Wednesday, January 20, 2010

கார்களை மிஞ்சுது சைக்கிள் விலை

பயணம் செய்வதற்கு மட்டுமல்லாமல் உடற்பயிற்சி, மலை ஏற்றம் போன்றவற்றுக்கு பயன்படும் சைக்கிள்கள், 2.5 லட்ச ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சைக்கிள் ஏழைகளின் வாகனம் என்ற காலம் மலையேறி விட்டது. தற்போது, சர்வதேச கண்ணோட்டத்தில் சைக்கிள்கள் வடிவமைக்கப்படுவதால் அவற்றின் விலை, 2.5 லட்ச ரூபாய் வரை விற்கப்படுகிறது.

டில்லியில் சமீபத்தில் பல்வேறு வாகனங்களின் கண்காட்சி நடந்தது. விதவிதமான கார்கள், டூவீலர்கள் இந்த கண்காட்சியை அலங்கரித்தன. தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற பாணியில் சைக்கிள் நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை, இந்த கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருந்தன. இந்த கண்காட்சியில் ஹீரோ, ஹெர்குலஸ், பி.எஸ்.ஏ., ரேலி, பியான்சி, அடிடாஸ், பயர்பாக்ஸ், ட்ரெக் உள்ளிட்ட சைக்கிள் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தன. பயர் பாக்ஸ் நிறுவன அதிகாரி அஜித் காந்தி குறிப்பிடுகையில், 'தற்போது சைக்கிள்கள் உடற்பயிற்சிக்காகவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரத்துக்கும், சண்டை காட்சிகளில் பயன்படுத்தவும் வாங்கப்படுகிறது. சைக்கிள் பயணம் செய்வதற்கு மட்டுமே, என்ற நிலை மாறி விட்டது' என்றார். அடிடாஸ் நிறுவன மேலாளர் ரித்திஷ் அரோரா குறிப்பிடுகையில், 'ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து எங்கள் நிறுவனம் பல்வேறு வகையான சைக்கிள்களை தயாரித்து வருகிறது. மலைப்பாங்கான பகுதிகளில் இடறாமல், தடுமாறாமல் செல்வதற்குரிய டயர்களை பயன்படுத்தி, ஏராளமான கியர்களை கொண்ட சைக்கிள்களை தயாரித்துள்ளோம். இவற்றின் விலை, ஆறாயிரம் முதல் இரண்டரை லட்ச ரூபாய் வரை விற்கப்படுகிறது' என்றார்.

நன்றி : தினமலர்


பெடரல் வங்கியை வாங்க ஐடிபிஐ முயற்சி

கேரளாவைச் சேர்ந்த தனியார் வங்கியான பெடரல் வங்கியை, அரசுத் துறை வங்கியான ஐடிபிஐ வாங்க உள்ளது. இதற்கான நடைமுறைகளை முழுமையாக முடித்துவிட்டதாக ஐடிபிஐ தெரிவித்துள்ளது. ஆனால் கைமாறும் தொகை பற்றி எதுவும் கூறப்படவில்லை. இந்த இணைப்புக்குப் பிறகு, மற்ற அரசு வணிக வங்கிகளுக்கு இணையான கிளைகள், வாடிக்கையாளர்கள் மற்றும் டெபாஸிட்டுகளை ஐடிபிஐ வங்கியும் பெற்று விடும்.

தென்னிந்தியாவின் பெரிய தனியார் வங்கியான பெடரல் வங்கிக்கு 641 கிளைகள் உள்ளன. ரூ 33439 கோடி டெபாஸிட்டுகள் கொண்ட இந்த வங்கியின் ஆண்டு வர்த்தகம் மட்டும் ரூ 59000 கோடி. சில ஆண்டுகளுக்கு முன் வெஸ்டர்ன் யூனியன் வங்கியை இதே போல கையகப்படுத்தியது ஐடிபிஐ. இப்போது பெடரல் வங்கி தவிர, சவுத் இந்தியன் வங்கி, கர்நாடக வங்கி போன்றவற்றை வாங்கவும் திட்டமிட்டுள்ளது. பெடரல் வங்கியை வாங்கும் ஐடிபிஐயின் முயற்சி பற்றி அதன் தலைவர் யோகேஷ் அகர்வால் வெளிப்படையாகப் பேசி வருகிறார். ஆனால் பெடரல் வங்கி நிர்வாக இயக்குநர் வேணுகோபாலோ மௌனம் சாதிக்கிறார்.

நன்றி : தினமலர்