Thursday, October 8, 2009

உலகளவு உவகை!

இதனினும் இனியதொரு செய்தி இருக்க முடியாது. 14 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு கோவையில் நடைபெறும் என்கிற அறிவிப்பு உண்மையிலேயே தேன்வந்து காதில் பாய்ந்த உணர்வை ஏற்படுத்துகிறது.

இப்போது பாரதி இருந்திருந்தால் துள்ளிக் குதித்திருப்பார். பாரதிதாசன் வாழ்ந்திருந்தால் வாழ்த்தி மகிழ்ந்திருப்பார். தவத்திரு தனிநாயகம் அடிகள் கேட்டிருந்தால் பேருவகை அடைந்திருப்பார். இந்த ஒரு செய்தியைக் கேட்கத்தானே தமிழ் நெஞ்சங்கள் ஒரு மாமாங்கமாகத் துடித்தன.

உலகத் தமிழ் மாநாடு என்பது தவத்திரு தனிநாயகம் அடிகளின் எண்ணத்தில் மலர்ந்த அற்புதமான விஷயம். 1964-ம் ஆண்டு தில்லியில் அகில உலகக் கீழ்த்திசை ஆய்வு மாநாடு ஒன்று நடந்தது. அதற்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மொழி வல்லுநர்கள் வந்திருந்தனர். அந்த அறிஞர் கூட்டத்தில் தமிழ் மொழியின் சார்பில் கலந்து கொள்ள பிரான்ஸ் நாட்டிலிருந்து ஜுன்பிலயோசா, இங்கிலாந்திலிருந்து டி. பர்ரோ, நெதர்லாந்திலிருந்து எல்.பி.ஜே. கைப்பர், ஜெர்மனியிலிருந்து ஹெர்மன் பெர்கர் போன்றோருடன் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், மு. வரதராசனார், வ.அய். சுப்பிரமணியம் மற்றும் தனிநாயகம் அடிகளார் போன்றோரும் இருந்தனர்.

அப்போது, தமிழுக்கென்று உலக மாநாடு ஒன்று நடத்த வேண்டும் என்கிற தனது எண்ணத்தைத் தவத்திரு தனிநாயகம் அடிகளார் வெளிப்படுத்தியது மட்டுமன்றி செயல்படுத்தவும் செய்தார். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கப்பட்டதன் பின்னணி அதுதான். தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால்தான் முதல் தமிழ் மாநாடு 1966-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் கோலாலம்பூரில் கோலாகலமாகத் தொடங்கியது.

அந்த முதலாம் உலகத் தமிழர் மாநாட்டுக்கு முதல்வர் பக்தவத்சலம் மட்டும் செல்லவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இரா. நெடுஞ்செழியனும், தமிழரசுக் கட்சித் தலைவரான ம.பொ. சிவஞான கிராமணியாரும் ஏனைய தமிழறிஞர்களுடன் கலந்துகொண்டனர். இரண்டாண்டுக்கு ஒருமுறை இதேபோல உலகத் தமிழ் மாநாடு தொடர்ந்து நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டபோது 1968-ம் ஆண்டு நடைபெற வேண்டிய இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்த அன்றைய முதல்வர் பக்தவத்சலம் ஏற்றுக்கொண்டு உறுதி அளித்தார்.

1968-ல் காங்கிரஸ் ஆட்சியை இழந்தபோதும், பக்தவத்சலத்தின் உறுதிமொழியை அரசியல் பாராட்டி உதாசீனப்படுத்தாமல் சி.என். அண்ணாதுரை தலைமையில் அமைந்த திமுக ஆட்சி நிறைவேற்ற முன்வந்தது. அதுமட்டுமல்ல, அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமனின் முழு ஒத்துழைப்பும் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக்கு இருந்தது. அவரே ஒரு கருத்தரங்கத்துக்குத் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர்கள் கு. காமராஜும், பக்தவத்சலமும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். கட்சி மனமாச்சரியங்களை மறந்து "தமிழ்' என்கிற பெயரில் அனைவரும் அண்ணாவுடன் கைகோர்த்து நின்று அந்த இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை வெற்றியடையச் செய்தது தமிழர்தம் சரித்திரத்தில் அழியா நினைவு!

கடந்த உலகத் தமிழ் மாநாடு தஞ்சையில் நடந்து முடிந்து 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு ஆராய்ச்சிகள், ஆய்வேடுகள், அடுத்த தலைமுறை தமிழறிஞர்களின் பங்களிப்புகள் என்று மொழி வளம் பெற்றிருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இதுபோல உலகளாவிய தமிழ் ஆராய்ச்சிக்கு ஒரு பொதுமேடை கிடைத்தால் மட்டுமே, ஆரோக்கியமான தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

தவத்திரு தனிநாயகம் அடிகளை இந்தவேளையில் நினைவுகூராமல் இருக்க முடியவில்லை. முதல் நான்கு மாநாடுகளைச் சிறப்பாக நடத்திய பெருமைக்குரியவர் அவர். சிங்கள ஆதிக்கம் அதிகரிப்பதையும், அதனால் இலங்கையில் தமிழர்கள் இன்னலுறுவதையும் பொறுக்காத தனிநாயகம் அடிகள், இலங்கை அரசுக்கு எதிராகக் கருத்துகளை வெளியிட்டார். அதனால் அரசு அவரை காவல், கண்காணிப்பு என்று பயமுறுத்த எத்தனித்தது. உடனே, கொழும்புப் பல்கலைக் கழகத்தில் தான் தங்கியிருந்த அறையைக் காலி செய்துவிட்டுத் தமிழகம் வந்துவிட்டார் தனிநாயகம் அடிகள். அதன் பிறகு அவரது வாழ்க்கை தமிழ், தமிழ் மொழி என்பதாகவே கழிந்தது.

ஒரு மொழிக்காக உலகளாவிய மாநாடு நடத்தும் முதல் முயற்சிக்குச் சொந்தக்காரர் தவத்திரு தனிநாயகம் அடிகள்தான். உலகிலேயே தமிழ் மொழிக்கு உலகளாவிய மாநாடு நடத்தப்பட்டதற்குப் பிறகுதான் சம்ஸ்கிருதம், இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளுக்கு மாநாடுகள் நடந்தன.

ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாடு நடக்கும்போது, அந்தத் திடல் தவத்திரு தனிநாயகம் அடிகளின் பெயரால் வழங்கப்பட வேண்டும். அங்கே ஆய்வரங்கம் சமீபத்தில் இறைவனடி சேர்ந்த வ.அய். சுப்பிரமணியம் பெயரால் அமைய வேண்டும். மாநாட்டுப் பந்தல், நூற்றாண்டு விழா கண்ட அறிஞர் அண்ணாவின் பெயர் தாங்கி இருத்தல் வேண்டும். இவையெல்லாம் "தினமணி' சார்பில் முதல்வருக்கு வைக்கும் கோரிக்கைகள்.

தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு சரித்திர நிகழ்வு நடைபெற இருக்கிறது. உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழ்ச் சமுதாயத்தின் ஒட்டுமொத்தப் பார்வையும் தங்களது தாயகமான தமிழகத்தின்மீது குவிய இருக்கிறது. இந்த நேரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை விடுத்து 1966-லும், 1968-லும் இருந்த தமிழ் உணர்வுடன் கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்பது எதிர்க்கட்சியினருக்கு "தினமணி' விடுக்கும் வேண்டுகோள்.

14 ஆண்டுகளுக்குப் பிறகு, சோர்ந்து போயிருக்கும் தமிழனுக்கும், துவண்டு கிடக்கும் தமிழுணர்வுக்கும் புத்துயிர் ஊட்டும் விதமாக ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடத்த முன்வந்திருக்கும் முதல்வர் கருணாநிதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழ்கூறு நல்லுலகின் சார்பாக முதல்வருக்கு நன்றி... நன்றி... நன்றி!
நன்றி : தினமணி

குரங்கு கையில் கொள்ளி?

எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பட்டாசு விபத்துகள் கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ந்து நடந்தவண்ணமாக இருக்கின்றன.

ஜூலை மாதம் சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற 3 பட்டாசு ஆலை விபத்துகளில் மொத்தம் 22 பேர் இறந்தனர். ஆகஸ்ட் மாதம் சாத்தூரில் நடந்த விபத்தில் 2 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். செப்டம்பர் 26-ம் தேதி திருவண்ணாமலையில் நடந்த விபத்தில் 11 பேர் இறந்தனர். தற்போது, சோழவந்தான் ரயில்நிலையத்தில் 2 பேர் இறந்திருக்கிறார்கள்.

வழக்கமாக தீபாவளி நேரத்தில் பட்டாசுகளைக் கொளுத்தும் சிறுவர்கள்தான் தீக்காயமடைவார்கள். ஆனால் இந்த ஆண்டு சிவகாசி, சாத்தூர் போன்ற இடங்களில் உற்பத்தி ஆலைகளிலும், சோழவந்தான் சம்பவத்தில் விற்பனைக்குக் கொண்டு செல்லும்போதும், திருவண்ணாமலையில் வீட்டுக் கிடங்கில் வைத்திருந்தபோதும் இந்தக் கோர விபத்துகள் நடந்துள்ளன.
இதற்கு இரண்டு காரணங்களை மட்டுமே சொல்லலாம். முதலாவது, காவல்துறை, தொழிலாளர் துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இரண்டாவதாக, பட்டாசு விற்பனையில் கொள்ளை லாபம் கிடைப்பதால் எந்தவிதப் பயிற்சியும், முன்யோசனையும் இல்லாத - யார் வேண்டுமானாலும் அதைத் தயாரிக்க, விற்க முன்வருவது இன்னொரு முக்கியக் காரணம்.
முறையாக உரிமம் பெற்று, பட்டாசு ஆலை அமைப்பதற்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து, தொழிற்கூடம் நடத்தும் இடங்களில் பட்டாசு மருந்துகளின் தீமையை நன்கு அறிந்திருப்பதாலும், பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கையாள்வதாலும் விபத்துகள் என்பது மிகமிகக் குறைவு. ஆனால் லாபம் கிடைக்கிறது என்பதற்காக இத்தொழிலில் இறங்கி, கையூட்டு மூலம் எல்லா நிபந்தனைகளையும் சரிக்கட்டி விடும்போதுதான் இத்தகைய விபத்துகள் விபரீதங்களை விளைவிக்கின்றன.

