Monday, November 16, 2009

அதிர வைக்கும் அமைச்சர்கள்!

மத்திய கேபினட் அமைச்சர்களின் கடந்த 3 ஆண்டு (2006 - 09) பயணச் செலவு ரூ.300 கோடிக்கும் அதிகம் என்பது அண்மையில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி.

சமூகநல ஆர்வலர் ஒருவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அமைச்சரவைச் செயலகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 30 பேர் கேபினட் அமைச்சர்களாக (தற்போது 33 பேர்) இருந்துள்ளனர். ஆண்டுதோறும் சராசரியாக ஒவ்வொரு அமைச்சரும் தலா ரூ.2 கோடியைப் பயணத்துக்காகச் செலவிட்டுள்ளனர்.

இதில் உள்நாட்டில் செய்த பயணச் செலவு ரூ.163 கோடிக்கும் அதிகம்; வெளிநாடுகளுக்குச் சென்ற பயணச் செலவு சுமார் 137 கோடி.

இது தவிர கடந்த 3 ஆண்டுகளில் இணையமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணத்துக்காக ரூ.21 கோடியும், உள்நாட்டுப் பயணத்துக்காக ரூ.27 கோடியும் செலவிட்டுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மத்திய பட்ஜெட்டில் அமைச்சர்களின் பயணச் செலவுக்காக ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டது. இது அந்த ஆண்டின் அரசின் மொத்தச் செலவில் 0.01 சதவீதமாக இருந்தது. ஆனால் 2009 - 10-ம் ஆண்டு பட்ஜெட்டில் அமைச்சர்களின் பயணச் செலவுக்காக ரூ.161 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது அரசின் மொத்தச் செலவில் 0.02 சதவீதம். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 4 மடங்கு தொகை அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

நலத்திட்டங்களுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்படுகிறதோ, அதைவிட அதிகமாகப் பயணச் செலவு அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் பயணச் செலவு 4 மடங்காக அதிகரித்துள்ளதென்றால் அமைச்சர்கள் எந்த அளவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஒதுக்கப்படும் தொகையைவிட பயணச் செலவு இரு மடங்கு ஆகிறது என்பது வேறு விஷயம்.

நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில் மொத்தமுள்ள 76 மத்திய அமைச்சர்களுக்கு (தற்போது 78 பேர்) ரூ.161 கோடி பயணத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒருவருக்கு ரூ.2 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இது முன்பு ஒதுக்கப்பட்ட தொகையை விட அதிகம். அமைச்சர்கள் இதையும் விஞ்சி விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

வெளிநாடுகளுக்குப் பயணம் சென்றால் பணம் அதிகமாகத் தான் செலவாகும், இது சாதாரண விஷயம் தான் என்று கூட சிலர் நினைக்கக்கூடும். ஆனால் அழைப்பு விடுக்கும் நாடுகள் பல தங்கள் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிக் கொள்ள அமைச்சர்களை அனுமதிக்கும். ஆனால் நமது அமைச்சர்களில் பலர் அதைப் புறக்கணித்து, ஆடம்பரமான 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதையே விரும்புகின்றனர்.

மேலும் அமைச்சர்கள் வெளிநாடுகள் செல்லும் போது அங்கு தேவைப்படும் கார் வசதியை அழைப்பு விடுத்த நாடுகளே பெரும்பாலும் செய்து கொடுக்கும். உணவுச் செலவும் இதே போன்றுதான். இதுதவிர வெளிநாடு செல்லும் அமைச்சர்களுக்கு தினப்படியாக ரூ. 3,000 வழங்கப்படுகிறது.

உள்நாட்டுப் பயணத்தின் போது விருந்தினர் மாளிகை போன்றவற்றில் அமைச்சர்கள் தங்கிக் கொள்ளும் வசதியும் உள்ளது. இவற்றையெல்லாம் மீறி இந்த அளவுக்கு பயணச் செலவு அதிகரித்திருப்பதே அதிர்ச்சியளிக்கும் விஷயம்.

கடந்த ஆட்சியில் நமது அமைச்சர்கள் சுமார் 1 கோடி கி.மீ. தூரத்துக்கும் அதிகமாகப் பயணம் செய்திருக்கிறார்கள். இதில் சொந்தப் பயணங்களும் அடங்கும் என்றாலும் பெரும்பாலானவை அதிகாரப்பூர்வ பயணங்களே. இவர்கள் பயணம் செய்துள்ள மொத்த தூரத்துக்கு, பூமியை சுமார் 250 முறை சுற்றி வந்து விடலாம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த 2006-07 பட்ஜெட்டில் அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ரூ.45.18 கோடி ஒதுக்கினார். ஆனால் செலவு ஏற்பட்டதோ ரூ.92.31 கோடி.

