Wednesday, July 29, 2009

சரிவில் முடிந்த பங்கு சந்தை

இன்றும் பங்கு சந்தை சரிவில் முடிந்திருக்கிறது. மெட்டல், ரியாலிட்டி, பவர், கேப்பிடல் குட்ஸ், டெலிகாம் மற்றும் பேங்கிங் துறை பங்குகள் விலை குறைந்திருந்ததை அடுத்து பங்கு சந்தை குறியீட்டு எண்களான சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறைந்து விட்டது. ஆனால் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ரூ.ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான தொகைக்கு ( ரூ.1,47,352.24 கோடி ) வர்த்தகம் நடந்திருக்கிறது. இது 39 சதவீத வளர்ச்சி. ஆசிய பங்கு சந்தைகளான ஷாங்கை ( 5 சதவீதம் ), ஹாங்செங் ( 2.4 சதவீதம் ), ஸ்டெரெயிட் டைம்ஸ் மற்றும் தைவான் ( 0.5 - 0.8 சதவீதம் ) ஆகியவற்றில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இந்திய பங்கு சந்தையை பாதித்தது எனலாம். ஆனால் ஐரோப்பிய சந்தைகள் 0.7 - 1.5 சதவீத வளர்ச்சி அடைந்திருக்கிறது என்ற தகவல் வந்ததற்கு பின் இந்திய சந்தைகள் ஓரளவு வளர்ச்சி அடைந்தன. எனினும் மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 158.48 புள்ளிகள் ( 1.03 சதவீதம் ) குறைந்து 15,173.46 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 50.60 புள்ளிகள் ( 1.11 சதவீதம் ) குறைந்து 4,513.50 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


ரூ.100 கோடிக்கு விற்பனை ஆன முதல் இந்தி படம் ' மை நேம் இஸ் கான் '

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், கஜோல் நடித்து வெளிவர இருக்கும் ' மை நேம் இஸ் கான் ' என்ற திரைப்படம் இதுவரை வேறு எந்த படமும் விற்காத விலையான ரூ.100 கோடிக்கு விற்பனை ஆகி இருக்கிறது. அடுத்த வருட ஆரம்பத்தில் வெளிவர இருக்கும் இந்த திரைப்படத்தை கரண் ஜோகர் என்பவர் இயக்குகிறார். அதன் விநியோக உரிமையை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ என்ற நிறுவனம் ரூ.100 கோடிக்கு வாங்கியிருப்பதாக சொல்லப் படுகிறது. 2007 ல் வெளிவந்த ஓம் சாந்தி ஓம் திரைப்படம் ரூ.75 கோடிக்கும், 2008 ல் வெளிவந்த கஜினி ரூ.90 கோடிக்கும் விற்பனை ஆகி இருந்த நிலையில், மை நேம் இஸ் கான் ரூ.100 கோடிக்கு விற்பனை ஆகி இருப்பதாக சொல்கிறார்கள். ஜோகரும், கானும் இணைந்து தயாரிக்கும் இந்த படம் ரூ.55 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் படம். அமெரிக்காவில் செப்டம்பர் 11ம் தேதி நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்குப்பின் அங்குள்ள இந்திய முஸ்லிம்கள் படும் கஷ்டத்தை எடுத்துக்காட்டும் விதமாக இது படமாக்கப்பட்டிருக்கிறது. பல வருட இடைவேளைக்குப்பின், ஷாருக்கானும் கஜோலும் இணைந்து நடிக்கும் இந்த படத்தை தர்மா புரடெக்ஷன்ஸ் உரிமையாளரான ஜோகர் இயக்குகிறார். ரூபர்ட் முர்டோவுக்கு சொந்தமான ஃபாக்ஸ் அண்ட் ஸ்டார் டி.வி. நெட்வொக்கின் ஒரு அங்கமான ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் தர்மா புரடெக்ஸனும் இணைந்து பட தயாரிப்பு மற்றும் விநியோக தொழிலில் ஈடுபட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த வருட ஆரம்பத்தில், ஆஸ்கார் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தை இந்தியாவில் விநியோகம் செய்ததில் இருந்து தான் ஸ்டாக் ஃபாக்ஸ் ஸ்டூடியோ இங்கு பிரபலமானது. இப்போது பல இந்தி மற்றும் தமிழ் படங்களின் விநியோக உரிமையை அந்த நிறுவனம் பெற்றிருக்கிறது.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை குறைந்தது

அமெரிக்க மக்களின் வாங்கும் சக்தி குறைந்து போனதாக வெளிவந்த செய்தியாலும், பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனமான பிபி, நஷ்டமடைந்திருப்பதாக வெளிவந்த செய்தியாலும், ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது. நியுயார்க்கின் முக்கிய வியாபார பொருளான யுஎஸ் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை ( செப்டம்பர் டெலிவரிக்கானது ) பேரலுக்கு 60 சென்ட் குறைந்து 66.63 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 28 சென்ட் குறைந்து 69.60 டாலராக இருக்கிறது. அமெரிக்காவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்து அதன் காரணமாக அங்கு வாங்கும் சக்தி குறைந்து போனதாக அறிக்கை வெளியாகி இருக்கிறது. ஜூன் மாதம் 49.3 புள்ளிகளாக இருந்த வாங்கும் சக்தி, ஜூலை மாதத்தில் 46.6 புள்ளிகளாக குறைந்திருக்கிறது. இது, கடந்த மே மாதத்தில் 54.8 புள்ளிகளாக இருந்தது.

நன்றி : தினமலர்



அதிக லாபத்திற்கு ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் ஆசைப்படுகிறது : அனில் அம்பானி குற்றச்சாட்டு

கிருஷ்ணா கோதாவரி ஆற்று படுகையில் ( கேஜி - டி6 ) ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவனத்தால் எடுக்கப்படும் எரிவாயுவை பிரித்துக்கொள்வது சம்பந்தமாக, இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் ( ஆர் ஐ எல் ) மற்றும் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் ( ஆர் என் ஆர் எல் ) ஆகியவைகளுக்கிடையே நடந்து வந்த மோதல் நேற்று பெரிதாக வெடித்துள்ளது. ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டம் நேற்று நடந்தபோது, அதில் பேசிய அதன் தலைவர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் அதிக லாபத்திற்கு ஆசைப்படுகிறது என்றும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தேவையில்லாமல் எங்கள் இருவருக்குமிடையே நடந்து வரும் பிரச்னையில் மூக்கை நுழைக்கிறது என்றும் பேசினார். இது பெரும் புயலை கிளப்பி உள்ளது. அனில் அம்பானியின் இந்த பேச்சு குறித்து கருத்து தெரிவித்த ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் ஆலோசகர் ஹரிஷ் சால்வே, எங்கள் இருவருக்குமிடையே உள்ள பிரச்னை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் இப்போதைக்கு இது குறித்து கருத்து சொல்வது பொருத்தமாக இருக்காது என்றார். மேலும் இந்த விவகாரம் குறித்து கோர்ட்டில் பேசவே விரும்புகிறோம்; மீடியாவில் அல்ல என்றும் சொல்லி விட்டார். மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முளரி தியோராவும், இந்த விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் எங்களால் பதில் ஏதுவும் தெரிவிக்க இயலாது என்று சொல்லி விட்டார். திருபாய் அம்பானி நிறுவனம் 2005 ல் இரண்டாக பிரிந்தபோது செய்து கொண்ட ஒப்பந்தத்தில் சொல்லப் பட்டிருப்பதை போல, கே - ஜி பேசில் கிடைக்கும் எரிவாயுவை, ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் ஒன்றுக்கு 2.34 டாலர் என்ற விலையில் எங்களுக்கு தர வேண்டும் என்று ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் கோருகிறது. ஆனால் மத்திய அரசோ, மற்ற நிறுவனங்களுக்கு கொடுக்கும் 4.2 டாலர் விலையில் தான் இதையும் கொடுக்க வேண்டும் என்கிறது. இது குறித்து ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் நிறுவனம் மும்பை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், 2.34 டாலர் விலையிலேயே 17 வருடங்களுக்கு ரிலையன்ஸ் ரிசோர்சஸ் நிறுவனத்திற்கு, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் எரிவாயுவை சப்ளை செய்ய வேண்டும் என்று தெரிவித்தது. இப்போது இந்த தீர்ப்பை எதிர்த்து ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருக்கிறது. அங்கு விசாரனை நடந்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறது. அதில், பூமிக்கடியில் கிடைக்கும் எரிவாயு மத்திய அரசுக்கு தான் சொந்தமானது. எனவே அதற்கு இரு தனியார் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்ய முடியாது என்று தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


எல்லைச் சிக்கல்கள் - என்னதான் முடிவு?

தமிழக - ஆந்திர எல்லையிலும் மற்றும் கேரள எல்லையிலுமுள்ள கிராமங்களைப் பற்றி பத்திரிகைகளில் பல செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் அணைமுகம் கிராமம் தமிழகத்தைச் சார்ந்தது. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட இந்தக் கிராமத்தில், ரப்பர் தோட்டங்கள் அதிகம். வருவாய்த் துறையின் ஆவணங்களின்படி தமிழக அரசின் அதிகாரத்தின்கீழ் உள்ள கிராமம் இது. தமிழ்நாடு அரசின் சார்பில் இலவசத் தொலைக்காட்சியும் இங்குள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்தக் கிராமத்துக்கு அடுத்துள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்த அம்பூரி உள்ளாட்சி நிர்வாகத்தினர் இங்குள்ள வீடுகளில் அடையாள எண்களை மலையாளத்தில் எழுதிவிட்டுச் சென்றுள்ளனர்.

அதுபோலவே, ஆந்திர எல்லையில் திருவள்ளூர் மாவட்டம் பட்டைக்குப்பம் கிராமத்தில் உள்ள பீமலவாரிப்பாளையம் எல்லையில் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்திற்குப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் பிரச்னையை திடீரென கர்நாடகம் எழுப்பியுள்ளது. தமிழகத்தைச் சார்ந்த அந்த இடம் தங்களுக்கே சொந்தமென்று தேவையற்ற சர்ச்சையை உருவாக்கியது. இதனால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமும் தாமதமாகிறது.

""வடவேங்கடம் தென்குமரி யாயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து''
என்று தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறாக தமிழகத்தின் எல்லைகள் ஆதியில் இருந்தபொழுது ஆந்திரத்திடம் சித்தூர், நெல்லூர், திருப்பதி போன்ற பகுதிகளை இழந்தோம். இதனால்தான் இன்றைக்கு ஏற்பட்டுள்ள பாலாறு, பொன்னையாறு, பழவேற்காடு ஏரிப் பிரச்னைகள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. ம.பொ.சி.யின் தீவிர போராட்டத்தால் திருத்தணியைப் பெற்றோம். இல்லையெனில் திருத்தணியும் இன்றைக்கு ஆந்திரத்திடம் இருந்திருக்கும்.

கேரளத்திடம் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, அதுமட்டுமல்லாமல் பாலக்காடு போன்ற பகுதிகளை இழந்தோம். கேரளத்திடம் இழந்த பகுதியால் முல்லைப் பெரியாறு, நெய்யாறு, ஆழியாறு - பரம்பிக்குளம், அடவிநய்யனார், மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் போன்ற பல நதிநீர்ப் பிரச்னைகளும், கம்பம் பகுதியில் அமைந்துள்ள கண்ணகி கோட்டப் பிரச்னையிலும் இன்றைக்கும் சிக்கல்கள் தீர்ந்தபாடில்லை. கர்நாடகத்திடம் வெங்காலூர் என்று அழைக்கப்பட்ட பெங்களூர், கோலார் தங்கவயல் போன்ற பல பகுதிகளையும் நாம் இழந்துள்ளோம். இதனால் தமிழகத்தின் காவிரி மீதும், ஒகேனக்கல்லிலும் நமது ஆதிபத்தியங்கள் கேள்விக்குறியாகி விடுகின்றன.

