Monday, January 4, 2010

காலம் கடந்துவிடவில்லை

நீர்நிலைகள், நீர்வரத்து வாய்க்கால்களைப் பாதுகாப்பதா? அல்லது அங்கு ஏழைகள் கட்டியுள்ள வீடுகளை அகற்றுவதா, கூடாதா? என்ற சங்கடமான கேள்விக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அளித்துள்ள பதில் மிகத் தெளிவானது. "இரண்டுமே சமூகப் பிரச்னைதான். ஆனால், நீர்நிலைகளையும் நீர்வரத்துப் பகுதிகளையும் பாதுகாப்பதுதான் இதில் முக்கியமானது' என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பழனி நகராட்சிப் பகுதி சிறுநாயக்கன்குளத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்துள்ள 500 குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையைத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ள நீதிமன்றம், அதோடு நில்லாமல், 1998-ம் ஆண்டில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு மாறாக, அந்தப் பகுதியில் சாலை அமைத்து, மின்இணைப்பு வழங்கி, குடிநீர்க் குழாய்கள் அமைத்துக் கொடுத்துள்ள மாவட்ட நிர்வாகத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நிர்வாகம் இவ்வாறு மின்இணைப்பு, சாலைவசதி, தெருவிளக்கு எல்லாமும் அளித்து அதனை முறைப்படுத்துவதும் பட்டா வழங்கப் பரிந்துரைப்பதுமான இத்தகைய முரண்பாடுகள்தான் தமிழ்நாட்டின் அனைத்து ஏரி, குளங்களும் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட முக்கிய காரணம்.

தமிழ்நாடு முழுவதிலும் 5000-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான ஏரிகள் உள்ளன. மழைக்காலத்தில் ஆறுகள், ஓடைகள் மூலம் மிகையாக வரும் தண்ணீரைத் தேக்கி வைக்கும் ஏரிகளும் மழைநீரை மட்டுமே தேக்கி வைக்கும் குளங்களுமாக இரு வகை நீர் ஆதாரங்கள் பன்னெடுங்காலமாக இருந்துவருகின்றன. ஆனால் அவை யாவற்றையும் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் பாழ்படுத்திவிட்டோம். இதற்கு முக்கியமான காரணம்-அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நீரை நிரப்பினால், 300 டிஎம்சி தண்ணீரைச் சேமிக்க முடியும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். ஆனாலும்கூட, தமிழ்நாடு ஏரிகுளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம் -2007 இன்னமும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது விவசாயிகளின் ஆதங்கமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கடலூரில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் இச்சட்டத்தை முறையாக அமல்படுத்துவது மட்டுமன்றி ஏரிகள் குளங்கள் பராமரிப்பைப் பொதுப்பணித் துறையிடமிருந்து நீக்கி, அந்தந்தப் பகுதி விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.

இந்த ஏரிகள் பலவற்றில் தொழிற்கூடங்கள், நீரைப் பயன்படுத்திக் கொள்வதுடன், கழிவு நீரையும் கலக்கின்றன. இதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கீழ் வருவதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு இதில் ஓரளவுக்குமேல் தலையிட முடியாத சிக்கல்களும் இருக்கின்றன. இத்தகைய குறைபாடுகளையும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் போக்க முடியும்.

ஏரிகளைப் பாதுகாப்பதில் அரசியல் பாகுபாடு இல்லாமல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆக்கிரமிப்பு செய்த ஏழை மக்களுக்கு வேறு இடத்தில் இடம் கொடுத்த பிறகும்கூட, அதே இடத்தில்தான் பட்டா வேண்டும் என்று கோருவதும் அவர்களுக்காக அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்குவதும் அரசியல் கட்சிகளின் பொறுப்பின்மையைத்தான் காட்டுகின்றன.

நகர்ப்புறத்தில் ஏரிகள் மற்றும் வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் நேரிட்டபோது உடனுக்குடன் அவை அகற்றப்பட்டிருந்தால், அங்கே நிலையான குடியிருப்புகள் உருவாகியிருக்காது. இன்று இத்தனை சிக்கல்களையும் நீதிமன்ற வழக்குகளையும் அரசு சந்தித்திருக்க வேண்டியதும் இல்லை. அரசியல்வாதிகளுக்குப் பயந்துகொண்டு, அல்லது அவர்களிடம் ஊழலில் பங்குகொண்டு இத்தகைய ஆக்கிரமிப்புகளை கண்டும் காணாமல் இருந்ததன் விளைவுதான் இன்றைய தினம் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து ஏரி குளங்களும் ஏழை மக்களால், தொழிற்கூடங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. நச்சுக் கழிவுகள் ஏரிகளில் கலக்கப்படுகின்றன.

நகரத்தை விட்டுத் தள்ளுவோம். ஏரி, குளங்கள் அழியும்படியான நிலை ஊரகப் பகுதியில் எப்படி ஏற்பட்டது? விவசாயியின் அடிப்படையே நீர்ஆதாரம்தானே! எப்படி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அனுமதித்தார்கள்? என்கிற பின்னணி காரணங்கள், சமூக ஆராய்ச்சி மாணவர்களின் முனைவர் பட்ட ஆய்வுக்குரியவை.

கிராமங்களில் பல தலைமுறைகளாகக் கோலோச்சிக் கொண்டிருந்த நிலஉடைமையாளர்கள் மீதான வெறுப்பும், அவர்களது பயிர்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் நஷ்டமடைந்தால் நமக்கென்ன என்கிற அலட்சியமும்தான், அந்தப் பண்ணையாளர்களால் பாதிப்படைந்த கிராமத்தினர் சும்மா இருக்கக் காரணமாக இருந்தது. பின்னாளில் நீர் வரத்து இல்லாமல் அத்தகைய ஏரி, குளம் மேடுற்றபோது, அதையே காரணம் காட்டி அங்கு பஸ் நிலையம், மின்சார அலுவலகம்,பஸ் பணிமனை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் உருவாக அரசியல்வாதிகள் வகை செய்தனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அரசியல்வாதிகள் அல்லர். மாறாக, அப்போது ஆக்கிரமிப்புகளை எதிர்க்காமல் வேடிக்கை பார்த்த, அந்த மண்ணில் தொடர்ந்து வாழ நேர்ந்த சிறு விவசாயிகளும் விவசாயக் கூலிகளும், இடம்பெயர முடியாத அப்பகுதியின் பிற குடிகளும்தான். இப்போது அவர்களுக்குத்தான் குடிக்கவும் தண்ணீர் இல்லை. விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லை. மழைபெய்தாலும் ஏரிக்கு தண்ணீர் வருவதே இல்லை.

இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. இத்தவறுகளை திருத்திவிட முடியும். கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் அரசியல் சமூக, பொருளாதார மாற்றங்கள் பல வேறுபாடுகளைக் களைந்துவிட்டது. இப்போது பாசன நீர் என்பது அனைத்து விவசாயிகளுக்கான சொத்து. நீர்ஆதாரம்தான் ஊரக மக்களின் ஒரே வாழ்வாதாரம். ஆகையால், அரசியல் பாகுபாடு இல்லாமல் நீர்நிலை மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தமிழகத்தின் நிலத்தடி நீரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு வழங்கும் பெரும்நிதியம் இந்த நீர்நிலைகளாக மட்டுமே இருக்க முடியும்.
நன்றி : தினமணி

நண்பனாக மாறுங்கள்

காவல் நிலையங்களில் பொதுமக்கள் தரும் புகார்களை முதல் தகவல் அறிக்கையாகப் (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. இந்த உத்தரவும்கூட, காவல்துறை முன்னாள் தலைவர் ரத்தோர், டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை ருசிகாவிடம் முறைகேடாக நடந்துகொண்ட சம்பவத்தில், புகாரை உடனே பதிவு செய்யாததும், காவல்துறை அதிகாரிகளின் குறுக்கீடும்தான் தீர்ப்புக் கிடைக்க 19 ஆண்டுகள் ஆனதற்குக் காரணம் என்று பல்வேறு தரப்பினர் நாடுமுழுவதும் கண்டித்துப் பேசிக் கொண்டிருப்பதால் மத்திய அரசு இத்தகைய முடிவுக்கு வந்துள்ளது.

பொதுமக்கள் தரும் புகாரை ஏற்று, முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்ய மறுக்கும் காவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும், அதே வேளையில், தவறான புகார் கொடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என்பதும் உள்துறை அமைச்சகத்தின் தற்போதைய புதிய அணுகுமுறை.

ஆனால், நடைமுறையில் தற்போது உள்ள சட்டத்திலேயே, பொய்ப் புகார் கொடுப்பவர் மீது நடவடிக்கை எடுத்து இரண்டு ஆண்டுவரை தண்டனை கொடுக்கவும், புகாரைப் பதிவு செய்யாத காவலர் மீது இந்திய குற்றவியல் சட்ட விதி 154-ன் படி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்ய முடியும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்குட்பட்ட புகாரைப் பதிவு செய்ய மறுத்தால் தண்டனை நிச்சயம். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படுவதே இல்லை என்பதுதான் பிரச்னையே. இந்த நடவடிக்கை பெரும்பாலும் துறை நடவடிக்கையாக அமைந்துவிடுவதால், எல்லா காவலர்களையும் காவல்துறை காலம்காலமாக காப்பாற்றிக்கொண்டே இருக்கிறது. காவல்கைதி மரணத்துக்குக் காரணமானவர்களையும் காவல்நிலையத்திலேயே கற்பழித்தவர்களையும்கூட துறை நடவடிக்கை மிக சாமர்த்தியமாகக் காப்பாற்றிவிடுவதால்தான், காவல்துறையில் தொடர்ந்து தவறுகள் நடக்கின்றன. உங்கள் நண்பன் என்று சொன்ன போதிலும் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை.

இருக்கின்ற சட்டமே பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், இப்போது உள்துறை அமைச்சகத்தின் புதிய உத்தரவால் காவல்துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுவிடும் என்று நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கிறது. பாதிக்கப்பட்ட பொதுமனிதரின் புகாரை, காவல்துறை ஏற்க மறுப்பதற்கும் அல்லது வழக்கைப் பதிவு செய்யக் காலதாமதம் செய்வதற்கும் முக்கியமான இரண்டு காரணங்கள்- ஒன்று ஊழல், இரண்டாவது பணிச்சுமை.

காவல்துறையினரின் ஒடுக்குமுறைக்கும் அதிகாரத்துக்கும் முதலில் பலியாகிறவர் காவல்நிலையத்தைத் தேடிப்போய் புகார் கொடுக்கும் பொதுமனிதர்தான். புகார் கொடுப்பவரையே ஒரு குற்றவாளியைப் போல நடத்தும் மனோபாவம் காவல்துறையின் நாள்பட்ட வியாதி. இந்த வியாதியின் தீவிரம் எந்த அளவுக்கு இருக்கிறதென்றால், ஒரு பெண் காவலர் வீடு திரும்பவில்லை என்று புகார் கொடுக்கச் சென்ற கணவரை எல்லையைக் காரணம் காட்டி அலைக்கழிக்கிற அளவுக்கு நோய் முற்றிக்கிடக்கிறது. பாதுகாப்புப் பணிக்காக பல்லடம் சென்ற பெண் காவலர், பாலியல் வன்முறைக்குப்பின் கொல்லப்பட்டுக் கிடந்தது தெரிந்த பிறகுதான், இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கணவரை அலைக்கழித்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் மீது துறை நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஒரு பெண்-காவலர் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஆண்-காவலர் மீது வழக்குத் தொடரவும் நீதிமன்றம் செல்ல வேண்டியிருக்கிறது என்றால், இந்தக் காவல் நிலையங்கள் பொதுமக்களை என்ன பாடுபடுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

காவல்நிலையத்தைத் தேடி வருபவர், தாங்கொணா துயரத்துக்கு ஆளாகி, கையறு நிலையில் நம்மிடம் வருகிறார் என்ற எண்ணமே இல்லாமல், "நம் கடைக்கு இன்று லாபம் தரப்போகும் நுகர்வோர் வருகிறார்' என்று பார்க்கும் ஒரு வியாபாரியின் மனநிலை மாறாமல், வெறும் சட்டத்தால் மட்டும் இதை மாற்றிவிட முடியும் என்று தோன்றவில்லை.

ரெüடித்தனம், முறைகேடு, பாலியல் புகார், கொலை எதுவென்றாலும் உடனடியாக விசாரணை நடத்துகிறார்கள். என்ன விசாரணை? குற்றம் சாட்டப்படும் நபர் யார், எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர், அவரது பின்புலம் என்ன என்பதுதான். அதன் பிறகுதான் புகார் கொடுப்பவர் யார் என்ற பேச்சு எழுகிறது. அரசியல்வாதியின் பலத்துக்கு ஏற்ப முதல் தகவல் அறிக்கை பலம் குறைக்கப்படுகிறது. வீட்டில் திருட்டு, வாகனத் திருட்டு, ஜேப்படி போன்ற அன்றாடத் துயரங்களுடன் வருபவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். அந்தந்தக் காவல்நிலைய எல்லைக்குள் ஆண்டுதோறும் எவ்வளவு மதிப்புள்ள பொருள்கள் திருடு போயின, எவ்வளவு மீட்கப்பட்டன என்ற புள்ளிவிவரங்கள் அவர்களது செயலின்மையை அம்பலப்படுத்துவதால், அத்தகைய புகார்கள் வருவதை அவர்கள் விரும்புவதில்லை. பொதுமக்கள் இந்த அவமானங்களை "பொருள்'படுத்தாமல் தவிர்ப்பது சிரமம்.