நிறையச் செலவாகிறதே என்று இதற்கு அடுத்த நிதியாண்டியில் (2007-08) பயணச் செலவுக்கு ரூ.75.5 கோடியை ஒதுக்கினார். அந்த ஆண்டில் ரூ.150.43 கோடி செலவிட்டு அசத்தினர் நமது அமைச்சர்கள்.

2004-05-ல் ரூ.15 கோடியாக இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் பயணச் செலவு, 2008-09-ல் 22.58 கோடியாக அதிகரித்தது. நடப்பு பட்ஜெட்டில் அவரது பயணச் செலவுக்காக 23.39 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் எந்த வேலைக்காகப் பயணம் செய்தாலும் சரி, அந்தச் செலவுகள் அனைத்தும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தலையில் தான் விழுகிறது. இவை அனைத்தும் நாம் செலுத்தும் வரிப் பணம் தானே தவிர வேறு எதுவும் இல்லை.

ஒதுக்கப்படும் தொகையைவிட அதிகம் செலவிடும் இந்த அமைச்சர்கள், செலவைக் காட்டிவிட்டு எவ்வாறு செலவானது என்பதைக் கூற பெரிதும் கஷ்டப்படுகின்றனர்.

இவ்வளவு செலவு செய்யும் அமைச்சர்கள், விவசாயிகள் கரும்புக்குக் கூடுதல் விலை கேட்டால் அதனை ஏற்க மறுக்கின்றனர். அதனை எதிர்த்து அவசரச் சட்டமும் இயற்றப்படுகிறது.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது அண்மையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்த சிக்கன நடவடிக்கையும், அமைச்சர்கள் விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம், ராகுல் காந்தியின் ரயில் பயணம் எல்லாம் மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகமாகவே தோன்றுகிறது.

பெரும்பாலும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்கிறோம் என்ற பெயரில்தான் அமைச்சர்களின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் அமைகின்றன. அமைச்சர்கள் செய்யும் பயணச் செலவு இவ்வளவு உயர்வதற்கு, செலவு உச்சவரம்பு நிர்ணயிக்காததே முக்கியக் காரணம். எனவே செலவைக் கட்டுப்படுத்த உச்சவரம்பு நிர்ணயிப்பது அவசர, அவசியமானது.
கட்டுரையாளர் : சு. வெங்கடேஸ்வரன்
நன்றி : தினமணி

உரிமைகளை மறைக்காதீர்

காடுவாழ் மக்களுக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ் நில உரிமை பட்டாக்களை வழங்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஈடுபட்டுள்ளதும், முதல்கட்டமாக 5 மாவட்டங்களைச் சேர்ந்த 765 பேருக்கு பட்டா வழங்கப்படவுள்ளது என்பதும் மகிழ்ச்சியான தகவல்தான். இருப்பினும், இச்சட்டத்தின் கீழ் வரப்பெற்றுள்ள மனுக்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிகக் குறைவு என்ற தகவல் வருத்தம் தருகிறது.

பழங்குடியினர் மற்றும் காடுவாழ் வம்சாவளியினர் (வன உரிமை அங்கீகரித்தல்) சட்டம்-2006 நிறைவேற்றப்பட்டு, அதனடிப்படையில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது இந்த ஆண்டு இறுதிக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்தச் சட்டம் குறித்து பழங்குடியின மக்களுக்கும் காடுவாழ் மக்களுக்கும் சரியான விழிப்புணர்வு அளிக்கப்படவில்லை, அல்லது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டுள்ளது என்பதே, தமிழகத்தில் மிகக் குறைவான மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதற்கு மிக முக்கிய காரணம் என்று கருத வேண்டியிருக்கிறது.

ஓர் ஊரிலிருந்து அல்லது கிராமத்திலிருந்து ஒரு குடும்பத்தை அரசோ அல்லது தனிநபரோ வெளியேற்ற முடியாது என்றால், அதற்குக் காரணம் அவர்களிடம் பட்டா இருக்கிறது என்பதுதான். ஆனால் காட்டில் வாழ்பவருக்கு எந்த ஆவணங்களும் கிடையாது. வனஅதிகாரி, அரசியல்வாதி, அரசு என யார் வேண்டுமானாலும் எந்தத் திட்டத்தின் பெயராலும் அவர்களை வெளியேற்றுவதும் அவர்களது விளைச்சலை, சேகரித்த வனப்பொருளை பறித்துச் செல்வதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த அநீதியைத் தடுக்க ஏற்பட்டதுதான் இந்த வன உரிமைச் சட்டம்.