இதேபோன்றுதான் பட்டாசு விற்பனையும். சில பட்டாசு விற்பனையாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு உரிமம் பெற்றவர்கள். இவர்கள் பல காலமாகப் பட்டாசு விற்பனையில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்குப் பட்டாசுகளைக் கையாளும் எச்சரிக்கை உணர்வு எப்போதும் மனதில் இருக்கும். ஆனால் தீபாவளி நேரத்தில் பத்து நாள்களுக்கு மட்டும் கடை விரிக்கும் நபர்களுக்குப் பட்டாசுக்குள் மறைந்திருக்கும் ஆபத்துகள் மனதில் படாது. பெரும் கையூட்டு கொடுத்து தாற்காலிக உரிமம் பெறும் அவர்களுக்கு, இந்தப் பட்டாசு விற்பனைக் கடைகளை அமைப்பதில் கையாள வேண்டிய நிபந்தனைகள் குறித்து அக்கறையே இருக்காது.

ஒரு பட்டாசு விற்பனைக் கடை உரிமம் வாங்க வேண்டும் என்றால், தீயணைப்புத் துறை, நகராட்சி அல்லது உள்ளாட்சி அமைப்பு, அது அமையும் எல்லையில் உள்ள காவல்நிலையம், அப்பகுதியின் வட்டாட்சியர் இவர்கள் அனைவரிடமும் தடையில்லாச் சான்றிதழ் பெற்றுத்தான் தொடங்க முடியும். இதில் நிரந்தரமாக ஐந்தாண்டுகளுக்குப் பட்டாசுக் கடை உரிமம் வைத்திருப்போர் உரிமத்தைப் புதுப்பிக்க ரூ. 10,000 வரையும், பத்து பதினைந்து நாள்களுக்கு மட்டுமே பட்டாசு கடை வைப்பதற்காகத் தாற்காலிக உரிமம் பெற, குறைந்தது ரூ. 50,000 "இன்னபிற' செலவுகள் ஆவதாகவும் சொல்லப்படுகிறது.

பட்டாசு விற்பனையில் 300 சதவீதத்துக்குக் குறையாத லாபம் கிடைப்பதால், இந்த "இன்னபிற' செலவுகளைப் பற்றி யாருமே கவலைப்படுவதில்லை. இத்தகைய மனப்போக்கு, உரிமம் வழங்கும் நடைமுறைகளில் வரம்புகடந்து போய்விட்ட நிலைமை ஆகியவற்றைத்தான் இந்த ஆண்டின் விபத்துகள் எடுத்துக் காட்டுகின்றன.

இந்த விஷயத்தில் நம் அண்டை மாநிலங்களைப் பின்பற்ற வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. கர்நாடகத்தில் ஹூப்ளி மற்றும் தார்வார் ஆகிய இடங்களில் இத்தகைய தாற்காலிக பட்டாசு விற்பனைக் கடைகள் அனைத்தும் ஏதேனும் ஒரு விளையாட்டுத் திடலில் மட்டுமே ஒட்டுமொத்தமாக அமையும்படி செய்கிறார்கள். தீயணைப்புத் துறை வாகனங்கள் அனைத்தும் அங்கே நிறுத்தப்படுகின்றன. முன்னதாகப் பட்டாசு விற்பனையாளர்கள் அனைவருக்கும் செய்யவேண்டியது, செய்யக்கூடாதது பற்றித் தெளிவாகச் சொல்லி விடுகிறார்கள். இதேபோன்றுதான் ஆந்திர மாநிலம் குண்டூரிலும் ஒரு மைதானத்தில்தான் இந்தப் பட்டாசு விற்பனைக் கடைகள் அனைத்தும் அமைக்கப்படுகின்றன.

ஆனால் தமிழ்நாட்டில், நேற்றுவரை புத்தகக் கடையாகவும் மளிகைக் கடையாகவும் இருந்தவை எல்லாம் திடீரென பட்டாசுக் கடைகளாக மாறிவிடுகின்றன. எல்லா நிபந்தனைகளையும் "இன்னபிற' செலவுகளால் மீறிவிடுகிறார்கள்.

தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் உள்ளன. தீபாவளி நேரத்து தாற்காலிக உரிமத்தை இவர்களுக்கு மட்டுமே வழங்குவது என்ற முடிவை தமிழகம் எடுத்தால் என்ன? பட்டாசு விற்பனையில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாதபடி கடுமையாக இருந்தால் மட்டுமே பட்டாசு விபத்துகள் தொடராமல் நமத்துப் போகும். இல்லையென்றால் அது அரசே குரங்கின் கையில் கொள்ளியைக் கொடுத்த கதையாகத்தான் தொடரும்!

நன்றி : தினமணி