காவல்நிலையங்கள் ஆர்வமுடன் எடுத்துக்கொள்ளும் புகார்கள் சாலை விபத்துகள்தான். அவர்கள் சொல்கிற வழக்கறிஞரிடம் வழக்கை நடத்தி, இழப்பீட்டில் 40 சதவீதம் வரை வழக்கறிஞர் கட்டணமாகக் கொடுக்கச் சம்மதிக்காவிட்டால், சாலையில் முன்சக்கரத்தில் இறந்தவர்கூட முதல் தகவல் அறிக்கையில் பின் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு செத்துவிடுவார்.

கணினி வந்த பிறகும் காவல்துறையில் இன்னமும் கட்டுக்கட்டாக காகித வேலைகள் குவிந்துகொண்டே இருக்கின்றன. பணிப்பளுவின் காரணமாக பல புகார்களை காவல்நிலைய தலைமைக் காவலர்கள் தட்டிக் கழிக்கப் பார்ப்பதும் நடக்கிறது. முதல் தகவல் அறிக்கை எழுத ஆளில்லை என்பதற்காகப் புகார்களைத் திருப்பி அனுப்பும் காவல்நிலையங்கள் உள்ளன. தங்கள் சொந்தச் செலவில் (வசூல்தான்) ஆட்களை நியமித்து, பணிப்பளுவைக் குறைத்துக் கொள்ளும் காவல்நிலையங்களும் உள்ளன.

புகார் கொடுக்க வருபவரை பாதிக்கப்பட்ட மனிதராக மதித்து, அவரைப் பரிவுடன் நடத்தவும், புகாரை எந்த எல்லை வேறுபாடும் சொல்லாமல் கணினியில் பதிவு செய்து நகல் தருவதற்கு, தனிஅறையை, நல்ல இருக்கை வசதிகளுடன் அமைக்கும் குறைந்தபட்ச நடவடிக்கைகூட காவல்துறையை நண்பனாகக் கருதச் செய்யும். புகார்களின் தன்மைக்கேற்ப, விசாரணை நடத்தும் பொறுப்பை அந்தந்தப் பகுதியின் காவலர்களுக்கு, கோட்ட அளவிலான காவல்துறை அதிகாரி பிரித்தளிக்கும் நடைமுறையைக் கைக்கொள்ளலாம். "மாதவர் நோன்பும் மாதரார் கற்பும் காவலன் காவல் இன்றெனில் இன்றாம்' என்கிறது தமிழ் இலக்கியம். இன்றைக்கு அந்தக் காவலன் - காவல்துறைதான்!
நன்றி : தினமணி

அதிக லாபத்தை அள்ளி தரும் இந்திய பங்குச்சந்தை: கணக்கெடுப்பில் தகவல்

உலகிலேயே வளரும் நாடுகளில் உள்ள பங்குச்சந்தைகளில் அதிக லாபத்தை அள்ளி தரும் பங்குச்சந்தையாக இந்திய பங்குச்சந்தை விளங்குவதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது. வளரும் நாடுகளின் பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு கிடைக்கும் லாபத்தின் அடிப்படையில் மார்கன் ஸ்டான்லி காம்போசிட் பாரா குறியீட்டெண்கள் கணக்கிடப் படுகின்றன. அந்தக் குறியீட்டெண்கள் அடிப்படையில் இந்த லாப சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளது.
இதன் படி, அதிக லாபத்தை தரும் பங்குச்சந்தைகளில் இந்திய பங்குச்சந்தை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.இவற்றில் பிரேசில் 121 சதவீத லாபத்துடன் முதல் இடத்தில் உள்ளது. இந்திய பங்குச் சந்தை தந்த லாபம் 100.50 சதவீதம். . ரஷிய பங்குச்சந்தைகள் தந்த லாபம் 100.30 சதவீதம். சீன பங்குச்சந்தைகள் தந்த லாபம் 58 சதவீதம்தான்.
நன்றி : தினமலர்