Wednesday, March 4, 2009

போலி டாக்டரா, நல்ல டாக்டரா என்று கண்டுபிடிக்க வெப்சைட்

இப்போதெல்லாம் யார் உண்மையான டாக்டர், யார் போலி டாக்டர் என்று கண்டுபிடிப்பது ஒரு கஷ்டமான வேலையாக இருக்கிறது. இந்த குழப்பத்தை போக்கும்விதத்தில், டில்லி மெடிக்கல் கவுன்சில் ஒரு வெப் சைட்டை துவக்கியிருக்கிறது. அதில், டாக்டராக ரிஜிஸ்டர் செய்திருக்கும் ( ரிஜிஸ்டர்டு மெடிக்கல் பிராக்டீஷனர் ) எல்லா டாக்டர்களின் பெயர், முகவரி மற்றும் கல்வித் தகுதி போன்றவைகள் பதிவு செய்து வைக்கப்படுகிறது. டில்லியில் இருப்பவர்கள் அவர்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே, எந்தெந்த கல்வித்தகுதியில் எந்தெந்த டாக்டர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கம்ப்யூட்டரில் பார்த்துக்கொள்ளலாம் என்று மெடிக்கல் கவுன்சிலின் பதிவாளர் டாக்டர. கிரிஷ் தியாகி தெரிவிக்கிறார். www.delhimedicalcouncil.nic.in என்ற வெப்சைட்டில் இப்போதைக்கு 40,000 பதிவு பெற்ற டாக்டர்களில் விபரங்கள் இருக்கின்றன.

நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய்யின் விலை குறைவால் இறக்குமதி பில்தொகை 67 சதவீதம் குறைந்தது

இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை கொண்டிருக்கும் இந்தியன் ஆயில் கார்பரேஷன், மாதா மாதம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் பில்தொகை இப்போது 67 சதவீதம் குறைந்து 1.5 பில்லியன் டாலருக்கு வந்திருக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து போனதையடுத்து இறக்குமதி பில் தொகையும் குறைந்திருக்கிறது. கடந்த வருடம் ஜூலையில் பேரல் ஒன்றுக்கு 140 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, இப்போது 40 டாலரை ஒட்டித்தான் இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி பில் தொகையும் வெகுவாக குறைந்து விட்டது. புதுடில்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய இந்தியன் ஆயில் கார்பரேஷனின் இயக்குநர் ( நிதி ) நரசிம்மன் இதனை தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பேரலுக்கு 140 டாலராக இருந்தபோது 4.5 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் இறக்குமதி பில் தொகை, இப்போது 1.5 பில்லியன் டாலராக குறைந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


இன்னும் சில விமானங்களை ஒத்திக்கு கொடுக்க ஜெட் ஏர்வேஸ் திட்டம்

இன்னும் கொஞ்சம் விமானங்களை வெளிநாட்டு விமான கம்பெனிகளிடம் ஒத்திக்கு கொடுக்கலாமா என்பது பற்றி ஜெட் ஏர்வேஸ் யோசித்தி வருகிறது. ஏற்கனவே துர்கிஷ் ஏர்லைன்ஸ் மற்றும் கல்ஃப் ஏர் ஆகிய நிறுவனங்களுக்கு கொடுத்திருந்த விமானங்களின் ஒத்தி காலம் முடிந்தும் கூட, அதனை இன்னும் இரண்டு வருடங்களுக்கு ஜெட் ஏர்வேஸ் நீட்டிப்பு செய்திருக்கிறது. இது குறித்து ஜெட் ஏர்வேஸின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், துர்க்கிஷ் ஏர்லைன்ஸ்ஸூக்கு நாங்கள் கொடுத்திருந்த மூன்று ' பி777-300 இஆர் ' ரக விமானங்களின் வெட் லீஸ் காலத்தில் ஆறு மாதங்கள் முடிந்ததும், அதனை இன்னும் 25 மாதங்களுக்கு டிரை லீசுக்கு கொடுத்திருக்கிறோம் என்றார். அதேபோல கல்ஃப் ஏர் நிறுவனத்திற்கு 36 மாத டிரை லீசுக்கு கொடுத்திருந்த நான்கு ' பி777 - 400 இஆர் ' விமானங்களின் குத்தகை காலம் முடிந்து விட்டதால், அது இன்னும் ஆறு மாத கால வெட் லீசுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார். தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மூன்று வெளிநாட்டு விமான சேவையை நடத்தி வருகிறது. இரண்டு சேவைகள் மும்பை - லண்டனுக்கும், ஒரு சேவை டில்லி - லண்டனுக்கும் நடத்தப்படுகிறது. வரும் ஜூலையில் இருந்து இன்னும் ஒரு வெளிநாட்டு விமான சேவையை அது துவங்க இருக்கிறது.
நன்றி : தினமலர்


