Sunday, December 7, 2008

வீட்டுக்கடன் வட்டி குறையும்

பணவீக்கத்தை கட்டுப்படுத்தி, விலைவாசியை குறைப்பதற்கும், வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதற்கும், சுணக்கம் கண்டுள்ள உற்பத்தித் துறை மீண்டும் உற்சாகமடைவதற்கும், ரிசர்வ் வங்கி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் பொறுப்புக்கு நிதித்துறை வந்ததும், பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, வங்கிகளுக்கு சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு அளிக்கும் குறைந்த கால கடன்களுக்கும், வங்கிகளிடம் இருந்து பெறும் குறைந்த கால டிபாசிட்களுக்குமான வட்டி விகிதம் 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு அளிக்கும் குறைந்த கால கடனுக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. 2003ம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக, வங்கிகளிடம் இருந்து பெறப்படும் குறைந்த கால டிபாசிட்களுக்கான வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வங்கிகளுக்கு கூடுதல் நிதிவசதி கிடைக்கும். தாராளமாக கடன் கொடுக்க முடியும். கடன்களுக்கு உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்களை குறைக்க முடியும். இது டிசம்பர் 8ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வங்கிகள் ரூ.20 லட்சம் வரையிலான வீட்டு வசதி கடனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும். சமீப காலமாக உற்பத்தித் துறை முடக்கம் கண்டு வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சிட்கோவுக்கு ரூ. 11 ஆயிரம் கோடி மறுநிதி அளிக்கப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம், வங்கிகளின் நிதி இருப்பு விகிதம் 9 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதில் மாற்றம் ஏற்படுத்தாமல், தற்போது புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கி கவர்னர் டி. சுப்பாராவ் கூறியதாவது; ''பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பை தொடர்ந்து, தற்போது ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளால் பணவீக்கம் குறையும் என்று நம்புகிறோம். சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் நிலையை உன்னிப்பாக கவனித்து, அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும்,'' என்று கூறினார். வட்டிவிகித குறைப்பைத் தவிர, சில குறிப்பிட்ட வங்கிகள், அன்னிய செலாவணி மாற்று பாண்டுகளை, வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்ள அனுமதி அளித்துள் ளது. இந்த பாண்டுகள், கவர்ச்சிகரமான கட்டணத்தில் இருப்பதால், வங்கிகள் இதனால் பலன் பெறும். சர்வதேச நிதி நெருக்கடியால் பண பட்டுவாடாவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் ஏற்றுமதியாளர்களுக்கு, குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வசதி கிடைக்கும்.
நன்றி : தினமலர்


No comments: