Saturday, October 24, 2009

சந்திரயானின் மாபெரும் கண்டுபிடிப்பு

சந்திரனில் தண்ணீர் உள்ளது என்று இந்தியா அனுப்பிய சந்திரயான் விண்கலம் கண்டுபிடித்துக் கூறியுள்ளது. இது மனித குல வரலாற்றில் மாபெரும் கண்டுபிடிப்பாகும்.

இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ 400 ஆண்டுகளுக்கு முன்னர் சந்திரனை நோக்கி முதன்முதலாகத் தொலைநோக்கியைத் திருப்பிய காலத்திலிருந்து எண்ணற்ற விஞ்ஞானிகள் சந்திரனை தொலைநோக்கி மூலம் ஆராய்ந்தனர்.

பின்னர் நவீன காலத்தில் 1958-ல் தொடங்கி அமெரிக்காவும் அப்போதைய சோவியத் யூனியனும் போட்டி போட்டுக் கொண்டு மொத்தம் 50-க்கும் மேற்பட்ட விண்கலங்களை அனுப்பி சந்திரனை ஆராய்ந்தன. அமெரிக்கா 1969-ல் தொடங்கி 1972 வரை ஆறு தடவை சந்திரனுக்கு 12 விண்வெளி வீரர்களை அனுப்பியது. அவர்கள் சந்திரனிலிருந்து கிலோ கணக்கில் அள்ளி வந்த கற்களும் மண்ணும் விரிவாக ஆராயப்பட்டன. சோவியத் யூனியனின் தானியங்கி விண்கலம் சந்திரனிலிருந்து சேகரித்து வந்த கற்களும் ஆராயப்பட்டன.

கடந்த சில ஆண்டுகளில் ஜப்பான் 6 ஆளில்லா விண்கலங்களை அனுப்பியது. சீனா கடந்த ஆண்டில் ஆளில்லா விண்கலம் ஒன்றை அனுப்பியது. சந்திரனுக்கு அனுப்பப்பட்ட விண்கலங்களால் - விண்வெளி வீரர்களால் அவர்கள் கொண்டு வந்த கற்களை ஆராய்ந்த விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்காமல் போன ஒரு விஷயத்தை சந்திரயான் கண்டுபிடித்துக் கூறியுள்ளது.

சந்திரனில் தண்ணீர் உள்ளதை இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் போனதேன்? சந்திரனில் உள்ள தண்ணீர் அப்படி என்ன மர்மமாக மறைந்து இருந்து வந்துள்ளதா?

இக் கேள்விகளுக்கு விடை அளிக்கும் முன்னர் நாம் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். சந்திரனில் பூமியில் உள்ளதைப்போல ஏரி, குளம், ஆறு, கடல் என எதுவும் கிடையாது. சந்திரனில் காற்று மண்டலம் இல்லை. மேகங்கள் இல்லை, மழை இல்லை. ஆனாலும் கலிலியோவைத் தொடர்ந்து, சந்திரனை தொலைநோக்கி மூலம் ஆராய்ந்த விஞ்ஞானிகள் சந்திரனில் காணப்படும் கருமையான பகுதிகளைக் கடல்களாகக் கருதி அவற்றுக்குக் கடல்கள் என்று பெயரிட்டனர். நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் சந்திரனில் போய் இறங்கிய இடத்தின் பெயர் அமைதிக்கடல் என்பதாகும். பெயர்தான் கடலே தவிர அது வெறும் கட்டாந்தரை.

சந்திரன் பூமியிலிருந்து அதிகபட்சம் சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பூமியும் சந்திரனும் சூரியனிலிருந்து கிட்டத்தட்ட ஒரே தூரத்தில் இருந்தாலும் சந்திரன் மட்டும் பூமியிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக உள்ளது.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் எண்ணற்ற வால் நட்சத்திரங்கள் பூமியில் வந்து மோதின. சந்திரன் மீதும் மோதின. வால் நட்சத்திரங்கள் அடிப்படையில் பிரம்மாண்டமான பனிக்கட்டி உருண்டைகள். பூமியில் கடல்கள் ஏற்பட்டதற்கு வால் நடசத்திரங்கள் பெரும் பங்களித்திருக்கலாம் என்ற கொள்கை உள்ளது. சந்திரனில் மோதிய வால் நட்சத்திரங்களால் சந்திரனில் ஏன் கடல்கள் ஏற்படவில்லை?

பூமியானது சந்திரனைவிட வடிவில் பெரியது. ஆகவே, பூமிக்கு ஈர்ப்பு சக்தி அதிகம். இதன் பலனாக பூமியால் தனது காற்று மண்டலத்தைக் கெட்டியாகப் பிடித்துவைத்துக் கொள்ள முடிந்துள்ளது. பூமியின் காற்று மண்டலம் தகுந்த அழுத்தத்தில் உள்ளது. ஆகவேதான் பூமியில் நாம் நீரைப் பெற்றிருக்கிறோம். பூமி மட்டும் வடிவில் சிறியதாகவும் அத்துடன் பூமியின் காற்றழுத்தம் குறைவாகவும் இருந்திருக்குமானால் பூமியில் தண்ணீர் இருந்திருக்காது. பூமியும் சந்திரன் போல ஆகியிருக்கும்.

பூமியுடன் ஒப்பிட்டால் சந்திரன் வடிவில் மிகவும் சிறியது. சந்திரனின் ஈர்ப்பு சக்தி பூமிக்கு உள்ளதில் ஆறில் ஒரு பங்கு தான். ஆகவே, சந்திரனில் ஒரு காலத்தில் காற்று மண்டலம் இருந்திருக்குமானால் அது எப்போதோ போய்விட்டது. அத்துடன் சந்திரனில் இருந்த தண்ணீரும் மறைந்துவிட்டது. எல்லாம் சரி, இப்போது சந்திரனில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எப்படி?

இதில் சூரியனுக்குப் பங்கு இருக்கிறது. சூரியனிலிருந்து ஒளிக்கதிர் உள்பட பல வகையான கதிர்கள் வெளிப்படுகின்றன. அத்துடன் ஆற்றல்மிக்க ஹைட்ரஜன் துகள்களும் வெளிப்படுகின்றன. இந்த ஹைட்ரஜன் துகள்களுக்கு (இவை காற்று அல்ல என்றாலும்) "சூரியக் காற்று' என்ற பெயரும் உண்டு.

இந்த ஹைட்ரஜன் துகள்கள் பகல் நேரங்களில் சந்திரனின் நிலப்பரப்பின் மீது மோதுகின்றன. சந்திரனின் நிலப்பரப்பில் ஆக்ஸிஜன் அடங்கிய கனிமங்கள் பல உள்ளன. இவற்றின் மீது ஹைட்ரஜன் துகள்கள் மோதும்போது கனிமங்களில் அடங்கிய ஆக்ஸிஜன் தனியே பிரிகிறது. பின்னர் இந்த இரண்டும் வேதியியல் ரீதியில் பிணைந்து நீர் மூலக்கூறுகள் தோன்றுகின்றன. (நீர் என்பதே இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஒரு ஆக்ஸிஜன் அணுவும் பிணைந்த பொருளாகும்).

இந்த முறையில் சந்திரனின் நிலப்பரப்பு முழுவதிலும் மிகமிக நுண்ணிய அளவில் நீர் தோற்றுவிக்கப்படுகிறது. இந்த நீரைத் தான் சந்திரயான் கண்டுபிடித்துள்ளது. ஆனால், சந்திரனில் காற்று மண்டலம் இல்லை என்பதால் இந்த நீர் மூலக்கூறுகள் தொடர்ந்து அந்த நிலையில் நீடிப்பதில்லை. விரைவிலேயே அவை ஆக்ஸிஜன் வாயுவாகவும் ஹைட்ரஜன் வாயுவாகவும் பிரிந்து சந்திரனின் வான் வழியே மேலே சென்றுவிடுகின்றன. சந்திரனில் தண்ணீர் உள்ளதைக் கடந்த காலத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.

இது ஒருபுறம் இருக்க, சந்திரனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தண்ணீரைத் தகுந்த வழிகள் மூலம் சேமித்துவைக்க இயலும் என்று கருதப்படுகிறது. புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சந்திரனில் நீர் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யவும் இயலும். இதற்கு வழி கண்டுபிடிக்கப்படும்போது, சந்திரனில் விண்வெளி வீரர்கள் நீண்ட நாள்கள் தங்கியிருக்கலாம். சந்திரனில் சேகரிக்கின்ற அதே தண்ணீரை ஆக்ஸிஜன் வாயு, ஹைட்ரஜன் வாயு என்று தனித்தனியே பிரித்து அவற்றைக் குளிர்வித்து ராக்கெட்டுகளுக்கான எரிபொருளாகப் பயன்படுத்த இயலும்.

எதிர்காலத்தில் சந்திரனில் நிலத்துக்கு அடியில் பாதாளக் குடியிருப்புகளை நிறுவ முடியலாம். பயிர் விளைச்சலும் சாத்தியமாகலாம். பல பொருள்களை உற்பத்தி செய்வதற்கான ஆலைகளை அமைக்க முடியலாம். தண்ணீர் இல்லை என்பதுதான் இதுவரை ஒரு தடையாக இருந்தது.

சந்திரனில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட நிலையில் சந்திரனில் தண்ணீர் தேடும் படலம் முடிந்து விட்டதா? அதுதான் இல்லை. சந்திரனில் தண்ணீர் உள்ளதா என்று தேடுவது சந்திரயான் 1 விண்கலத்தின் முக்கியப் பணிகளில் ஒன்றாக இருந்தது. அமெரிக்கா கடந்த ஜூன் மாதம் சந்திரனுக்கு அனுப்பிய எல்ஆர்ஓ எனப்படும் அமெரிக்க விண்கலமும் தண்ணீரைத் தேடுவதில் ஈடுபட்டது. தண்ணீரைத் தேடுவதில் அமெரிக்க விண்கலத்தின் இலக்கு முற்றிலும் வேறானது.

சந்திரனின் தென்துருவப் பகுதியில் ஒருபோதும் வெயில் படாத மிக ஆழமான பள்ளம் ஒன்றில் ஐஸ்கட்டி வடிவில் தண்ணீர் இருக்கலாம் என்று கடந்த பல ஆண்டுகளாக ஒரு கருத்து உள்ளது. இங்கு பனிக்கட்டி வடிவில் 10 கோடி முதல் 30 கோடி மெட்ரிக் டன் அளவுக்குத் தண்ணீர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. குறிப்பாகத் தென் துருவப் பகுதியில் இருப்பது, தண்ணீர் உறைந்ததால் ஏற்பட்ட பனிக்கட்டியா அல்லது வேறு வாயு இவ்விதம் உறைந்த நிலையில் உள்ளதா என்று கண்டறிவதில் அமெரிக்க விண்கலம் ஈடுபட்டது. அமெரிக்க விண்கலத்தைச் சுமந்து சென்ற ராக்கெட்டின் ஒரு பகுதி அக்டோபர் 9-ம் தேதியன்று தென்துருவப் பகுதியில் உள்ள பள்ளத்தில் போய் பயங்கர வேகத்தில் மோதும்படி செய்யப்பட்டது. இது சந்திரன் மீது குண்டு வீசுவதற்கு ஒப்பாகும்.

இத் தாக்குதலின் விளைவாக சிதறல்களும் தூசும் புகை மண்டலம் போல உயரே கிளம்பும் (பூமியிலிருந்து தொலைநோக்கி மூலம் பார்த்தால் தெரியுமாம்). அமெரிக்க விண்கலத்துடன் அனுப்பப்பட்ட ஒரு சிறிய விண்கலம் தனியே பிரிந்து இப்புகை மண்டலத்தின் ஊடே பறந்து ஆராய்ந்தது. இதன்மூலம் கிடைத்த தகவல்கள் ஆராயப்படுகின்றன. தென் துருவப் பள்ளத்தில் இருப்பது தண்ணீரால் ஆன பனிக்கட்டிதானா என்று தெரிவதற்கு இன்னும் சில நாள்கள் ஆகலாம். அங்கு தண்ணீர் தான் பனிக்கட்டியாக உள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவ்வளவுதான் சந்திரன் மீது பெரும் படையெடுப்புத் தொடங்கிவிடும்.