ஜெனிவா மோட்டார் ஷோவில் டாடாவின் ' நானோ யூரோப்பா ' கார் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் மிக மலிவு விலை காரான ' நானோ ' வை 2008ல் புதுடில்லியில் நடந்த ஆட்டோ ஷோவிலேயே அறிமுகப்படுத்தி விட்டது. வர்த்தக ரீதியாகவும் அது, வரும் 23ம் தேதி டாடா டீலர்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், ஜெனிவாவில் நடக்கும் மோட்டார் ஷோவில், ஐரோப்பிய கார் பிரியர்களுக்காக சில கூடுதல் வசதிகளுடன் கூடிய அதன் ' நானோ யூரோப்பா 'காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் சர்வதேச அளவிலான கார் பிரியர்களின் கவனத்தை கவர்ந்திருக்கும் டாடா மோட்டார்ஸ், குறிப்பிட்ட சில சர்வதேச சந்தைகளில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் ' நானோ யூரோப்பா ' வை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. இது குறித்து டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா பேசியபோது, நாங்கள், வளர்ந்த நாடுகளிலும் டாடா நானோ காரை அறிமுகப்படுத்துவதில் ஆர்வமாக இருக்கிறோம். இந்தியாவில் ' டாடா நானோ 'என்ற பெயரில் இருக்கும் அந்த கார் அங்கு ' டாடா நானோ யூரோப்பா ' என்ற பெயரில் இருக்கும். இன்னும் இரண்டு வருடங்களில் இது அவர்கள் சந்தைகளில் இருக்கும் என்றார். நானோ வை விட நானோ யூரோப்பா சில மாறுதல்களை கொண்டிருக்கும். நானோ யூரோப்பா 2.25 மீட்டர் வீல்பேஸ் கொண்டதாகவும் 3 சிலிண்டர் ஸ்போர்ட்டி அலுமினியம் எம்பிஎஃப்ஐ இஞ்சினையும் கொண்டதாக இருக்கும்.5 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனும் பவர் ஸ்டியரிங்கையும் கொண்டதாக இருக்கும். பெட்ரோல் இஞ்சின் காரான நானோ யூரோப்பா, அதிக மைலேஜ் கொடுக்க கூடியதாகவும், குறைவான கார்பன் - டையாக்ஸைடை வெளியிடக்கூடியதாகவும் இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


பொருளாதார சரிவுக்கு முன்பே 44 ஆயிரம் ஊழியர்களை வேலைநீக்கம் செய்த பொதுத்துறை நிறுவனங்கள்

சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார சரிவு செப்டம்பர் 2008ல் தான் இந்தியாவையும் பாதிக்க ஆரம்பித்தது. ஆனால் அதற்கு முன்பாகவே அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் 44 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது. 48 வது பொதுத்துறை நிறுவனங்களின் ஆய்வறிக்கை 2007-08 ல் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 16.14 லட்சம்பேர் வேலைபார்த்து வந்த பொதுத்துறை நிறுவனங்களில், 2007 - 08 ல் 15.7 லட்சம் பேர் மட்டுமே வேலை பார்த்தது தெரிய வந்திருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களின் லாபம் ரூ.89,578 கோடியில் இருந்து ரூ.91,140 கோடியாக உயர்ந்திருந்த நிதி ஆண்டில்தான் ஊழியர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டிருக்கிறது. ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்ததற்கும் பொருளாதார சரிவுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. ஏனென்றால் பொருளாதார சரிவால் ஏற்பட்ட பாதிப்பு செப்டம்பர் 2008க்கு பின்னர் தான் இந்தியாவில் தெரிய வந்தது. பொருளாதார மந்த நிலை காரணமாகவும் செப்டம்பர் - டிசம்பர் 2008 ல் சுமார் 5 லட்சம் ஊழியர்கள் வேலையை இழந்திருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்


