Monday, November 16, 2009

தங்கம் விலை எப்போது சரியும்?

உலகப் பொருளாதாரம் பாதிப்படைந்த போதும், இந்தியாவில், தங்கத்திற்கான கிராக்கி குறையவில்லை. நடப்பாண்டு முடிய இன்னமும் ஒரு மாதம் இருக்கிறது. இருந்த போதும், 850 டன் வரை தங்கம் மொத்த விற்பனை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
கடந்தாண்டில் தங்கம் இறக்குமதி மொத்தம் 712.6 டன். இதில், 500 டன் ஆபரணம் செய்யவும், எஞ்சியவை மூலதன முதலீட்டிற்கும் சென்றிருக்கிறது என்று, உலக தங்க கவுன்சில் தெரிவித்திருக்கிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, நடப்பாண்டில், மொத்தம் 850 டன் தங்கம் தேவை இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அப்படிப் பார்த்தால், இறக்குமதி அளவு 500 டன் இருக்கும். தங்கத்தின் மொத்த விற்பனை குறித்த ஆய்வாளர் பார்கவ் வைத்யா கூறுகையில், 'ஸ்டாண்டர்டு ஆபரணத் தங்கம் 10 கிராமின் விலை 16 ஆயிரத்து 800 ரூபாய் வரை உயர்ந்து நிற்கிறது' என்பது பெரிய விஷயம் என்கிறார். அதே சமயம் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் தங்கம் வாங்க அச்சப்படுகின்றனர். இந்த அளவு விலை கொடுத்து வாங்க பணம் இல்லை. அதுவும் பருவமழையும் அவ்வளவு இல்லை. ஆகவே, தங்கம் வாங்கும் போக்கு வரும் மாதங்களில் குறையும் போது, அதற்கேற்ப விலையும் சற்று சரியும். அதற்காக ஒரேயடியாக சரிந்து விடாது என்றும் பெரிய வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தனர்.
மும்பையில் உள்ள தங்க வர்த்தகர் பிருத்விராஜ் கோத்தாரி கூறியதாவது: கடந்த ஆண்டில் 10 கிராமின் விலை 12 ஆயிரத்து 500 ரூபாய் வரை இருந்தது. நடப்பாண்டில், 15 ஆயிரத்து 105 ரூபாயாக உயர்ந்திருப்பது, 21 சதவீத உயர்வைக் காட்டுகிறது. அதே சமயம் இறக்குமதியாகும் தங்கத்தின் விலைக்கும் இங்குள்ள சந்தை விலைக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பதால், பெரிய அளவில் லாபம் கிடைக்காது. அடுத்த ஆறு மாதங்களுக்கு ஏற்ற இறக்கமாகத் தான் தங்கம் விலை இருக்கும். அப்போது, சிறிது விலை இறங்கலாம். கடந்த 2004ம் ஆண்டில் 10 கிராம், 5,850 ரூபாய்க்கு விற்ற தங்கம், தற்போது, இரு மடங்கு விலை அதிகரித்திருக்கிறது. இவ்வாறு பிருத்விராஜ் கோத்தாரி கூறினார்.
நன்றி : தினமலர்


No comments: