Saturday, March 21, 2009

' நானோ ' காரின் சப்ளை ஜூனில் தான் சரியாகும்

எல்லோரும் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் உலகின் மிக மலிவு விலை காரான டாடாவின் ' நானோ 'காரின் சப்ளை, இன்னும் சில மாதங்களுக்கு தேவைக்கு ஏற்றபடி இருக்காது என்றும், வரும் ஜூன் மாதத்தில் இருந்துதான் சப்ளை சரியாகும் என்றும் சொல்லப்படுகிறது. வரும் திங்கட்கிழமை அன்று அதாவது 23 ம் தேதி டாடா மோட்டார்ஸின் டீலர்களிடம் நானோ கார் காட்சிக்கு வைக்கப்படும் என்றும் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் இருந்து அதற்கான புக்கிங் ஆரம்பமாகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. நானோ கார் தயாரிப்பிற்காக பிரத்யேகமாக குஜராத்தில் சனாந்த் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட தொழிற்சாலையில் இருந்து முழுமையான தயாரிப்பு அக்டோபர் - நவம்பரில் தான் துவங்கும் என்கிறார்கள். அதுவரை உத்தரகான்ட் மாநிலத்தில் பான்ட்நகரில் இருக்கும் டாடாவின் தொழிற்சாலையில் தான் நானோ தயாரிக்கப்படுகிறது. டாடாவுக்காக பூனேயில் இருக்கும் அதன் தொழிற்சாலையில் நானோவுக்காக இன்னொரு தயாரிப்பு கூடத்தை சேர்க்கலாமா என்றும் டாடா மோட்டார்ஸ் யோசித்து வருகிறது. இப்போதுள்ள வசதிப்படி, முதல் வருடத்தில் மொத்தம் 1,00,000 நானோ கார்கள் மட்டுமே தயாரிக்க முடியும் என்று தெரிகிறது. இது தேவைக்கு தகுந்த தயாரிப்பாக இருக்காது. தேவைக்கு மிக குறைந்த அளவு தயாரிப்புதான் இது. பூனேயில் இருக்கும் டாடா மோட்டார்ஸின் அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசுகையில், இப்போது 1,500 நானோ கார்கள் மட்டும்தான் தயாராகியிருக்கிறது. இவைகள் தான் எங்களது டீலர்களிடம் வைக்கப்படும். புக்கிங் ஆரம்பமானதும் இன்னுமொரு 500 - 600 கார்கள் தயாராகி சப்ளை செய்யப்படும் என்றார். நானோ காரின் 20 சதவீத பாகங்களை டாடா ஆட்டோ காம்ப் சிஸ்டம்ஸ் ( டாகோ ) நிறுவனம்தான் தயாரிக்கிறது. அதேபோல் அதன் இருக்கைகளை, டாகோ மற்றும் அமெரிக்க நிறுவனமான ஜான்சன் கன்ட்ரோல்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் டாடா ஜான்சன் கன்ட்ரோல்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது.
நன்றி : தினமலர்


