Sunday, July 13, 2008

பங்குச் சந்தையில் சாண் ஏறினால் முழம் வழுக்குகிறது


பங்குச் சந்தை 21,000 அளவில் இருந்து 16,000 வரை வந்தவுடன் பலரும் நினைத்தனர், சந்தை இதை விடக் குறையாது, வாங்குவதற்கு இது நல்ல சந்தர்ப்பம் என்று வாங்கவும் செய்தனர். ஆனால், சந்தை அதை விடவும் குறைந்தது; 13,000 அளவும் எட்டியது. ஆனால், அவர்களில் பலருக்கு அப்போது வாங்க துணிவில்லை. 16,000க்கு வந்த போது வாங்க இருந்த துணிவு 13,000 வந்த போது இல்லை. ஏனெனில், இனம் புரியாத ஒரு பயம் தான். சந்தை ஏன் குறைந்து கொண்டே வருகிறது. பெரிய காரணங்களாகப் பார்த்தால் அரசியல் நிலைமை, தொடர்ந்து ஏறும் கச்சா எண்ணெய் விலை, தொடர்ந்து கூடி வரும் பணவீக்கம், உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம் ஆகியவை தான். காரணங்கள் எதுவாக இருந்தாலும், முதலீட்டாளர்கள் மீதும் குறை என்றும் சொல்லலாம். பழைய காலத்தில் எல்லாம் பங்குச் சந்தையில் எல்லாரும் நீண்ட கால முதலீடாக எண்ணி முதலீடு செய்து வந்தனர். நாமும் அந்தக் கம்பெனியில் ஒரு பங்குதாரர் என்ற எண்ணம் மேலோங்கி இருந்து வந்தது. ஆதலால், வாங்கிய கம்பெனி பங்குகளை அதிக நாட்கள் விற்காமல் வைத்திருந்தனர். நல்ல கம்பெனி பங்குகளாக இருக்கும் பட்சத்தில், அது அவர்களுக்கு மிகுந்த பலனைத் தந்தது. ஆனால், தற்சமயம் பலரும் பங்குச் சந்தையை குறுகிய கால லாப நோக்கில் பார்க்கும் எண்ணம் வந்தவுடன் தான், சந்தையின் ஏற்ற-இறக்கங்களைப் பார்த்துப் பார்த்து மனதும் ஏற-இறங்க ஆரம்பித்தது.
புதன் கிழமையன்று 600 புள்ளிகளுக்கு மேல் ஷார்ட் கவரிங், முன்னேறிய அரசியல் நிலைமை, உலகளவிலான பங்குச் சந்தைகளின் ஏற்றம் ஆகியவைகளின் காரணமாக ஏறியதும், வியாழனன்று அதற்காகவே காத்திருந்தது போலவே பலரும் விற்க ஆரம்பித்தனர். அது, சந்தையை பாடாய்படுத்தியது. அதாவது, சந்தையில் எந்தவொரு ஏற்றத்திலும் விற்பதற்கு இது தான் சந்தர்ப்பம் என்று பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதனால், சந்தை சாண் ஏறி, முழம் வழுக்குகிறது. தொடக்கத்தில் 112 புள்ளிகள் வரை கீழே இறங்கியிருந்த பங்குச் சந்தை, முடிவாக 38 புள்ளிகள் இறக்கத்துடன் முடி வடைந்தது. வெள்ளியன்று சந்தையை வழுக்கியதற்கு கச்சா எண்ணெயும் ஒரு காரணம். கச்சா எண்ணெய் பேரலுக்கு 142 டாலர் வரை மறுபடி சென்று விட்டது. இன்போசிஸ் கம்பெனியின் முடிவுகள் வெள்ளியன்று வெளிவந்தது. இந்த காலாண்டு முடிவுகள் சென்ற ஆண்டு இதே காலாண்டின் லாபத்தை விட 4.2 சதவீதம் அதிகமாக இருந்தது. மேலும், அடுத்த ஆண்டு முடிவு மாதமான மார்ச், லாபத் திற்கான கைடன்ஸ் 26.6 சதவீதமாக உயர்த் தப்பட்டது (இது முன்பு 24.4 சதவீதமாக இருந்தது). இருந்தும், சந்தையில் கம்பெனியின் பங்குகள் கீழே சென்றன. மேலும் பணவீக்கம் இந்த வாரம் 11.89 சதவீதமாக கூடியிருந்தது. இவை எல்லாமாக சேர்ந்து சந்தையை வீறு கொண்டு கீழே இழுத்தன. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 469 புள்ளிகள் குறைந்து 13,469 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 113 புள்ளிகள் குறைந்து 4,049 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. வங்கிகளிடம் உபரி பணம்: கையில் 20,000 கோடி ரூபாய்களுக்கு மேல் உபரி பணமாக வைத்திருக்கும் ஐ.சி.ஐ.சி..ஐ., வங்கி, வெளிநாடுகளில் வேறு பிசினசில் முதலீடு செய்யலாமா என்று யோசித்து வருகிறது. வங்கி கடன்களுக்கு வட்டி விகிதங்கள் கூடுதலாகிப் போனதால், கடன்கள் வாங்குபவர்கள், வாங்குவதற்கு முன் இவ்வளவு வட்டி கொடுத்து வாங்க வேண்டுமா என்று யோசிக்கினன்றனர். அதனால் தான், பல வங்கிகளிடம் உபரி பணம் இருக்கும் நிலைமை.
தற்போதைய சூழ்நிலையில் தங்கம் தங்கமான முதலீடா?: உலகளவில் பங்குச் சந்தைகள் கீழே சென்று கொண்டிருக்கும் போது, முதலீட்டாளர்கள் மற்ற வகை முதலீடுகளைத் தேடி ஓடுவது இயல்பு தான். அந்த வகையில் தங்கத்தை தேடி பலரும் செல்வர். ஏனெனில், நிலையான முதலீடு என்பதால். சமீப காலமாக தங்கத்திற்கு இரண்டு பக்கமும் அடி. அதாவது, தங்கத்தின் உலகளவிலான விலையும் (டாலர் கணக்கில்) கூடி வருகிறது. இந்தியாவில் டாலர் மதிப்பும், ரூபாய்க்கு எதிராக கூடி வருகிறது. ஆதலால், தங்கம் ஒரு அவுன்ஸ் 1,000 டாலரைத் தொடாமலேயே, உள்நாட்டு ரூபாய் மதிப்பில் 13,000ஐ தொட்டு விட்டது. ஆதலால், சந்தையில் தங்கத்திற்கும் முதலீட்டாளர்கள் அதிகம் தாவவில்லை. பின்னர் பணம் எங்கு செல்கின்றன. வங்கி வட்டி விகிதங்கள் கூடி வருவதால், அங்கு பெரிய அளவில் செல்கின்றன.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்?: நிலைமைகள் இன்னும் சரியாகவில்லை. படிப்படியாகத்தான் சரியாகும். இன்னும் நீண்ட நாட்கள் எடுக்கும். மற்ற காரணங்களுடன் வரப்போகும் காலாண்டு முடிவுகளும் சந்தையின் போக்கை மாற்றியமைக்கும். பொறுத்திருங்கள். ஆதலால், பொறுமை காப்பவர்களுக்கு பங்குச் சந்தை ஒரு லாபமான வருமானத்தைத் தரும்.
-சேதுராமன் சாத்தப்பன்

நன்றி : தினமலர்