பாலக்காடு பகுதியில் உள்ள சாம்பாறை, மூங்கில் மடை, வண்ணாமடை போன்ற 100 கிராமங்களில் தமிழர்கள் வசிக்கின்றனர். ஓணம் பண்டிகைக்கு தமிழக அரசு இங்கு விடுமுறை தருவதுபோல தைப் பொங்கலுக்கு அங்கு விடுமுறை இல்லை என்று அந்தப் பகுதி மக்கள் ஆதங்கப்படுகின்றனர். இவர்கள் பயிர் செய்கின்ற காய்கறிகள் யாவும் கொச்சி போன்ற நகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

பசல் அலி தலைமையில் அமைக்கப்பட்ட மொழிவாரி மாநில எல்லைகளின் சீரமைப்பு ஆணையம் வழங்கிய தீர்வுகள் யாவும் தமிழகத்திற்கு நியாயமாக வழங்கப்படவில்லை. அதனால்தான் இன்றைக்குப் பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. இந்தக் குழுவில் இடம்பெற்ற பணிக்கருடைய ஆளுமையால் தமிழகத்திற்கு அநீதி கிடைத்தது என்று அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. மொழிவாரி மாநிலங்கள் சீரமைப்பு என்று 1956-ல் இன்றைய தமிழகத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்டன. அன்றைக்கு சீரமைப்பு என்ற பெயரில் வரையறுக்கப்பட்ட எல்லைகளை நாம் ஏற்றுக்கொள்ளாமல் சரியாக எல்லைகள் வரையறை செய்யப்பட்டிருந்தால் தமிழகத்தின் உரிமைகள் பறிபோயிருக்காது. இன்றைக்கும் கர்நாடகமும் மகாராஷ்டிரமும் எல்லைப் பிரச்னையில் பெல்காம் மாவட்டத்தில் மோதிக் கொண்டிருக்கின்றன.

வரலாற்றில் ஆதி தமிழ் மண் குறித்த செய்திகள் வருமாறு: இன்று திருப்பதி என அழைக்கப்படும் திருமலைதான் வடவேங்கடம் ஆகும். சிலப்பதிகாரத்தில் மாங்காட்டு மறையவன் மூலம் திருவேங்கடவர் திருக்கோலத்தை வர்ணிக்கிறார் இளங்கோ அடிகள். வைணவ ஆழ்வார்கள் தமிழில் இயற்றி உள்ள பாசுரங்களில், திருமலைபுரமும், வேங்கடவர் தலமும் கூறப்பட்டு உள்ளன. பிள்ளைப் பெருமான் அய்யங்கார் பாடி உள்ள அஷ்டப் பிரபந்தத்தில் உள்ள திருவேங்கடமாலை, திருவேங்கடத்து அந்தாதி ஆகிய பிரபந்தங்கள் திருப்பதியைப் பற்றியவையாகும். இதுபோல், திருப்பதி கோயிலைப் பற்றித் தெலுங்கில் இலக்கியம் எதுவும் கிடையாது. தமிழகத்தின் வடஎல்லை கிருஷ்ணா நதி என்று சிற்ப சாத்திரம் கூறுகிறது என உ.வே.சா. கூறுகிறார்.

பல்லவர்கள், சோழர்கள் ஆட்சிக்காலத்தில் இருந்து, ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூர், தமிழ்நாட்டின் பகுதியாகவே இருந்து வந்தது என்பதை வரலாற்றுச் சான்றுகள் உறுதி செய்கின்றன. பத்தாம் நூற்றாண்டிலேயே பெங்களூர் மாவட்டத்தின் பல பகுதிகள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு இருந்த பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தன. கி.பி. 997-ம் ஆண்டில் ஒசக்கோட்டை போன்ற இம்மாவட்டப் பகுதிகள், சோழ அரசனால் கைப்பற்றப்பட்டது. பெங்களூர் மாவட்டத்தில் உள்ள மாகடிபட்டணத்தை நிறுவியவர்களே சோழர்கள்தான்!

பெங்களூர் மாவட்டத்தில் இருக்கின்ற பழங்கோயில்கள் பெருமளவு பல்லவர்களாலும், சோழர்களாலும், தமிழ்க் கங்கர்களாலும் கட்டப்பட்டவை. பேளூரில் இருக்கின்ற நாகதாதேசுவர் கோயில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்டது. 1537-ம் ஆண்டில் பெங்களூர் பட்டணத்தை நிறுவிய கெம்பே கவுடாவின் முன்னோர்கள், காஞ்சியைச் சார்ந்த முரசு ஒக்கலு வேளாளர் குடியினரின் வழியில் வந்தவர்கள் ஆவர்.

