Monday, September 1, 2008

கிரெடிட் கார்டு கடனுக்கு உச்சகட்ட தாளிப்பு: வீட்டுக்கடனுக்கு அரை சதவீதம் தான் கிரெடிட் கார்டுக்கு 50 சதவீதம் 'லபக்'

வீட்டுக்கடன் மீதான வட்டி வீதம் அரை சதவீதம் தான் அதிகரிக்கப்பட்டுள்ளது; ஆனால், கிரெடிட் கார்டுக்கு ஓசைப்படாமல், வாடிக்கையாளர்களிடம் 50 சதவீதம் வரை வட்டி, வட்டிக்கு வட்டி என்று குட்டிப் போட வைத்து தாளித்து விடுகின்றன வங்கிகள்.கிரெடிட் கார்டு வாங்கினால், அதில் இருந்து பொருட்கள் வாங்கிய பணத்தை வட்டி இல்லா அவகாசத்துக்குள் முழுப்பணத்தை கட்டிவிட்டால், எந்த தலைவலியும் வாடிக்கையாளருக்கு வராது. இந்த வகையில், வட்டி இல்லா அவகாசமாக 15 நாளில் இருந்து இண்டு மாதம் வரை வங்கிகள் தருகின்றன.இந்த கால கட்டத்துக்குள் முழுப் பணத்தை கட்டாவிட்டாலோ, முதல் தவணை பாக்கித்தொகை மட்டும் கட்டினாலோ வட்டி ஏற ஆரம்பித்துவிடும்.அதிலும், பாக்கியை கட்டாவிட்டால் போச்சு. வங்கிகள் வட்டி மேல் வட்டி போட்டு தாளிக்க ஆரம்பித்து விடுகின்றன. தாமதமாக கட்டியதால் வட்டி, ஏற்கனவே உள்ள வட்டி, பைனான்ஸ் கட்டணம் என்று ஏகப் பட்ட புரியாத அம்சங்களை பட்டியலிட்டு தாளித்து விடுகின்றன.அரசு வங்கிகள், தனியார் வங்கிகள் என்று பாரபட்சமில்லாமல் ராட்சத வட்டியை போட்டு வாடிக் கையாளர் மண்டையை காய வைப் பதில் போட்டி போடுகின்றன.இப்படி வட்டிகளை போடும் போது, ஆண்டுக்கு 30 சதவீதத்துக்கு மேல் வட்டிவீதம் போடுவது சட்டப்படி சரியல்ல என்று தேசிய நுகர்வோர் கமிஷனும் கடந்த மாதம் கூறி விட்டது. ரிசர்வ் வங்கியும் கண்டிப்புடன் வங்கிகளுக்கு கிரெடிட் கார்டு வட்டி அத்துமீறல்களை நிறுத்தும் படி கண்டித்தும் விட்டது.ஆனால், முறையற்ற வழிகளில் கிரெடிட் கார்டு பண பாக்கிக்கு வட்டிகளை தீட்டுவதில் வங்கிகள் சளைக்கவில்லை. அரசு வங்கிகள் கட்டுப்பாடு இல்லாமல் வட்டியை தீட்டுவதால், ஐ.சி.ஐ.சி.ஐ., உட்பட தனியார் வங்கிகளுக்கு கவலையே இல்லை. அவர்களும் தங்கள் பங்குக்கு வாடிக்கையாளர் களை பிழிவதில் சளைப்பதே இல்லை.கிரெடிட் கார்டில் தவணைக்காலத்துக்குள் முழுப்பணத்தை கட்டாத வாடிக்கையாளர்களுக்கு பைனான்ஸ் கட்டணம் போடுவதில் தனியார் வங்கிகள், 50 சதவீதத்தை எட்டி விட்டது. அதுபோல, கிரெடிட் கார்டு செலவுகள் என்ற வகையில், 500ல் இருந்து ஆயிரம் ரூபாய் வரை தாளித்தும் விடுகின்றன.'வீட்டுக்கடன் வட்டிவீதம் கூட அரை சதவீதம் தான் அதிகரிக்கப்பட்டுள்ளது. அது வெளியே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஆனால், கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ரகசியமாக 50 சதவீதம் வரை வட்டிப்பணம் பிடுங்கப்படுகிறது. இது தொடர்பாக அரசும் கண்டுகொள்ளாமல் உள்ளது' என்று வாடிக்கையாளர்கள் தரப்பில் வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


சென்னையில் ரூ.75 கோடியில் சாப்ட்வேர் வளர்ச்சி மையம்

கலிபோர்னியா சாப்ட்வேர் நிறுவனம், 75 கோடி ரூபாய் செலவில் பள்ளிக்கரணையில் புதிய சாப்ட்வேர் வளர்ச்சி மையத்தை துவங்கியுள்ளது.சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, 1992ம் ஆண்டு துவங்கப்பட்ட கலிபோர்னியா சாப்ட்வேர் நிறுவனம், சாப்ட்வேர் தொழில்நுட்பத்தில் உலகளாவிய தொடர்புகளுடன் வளர்ந்து வரும் நிறுவனமாக உள்ளது. தகவல் தொழில்நுட்ப சேவை, மொபைல், மல்டி மீடியா மற்றும் எலக்ட்ரானிக் பொருள்கள், டேட்டா சென்டர் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. சாப்ட்வேர் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள ஆரக்கிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், பள்ளிக்கரணையில் புதிய சாப்ட்வேர் வளர்ச்சி மையத்தை துவங்கியுள்ளது. ஏழு மாடிகளுடன் கூடிய இந்த மையம், உலகத்தரம் வாய்ந்த நவீன கட்டமைப்பு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிர்வாக இயக்குனர் சந்தோஷ் கூறுகையில், 'தகவல் தொழில்நுட்பத்தில் திறமை வாய்ந்த வல்லுனர்கள் நிறைந்த நகராக சென்னை மாறியுள்ளது. பள்ளிக்கரணையில் 75 கோடி ரூபாய் செலவில் அமைக்கப் பட்டுள்ள புதிய மையம் மூலம்,
நிறுவனத்தின் வளர்ச்சி அடுத்த கட்டத்தை தொட்டுள்ளது. சாப்ட்வேர் தொழில்நுட்ப பிரிவின் வளர்ச்சியில் இந்த மையம் பெரிய பங்காற்றும்' என்றார்.
நன்றி : தினமலர்


அமெரிக்க நிறுவனத்தை வாங்குது எச்.சி.எல்.,

அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப சேவையில் பிரபலமான கன்ட்ரோல் பாயின்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை, இந்தியாவின் முன்னணி நிறுவனம் எச்.சி.எல்., வாங்க முடிவு செய்துள்ளது.இதற்காக, 100 கோடி ரூபாய் அளித்து இந்த நிறுவனத்தை வாங்க எச்.சி.எல்., நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. தொலைதொடர்பு மேலாண்மை சேவையை செய்து வரும் இந்த அமெரிக்க நிறுவனத்துக்கு பல நாடுகளில் கணிசமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்த நிறுவனங்களுக்கு தொலைதொடர்பு மேலாண்மை சேவையை இந்த நிறுவனம் செய்து வருகிறது.இந்த நிறுவனத்தில் பணியாற்றும் திறமைவாய்ந்த 200 நிபுணர்கள், இனி எச்.சி.எல்., நிறுவனத்துக்கு வருவதால், சர்வதேச அளவில் எச்.சி.எல்., தன் சாப்ட்வேர் சேவையை விரிவுபடுத்த முடியும்.பார்ச்சூன் இதழ் அங்கீகரித்த 500 நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களுக்கு கன்ட்ரோல் பாயின்ட் நிறுவனம் தான் சேவை செய்து வருகிறது என்பதால், அந்த சேவையை எச்.சி.எல்., தொடருவதுடன், வர்த்தகத்தை அதிகரிக்கவும் முடியும்.மேலும், பி.பி.ஓ., வர்த்தகத்தையும் எச்.சி.எல்., இதன் மூலம் அதிகரித்துக் கொள்ளவும் வழி ஏற்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்