Saturday, March 21, 2009

' நானோ ' காரின் சப்ளை ஜூனில் தான் சரியாகும்

எல்லோரும் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் உலகின் மிக மலிவு விலை காரான டாடாவின் ' நானோ 'காரின் சப்ளை, இன்னும் சில மாதங்களுக்கு தேவைக்கு ஏற்றபடி இருக்காது என்றும், வரும் ஜூன் மாதத்தில் இருந்துதான் சப்ளை சரியாகும் என்றும் சொல்லப்படுகிறது. வரும் திங்கட்கிழமை அன்று அதாவது 23 ம் தேதி டாடா மோட்டார்ஸின் டீலர்களிடம் நானோ கார் காட்சிக்கு வைக்கப்படும் என்றும் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் இருந்து அதற்கான புக்கிங் ஆரம்பமாகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. நானோ கார் தயாரிப்பிற்காக பிரத்யேகமாக குஜராத்தில் சனாந்த் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட தொழிற்சாலையில் இருந்து முழுமையான தயாரிப்பு அக்டோபர் - நவம்பரில் தான் துவங்கும் என்கிறார்கள். அதுவரை உத்தரகான்ட் மாநிலத்தில் பான்ட்நகரில் இருக்கும் டாடாவின் தொழிற்சாலையில் தான் நானோ தயாரிக்கப்படுகிறது. டாடாவுக்காக பூனேயில் இருக்கும் அதன் தொழிற்சாலையில் நானோவுக்காக இன்னொரு தயாரிப்பு கூடத்தை சேர்க்கலாமா என்றும் டாடா மோட்டார்ஸ் யோசித்து வருகிறது. இப்போதுள்ள வசதிப்படி, முதல் வருடத்தில் மொத்தம் 1,00,000 நானோ கார்கள் மட்டுமே தயாரிக்க முடியும் என்று தெரிகிறது. இது தேவைக்கு தகுந்த தயாரிப்பாக இருக்காது. தேவைக்கு மிக குறைந்த அளவு தயாரிப்புதான் இது. பூனேயில் இருக்கும் டாடா மோட்டார்ஸின் அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசுகையில், இப்போது 1,500 நானோ கார்கள் மட்டும்தான் தயாராகியிருக்கிறது. இவைகள் தான் எங்களது டீலர்களிடம் வைக்கப்படும். புக்கிங் ஆரம்பமானதும் இன்னுமொரு 500 - 600 கார்கள் தயாராகி சப்ளை செய்யப்படும் என்றார். நானோ காரின் 20 சதவீத பாகங்களை டாடா ஆட்டோ காம்ப் சிஸ்டம்ஸ் ( டாகோ ) நிறுவனம்தான் தயாரிக்கிறது. அதேபோல் அதன் இருக்கைகளை, டாகோ மற்றும் அமெரிக்க நிறுவனமான ஜான்சன் கன்ட்ரோல்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் டாடா ஜான்சன் கன்ட்ரோல்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: