Sunday, December 7, 2008

பங்குச் சந்தை சாண் ஏறி முழம் வழுக்குகிறது

வெள்ளியன்று மறுபடி சந்தை 9,000க்கும் கீழே சென்று முடிவடைந்திருக்கிறது. முழம் ஏறி சாண் வழுக்கினால் பரவாயில்லை. சந்தையில் இப்போதெல்லாம் சாண் ஏறி முழம் வழுக்குகிறது. வியாழனன்று மும்பை பங்குச் சந்தை 482 புள்ளிகள் வரை மேலே சென்றது. வெள்ளியன்று அதற்கு நேர்மாறாக அதற்கு பாதியளவு சரிந்தது. மும்பை பங்குச் சந்தை 265 புள்ளிகள் குறைந்து 9,000க்கும் கீழே வந்தது. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 8,965 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 2,714 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. பணவீக்கம் இந்த வாரம் 8.4 சதவீதமாக முடிவடைந்திருக்கிறது. சென்ற வாரம் 8.84 சதவீதமாக இருந்தது. நல்ல இறக்கம் தான். ஆனால், சந்தையில் வெள்ளியன்றும் அது பரிணமிக்கவில்லை. வெள்ளியன்று சந்தை நேரத்திற்கு பிறகு வந்த நல்ல செய்தி, பெட்ரோல் விலை ஐந்து ரூபாயும், டீசல் விலை மூன்று ரூபாயும் குறையவுள்ளது. பெட்ரோல் விலை 10 ரூபாய் அளவு குறையும் என்று எதிர்பார்த்தன. குறைவு குறைவாக இருக்கிறது. ஆதலால், சந்தை எப்படி பரிணமிக்கப் போகின்றன என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும். ஏனெனில், கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 147 டாலராக உச்ச பட்சமாக இருந்தது, தற்போது 44 டாலர் அளவில் வந்துள்ளது. கிட்டத்தட்ட 66 சதவீத தள்ளுபடியில் வந்து நிற்கிறது. ஆனால், தற்போது பெட்ரோல் விலையோ 10 சதவீதம் அளவு தான் குறைக்கப் பட்டிருக்கிறது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இன்போசிஸ் வரும் ஆண்டில் ஆள் எடுப்பதைக் குறைக்கும் என்று செய்தி வந்தவுடன், அது சந்தையில் சாப்ட்வேர் பங்குகளை ஒரு இறக்கு இறக்கிப் பார்த்தது வெள்ளியன்று. ஏனெனில், இன்போசிஸ் இந்த முடிவை எடுத்தால், மற்ற கம்பெனிகளுக்கும் அதே போலத்தானே இருக்கும் என்ற முடிவுக்கு சந்தை வந்தது. அது, சந்தையை அசைத்துப் பார்த்தது. இது தவிர, வெள்ளியன்று வங்கிப் பங்குகளும், கட்டுமானத்துறை பங்குகளும் குறைந்தன. மும்பையில் சமீபத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள், சந்தையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாதது ஒரு பெரிய நிம்மதி. வெளிநாடு முதலீட்டு நிறுவனங்கள் இதை ஒரு தனிப்பட்ட நிகழ்வாகத்தான் எடுத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வாரம் எப்படி இருக்கும்? எல்லாரும் தற்போது எதிர்பார்ப்பது சனியன்று ரிசர்வ் வங்கி ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ சதவீதத்தை முறையே 200 புள்ளிகளும், 125 புள்ளிகளும் குறைக்கலாம் என்பது தான். அப்படி குறைக்கப்பட்டால், சந்தையில் குறைந்து வரும் பணவீக்கம், பெட்ரோல் விலை குறைப்பு ஆகியவைகளை வைத்து திங்களன்று மேலே செல்லும். வரும் 12ம் தேதி இண்டஸ்டிரியல் டேட்டா புள்ளிவிவரம் வரவுள்ளது. அது ஒரு முக்கிய நிகழ்வாகும். அதைப் பொறுத்தும் சந்தையில் மாற்றங்கள் இருக்கும்.
-சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்


வீட்டுக்கடன் வட்டி குறையும்

பணவீக்கத்தை கட்டுப்படுத்தி, விலைவாசியை குறைப்பதற்கும், வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதற்கும், சுணக்கம் கண்டுள்ள உற்பத்தித் துறை மீண்டும் உற்சாகமடைவதற்கும், ரிசர்வ் வங்கி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் பொறுப்புக்கு நிதித்துறை வந்ததும், பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, வங்கிகளுக்கு சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு அளிக்கும் குறைந்த கால கடன்களுக்கும், வங்கிகளிடம் இருந்து பெறும் குறைந்த கால டிபாசிட்களுக்குமான வட்டி விகிதம் 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு அளிக்கும் குறைந்த கால கடனுக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. 2003ம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக, வங்கிகளிடம் இருந்து பெறப்படும் குறைந்த கால டிபாசிட்களுக்கான வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வங்கிகளுக்கு கூடுதல் நிதிவசதி கிடைக்கும். தாராளமாக கடன் கொடுக்க முடியும். கடன்களுக்கு உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்களை குறைக்க முடியும். இது டிசம்பர் 8ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வங்கிகள் ரூ.20 லட்சம் வரையிலான வீட்டு வசதி கடனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும். சமீப காலமாக உற்பத்தித் துறை முடக்கம் கண்டு வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சிட்கோவுக்கு ரூ. 11 ஆயிரம் கோடி மறுநிதி அளிக்கப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம், வங்கிகளின் நிதி இருப்பு விகிதம் 9 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதில் மாற்றம் ஏற்படுத்தாமல், தற்போது புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கி கவர்னர் டி. சுப்பாராவ் கூறியதாவது; ''பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பை தொடர்ந்து, தற்போது ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளால் பணவீக்கம் குறையும் என்று நம்புகிறோம். சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் நிலையை உன்னிப்பாக கவனித்து, அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும்,'' என்று கூறினார். வட்டிவிகித குறைப்பைத் தவிர, சில குறிப்பிட்ட வங்கிகள், அன்னிய செலாவணி மாற்று பாண்டுகளை, வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்ள அனுமதி அளித்துள் ளது. இந்த பாண்டுகள், கவர்ச்சிகரமான கட்டணத்தில் இருப்பதால், வங்கிகள் இதனால் பலன் பெறும். சர்வதேச நிதி நெருக்கடியால் பண பட்டுவாடாவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் ஏற்றுமதியாளர்களுக்கு, குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வசதி கிடைக்கும்.
நன்றி : தினமலர்