இந்தச் சட்டத்தின்படி, 2005 டிசம்பர் 23-ம் தேதிக்கு முன்பாக காட்டில் வாழ்ந்து வருகிற பழங்குடியினருக்கும், மற்றும் மூன்று தலைமுறைகளாக (ஒரு தலைமுறை என்பது 25 ஆண்டுகள்) காட்டைச் சார்ந்து வாழ்ந்துவருகிற காடுவாழ் மக்களும் பலவிதமான உரிமைகளைப் பெறுகிறார்கள். இவர்கள் தங்கள் பயன்பாட்டில் வைத்திருக்கும் நிலங்களுக்கு (4 எக்டேருக்கு மிகாமல்) பட்டா பெறலாம்; மரங்கள் தவிர்த்து மூங்கில், தேன், நெல்லிக்காய், புளி போன்ற காடுவிளை பொருள்களை வெளியே கொண்டு சென்று விற்கலாம்; உயிரினக் காப்பு வனம் அல்லது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலும்கூட அவர்கள் குடியிருப்பதை யாரும் தடுக்க முடியாது; இவர்களை யாரும் எந்தத் திட்டத்தைக் காரணம் காட்டியும் வெளியேற்ற முடியாது. இத்தனை உரிமைகளையும் இந்தச் சட்டம் வழங்குகிறது. இதனால்தான், இந்தச் சட்டத்தை அந்த மக்களிடம் முறைப்படி கொண்டுபோய் சேர்க்கவில்லை என்பதையும் உணர முடிகிறது.

இந்தப் பழங்குடியினர் மற்றும் காடுவாழ் மக்களின் மனுக்கள் முதலில் கிராமப் பஞ்சாயத்தால் ஆய்வு செய்யப்பட்டு மாவட்டக் குழுவுக்கு அனுப்பி, அவர்களும் ஆய்வு செய்து பட்டா வழங்க வேண்டும் என்பது விதிமுறை. இருப்பினும், இத்தனை உரிமையையும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டால், தங்கள் ஆளுமைக்குள் அவர்கள் இருக்க மாட்டார்கள், இவர்களை வைத்து தாங்கள் பெற்றுவரும் லாபம் இல்லாமல் ஆகிவிடும் என்பதால் கிராமத் "தலைகளும்' அரசு அலுவலர்களும் தங்களுக்குப் பினாமியாகச் செயல்படக்கூடிய நபர்களிடம் மட்டுமே மனுக்கள் வாங்கி, பரிசீலிக்கும் நிலைமை இருக்கிறது. அதனால்தான் மனுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கக் காரணம் என்று தெரிய வருகிறது.

இன்னொரு காரணம் தொழில்துறை. காட்டுக்குள்தான் கனிம வளங்கள் அதிகம் இருக்கின்றன. கனிமங்களின் மீதுதான் பழங்குடியினர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உரிமைகளை அளித்துவிட்டால் அவர்களை வெளியேற்றுவது கடினம் என்ற எண்ணம்தான் இத்தகைய மெத்தனப் போக்குக்கு காரணம். உதாரணமாக, ஒரிசா மாநிலத்தில் இச்சட்டம் அமலுக்கு வந்தபிறகு 47 திட்டங்களுக்கு வனத்துறையின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இதுகுறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். நிச்சயமாக இது ஓர் அத்துமீறல். ஒருவர் தனது உரிமையை அறிந்துகொள்ளும் முன்பாகவே அவர்களது பொருளை எடுத்துக்கொள்ளும் திருட்டுக்கு நிகரான செயல்.

காட்டை நம்பி வாழ்பவருக்கு காடுதான் வீடு, கோயில், தெய்வம் எல்லாமும். காடுவாழ் மக்கள் எந்தவகையிலும் நகர்வாழ் மக்களுக்கு ஒரு போட்டியே அல்ல. இருந்தும், தொழில் வளம், நகர்வாழ் மக்கள் நலன் என்ற பெயரில் அரசும் அரசியல்வாதிகளும் அம்மக்களுக்கு நெருக்கடி தரும்போது, அவர்களது வாழ்வாதாரத்தில் கை வைக்கும்போது, அவர்கள் எளிதில் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள். அல்லது தீவிரவாதிகளுக்குத் துணையாக அமைந்துவிடுகிறார்கள். அசாம், நாகாலாந்து, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நக்ஸலைட்டுகள் பெருகக் காரணம் இதுதான்.

