சுகள், இந்தப் பதவிக்குப் பொருத்தமானவர்களாக இவர்கள் நடக்கவில்லையே என்கிற வேதனையைத்தான் வெளிப்படுத்துகின்றன.

மத்திய அரசில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் மெத்தப்படித்தவர். சிறந்த வழக்கறிஞர். விவாதங்களில் தன்னுடைய கருத்துகளை நயமாக எடுத்துரைப்பவர். ஆனால் இரு சந்தர்ப்பங்களில் அவருடைய பேச்சை அவரே மறுக்கும் அளவுக்கு நேர்ந்திருப்பது என்பது ஒரு தேர்ந்த வழக்கறிஞருக்கும் அழகல்ல; பொறுப்பான அமைச்சருக்கும் அழகல்ல.

சில மாதங்களுக்கு முன்னால், பத்தாவது வகுப்பு மாணவர்களுக்கு இனி பொதுத் தேர்வு தேவையில்லை, அவர்கள் அப்படியே பதினோராவது வகுப்புக்குச் சென்றுவிடலாம் என்று பேசினார். உடனே நாடு முழுக்க அதற்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியது.

கல்லூரிப் படிப்புக்கு விண்ணப்பித்தாலும் வேலைக்குச் சேர விரும்பினாலும் மாணவனுக்குப் படிப்பில் ஆர்வம் இருந்ததா என்பதை அறிய முதலில் பத்தாவது வகுப்பில் அவன் வாங்கிய மதிப்பெண்ணைப் பார்ப்பதும், மேல் படிப்பு படித்திருந்தால் அந்த ஆர்வம் அப்படியே தொடர்ந்திருக்கிறதா என்று ஆராய்வதும் இதுவரை வழக்கமாக இருந்து வருவதை அனைவரும் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து தன்னுடைய கருத்தைத் திரும்பப் பெற்ற அமைச்சர் கபில் சிபல், ""வேண்டாம் என்றால் விட்டுவிடலாம் என்றுதான் சொன்னேன்; இனி தேவையே இல்லை என்று சொல்லிவிடவில்லை; நான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது'' என்று பதில் அளித்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நாட்டில் உள்ள ஐ.ஐ.டி. எனப்படும் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் இடம்பெற்றுள்ள கவுன்சில் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர் கபில் சிபல், அந்தக் கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களைச் சந்தித்தார்.

பன்னிரெண்டாவது வகுப்பு பொதுத் தேர்வில் 60 சதவீதத்துக்கும் மேல் எடுத்தவர்கள்தான் ஐ.ஐ.டி. பொது நுழைவுத் தேர்வு எழுத முடியும் என்று இப்போது நிபந்தனை விதிக்கப்படுகிறது. இனி 80 சதவீத மதிப்பெண்கள் இருந்தால்தான் தேர்வு எழுத முடியும் என்று 2011 முதல் விதியைக் கடுமையாக்கப் போகிறோம். இதனால் நல்ல தரமுள்ள மாணவர்களால் மட்டுமே நுழைவுத் தேர்வையே எழுத முடியும், ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்குப் பயிற்சி தருகிறோம் என்று ஏராளமான பயிற்சி மையங்கள் வணிக ரீதியில் செயல்படுவதும் முடிவுக்கு வரும் என்று அறிவித்தார். இதற்கும் வழக்கம்போலவே கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

மாணவர்களின் அறிவுத்திறன் என்பது மதிப்பெண்ணில்தான் இருக்கிறது என்ற பழமையான மனோபாவம் இன்னமும் தங்களைவிட்டுப் போகவில்லை என்பதை கபில் சிபல் உள்ளிட்ட படித்தவர்கள் அடிக்கடி இப்படி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். கணிதமேதை ராமானுஜம், அவர் வாழ்ந்த காலத்தில் கணிதத்தில் புலியாக இருந்தாலும் பிற பாடங்களில் அதிக மதிப்பெண்களைப் பெற முடியாமல் தவித்ததை அவருடைய வரலாற்றிலிருந்து அறிகிறோம்.

புத்தகத்தில் உள்ளதை மனப்பாடம் செய்தும், கணக்காக இருந்தால் அடிக்கடி போட்டுப் பார்த்து அசுரப் பயிற்சி செய்தும் மதிப்பெண் வாங்குவது சாத்தியம்தான். இயல்பான அறிவுக்கூர்மையும் ஆராய்ச்சி மனப்பான்மையும் இத்தகைய தேர்வு முறைகளால் வெளிப்படாது என்பது அனுபவம் காட்டும் உண்மை. அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் ஏராளமானோர் பள்ளி, கல்லூரிப் படிப்பை முறையாகப் படித்தவர்களே அல்லர் என்பது வரலாறு. எனவே மதிப்பெண்ணைக் கட்டிக்கொண்டு அழாமல் வேறு வகையில் மனித ஆற்றலை வளர்க்கவும் எடை போடவும் அமைச்சர் முயல வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது.

எதிர்ப்பு அதிகமானதும் வழக்கம்போலவே அமைச்சர் பின்வாங்கியிருக்கிறார். நுழைவுத்தேர்வுக்கான தகுதியை நிர்ணயம் செய்வது ஐ.ஐ.டி. கவுன்சிலின் வேலை; என்னுடைய வேலை அல்ல என்று இப்போது கூறுகிறார்.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான சமூகப் பின்னணி, கலாசார சூழல், படிப்பதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. மேற்கு வங்க மாநிலம்தான் கல்வியில் சிறந்த மாநிலமாக ஒரு காலத்தில் இருந்தது. இப்போது மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஏழைக் குழந்தைகளுக்காக 16 வயது மாணவர் பாபர் அலி நடத்தும் பகுதிநேரப் பள்ளிக்கூடத்தில் 600 பேர் படிக்கின்றனர் என்று லண்டனைச் சேர்ந்த பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனமே பாராட்டியிருக்கிறது. கல்வி வசதி எந்த அளவுக்கு இன்னமும் உரிய வகையில் போய்ச் சேரவில்லை என்பதற்கும் இது நல்ல உதாரணம். மூர்ஷிதாபாத் போன்ற பகுதிகளுக்கு தரமான கல்வியை எடுத்துச் செல்ல என்ன வழி என்று சிந்தித்துச் செயல்படுவதே கபில் சிபல் போன்றவர்களுக்கு அழகு.

மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ், உலக வர்த்தகப் பேச்சு வார்த்தைகளில் இந்தியா தன்னுடைய தேவைகளுக்காக மட்டும் பேச வேண்டும்; வளரும் பிற நாடுகளுக்கு வக்கீலாக இருக்கக்கூடாது என்று பிரதமருக்கே கடிதம் எழுதியதாக வெளியான தகவல் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. அவரும் தான் அப்படிச் சொல்லவில்லை என்று கூறி மறுத்துவிட்டார். நேரம் குறைவு, அறுவடையோ மிகுதி என்ற தேவ வசனத்தை மத்திய அமைச்சர்கள் நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. அமைச்சர் பதவியில் உள்ள பொன்னான மணித்துளிகளை வெற்று சர்ச்சைகளில் விரயமாக்காமல் முடிந்த அளவுக்கு ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுங்கள் என்றே கூற விரும்புகிறோம்.
நன்றி : தினமணி