வீழ்ச்சியடைந்து வரும் வாகன விற்பனை

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக உலகப் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், வங்கிகளின் அறிவிப்புகள், ஐ.டி., துறையில் ஏற்பட்டுள்ள சரிவு போன்ற காரணங்களால் வாகனங்களின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசுக்கு, வாகனங்கள் மூலம் இரண்டு வகையில் வருமானம் கிடைக்கிறது. வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மூலம் விற்பனை வரி, வாகனங்களை போக்குவரத்துத் துறையில் பதிவு செய்வதன் மூலம் பதிவு கட்டணம் மற்றும் சாலை வரி இவற்றின் மூலமும் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. சாலை வரியை பொறுத்தவரை இருசக்கர வாகனங்கள் மற்றும் ஜீப், கார் போன்ற வாகனங்களுக்கு, 'வாழ்நாள் வரி' விதிக்கப்படுகிறது. இது, வாகனத்தின் மொத்த விலையில் 8 சதவீதம். மற்ற வாகனங்களுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு வரி விதிக்கப்படுகிறது. வாகனங்கள் பொதுவாக இரண்டு பிரிவின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. இருசக்கர வாகனங்கள், கார், ஜீப் போன்றவை, 'போக்குவரத்து அல்லாத' வாகனங்களாகவும், சுற்றுலா டாக்சிகள், 'மேக்சி கேப்' வேன்கள், சரக்கு வாகனங்கள் அனைத்தும்'போக்குவரத்து வாகனங்கள்' எனவும் பிரித்து அவற்றிற்கென தனிப்பட்ட வரி விகிதங்களுடன் பதிவு செய்யப்படுகின்றன.
பதிவுக்கட்டணம் இருசக்கர வாகனங்களுக்கு 60 ரூபாயும், இலகு ரக போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு 200 ரூபாயும், போக்குவரத்து வாகனங்கள், ஆட்டோக்களுக்கு 300 ரூபாயும், மத்தியதர வாகனங்களுக்கு 400 ரூபாயும், கனரக வாகனங்களுக்கு 600 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வாழ்நாள் வரியாக இருசக்கர வாகனங்களில் 50 சி.சி.,க்கு உட்பட்டவற்றிற்கு 1,000 ரூபாயும், 75 சி.சி.,க்கு உட்பட்டவற்றிற்கு 1,500 ரூபாயும், 75 சி.சி.,யிலிருந்து 170 சி.சி., வரை திறனுள்ளவற்றிற்கு 2,500 ரூபாயும், 170 சி.சி.,க்கு மேற்பட்டவற்றிற்கு 3,000 ரூபாயும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இது தவிர போக்குவரத்து வாகனங்களில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட வாகனங்களில் அவற்றின் திறனை பொறுத்து 1,800 ரூபாய் முதல் 3,300 ரூபாய் வரையிலும், இந்திய தயாரிப்பு வாகனங்களுக்கு தனி மனித வாகனமாக இருந்தால் 600 ரூபாய் முதல் 1,250 ரூபாய் வரையிலும், மற்ற வாகனங்களுக்கு 1,200 ரூபாயிலிருந்து 2,500 ரூபாய் வரையிலும் ஆண்டு வரியாக வசூலிக்கப்படுகிறது. போக்குவரத்துத் துறைக்கு இந்த வருவாய் தொடர்ந்து அதிகரித்துவந்த நிலையில் இந்தாண்டு குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் வாகன விற்பனை குறைந்துள்ளது தான்.
கடந்தாண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு பிப்ரவரி முதல் தேதி வரையிலான 10 மாதங்களில் தமிழகம் முழுவதும் ஏழு லட்சத்து 34 ஆயிரத்து 349 போக்குவரத்தல்லாத வாகனங்களும், 75 ஆயிரத்து 231 போக்குவரத்து வாகனங்களும் என எட்டு லட்சத்து 9,580 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2007-08ம் ஆண்டில் ஒன்பது லட்சத்து 65 ஆயிரத்து 390 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி 2007-08ம் ஆண்டை விட 2008-09ம் ஆண்டில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 810 வாகனங்கள் குறைவாக பதிவு செய்யப்பட்டுள் ளன. இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் வாகன பதிவில் அதிக மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும், அரசுக்கு வாகன பதிவு, வரி தவிர வாகன விற்பனையாளர்கள் தரப்பில் கிடைக்கும் 12 சதவீத வாட் வரி வசூல் மூலம் கிடைக்கும் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரி கூறியதாவது: வாகன விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும் வரி தவிர அரசுத்துறையான போக்குவரத்துத் துறைக்கு வரி மற்றும் பதிவுக் கட்டணம் மூலம் அதிக வருவாய் கிடைத்து வருகிறது.
வாகன விற்பனை தொடர்ந்து உயர்ந்து, அதாவது தினசரி 2,500 முதல் 4,000 வாகனங்கள் வரையில் ஒவ்வொரு பகுதியிலும் பதிவு செய்யப் பட்டு வந்தது. தற்போது, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஐ.டி., நிறுவனங்களில் ஏற்பட்ட பிரச்னை, பொருளாதார நிலையில் ஏற்பட்ட மாற்றம் இவற்றினால் வாகனங்கள் வாங்குவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரையில் 35 சதவீதம் அளவிற்கு வாகன பதிவு பாதிக்கப் பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறையின் வருவாயும் 40 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போக்குவரத்துத் துறை அதிகாரி கூறினார்.
சரிவுக்கு காரணம் என்ன?: வாகனங்களின் விற்பனை குறைந்ததற்கு ஐ.டி.,நிறுவனங்களில் ஏற்பட்ட பிரச்னையால், பணியாளர்களுக்கு ஏற் பட்டுள்ள பாதிப்பை மட்டும் காரணங்களாக கூறமுடியாது. பெரும் பான்மையான மக்கள், வாகனங்களை வங்கிகளின் நிதிஉதவி மூலமே வாங்குகின்றனர். தற்போது வாகனக் கடன் கொடுத்துவந்த வங்கிகள் பல, இத்திட்டத்தை நிறுத்திவிட்டன. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி உள்ளிட்ட சில வங்கிகள் வாகன விற்பனையகங்களில் இருந்த தங்கள் பணியாளர்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டன. வாகனங்களை நிதிஉதவி மூலம் பெறுவோர், கடன் தொகையை திருப்பி செலுத்துவதில் ஏற்பட்ட பிரச்னையால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழலில் எச்.டி.எப்.சி., வங்கி உள்ளிட்ட சில வங்கிகளே அதிகளவில் வாகனக்கடனை வழங்கி வருகின்றன. அப்படி வழங்கினாலும், கடன் தருவதற்கான விதிமுறையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பொருளாதார நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அனைவருக்கும் எளிதாகும் பட்சத்தில் இந்த வருவாய் இழப்பை தவிர்க்கலாம்.
நன்றி : தினமலர்