தமிழக அரசு இந்தச் சட்டத்தின் பயனை பழங்குடியின மற்றும் காடுவாழ் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் தன்முனைப்புடன், கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டும். சட்டம் தரும் சலுகைகூட சமுதாயம் தர மறுத்தால் நஷ்டம் சமூகத்துக்குத்தான். வன உரிமைச் சட்டத்தின் பயன்கள் காடுவாழ் மக்களுக்கு முழுமையாகக் கிடைத்தால்தான் காடு வாழும். அதுதான் நாட்டுக்கும் நல்லது.
நன்றி : தினமணி

தங்கம் விலை எப்போது சரியும்?

உலகப் பொருளாதாரம் பாதிப்படைந்த போதும், இந்தியாவில், தங்கத்திற்கான கிராக்கி குறையவில்லை. நடப்பாண்டு முடிய இன்னமும் ஒரு மாதம் இருக்கிறது. இருந்த போதும், 850 டன் வரை தங்கம் மொத்த விற்பனை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
கடந்தாண்டில் தங்கம் இறக்குமதி மொத்தம் 712.6 டன். இதில், 500 டன் ஆபரணம் செய்யவும், எஞ்சியவை மூலதன முதலீட்டிற்கும் சென்றிருக்கிறது என்று, உலக தங்க கவுன்சில் தெரிவித்திருக்கிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, நடப்பாண்டில், மொத்தம் 850 டன் தங்கம் தேவை இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அப்படிப் பார்த்தால், இறக்குமதி அளவு 500 டன் இருக்கும். தங்கத்தின் மொத்த விற்பனை குறித்த ஆய்வாளர் பார்கவ் வைத்யா கூறுகையில், 'ஸ்டாண்டர்டு ஆபரணத் தங்கம் 10 கிராமின் விலை 16 ஆயிரத்து 800 ரூபாய் வரை உயர்ந்து நிற்கிறது' என்பது பெரிய விஷயம் என்கிறார். அதே சமயம் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் தங்கம் வாங்க அச்சப்படுகின்றனர். இந்த அளவு விலை கொடுத்து வாங்க பணம் இல்லை. அதுவும் பருவமழையும் அவ்வளவு இல்லை. ஆகவே, தங்கம் வாங்கும் போக்கு வரும் மாதங்களில் குறையும் போது, அதற்கேற்ப விலையும் சற்று சரியும். அதற்காக ஒரேயடியாக சரிந்து விடாது என்றும் பெரிய வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தனர்.
மும்பையில் உள்ள தங்க வர்த்தகர் பிருத்விராஜ் கோத்தாரி கூறியதாவது: கடந்த ஆண்டில் 10 கிராமின் விலை 12 ஆயிரத்து 500 ரூபாய் வரை இருந்தது. நடப்பாண்டில், 15 ஆயிரத்து 105 ரூபாயாக உயர்ந்திருப்பது, 21 சதவீத உயர்வைக் காட்டுகிறது. அதே சமயம் இறக்குமதியாகும் தங்கத்தின் விலைக்கும் இங்குள்ள சந்தை விலைக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பதால், பெரிய அளவில் லாபம் கிடைக்காது. அடுத்த ஆறு மாதங்களுக்கு ஏற்ற இறக்கமாகத் தான் தங்கம் விலை இருக்கும். அப்போது, சிறிது விலை இறங்கலாம். கடந்த 2004ம் ஆண்டில் 10 கிராம், 5,850 ரூபாய்க்கு விற்ற தங்கம், தற்போது, இரு மடங்கு விலை அதிகரித்திருக்கிறது. இவ்வாறு பிருத்விராஜ் கோத்தாரி கூறினார்.
நன்றி : தினமலர்


அமெரிக்காவில் மேலும் 3 வங்கிகள் திவால்

அமெரிக்காவில் மேலும் மூன்று வங்கிகள் திவால் ஆகி உள்ளன. அமெரிக்கா பொருளாதார சரிவில் இருந்து மீட்டு வருவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்து இருந்தார். இருப்பினும், அங்கு வங்கிகள் திவாலாவது மட்டும் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிதியாண்டில் மட்டும் இதுவரை 123 வங்கிகள் மூடப் பட்டுள்ளன. இதில் 24 வங்கிககள் இந்த மாதம் மட்டும் மூடப் பட்ட வங்கிகளாகும். சமீபத்தில் அங்குள்ள ஓரியன் வங்கி, பசிபிக் கோஸ்ட் நேஷனல் வங்கி மற்றும் செஞ்சுரி வங்கி ஆகியவை மூடப் பட்டன. ஓரியன் வங்கி 2.7 பில்லியன் சொத்துக்களையும் 2.1 பில்லியன் டெபாசிட்டுகளையும் கொண்டிருந்தது. செஞ்சுரி வங்கி 728 மில்லியன் சொத்துக்கள் மற்றும் 631 டெபாஸிட்டுகளையும் கொண்டுள்ளது.
நன்றி : தினமலர்