' ஐ சி டபிள்யூ ஏ ஐ ' உறுப்பினர்கள் இனி அமெரிக்காவில் பிராக்டீஸ் செய்யலாம்

' ஐ சி டபிள்யூ ஏ ஐ ' ( இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் அண்ட் வொர்க்ஸ் அக்கவுன்ட்ஸ் ஆஃப் இந்தியா ) யில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. இனிமேல் அவர்கள் இந்த பட்டத்தை கொண்டே அமெரிக்காவிலும் பிராக்டீஸ் செய்யலாம். அதற்கான அங்கீகாரத்தை அமெரிக்காவில் இருக்கும்' ஐ எம் ஏ ' ( இன்ஸ்டிடியூட் மேனேஜ்மென்ட் அக்கவுன்ட்டன்ஸ் ) யிடம் ' ஐ சி டபிள்யூ ஏ ஐ ' பெற்றிருக்கிறது. இரு இன்ஸ்டிடியூட்களும் இதற்கான பரஸ்பர அங்கீகாரத்தை கொடுத்து ஒப்பந்தம் செய்திருக்கின்றன. இது குறித்து ஐ சி ட பிள்யூ ஏ ஐ தலைவர் குணால் பானர்ஜி தெரிவிக்கையில், இந்த ஒப்பந்தப்படி, ஒரு இன்ஸ்டிடியூட்டில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், தானாகவே அடுத்த இன்ஸ்டிடியூட்டிலும் உறுப்பினராகி விடுகிறார்கள் என்றார். ஆனால் ஐ எம் ஏ யில் உறுப்பினர்களாக இருக்க விரும்புபவர்கள், ஐ சி டபிள்யூ ஏ ஐ யிலும் தொடர்ந்து உறுப்பினாக இருக்க வேண்டும். அதை விட்டு விடக்கூடாது என்றார். அமெரிக்க ஐ எம் ஏ யுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை போலவே கனடாவில் உள்ள ஐ எம் ஏ உடனும் நாங்கள் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். எனவே இங்கு ஐ சி டபிள்யூ ஏ ஐ படித்தவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவில் பிராக்டீஸ் செய்யலாம் என்றார். உலக பொருளாதாரத்தில் நான்கில் ஒரு பங்கிற்கு மேல் இந்த இரு நாடுகளிலும் தான் இருக்கிறது என்று சொன்ன பானர்ஜி, இதனால் இந்திய காஸ்ட் அக்கவுன்டன்ட்களுக்கு அங்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றார். இந்தியாவில் காஸ்ட் அக்கவுன்டிங் படித்து தகுதி பெற்றவர்கள் 42,000 பேர் இருந்தாலும் 29,000 பேர் மட்டுமே ஐ சி டபிள்யூ ஏ ஐ யில் உறுப்பினர்களாக பதிவு செய்திருக்கிறார்கள். அதிலும் வெறும் 1,700 உறுப்பினர்கள் மட்டுமே காஸ்ட் அக்கவுன்டன்ட்களாக பிராக்டீஸ் செய்கிறார்கள். மீதி பேர் நிதி மற்றும் அக்கவுன்டிங் துறையில் பணியாற்றுபவர்களாகவே இருக்கிறார்கள் என்றார் பானர்ஜி.
நன்றி : தினமலர்


சத்யம் கம்ப்யூட்டர்ஸை வாங்க கடைசி நாள் முடிந்தது : போர்டு இன்று கூடுகிறது

மோசடி வழக்கில் சிக்கியிருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸை வாங்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அதன் புதிய போர்டு அறிவித்ததை அடுத்து, இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் விண்ணப்பங்களை கொடுத்திருக்கின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நேற்று மாலை 5 மணியுடன் முடிந்து விட்டதை அடுத்து, முடிவாக வந்திருக்கும் விண்ணப்பங்களை பரிசீலிக்க