இந்தியாவில் 2 ஆயிரம் பேரை வேலையில் அமர்த்துகிறது டோயட்டா

உலகின் மிகப் பெரிய கார் நிறுவனமான டோயட்டா மோட்டார் கார்ப்ரேஷன், இந்தியாவில் உள்ள அதன் நிறுவனத்தில் மேலும் இரண்டு ஆயிரம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. ‌பெங்களூரில் டோயட்டா கிர்லோஸ்கர் மோட்டார்சுடன் இணைந்து டோயட்டா மோட்டார் நிறுவனம், ரூபாய் 3 ஆயிரத்து 200 கோடி முதலீட்டில் தனது கார் நிறுவன கிளை ஒன்றை நிறுவியுள்ளது. இதுகுறித்து, டோயட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் மேலாண்மை இயக்குனர் ஹிரோஷி கூறும்போது, இந்தியாவில் சிறிய கார் தயாரிப்பிற்கு அதிகமான மனித உழைப்பு தேவைப் படுகிறது. இதற்காக 2 ஆயிரம் பேரை மேலும் பணியில் அ‌‌மர்த்த உள்ளோம். வேலையாட்களை பணியமைத்துவதற்கான வேலைகளை ஆரம்பிதது விட்டோம். புதிய சிறிய வகை கார் அறிமுக திட்டம் வரும் 2011க்குள் முடிவடையும் என்று தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


பங்குச்சந்தையில் ரூ. 13,957 கோடி முதலீடு: மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முடிவு

பங்குச் சந்தையில் 13 ஆயிரத்து 957 கோடி ரூபாயை முதலீடு செய்ய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து, பங்குச் சந்தை ஆய்வு நிறுவனமான ஷேர்கான் ஆய்வு நிறுவனத்தின் மியூச்சுவல் பண்ட் பிரிவு ஆய்வாளர் ஷப்னா ஜவார் கூறும் ‌போது, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களிடம் ரொக்கமாக ரூபாய் 13 ஆயிரத்து 957 கோடி இருப்பதாகவும், இதை பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான தக்க தருணத்திற்காக காத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மொத்தம் உள்ள 13 ஆயிரத்து 957 கோடியில், ஏற்கனவே திரட்டிய தொகை ரூ. 13 ஆயிரத்து 045 கோடி ஆகும். புதிய யூனிட்டுகள் வெளியீட்டு மூலம் ரூ. 912 கோடி திரட்டப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


