Saturday, February 7, 2009

அமெரிக்காவில் வேலையில்லாதோர் விகிதம் 7.6 சதவீதமாக உயர்வு

அமெரிக்காவில் கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 6 லட்சம் பேர் வேலையை இழந்திருக்கிறார்கள். இதன் மூலம் அமெரிக்காவில் வேலையில்லாதோர் விகிதம், கடந்த 16 வருடங்களில் இல்லாத அளவாக 7.6 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 2007 கடைசியில் அங்கு பொருளாதார சரிவு ஏற்பட ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 36 லட்சம் பேர் வேலையை இழந்திருப்பதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. ஜனவரியில் மட்டும் 5,98,000 பேர் வேலையை இழந்திருப்பதால், அங்கு வேலையில்லாதோர் விகிதம் 7.2 சதவீதமாக இருந்தது 7.6 சதவீதமாக உயர்ந்து விட்டது. இது கடந்த 16 வருடங்களில் இல்லாத நிலை என்று அமெரிக்க தொழிலாளர் துறை தெரிவித்திருக்கிறது. 2007 டிசம்பருக்குப்பின் வேலையை இழந்த மொத்தம் 36 லட்சம் பேரில், மூன்றில் ஒரு பங்கினர் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் வேலையை இழந்திருக்கிறார்கள். அதுவும் ஜனவரியில் தான் அதிக அளவிலான வேலை இழப்பு நடந்திருக்கிறது. பொதுவாக எல்லா துறைகளிலுமே கடந்த மாதத்தில் வேலை இழப்பு நடந்திருக்கிறது என்கிறார் லேபர் ஸ்டேடிஸ்டிக்ஸ் அமைப்பின் கமிஷனர் கெய்த் ஹால்.
நன்றி : தினமலர்


சத்யம் கம்ப்யூட்டர்ஸ் சேர்மனாக கிரண் கார்னிக் நியமனம்

ஏ.எஸ்.மூர்த்தியை சத்யம் கம்ப்யூட்டர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்த ஒரு நாளில், அதன் தலைவராக கிரண் கார்னிக் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆறு உறுப்பினர்களை கொண்ட சத்யத்தின் போர்டுக்கு தலைவராக நாஸ்காம் அமைப்பின் முன்னாள் தலைவரான கிரண் கார்னிக் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் பி.சி.குப்தா இதனை அறிவித்தார். சத்யத்தின் நிறுவன தலைவரான ராமலிங்க ராஜூ மோசடியில் ஈடுபட்டதை அடுத்து, அதன் போர்டை, மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று கம்பெனி லா போர்டு கலைத்தது. பின்னர் கம்பெனி லா போர்டு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் மத்திய அரசு முதலில் 3 பேரை கொண்ட புது போர்டை அமைத்தது. கிரண் கார்னிக், தீபக் பரேக் மற்றும் அச்சுதன் ஆகியோர் போர்டு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். பின்னர் அந்த போர்டில் மேலும் மூன்று பேர் சேர்க்கப்பட்டனர். தருன் தாஸ், பாலகிருஷ்ண மைனக் மற்றும் மனோகரன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சத்யத்தின் தலைமை அலுவலகத்தில் ஆறு பேரை கொண்ட அதன் போர்டு இதுவரை ஆறு முறை கூடியுள்ளது. நேற்றைக்கு முந்தின நாள்தான் சத்யத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஏ.எஸ்.மூர்த்தியை அது நியமித்தது. அத்துடன் அவருக்கு ஆலோசகர்களாக ஹோமி குஷ்ரோகான் மற்றும் பார்தோ தத்தா ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். சத்யத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் கிரண் கார்னிக், நாஸ்காமின் தலைவராக 2001 - 02 ல் பணியாற்றியிருக்கிறார். இது தவிர ஐ.டி.துறையிலும் பல முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார். டிஸ்கவரி நெட்வொர்க்கின் இந்திய நிறுவனத்தில் மேலாண் இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.
நன்றி: தினமலர்


பைலட்கள் சம்பளத்தில் ரூ.80 ஆயிரத்தை குறைத்தது கிங்ஃபிஷர்

தனியார் விமான கம்பெனியான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், பைலட்களின் சம்பளத்தில் ரூ.80 ஆயிரத்தை குறைத்திருக்கிறது. எல்லா பைலட்களுக்கும் இது பொருந்தும் என்று அது தெரிவித்திருக்கிறது. இது குறித்து கிங்ஃபிஷரின் பைலட் ஒருவர் தெரிவித்தபோது, நாங்கள் முன்பு மாதம் ரூ.4.30 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தோம். இனிமேல் அதில் ரூ.80 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ.3.50 லட்சம்தான் சம்பளம் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் டெக்கான் ஏர்லைன்ஸூடன் கிங்ஃபிஷரை இணைத்ததுதான் என்றார். எங்களுக்கு கொடுக்கப்பட்ட 70 மணி நேர பறக்கும் நேரத்தை ( ஃபிளையிங் ஹவர்ஸ் ) அடிப்படையாக கொண்டுதான் எங்களுக்கு சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. டெக்கான் ஏர்லைன்ஸூடன் கிங்ஃபிஷரை இணைப்பதால், பழைய டெக்கான் ஏர்லைன்ஸ் பைலட்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தை போலவே எங்களுக்கும் இருக்க வேண்டும் என்று சொல்லி சம்பளம் குறைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். கிங்ஃபிஷரின் இந்த சம்பள குறைப்பு விவகாரம் அதன் பைலட்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே அதில் பணியாற்றும் சுமார் 600 பைலட்களை கொண்ட அமைப்பு, சம்பளம் குறைக்கப்பட்டால், எங்களுக்கும் நிர்வாகத்துக்குமிடையே போடப்பட்ட ஒப்பந்தம் மீறப்பட்டதாக கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்றது.
நன்றி : தினமலர்