இன்று அதன் போர்டு மும்பையில் இன்று கூடுகிறது. விண்ணப்பங்களை பரிசீலிக்கும் வேலையில் கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் ஆவன்டாஸ் நிறுவனங்கள் சத்யம் போர்டுக்கு உதவி செய்கிறது. இந்திய நிறுவனங்களான எல் அண்ட் டி, ஸ்பைஸ் குரூப் மற்றும் மகிந்திரா அண்ட் மகிந்திராவை சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனமான டெக் மகிந்திரா ஆகியவை தங்களது விண்ணப்பங்களை கொடுத்திருக்கின்றன. இது தவிர பிரபல அமெரிக்க கம்ப்யூட்டர் நிறுவனங்களான ஐ.பி.எம், மற்றும் ஹேலட் பேக்கார்ட் ( ஹெச்பி ) ஆகியவையும் விண்ணப்பித்திருக்கின்றன. இவைகள் தங்களது பெயர்களில் விண்ணப்பம் செய்யாமல் வேறு பெயர்களில் விண்ணப்பித்திருப்பதாக தெரிகிறது. ஐ.பி.எம்.,நிறுவனம் ஒரு சட்ட நிறுவனத்தின் பெயரிலும், ஹெச்பி, மற்றும் சி.எஸ்.சி., ஆகியவை, முதலீட்டு நிறுவனங்கள் பெயரிலும் விண்ணப்பங்களை அனுப்பியிருப்பதாக தெரிகிறது. வெளிநாடுகளை பொறுத்தவரை, இந்த மாதிரி வேறு பெயர்களில் விண்ணப்பம் செய்வது வழக்கம் தான். சத்யத்தின் 51 சதவீத பங்குகளை வாங்க வேண்டுமானால் குறைந்தது ரூ.1,500 கோடி பணம் இருப்பதற்கான ஆதாரத்தை கொடுப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டிருந்ததால் இவைகள் தங்களது நிதி ஆதாரங்களையும் தெரிவித்திருந்தன. டெக் மகிந்திராவிடம் டிசம்பர் 31,2008 முடிய உள்ள கணக்கில் 110 மில்லியன் டாலர் பணம் ( அதாவது சுமார் 51 கோடி ரூபாய் ) கையிருப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இது தவிர 5 வங்கிகளில் மொத்தம் ரூ.1,500 கோடி கடன் பெறும் வசதி இருப்பதற்கான ஆதாரத்தையும் கொடுத்திருக்கிறது. எல் அண்ட் டி யின் மார்ச் 31,2008 முடிய உள்ள கணக்கில் ரூ.1,560.78 கோடி பணம் கையிருப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எல் அண்டி நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.10,805 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதலில் சத்யத்தை வாங்க ஆர்வம் காட்டி வந்த அமெரிக்காவை சேர்ந்த ஐகேட் நிறுவனம், நேற்று விண்ணப்பிக்காமல் விட்டு விட்டது. சத்யத்தை வாங்க ஆர்வம் காட்டியவர்களில் பெரும்பாலானவர்கள் விண்ணப்பிக்காமல் விட்டதற்கு சத்யத்தின் வரவு செலவு கணக்கு சரிவர தெரியாததால் என்கிறார்கள். சத்யம் எவ்வளவு கடன் வைத்திருக்கிறது என்று தெளிவாக தெரியவில்லை என்றும் அது தெரிந்தால்தான் விண்ணப்பிக்க முடியும் என்கிறார்கள் சிலர். மேலும் அதில் இப்போது குறைந்தது 15,000 முதல் 18,000 வரை கூடுதலான ஊழியர்கள் இருக்க கூடும் என்றும் சொல்கிறார்கள். இருந்தாலும் சத்யம் விற்கப்படுகிறது என்பது தெரிந்ததும் நேற்று மும்பை பங்கு சந்தையில் சத்யத்தின் பங்கு மதிப்பு நேற்று 0.45 காசு குறைந்து ரூ.43.90 ஆக இருந்தது.
நன்றி : தினமலர்