சங்க காலத்தில் இருந்து பாண்டிய அரசின்கீழ் குமரி நாடு திகழ்ந்தது. திவாகரம் எனும் நூல் பாண்டிய மன்னனை குமரி சேர்ப்பன் என்று குறிப்பிடுகிறது. தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிக்கும் மதுரைக் காஞ்சியில் அவனைக் குமரியோடு இணைத்துக் கூறுகிறது. பிற்காலச் சோழர்களான முதலாம் இராஜராஜன், வீர இராஜேந்திரம், முதல் குலோத்துங்கன், இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன் ஆகியோரின் பெயர்கள் நாஞ்சில் நாட்டுக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகள், குலசேகர ஆழ்வார் போன்றோர் கேரளத்தில் பிறந்து தமிழ்த் தொண்டாற்றியவர்கள். கி.பி. 3-ம் நூற்றாண்டில் பாண்டியனின் அமைச்சராக விளங்கிய மாணிக்கவாசகர் வைக்கம் சென்றார். 63 சைவ நாயன்மார்களுள் ஒருவரான விறல்மிண்டன் நாயனார் மத்திய திருவிதாங்கூர் பகுதியில் உள்ள செங்களூரில் பிறந்தவர். சைவ நால்வருள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் சேர குலத்துக்கு நெருங்கியவராக இருந்தார். இவர் சேர மன்னனான சேரமான் பெருமானின் மரியாதைக்குரியவராக இருந்ததுடன், கேரள மாநிலம் திருவஞ்சிக்குளம் என்கிற இடத்தில்தான் சிவபெருமானிடம் கலந்ததாகப் புராணம் கூறுகிறது. கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் கோயில் கட்டினான். இதனால் கேரளத்தில் பகவதி வழிபாடு என்ற பெயரில் கண்ணகி வழிபாடு வழக்கத்தில் உள்ளது. கண்ணகி விழாவுக்கு இலங்கை அரசன் கயவாகுவும், வெற்றிவேற்செழியனும் வந்து இருந்தனர். இவர்கள் காலம் ஏறத்தாழ கி.பி. 175 ஆகும்.

கி.பி. 10-ம் நூற்றாண்டுக்கு முன்பு நம்பூதிரி பிராமணர்கள் வட இந்தியாவில் இருந்து வந்து சேர நாட்டில் குடியேறினர். சேர மன்னர்கள் சத்திரியர்களாக மாறி சூரிய வம்சத்தினர் என அழைத்துக் கொண்டனர். கி.பி. 1534-க்கு முன்பே திருவடி ராஜ்யம் என வழங்கப்பட்ட திருவிதாங்கூர் அரசனான மார்த்தாண்டவர்மன், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து பல பகுதிகளைக் கைப்பற்றினார். ஸ்ரீவல்லப பாண்டியன், விஜயநகர வேந்தனான அச்சுதராயரிடம் உதவி கேட்டான். விஜயநகரப் படைகளின் உதவியுடன் திருவிதாங்கூர் படைகளைத் தோற்கடித்து பாண்டியன் இழந்த பகுதிகளை மீட்டான் என்பது சரித்திரம்.

கி.பி. 18-ம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை தமிழ்நாட்டு அரசர்களுக்கு உரிமை உடையதாகவே நாஞ்சில் நாட்டுப் பகுதி இருந்தது. திருவிதாங்கூர் அரசு 1941-ம் ஆண்டு வெளியிட்ட பர்ல்ர்ஞ்ழ்ஹல்ட்ண்ஸ்ரீஹப் கண்ள்ற் ர்ச் ஐய்ள்ஸ்ரீழ்ண்ல்ற்ண்ர்ய் -படி இந்தப் பகுதியில் உள்ள 1100 கல்வெட்டுகளில் தமிழ்க் கல்வெட்டுகள் மட்டும் 828 உள்ளன. கல்குளம், முன்சிறை போன்ற ஊர்களில் உள்ள கல்வெட்டுகள் கி.பி. 900 ஆண்டைச் சார்ந்தவை. அவை தமிழிலேயே உள்ளன. திருவனந்தபுரம் ஆவணக் காப்பகத்தில் காணப்படும் கி.பி. 16, 17, 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாஞ்சில் நாடு தொடர்பான ஓலைச்சுவடிகள் தமிழ் எழுத்திலேயே எழுதப்பட்டு இருப்பதை இன்றும் காணலாம்.