ஆனால் ஒன்று, சந்திரனில் தண்ணீர் உள்ளது என்பதை முதலில் கண்டுபிடித்த பெருமை இந்தியாவின் சந்திரயானுக்கே உரியது. சந்திரனை ஆராயும் முயற்சியில் கடும் வெப்பம் தாக்கி தனது உயிரை மாய்த்துக் கொண்ட சந்திரயான் இறவாப் புகழ் பெற்றுவிட்டது.

கட்டுரையாளர் : என். ராமதுரை

நன்றி : தினமணி

தாய்மை ஒரு தடையல்ல...

பிள்ளை பெறாத பெண்களை மலடி என்று ஏசும் இந்தச் சமுதாயம்தான், குழந்தைகள் பெற்ற பெண்களை ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று ஒதுக்கியும் வைக்கிறது. சற்றே முரண்பாடாகத் தோன்றினாலும், இதுதான் நிஜம்.
கேரள மாநிலத்தில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்ற பெண்களில் சிலர் கர்ப்பமாக இருந்தனர். இதைக் காரணம் காட்டி இப்பெண்களுக்கு வேலைக்கான உத்தரவு வழங்கப்படவில்லை.

இந்த விஷயம் மாநில அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. எஸ்பிஐயின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளத்தில் மகளிர் சங்கங்கள் போராட்டம் நடத்தின.

இந்த உத்தரவை பிரதமர் தலையிட்டு நீக்க உத்தரவிட வேண்டும் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் கர்ப்பிணிப் பெண்களின் நியமனத்துக்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த தடையை எஸ்பிஐ தற்போது நீக்கிக் கொண்டிருக்கிறது.

30 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை, இப்போது விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாட்டின் பிரதான வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் வங்கியில் இத்தனை ஆண்டுகளாக இதுபோன்றதொரு நடைமுறை இருந்து வந்திருப்பது வேதனைக்குரியது.

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் தாய்மை, கர்ப்ப காலம் என்பது மிகவும் குறுகிய ஒரு காலகட்டமே. மக்கள்தொகை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் இப்போதெல்லாம் யாரும் பிள்ளை பெற்றுக் கொள்வதில்லை.

எல்லாவிதமான உடல் அசெüகரியங்களுக்கும் உடனுக்குடன் நிவாரணம் பெறத்தக்க வகையில் வீதிகள்தோறும் மருத்துவ வசதிகள் பெருகிவிட்டன.

நவீன மருத்துவ வசதிகளால் தாய்மையை ஒரு சுமையாகவோ, பாரமாகவோ இன்றைய பெண்கள் கருதுவதில்லை.

ஒரு சில அசாதாரண நிலைகளில் கர்ப்ப காலம் முழுவதும் படுக்கையிலேயே ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் பெண்களுக்கு வேண்டுமானால் வாய்ப்புகள் மறுக்கப்படலாம். அப்படிப்பட்ட பெண்கள், வெளியிடங்களில் வேலைக்காக விண்ணப்பிக்க மாட்டார்கள் என்பதும் நடைமுறையில் நாம் காணும் உண்மை.

பொதுவாக, தாய்மைப் பேறு, கர்ப்பம் என்பதற்காக மட்டுமே ஒரு பெண்ணின் திறமைகளுக்கு அங்கீகாரம் அளிக்க மறுப்பது எந்தவிதத்திலும் நியாயமல்ல.

சாதனைக்குத் தாய்மை எப்போதும் ஒரு தடையல்ல என்பதை நிஜ வாழ்க்கையில் நிரூபித்து வரும் பெண்கள் ஏராளம். குழந்தைகள் பெற்ற பின்பும் புதிய உத்வேகத்துடன் களம் இறங்கி சாதனை படைத்து வரும் மகளிர் எண்ணற்றோர்.