பணவீக்கம் இப்படி குறைஞ்சிருக்கு... சாதாரண மனிதனுக்கு என்ன லாபம்? : சேதுராமன் சாத்தப்பன்

ஒரு மனிதன் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறானா என்று நாடிப் பிடித்துப் பார்ப்பர். நாடித்துடிப்பு மனிதனின் குறை, நிறைகளைக் காட்டி விடும். அது போல, பணவீக்க சதவீதம் தான் நாட்டின் நாடி எனலாம். விலைவாசி உயர்வு மக்களையும் கவிழ்த்து விடும், அரசாங்கத்தையும் கவிழ்த்து விடும். சில ஆண்டுகளுக்கு முன் வெங்காய விலை உயர்வு, அரசாங்கத்தையே கவிழ்த்தது. சென்ற ஆண்டெல்லாம் பொதுமக்களையும், கம்பெனிகளையும், அரசையும் பாடாய்ப்படுத்தி வந்தது பணவீக்கம் என்ற ஆறு எழுத்துகள் தான். அப்போது, 12 சதவீதத்தையும் தாண்டி பந்தயக்குதிரை போல சென்று கொண்டிருந்தது. மறுபடி பழைய நிலையான 3 அல்லது 4 சதவீத அளவு வருமா, பொருட்களின் விலை குறையுமா? என்று தான் ஐயத்துடனேயே எல்லாரும் பேசிக் கொண்டனர். 12 சதவீதத்திற்கு மேலாக ஆறு மாதத்திற்கு முன் இருந்த பணவீக்கம் வற்றி, 20 ஆண்டுகளில் இல்லாத அளவாக பணவீக்கம் இந்த வாரம் 0.44 சதவீதமாக உள்ளது. பரமபதம் தான்; சென்ற வாரம் 2.43 சதவீதமாக இருந்த பணவீக்கம் 1.90 சதவீதம் குறைந்துள்ளது. இதுவே தொடர்ந்தால், அடுத்த வாரமே கூட மைனசுக்கும் கீழே செல்லும். அப்போது, பணவீக்கம் என்பது பண வாட்டமாக மாறி விடும்.
பொதுவாக பொருட்களின் விலை குறைந்து வரும் போது, பண வாட்டம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் என்ன? மக்கள் பொருட்கள் வாங்குவதைக் குறைக்கும் போது, செலவுகளைக் குறைக்கும் போது, திட்டச் செலவுகளை அரசு குறைக்கும் போது பணப்புழக்கம் குறைகிறது. கூடி வரும் வேலையில்லா திண்டாட்டமும் ஒரு காரணம். காலங்காலமாகவே நம் பொருளாதாரம் சேமிப்பு பொருளாதாரம் தான். மேலும், உலகளவில் நிலைமைகள் சரியாக இல்லாததால் இன்னும் வாங்குவதை கட்டுப்படுத்தி வருகின்றனர் மக்கள். உதாரணமாக 20 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய பியட் கார்களைக் கூட இன்னும் மக்கள் டாக்சிகளாக பயன்படுத்தி வருகின்றனர். பொருட்கள் சந்தையில் தேங்கும் போது டிஸ்கவுன்ட் சேல் வருகிறது; பொருட்களின் விலை குறைகிறது. அது, பணவீக்கத்தைக் குறைக்கிறது. கச்சா எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது. இது தவிர, கட்டுமானப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. ஆதலால் பணவீக்கம் குறைகிறது.
பணவீக்கம் என்றால் என்ன? சென்ற ஆண்டு 100 ரூபாய்க்கு வாங்கிய ஒரு பொருளை இந்த ஆண்டும் 105 ரூபாய்க்கு வாங்கினால், 5 சதவீதம் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். இது போல, பல பொருட்களை வைத்து ஒவ்வொரு வாரமும் அரசாங்கம் பணவீக்கத்தைக் கணக் கிட்டு அறிவித்து வருகிறது.
எப்படி பணவீக்கம் கணக்கிடப்படுகிறது? உலக நாடுகளில் பலவற்றிலும் உபயோகிப்பாளர் விலை அட்டவணையையே பணவீக்கம் கணக்கிட எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், இந்தியாவில் நாம் மொத்த விலை அட்டவணையையே(ஹோல் சேல் ப்ரைஸ் இன்டெக்ஸ்) அரசாங்கம் எடுத்துக் கொள்கிறது. 435 பொருட்களின் விலை (மொத்த விலை) உயர்வு, தாழ்வு அறியப்பட்டு வாரந்தோறும் பணவீக்கம் கணக்கிடப்படுகிறது. இந்த 435 பொருட்களில், நாம் அதிகம் உபயோகிக்காத 100 பொருட்களும் அடங்கியுள்ளது தான் வருத்தத்திற்கு உள்ள விஷயம். முதலில் 1970ம் ஆண்டை அடிப் படை ஆண்டாகக் கணக்கில் எடுத்துக் கொண்டு இது கணக்கிடப்பட்டு வந்தது. பிறகு 1981-82 ஆண்டையும், தற்போது 1993-94 ஆண்டையும் அடிப்படையாக வைத்து கணக்கிடப் படுகிறது. மூன்று விதமான பொருட்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. முதலாவதாக உணவுப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பால், முட்டை, மாமிச வகைகள், மசாலா சாமான்கள், எண்ணெய் வித்துகள் போன்றவை. இரண்டாவதாக எரிபொருட்கள், எண்ணெய், மின்சாரம் போன்றவை. மூன்றாவதாக பிஸ்கட், சமையல் எண்ணெய், துணிமணிகள், பற்பசை, மதுபான வகைகள் போன்றவை. இது போன்று 435 பொருட்களின் விலைகளின் உயர்வு, தாழ்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு பணவீக்க சதவீதம் கண்டுபிடிக்கப்படுகிறது. இதில், முதல் கட்டப் பொருட்கள் 22.25 சதவீதமும் (98 பொருட்கள்), எரிபொருட்கள் வகை 14.22 சதவீதமும் (19 பொருட்கள்), மூன்றாவதாக உள்ள தயாரிப்பு பொருட்கள் 63.74 சதவீதமும் (318 பொருட்கள்) எடுத்துக் கொள்ளப்படுகின்றன.மத்திய வர்த்தக அமைச்சகமும், தொழில் துறை ஆலோசகரும் இதை கணக்கிடுகின்றனர்.
பொருட்களின் தேவை கூடும் போது, அதாவது மக்களின் வாங்கும் சக்தி கூடும் போது மறுபடி பணவீக்கம் வரும். அதுவும் வர வேண்டும் அளவாக. எதுவுமே அளவாக இருந்தால் எல்லாருக்கும் நல்லது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் (பணவீக்கமும்) நஞ்சு. ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்பது போல பணவீக்கம் குறைந்தால் என்ன, கூடினால் என்ன? சாதாரண மனிதனுக்கு காய்கறி, அரிசி, பருப்பு விலைகள் குறைய வேண்டும் அல்லது ஒரே அளவாக இருக்க வேண்டும். அதுதான் அவர்களின் தினசரி பிரார்த்தனை. பிரார்த்தனை எப்போதுமே ஜெயிக்கும்.
நன்றி : தினமலர்