1920-ம் ஆண்டில் இருந்தே தனி ஆந்திர மாநிலம் கோரி ஆந்திரர்கள் போராடத் தொடங்கினார்கள். ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தின் பிரதமர்களாக ஆந்திரர்கள் பலர் பொறுப்பு வகித்தனர். இருப்பினும் தெலுங்கர்கள் விசால ஆந்திரம் என தனி மாநிலம் கேட்டுக் குரல் கொடுக்கத் தொடங்கினர். இதற்காகவே ஆந்திர மகா சபை அமைக்கப்பட்டது. திருவிதாங்கூர், கொச்சி, மலபார் மாவட்டம் ஆகிய மூன்று பகுதிகளையும் ஒன்றாக இணைத்து ஐக்கிய கேரள மாநிலம் அமைத்திட வேண்டும் என்று மலையாளிகள் குரல் கொடுத்தனர். இதற்கென கேரள சமாஜம் என்ற ஓர் அமைப்பின்கீழ் ஒன்றுபட்டனர். சம்யுக்த கர்நாடகம் என கர்நாடகத்தினர் போராடினர்.

நெல்லூர் ஜில்லாவின் தென் கோடியும், சித்தூர், வட ஆர்க்காடு, செங்கல்பட்டு, தென் ஆர்க்காடு, தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி என்னும் ஜில்லாக்களும், மலையாளம், தென் கன்னடம் ஜில்லாவின் முக்கால் பங்கும், மைசூரின் தென் பாதியும், திருவாங்கூர், கொச்சி, புதுக்கோட்டை என்ற சமஸ்தானங்கள், கடலில் மூழ்கிய குமரிப் பகுதிகள் தமிழ் நிலங்களாகவே அக்காலத்தில் இருந்தன. இங்கு வேறு மொழிகள் வழங்கியது இல்லை என கா.ர. கோவிந்தராஜ முதலியார் தனது நூலில் எழுதி உள்ளார்.

1948-ம் ஆண்டு ஒன்றுபட்ட சென்னை மாநிலச் சட்டமன்றத்தில் மொழிவாரி மாநிலத்தை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1948-ன் தொடக்கத்தில் மொழிவாரி மாநிலப் பிரிவினை பற்றி ஆராய்ந்து அறிக்கை தருவதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட தார் கமிஷன் 13.9.1948-ல் சென்னைக்கு வந்தபோது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, தமிழரசுக் கழகம், திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் தங்கள் கருத்துகளை இக்குழுவிடம் தெரிவித்தன. அக்குழுவில் தமிழரான டி.ஏ. இராமலிங்கம் செட்டியாரும், ஆந்திரரான இராமகிருஷ்ண ராஜும் உறுப்பினர்களாக இருந்தனர்.

தமிழர் உறுப்பினராக இருந்த அந்தக் குழு இப்போதைக்கு மொழிவாரி மாநிலம் தேவை இல்லை என்று அறிவித்தது. இருந்தாலும் மாநிலங்களை மொழிவாரியில் பிரிப்பதாயின் அவற்றுக்கு இடையே மலை அல்லது ஆறு இருந்தால் அதையே எல்லையாகக் கொள்ள வேண்டும். மொழி வரம்பு வேறுபட்டால் அதைப் பொருள்படுத்தக் கூடாது என்று பரிந்துரைத்தது. அப்பரிந்துரைப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டுக்கு வேங்கட மலையும், குடகு மலையும் கிடைத்திருக்க வேண்டும். காவிரி உள்பட தமிழ்நாட்டில் பாயும் ஆறுகளின் உற்பத்திப் பகுதிகளும் தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு கிடைக்கவில்லை.