ஒரு குழந்தை பெற்ற பின்புதான் 1980-ல் விம்பிள்டன் பட்டம் வென்றார் ஈவான் கூலகாங். அவரைத் தொடர்ந்து தற்போது 2009-ம் ஆண்டுக்கான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிருக்கான பட்டத்தை வென்றிருக்கும் பெல்ஜியத்தின் கிம் க்லிஜ்ஸ்டெர்ஸ், இரண்டு வயதுக் குழந்தைக்குத் தாய் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை பிறந்து 18 மாதங்களுக்குப் பிறகு முழு உத்வேகத்துடன் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு தற்போது "கிராண்ட் ஸ்லாம்' பட்டத்தை தட்டி வந்திருக்கிறார் கிம்.

வெளிநாட்டுப் பெண்களை விடுங்கள். நம் நாட்டின் மேரி காம், 2008-ம் ஆண்டு உலகக் குத்துச்சண்டைப் போட்டிகளில் தங்கம் வென்று நான்காவது தடவையாக உலகச் சாம்பியன் பட்டம் வென்றார்.

இவரது சாதனைக்கு இந்திய அரசு கொடுத்த பரிசுதான், 2009-ம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது.

அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருதுகளுக்குச் சொந்தக்காரரான மணிப்பூரின் மேரி காம், இரண்டு குழந்தைகளுக்குத் தாயானபிறகுதான் மேற்கூறிய சாதனையைப் படைத்தார்.

விளையாட்டு வீராங்கனைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், சாதனை படைத்த பெண்களில் பெரும்பாலானோர், திருமணத்துக்குப் பிறகோ அல்லது குழந்தை பெற்ற பிறகோதான் வெற்றிச் சிகரத்தை தொட்டிருக்கிறார்கள் என்பது புரியும்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரபல பத்திரிகையாளர் அனிதா பிரதாப், கர்ப்பிணியாக இருந்தபோதுதான் புலனாய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதி உலகின் பார்வையைத் தன் பக்கம் திருப்பினார். இதுபற்றி அவரே தன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

1990 அக்டோபரில் பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எல்.வசந்தகுமாரி காலமானார்.

அந்த ஆண்டு டிசம்பர் சீசன். சென்னை மியூசிக் அகாதெமியில் கூட்டம் நிறைந்து வழிந்தது. 8 மாதக் கர்ப்பிணியான இன்றைய பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் அப்போது நிகழ்த்திய அந்த இசைக் கச்சேரியைக் கேட்டவர்கள், சிலிர்த்துப் போனார்கள்.

எனவே, இதுபோன்ற பழமையான கட்டுப்பாடுகளை எல்லா நிறுவனங்களும் உடனடியாகத் தளர்த்திக் கொள்ள முன்வருவது அவசியம்.
கட்டுரையாளர் : ஜி. மீனாட்சி
நன்றி : தினமணி

ரகசிய குறியீடு இல்லாத செல்போன் இறக்குமதிக்கு தடை!

ரகசிய குறியீடு இல்லாமல் ஏற்றுமதியாகி வரும் சீன, கொரிய, தைவான் மற்றும் தாய்லாந்து செல்போன்களுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது. இதனை மத்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் அறிவித்துள்ளார். கொரியா, சீனா, தாய்லாந்து மற்றும் தைவான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்கள் இந்தியாவில் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வந்தன. இந்த மாதிரி போன்கள் கிட்டத்தட்ட 10 கோடிக்கும் மேல் புழக்கத்தில் உள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. மாதந்தோறும் புதிதாக 58 லட்சம் பேர், இந்த போன்களை வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த வகை செல்போன்களில்,'எலக்ட்ரானிக் சீரியல் நம்பர்'கள் (இ.எஸ்.என்) மற்றும் 'மொபைல் எக்விப்மெண்ட் ஐடெண்டிபைர்' (எம்.இ.ஐ.டி) என்று அழைக்கப்படும் ரகசிய குறியீட்டு எண்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. இத்தகைய போன்களை ட்ரேஸ் செய்வதும் கடினம். இதனால் இவற்றை தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையோர் அதிகம் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும். ஆகவே இந்த போன்களுக்கு இந்தியாவில் அடியோடு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்து சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. தற்போது இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்திருப்பதாக மத்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நன்றி : தினமலர்



பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்கிறது

பெட்ரோல் விற்பனையாளர்களுக்கு அளிக்கப்படும் கமிஷன் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதுவரை பெட்ரோலுக்கு, ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.1028 கமிஷன் வழங்கப்படுகிறது. இனி அது ரூ.1098 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதேபோல் டீசலுக்கு தற்போது, ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.630 வழங்கப்படுகிறது. இனி அது ரூ.670 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதனால் பெட்ரோல் லிட்டருக்கு 7 காசும், டீசல் லிட்டருக்கு 4 காசும் அதிகரிக்கும். இந்த விலை உயர்வு நாடு முழுவதும் நுகர்வோரிடம் வசூலிக்கப்படும். இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


எல்லைக்கு அப்பால்...

புதுதில்லியிலிருந்து இஸ்லாமாபாதுக்கு விமானத்தில் செல்வதைவிட வாகாவில் இந்திய-பாகிஸ்தான் எல்லையைக் கடந்து செல்வது புதுமையான அனுபவமாகும். கடந்த வாரம் லாகூரில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் சார்க் நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேலான பெண் பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து நான் உள்பட 30-க்கும் மேலான பெண் பத்திரிகையாளர்களும் இதில் கலந்துகொண்டோம். நாங்கள் வாகா சென்று இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கோட்டை நடந்து சென்று கடந்தோம். பின்னர் அங்கிருந்து கார் மூலம் லாகூர் சென்றோம்.

எல்லைக்கோட்டுப் பகுதியில் இந்தியக் குடியுரிமை அலுவலகத்திலிருந்து எங்களது சாமான்களை சீக்கிய போர்ட்டர்கள் தூக்கி வந்து பாகிஸ்தான் எல்லை ஆரம்பத்தைக் குறிக்கும் வெள்ளைக் கோட்டில் வைத்தனர். பின்னர் அங்கிருந்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த போர்ட்டர்கள் அதைச் சுமந்து சென்றனர். இரு நாட்டு போர்ட்டர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டபோதிலும் ஒருவார்த்தைகூட பேசிக்கொள்ளவில்லை. தினமும் இப்படித்தான் என்று பலரும் கூறினர்.

எனினும், எப்போதாவது இந்த வழியாகச் செல்லும் பிரமுகர்கள் "டிப்ஸ்' கொடுத்தால் வாங்கிக் கொண்டு அதை அவர்களுக்கும் தெரிவிப்பார்களாம். நான்கு நாள்களுக்குப் பிறகு நாங்கள் திரும்பிவந்த போது பாகிஸ்தான் சுங்க அதிகாரிகள் இந்திய தரப்பினருக்கு "தீபாவளி' அன்பளிப்பு கொடுத்தது தெரியவந்தது.

பாகிஸ்தான் பிரிவினையின்போது அந்தப் பகுதியிலிருந்து இந்தியாவில் குடியேறிய எங்களுக்கு இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கோட்டைக் கடந்து செல்லும்போதெல்லாம் மனத்தில் ஒருவித கிளர்ச்சி ஏற்படும். மற்றவர்களுக்கு இரு நாடுகளும் முன்னேற்றம் காண வேண்டும்; தடைகள் நீக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

2005-ம் ஆண்டு கோடைக்காலத்தில் நான் லாகூர் சென்றதற்கும் இப்போது சென்றுவந்ததற்கும் உள்ள வித்தியாசத்தை என்னால் நன்கு உணர முடிகிறது. லாகூரில் இப்போது அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இன்னும் சொல்லப்போனால் அங்கு இப்போது உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தபோது நாங்கள் அங்குதான் இருந்தோம்.

நாங்கள் சென்ற தினத்தில் பெஷாவரில் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. அதற்கு அடுத்த நாள் காலையில் ராவல் பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகம் மீது மிகப்பெரிய தாக்குதல் நடந்தது. இச் சம்பவம் ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பிரதமர் யூசுப் ரஸô கிலானி எங்கள் கருத்தரங்கில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷெரீப் எங்களுக்கு இரவு விருந்து அளிக்க ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அவராலும் அதில் பங்கேற்க முடியவில்லை. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பெண் பத்திரிகையாளர்கள் என்பதால் நாங்கள் எங்கு சென்றாலும் உடன் பாதுகாப்புக்காக போலீஸôர் கூடவே வந்தனர்.

பாகிஸ்தான் ராணுவத் தலைமையகம் மீது நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு யார் காரணம் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாயின. சிலர் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தேரிக்-இ-தாலிபான் என்ற அமைப்புதான் காரணம். தாலிபான்கள் அதிகம் உள்ள தெற்கு வாஜிரிஸ்தான் பகுதியில் ராணுவம் நடவடிக்கை எடுத்துவிடக்கூடாது என்று எச்சரிப்பதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று கூறினர். தாலிபான்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தபோதிலும் அது விஷயத்தில் ராணுவத்துக்கு மாறுபட்ட கருத்து இருந்தது வெளிப்படை. இப்போது ராணுவத்தின் கையைக் கட்டிவிட்டு குளிர்காலத்தில் தாலிபான்கள், அல்-காய்தா தீவிரவாதிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சியே இது என்றும் சிலர் கூறினர்.

பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்துக்கும் கருத்து மோதல்கள் இருந்து வந்துள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. கெர்ரி லூகர் மசோதாவை பாகிஸ்தான் அதிபர் ஆஸிப் அலி ஜர்தாரி ஆதரித்தாலும் நாட்டின் இறையாண்மையில் அத்துமீறி தலையிடுவதாகும் இது என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் அஷ்பாக் பர்வேஸ் கயானி விமர்சித்திருந்தார். இந்த மசோதாவில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 7.5 பில்லியன் டாலர் நிதியுதவி கிடைக்கும். இதற்கு விதிக்கப்பட்ட ஒரே நிபந்தனை, நீதித்துறையிலும், நிர்வாகத்துறையிலும் பாகிஸ்தான் ராணுவம் தலையிடக்கூடாது என்பதுதான்.

பாகிஸ்தான் நாட்டின் எதிர்காலம் குறித்து பலரும் பலவிதமாகப் பேசி வருகின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ராணுவம் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொள்ளக்கூடும் என்றும், விரைவிலேயே பாகிஸ்தானில் இடைத்தேர்தல் நடைபெறக்கூடும் என்றும் வதந்திகள் உலவுகின்றன. சில நாள்களுக்கு முன்பு ஷாபாஸ் ஷெரீப், ராணுவத் தலைமைத் தளபதி கயானியைச் சந்தித்துப் பேசினார். தற்போதுள்ள அரசைக் கவிழ்ப்பதற்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் ஷெரீப்) கட்சி ரகசிய பேரம் நடத்தி வருவதாகவும் விரைவில் தேர்தல் வரலாம் என்று பேசப்பட்டன.

2005-ம் ஆண்டைய நிலைக்கும் இப்போதைய காலத்துக்கும் இடையே மற்றொரு மாற்றம் தெரிகிறது. அது இந்தியா மீது பாகிஸ்தானின் மனோநிலை பற்றியது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பர்வேஸ் முஷாரப் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது இரு நாடுகளுக்கும் இடையே உறவில் ஒரு நெகிழ்வு இருந்து வந்தது. இங்கிருந்து எம்.பி.க்கள் பாகிஸ்தான் சென்று வந்தனர்.

பாகிஸ்தானிலிருந்து ஒருவர் இங்கு வந்து சாதாரண பால்காரராக இருந்து மெல்ல மெல்ல உயர்ந்து பிகாரின் முதல்வரான லாலு பிரசாத்தை நேரில் சந்தித்துப் பேச முடிந்தது.

ஆனால், இன்று பாகிஸ்தானில் மக்களாட்சி நடக்கின்ற போதிலும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண இருநாடுகளும் பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்து வருகிறது.

"இந்தியா மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்தான் எங்கள் நாட்டிலும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தீவிரவாதத்தை நாங்கள் ஆதரிப்பதாகக் கூறுவதை இந்தியா சிந்தித்துப் பார்க்க வேண்டும். நீதித்துறை விவகாரங்களில் நாங்கள் தலையிடுவதில்லை. ஹபீஸ் சய்யீத்தை விடுவித்தது நீதிமன்றம்தான். சய்யீத்துக்கு எதிராக மேலும் சாட்சியங்களை அளிக்க இந்தியா தயாராக இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயில் மீதான தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க இந்தியாவால் முடியவில்லை என்று பாகிஸ்தான் தரப்பில் வாதிடப்படுகிறது.