டாடா கார்களுக்கு மார்ச் சலுகை

இந்தியாவின் பெரிய நிறுவனமான, டாடா மோட்டார்ஸ் கார், டீலர்களான கன்கார்டு மோட்டார்ஸ் நிறுவனம் 'மெகா மார்ச் சலுகை'யை அறிவித்துள்ளது. இச்சலுகையின் படி, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகள் இம்மாதம் வாங்கும் கார்களுக்கு தள்ளுபடி பெறலாம். கன்கார்டு, சில தேர்ந் தெடுக்கப்பட்ட மாடல் கார்களுக்கு, 8,000 ரூபாய் வரை சிறப்பு கம்பெனி தள்ளுபடி வழங்குகிறது. சுமோ கிராண்ட் மாடல் காரில், 85 ஆயிரம், சுமோ மாடல் கார்களில் 70 ஆயிரம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இண்டிகோ கார்களுக்கு 40 ஆயிரம் வரை மெகா மார்ச் சலுகை என்னும் ரொக்க ஆதாயம் பெறலாம். மேலும் அம்பத்தூர், திருவள்ளூர் மற்றும் இ.சி.ஆர்.,ல் உள்ள கன்கார்டின் நவீன வொர்க்ஷாப்களில், செய்யப்படும் சேவை பணி களுக்கு இம்மாதம் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
நன்றி : தினமலர்


நியூயார்க், சிகாகோ செல்ல ஏர் இந்தியா புது திட்டம்

ஜெர்மனியின் பிராங்பர்ட் விமானநிலையத்தை இணைப்பாக பயன்படுத்தி, அமெரிக்காவின் நியூயார்க், சிகாகோ நகரங்களுக்கு எளிதாகச் செல்லும் புதிய திட்டத்தை, ஏர் இந்தியா அறிமுகப்படுத்துகிறது. ஏர் இந்தியா நிறுவன தென் மண்டல செயல் இயக்குனர் வர்கீஸ், பொது மேலாளர் ஜெயஸ்ரீ, கூடுதல் பொது மேலாளர் சுப்பையா, விற்பனை பிரிவு மேலாளர் நீனா குப்தா, மேலாளர் மதுமதன் கூறியதாவது: ஏர் இந்தியாவில், புதிய கோடை கால அட்டவணை, வரும் 29ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது 150க்கும் மேற்பட்ட விமானங்கள் உள்ளன. புதிதாக வாங்கப்படவுள்ள 111 விமானங்களில் 45 விமானங்கள் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளன. அகமதாபாத்திலிருந்து பிராங்பர்ட்டிற்கு நேரடி விமானத்தை வரும் ஜூனிலிருந்து இயக்கவுள்ளோம். ஏர் இந்தியாவின் கட்டணங்கள் மற்ற நிறுவனங்களை விட கவரும் வகையில் உள்ளது.சென்னை, பெங்களூரு, கொச்சி, ஐதராபாத், அகமதாபாத் நகரங்களிலிருந்து, மும்பைக்கு தினசரி இரவு 9.30 மணிக்கு விமானம் புறப்படும். மும்பையிலிருந்து புறப்படும் விமானம், பிராங்பர்ட்டை அடுத்தநாள் காலை 6.05 மணிக்கு சென்றடையும். அதே போல டில்லியிலிருந்து சிகாகோ செல்லும் விமானமும் பிராங்பர்ட் வந்துசேரும். அங்கு சென்னை, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களிலிருந்து சிகாகோ செல்பவர்களும், மும்பையிலிருந்து நியூயார்க் செல்பவர்களும் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கான விமானங்களுக்கு மாறிக்கொள்ளலாம். பயணிகளுக்கான ஆவண பரிசோதனை அனைத்தும், விமானத்தில் புறப்படும் இடத்திலும், சென்றடையும் இடத்திலும் மேற்கொள்ளப்படும். சென்னையிலிருந்து அமெரிக்காவிற்கு இரவு அல்லது அதிகாலையில் விமானங்கள் புறப்பட்ட நிலை மாறி, தற்போது 9.30 மணிக்கு விமானம் புறப்படுவதால், பயணிகளின் உறவினர்களுக்கு ஏற்படும் அசவுகரியங்கள் குறையும். மேலும் சென்னை பயணிகள் மும்பை சென்று, 16 மணி நேரத்தில் நேரடியாக நியூயார்க் செல்லும் விமானத்திலும் செல்லலாம். பிராங்பர்ட் விமானநிலையத்தை இணைப்பு விமான நிலையமாக உருவாக்கியிருப்பதன் மூலம், வரும் காலங்களில் அமெரிக்காவின் பல நகரங்களுக்கும் விமான சேவையை ஏர் இந்தியா துவக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி : தினமலர்