1954-ல் கேரளத்திற்கும் தமிழகத்திற்குமான எல்லைச் சிக்கலைத் தீர்த்து வைப்பதற்காக மத்திய அரசு இரண்டாவது எல்லை நிர்ணயக் குழுவை நியமித்தது. 1954-ல் நியமிக்கப்பட்ட அந்த மூன்று உறுப்பினர் எல்லை நிர்ணயக் குழுவுக்கு பசல் அலி எனும் பிகார் மாநிலத்தைச் சார்ந்தவர் தலைவராகவும், கே.எம். பணிக்கர் என்ற கேரளத்தைச் சேர்ந்தவரும், எஸ்.என். குன்ஸ்ரு என்ற வடஇந்தியரும் மற்ற உறுப்பினர்களாக இருந்தனர். தமிழர் யாரும் உறுப்பினராக நியமிக்கப்படவில்லை. இதில் பாரபட்சம் காட்டப்பட்டது. அந்தக் குழு 10.10.1955-ல் அளித்த பரிந்துரையில்,

சென்னை மாகாணத்தில் உள்ள மலபார் மாவட்டத்தைக் கேரளத்தோடும், தென் கன்னடம் மாவட்டத்தைக் கர்நாடகத்தோடும் சேர்த்துவிட வேண்டும். (இதில் தென் கன்னட மாவட்டம் பற்றிய பரிந்துரை இக்குழுவின் வரம்பிற்கு அப்பாற்பட்டது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்).

திருவிதாங்கூர் - கொச்சி ராஜ்யத்தில் உள்ள கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம், செங்கோட்டையின் பாதி ஆகிய தமிழ்த் தாலுகாக்களைத் தமிழ்நாட்டுடன் சேர்த்து தனி ராஜ்யம் அமைக்க வேண்டும். அதன் பெயர் சென்னை ராஜ்யம் என்றே இருக்க வேண்டும்.

தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் தொடர்பாக பல்வேறு பொருளாதாரக் காரணங்களை உத்தேசித்து அவை திருவிதாங்கூர் - கொச்சி ராஜ்யத்திலேயே இருந்து வர வேண்டும்.

மொழிவாரியில் மாநிலங்களைத் திருத்தி அமைப்பது பற்றிப் பரிந்துரைக்கத்தான் இந்தக் குழுவே அமைக்கப்பட்டது. ஆனால் மொழி அடிப்படையை முதன்மையாகக் கருத முடியாது என்று சொன்னது இக்கமிஷன்.

சென்னை மாகாண - ஆந்திர ராஜ்ய எல்லைச் சிக்கலை அதற்கென நியமிக்கப்படவிருக்கும் எல்லைக் கமிஷன் கிராம அடிப்படையில் திருத்தி அமைப்பதை இக்கமிஷன் ஒப்புக்கொள்கிறது. அதாவது இக்கமிஷன் மொழி அடிப்படையையோ, கிராம அடிப்படையையோ ஒப்புக் கொள்ளவில்லை. ஒப்புக்கொண்டு இருந்தால் திருவனந்தபுரத்தையே தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கும் நிலை தோன்றி இருக்கும். ஏனென்றால், அக்கால கட்டத்தில் திருவனந்தபுரமே தமிழ்ப் பகுதியாகத்தான் இருந்தது.

1956-க்கு முன் சென்னை ராஜதானி என்பது விரிந்த மாநிலமாக இருந்தது. தமிழ்நாட்டோடு வடக்கே விசாகப்பட்டினத்திலிருந்து ஒரிய மொழி பேசும் கஞ்சம் மாவட்டம் வரையிலும், மேற்கே காசர்கோடு, பாலக்காடு வரையிலும், கர்நாடகத்தில் தென் கன்னடமும் இதனுடன் இணைந்த பகுதிகளாக இருந்தன. பசல் அலி குழுவிடம் தமிழர்கள் கடுமையாகப் போராட வேண்டி இருந்தது. நத்தானியேல், நேசமணி, பி.எஸ். மணி, கரையாளர் போன்ற பல தலைவர்கள் செய்த தியாகத்தால் தெற்கே குமரியும், செங்கோட்டையும் பெறப்பட்டது.