இந்தியாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடர பாகிஸ்தான் விரும்பியபோது மக்களிடம் ஓர் எச்சரிக்கை உணர்வு இருந்தது. சீனாதான், பாகிஸ்தானின் நெருங்கிய நண்பன் என்று பலரும் பேசிவந்தனர்.

நான் நண்பர்களுக்காக ஒரு கடையின் வாசலில் காத்திருந்தபோது, கடையின் உள்ளே இருந்தவர்கள் உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருந்தனர். என்னைப் பார்த்ததும் நான் இந்தியப் பிரஜை என்று தெரிந்துகொண்டு அமைதியாகிவிட்டனர்.

பலவிதங்களில் மும்பைத் தாக்குதல் சம்பவம் இந்தியா, பாகிஸ்தான் இடையே விரிசலை ஏற்படுத்திவிட்டது தெரியவரும். இச் சம்பவம் பாகிஸ்தான் பற்றி இந்திய மக்களின் மனதில் வெறுப்பை ஏற்படுத்திவிட்டது எனலாம். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்பியபோதிலும், எகிப்தில் பாகிஸ்தான் பிரதமர் விடுத்த அறிக்கை மன்மோகன் சிங்கை பின்வாங்கவைத்துவிட்டது.

பாகிஸ்தான் ராணுவத் தலைமையகம் மீது நடந்த தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதாக அந்த நாட்டு பத்திரிகைகளில் வெளியான செய்தி, இப்படியும் இருக்கலாமோ என்ற எண்ணத்தை பாகிஸ்தான் மக்கள் மனதில் ஏற்படுத்தி விட்டது.

தாக்குதலுக்கு இந்திய பின்னணி இருப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் முதலில் கூறினாலும் பின்னர் அவர் தனது நிலையை மாற்றிக் கொண்டுவிட்டார். இதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடந்த தாக்குதலுக்குக்கூட இந்தியாதான் காரணம் என சொல்லப்பட்டது நினைவிருக்கலாம். கெர்ரி-லூகர் மசோதா கொண்டுவரப்பட்டதற்குக்கூட இந்தியாதான் காரணம் என்ற எண்ணமும் பாகிஸ்தானிடம் உள்ளது.

கடந்த காலங்களிலும் சரி.. இப்போதும் சரி.. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் நீடிக்கிறது என்பதுதான் உண்மை.

கட்டுரையாளர் : நீரஜா சௌத்ரி

நன்றி : தினமணி



ரிலையன்ஸ் புதிய திட்டம் அறிமுகம்

'சிம்ப்ளி ரிலையன்ஸ் பிளான்' என்ற பெயரில் புதிய மொபைல் திட்டத்தை, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அந்நிறுவன தமிழக தலைவர் அஜய் அவஸ்தி, மதுரை பொறுப்பாளர் ஆன்டனி ராஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளூர், எஸ்.டி.டி., ரோமிங் என அனைத்து அழைப்புகளுக்கும் ஆயுள் முழுமைக்கும் 50 காசு கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதே கட்டணத்தில் எந்த நெட்வொர்க்கிற்கும், எந்த நேரத்திலும் பேசலாம். பிரீ பெய்டு, போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் இச்சலுகையைப் பெறலாம். நாடு முழுவதும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சி.டி.எம்.ஏ., ஜி.எஸ்.எம்., போன் பயன்படுத்துவோருக்கு இத்திட்டம் பொருந்தும். தற்போது வேறு திட்டத்தில் இருப்போரும் இத்திட்டத்திற்கு மாறலாம். ரிலையன்சில் இனிமேல் வேறு திட்டங்கள் இருக்காது. நாடு முழுவதும் 50 காசு கட்டணத்தில் 24 ஆயிரம் நகரங்கள், ஆறு லட்சம் கிராமங்களை இத்திட்டம் இணைத்துள்ளது
நன்றி : தினமலர்