அம்பானி சகோதரர்கள் பிரச்னையால் பங்குச் சந்தையில் தள்ளாட்டம்

பங்குச் சந்தையில் கடந்த சனியன்று தீபாவளி வர்த்தகம் துவங்கியது. அன்றைய தினம் நடந்த வர்த்தகத்தில் சந்தை லாபமும் இல்லாமல் நஷ்டமும் இல்லாமல் முடிந்தது. திங்களன்று சந்தைக்கு விடுமுறை. ஆனால் நேற்று முன்தினம், அம்பானி சகோதரர்களின் பிரச்னைக்கு கோர்ட் என்ன தீர்ப்பு வழங்கப் போகிறதோ என்ற பயத்திலேயே சந்தை சரிந்தது.
நேற்றும் சந்தை ஒரு பெரிய சரிவை சந்தித்தது. நேற்று சந்தை ஏன் சரிந்தது? உலகளவிலும், ஆசிய அளவிலும் சந்தைகள் கீழேயே இருந்ததால், இந்தியாவிலும் அதன் எதிரொலி இருந்தது. இது தவிர ரிலையன்ஸ் பிரச்னையும் ஒரு காரணம். மேலும், வங்கிகள் கடன் களுக்கு வாங்கும் வட்டி விகிதங்களில், ரிசர்வ் வங்கி மாற்றம் கொண்டு வரும் என்ற செய்தி சந்தைக்கு வந்ததால், அது வங்கிகளிடையே போட்டியை ஏற்படுத்தும், ஆதலால் வங்கிகளின் லாபம் வருங்காலங்களில் குறையலாம் என்ற எதிர்பார்ப்புகள் சந்தையில் வங்கிப் பங்குகளை சரித்தன. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 213 புள்ளிகள் குறைந்து, 17,009 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 50 புள்ளிகள் குறைந்து, 5,063 புள்ளிகளுடனும் முடிந்தது.
சாப்ட்வேர் பங்குகள்: அமெரிக்காவில் உள்ள சாப்ட்வேர் கம்பெனிகளின் லாபம் கூடிவருவதால், அதன் எதிரொலி இந்தியாவிலும் இருந்தது. இங்கும் சாப்ட்வேர் பங்குகளின் விலை கூடியது. ஏனெனில், இந்தியாவின் 50 முதல் 60 சதவீதம் வரை மொன்பொருள் ஏற்றுமதி அமெரிக்காவிற்குத் தான் நடக்கிறது. அங்கு பிரகாசம் என்றால் இங்கும் பிரகாசம் தான். டி.சி.எஸ்., கம்பெனியின் ஆர்டர் புக் நன்றாக இருப்பதாகவும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான ஆர்டர் இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. ஆதலால், நீண்ட கால நோக்கில் அந்த கம்பெனியின் பங்குகளை உங்கள் போர்ட்போலியோவில் சேர்க்கலாம்.
கசக்கும் சர்க்கரை: சந்தையில் சர்க்கரை பங்குகள் கசந்தன என்றே சொல்லலாம். ஆமாம். இறக்குமதிக்கு அரசு கொடுத்திருந்த காலக்கெடுவை நீட்டியதால் சந்தையில் சர்க்கரை கம்பெனியின் பங்குகள் விலை குறைந்தன. டிசம்பர் வரை இது நீட்டிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு முடிவுகள்: யெஸ் பாங்க் நல்ல காலாண்டு முடிவுகளைத் தந்தாலும், அந்த வங்கியின் வராக்கடன்கள் கூடியிருந்ததால், சந்தையில் அந்தப் பங்குகளின் விலை குறைந்தது. இது தவிர என்.ஐ.ஐ.டி., - சக்தி சுகர்ஸ் கம்பெனிகளும் நல்ல காலாண்டு முடிவுகளைத் தந்துள்ளன. வந்துள்ள காலாண்டு முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது, பல கம்பெனிகளில் காலாண்டு லாபம் கூடியுள்ளது. ஆனால், காலாண்டு விற்பனை அந்த அளவு கூடவில்லை. இது ஒரு கவலையளிக்கக் கூடிய விஷயம்.
வழுக்கும் கச்சா எண்ணெய்: தினமும் என்னை கவனி என்று மறுபடி சொல்ல வைத்து விடும் போலிருக்கிறது கச்சா எண்ணெய். பேரலுக்கு 80 டாலர் அளவிற்கு வந்து நிற்கிறது. இது கடந்த 12 மாதத்தில் அதிகபட்ச உயர்வு. இதனால், மத்திய அரசு எண் ணெய் கம்பெனிகளின் பங்குகள் களையிழந்து காணப்படுகின்றன. அதே சமயம், எண் ணெய் உற்பத்தி செய்யும் கம்பெனிகளின் பங்குகள் உயர்ந்து செல்கின்றன. வரிசையில் காத்திருக்கும் அரசு வெளியீடுகள்: என்.எச்.பி.சி., மற்றும் ஆயில் இந்தியா ஆகிய வெளியீடுகளைத் தொடர்ந்து, பல அரசு வெளியீடுகள் வரத்தயாராகி வருகின்றன. என்.டி.பி.சி., சட்லெஜ் ஜல வித்யூத், செயில் ஆகியவை அரசால் அனுமதி அளிக்கப் பட்டுள்ளன. விரைவில் எதிர்பார்க்கலாம். அப்படி வரும் பட்சத்தில் சிறிய முதலீட்டாளர்களுக்கு 5 சதவீதம் விலையில் கிடைக்கும் என்றும் செய்திகள் வருகின்றன.
ஜொலிக்கும் தங்க ஆபரண ஏற்றுமதி: உலகளவில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால், தங்க ஆபரண ஏற்றுமதியும் கூடியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவீதம் கூடுதலாக ஆர்டர்கள் கிடைத்துள்ளன.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்? சந்தை குறுகிய காலத்தில் அதிகம் ஏறியுள்ளது போல வல்லுனர்கள் நினைக்கின்றனர். ஆதலால், ஏதாவது மாற்றம் வருமா என்று யோசிக்கத் தோன்றுகிறது.
- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி : தினமலர்