மொழிவாரி மாநிலம் அமைக்கப்படும் எனும் கோரிக்கை எழுந்தபொழுது ஆளும் கட்சியான காங்கிரஸில் சிலர் ஆதரவாக இருந்தனர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ஜீவா போன்ற தலைவர்கள் மொழிவாரியாக தமிழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கைக்கு துணை நின்றனர். வடக்கெல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி. மற்றும் அவரது சகாக்களின் பணி, காலத்தாலும் மறைக்க முடியாது. இந்த வரலாற்றை நீண்ட பக்கங்களில்தான் அடக்க முடியும்.

இப்போதோ, தமிழகத்தின் எல்லைகளை ஆந்திரமும், கேரளமும், கர்நாடகமும் அபகரிக்க நினைப்பது தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகத்தை விளைவிக்கும் முயற்சியே ஆகும். தமிழகத்தில் தொடர்ந்து மாநிலக் கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும் நாட்டின் ஒருமைப்பாட்டை காக்க ஒவ்வொரு கட்டத்திலும் கடமை ஆற்றியுள்ளன. ஆனால் அகில இந்தியக் கட்சிகள் ஆளும் ஏனைய மூன்று மாநிலத் தலைவர்கள், இந்தப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காததுதான் வேதனை தருகிறது.

இதுபோலவே, கச்சத்தீவையும் நாம் இழந்தோம் என்பது ஒருபுறம் இருக்க, அந்தமான் தீவிலும் அவ்வப்போது பிரச்னைகள் எழுகின்றன. மேற்கு வங்கத்தைச் சார்ந்தவர்கள் ஆளுமையால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அந்தமானின் நீதிபரிபாலனம் சென்னை நீதிமன்றத்தின் கீழ்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், இன்றைக்கு கல்கத்தா நீதிமன்ற ஆளுமையில் இருக்கிறது.

தமிழர்கள் என்ற மொழிவாரி வெறியோடு இதையெல்லாம் நாம் பார்க்கவில்லை. இதிலுள்ள நியாயங்களையும் பிரச்னைகளையும் அறிந்து தீர்வு காண வேண்டும் என்பதால் எழுப்பப்படும் கோரிக்கை இது. அந்தக் கடமையைச் செய்யத் தவறினால் தமிழ் மண்ணுக்குப் பேராபத்து வரும்.

இன்றைக்கு நாம் இருக்கின்ற பகுதிகளிலேயே அண்டைய மாநிலத்தவர் ஒரு ஜனநாயக நாட்டில் தவறாக உரிமை கொண்டாடுவதை எப்படிச் சகிக்க முடியும்? கடந்த காலங்களில் இழந்த மண்ணால் ஏற்பட்ட பிரச்னைகளால் விளைந்த தலைவலிகளைத் தீர்க்க முடியாமல் நாம் இன்று தவிக்கிறோம். இந்த நிலையில் கர்நாடகம் ஒகேனக்கல்லைக் கேட்கிறது. ஆந்திரம் ஒரு ஒன்றரை ஏக்கர் நிலத்திற்கு வம்பு செய்கிறது. தென் கோடியில் கேரளம் அணைமுகம் கிராமத்தை அபகரிக்க நினைக்கிறது. இதை நாம் எப்படி வேடிக்கை பார்ப்பது?

தமிழக அரசியல் கட்சிகள் தங்களது மனமாச்சரியங்களை மறந்து இந்த விஷயத்தில் கைகோர்த்துச் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்டு குரலெழுப்பி, மத்திய அரசை வற்புறுத்தி நமது உரிமைகளை நிலைநாட்டியே தீரவேண்டும். இனியும் நாம் நமது உரிமையை வலியுறுத்தித் தமிழக எல்லைகளைக் காக்காமல் போனால், நமது சந்ததியினர் நம்மை மன்னிக்க மாட்டார்கள். கடலின் சீற்றத்தால் லெமூரியா கண்டம் அழிந்தது. நமது மெத்தனத்தால், இன்றைய தமிழகம் அழிந்துவிடக் கூடாது!

கட்டுரையாளர் :கே.எஸ். இராதாகிருஷ்ணன்
நன்றி : தினமணி