Tuesday, March 31, 2009

நாளை முதல் எந்த ஏ.டி.எம். மிலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் : கட்டணம் கிடையாது

சாதாரன மக்களுக்கு பெரிதும் பயன்படும் திட்டம் ஒன்றை ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. இதன்படி நாளை முதல் ( ஏப்ரல் 1 ) எந்த வங்கியின் ஏ.டி.எம்.மிலும் நீங்கள் பணம் எடுத்துக்கொள்ளலாம். அது உங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். ஆகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்காக கட்டணம் எதையும் வசூலிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி சொல்லி விட்டது. இதுவரை நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கி, அல்லது அதனுடன் ஒப்பந்தம் செய்திருக்கும் வங்கிகள் ஆகியவற்றின் ஏ.டி.எம்.களில் மட்டுமே கட்டணம் ஏதுமின்றி பணம் எடுத்துக்கொள்ள முடியும். இது தவிர வேறு வங்கிகளின் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தால் ஒவ்வொரு தடவைக்கும் குறைந்தது ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இப்போது அது நீக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பை அடுத்து, பல வங்கிகள் தங்களின் ஏ.டி.எம்.நெட்வொர்க்கை அதிகரிக்க திட்டமிட்டிருக்கின்றன. ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், புதிதாக 60 ஏ.டி.எம்.களை திறக்க உள்ளதாக அதன் எக்ஸிகூடிவ் டைரக்டர் சின்ஹா தெரிவித்தார்.ஆனால் கிரிடிட் கார்டை கொண்டு ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலோ, இந்தியாவுக்கு வெளியே இருக்கும் ஏ.டி.எம்.களை பயன்படுத்தினாலோ கட்டணம் வசூல் செய்து கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


கிரிடிட் கார்டை அறிமுகப்படுத்தியது எல்.ஐ.சி.

லைஃப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா, கிரிடிட் கார்டை நேற்று மும்பையில் அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் மும்பை மற்றும் புதுடில்லியில் மட்டும் குறைந்த அளவிலேயே இந்த கிரிடிட் கார்டு வினியோகிக்கப் படுகிறது. எல்.ஐ.சி.,யின் துணை நிறுவனமான எல்.ஐ.சி.,கார்ட்ஸ் சர்வீசஸ் லிமிடெட் ( எல்ஐசி சிஎஸ்எல் ) மூலமாக இந்த கார்டு வெளியிடப்படுகிறது. அதன் நிர்வாகத்தை கார்பரேஷன் பேங்க் கவனித்துக்கொள்ளும். விசா பிராண்ட்டை கொண்டிருக்கும் எல்.ஐ.சி.,கிரிடிட் கார்டை உலகம் முழுவதும் நாம் பயன்படுத்தலாம்.கார்டுக்கு சொந்தக்காரரின் போட்டோ மற்றும் டிஜிட்டலில் பதிவு செய்யப்பட்டிருக்கும் கையெழுத்து போன்றவற்றால் அந்த கார்டு அதிக பாதுகாப்பானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட எல்.ஐ.சி.ஏஜென்ட்கள் மூலமாக வினியோகம் செய்யப்படும் இந்த கார்டு மூலமாக எல்.ஐ.சி.பிரீமியத்தையும் செலுத்த முடியும் என்று எல்.ஐ.சி.ஆஃப் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கப்படுகிறது.
நன்றி : தினமலர்

வாகன தொழில் வீழ்ந்து விடும் அபாயம் : அமெரிக்க பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி

அமெரிக்க வாகன தொழில் வீழ்ந்து விடும் அபாயம் அதிகரித்திருப்பதாலும், இன்னும் நிறைய வங்கிகள் கடன் சுமையால் மூடப்பட்டு விடும் நிலையில் இருப்பதாக வந்த செய்தியாலும், அமெரிக்க பங்கு சந்தைகள் நேற்று கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன. கடும் நிதி சிக்கலில் சிக்கி தவிக்கும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு, அமெரிக்க அரசு மேலும் நிதி உதவி செய்ய வேண்டுமானால் ஜெனரல் மோட்டார்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ரிக் வேகனர் பதவி விலக வேண்டும் என்று அதிபர் ஒபாமா கேட்டுக்கொண்டிருந்தார். அதனையடுத்து வேகனரும் பதவி விலகி விட்டார். ஆனால் ஓபாமா அரசோ, அரசாங்கத்திடம் இருந்து அதிகம் நிதி உதவி கேட்கும் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிரைஸ்லர் நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்து, அதன்படி நடக்க ஒத்துக்கொண்டால்தான் நிதி தருவோம் என்று சொல்லி விட்டது. எனவே நேற்று ஜெனரல் மோட்டார்ஸின் பங்குகள் 25 சதவீதம் வரை குறைந்து விட்டது. அமெரிக்காவை சேர்ந்த இன்னும் பல பெரிய வங்கிகள் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், அவைகளும் அரசாங்கத்திடம் இருந்து அதிக அளவில் நிதி உதவியை எதிர்பார்க்கின்றன என்றும் அமெரிக்க நிதி அமைச்சர் திமோத்தி கெய்த்னர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பேங்க் ஆஃப் அமெரிக்காவின் பங்குகள் 18 சதவீதமும், சிட்டி குரூப் மற்றும் ஜேபி மார்கன் வங்கிகள் முறையே 12 மற்றும் 9.3 சதவீதமும் சரிவை சந்தித்திருக்கின்றன. அங்குள்ள பங்கு சந்தைகளான டவ்ஜோன்ஸ் இன்டக்ஸ் 3.3 சதவீதமும், எஸ் அண்ட் பி 500 இன்டக்ஸ் 3.5 சதவீதமும், நாஸ்டாக் 2.8 சதவீதமும் குறைந்திருக்கின்றன.

நன்றி : தினமலர்


பொதுத்துறை நிறுவன அதிகாரிகளுக்கு மேலும் சம்பள உயர்வு : மத்திய அரசு ஒப்புதல்

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உள்பட, பொதுத்துறை நிறுவன அதிகாரிகள் சுமார் 4 லட்சம் ஊழியர்களுக்கு, கடந்த வரும் அறிவித்த சம்பள உயர்வை விட மேலும் சம்பளத்தை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒத்துக்கொண்டிருக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆறாவது சம்பள கமிஷன் பரித்துரையின்படி கடந்த வருடம் அவர்களது சம்பளம் உயர்த்தப்பட்டது. ஆனால் அந்த சம்பள உயர்வு போதாது என்றும் இன்னும் கூடுதலாக உயர்த்த வேண்டும் என்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மூன்று மாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அரசு அறிவித்திருக்கும் அகவிலைப்படியான, அடிப்படை சம்பளத்தில் 68.8 சதவீதம் என்றிருப்பதை 78.2 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கேட்டிருந்தனர். இந்த கோரிக்கையை இப்போது ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, அதன்படி கொடுக்க முடிவு செய்திருக்கிறது. அகவிலைப்படி உயர்வை 2007 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் கணக்கிட்டு கொடுக்கவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பிற்கு மத்திய அரசு, தேர்தல் கமிஷனிடம், ஆட்சேபனை ஏதும் இல்லை என்ற உத்தரவை பெற்றிருக்கிறது. இருந்தாலும் பொதுத்துறை அதிகாரிகள் கேட்டபடி, ஒவ்வொரு 5 வருடத்திற்கும் ஒரு முறை சம்பளத்தை மாற்றி அமைக்க முடியாது என்று கூறிவிட்டது. இது குறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், எங்களது ஒரு கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், இந்த சம்பள உயர்வினால் எங்களுக்கு வெறும் 8 முதல் 10 சதவீதம் மட்டுமே சம்பளம் உயரும். எனவே இன்னும் அதிகமான சம்பள உயர்வை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.
நன்றி :தினமலர்


மே 1-ந் தேதி முதல் அனைத்து மக்களுக்கும் பயன்பெறும் ஓய்வூதிய திட்டம் அறிமுகம்

அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத அனைத்து துறையினரும் பயன் பெறும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டம் ஒன்று இவ்வாண்டு மே 1-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் அமைப்பு சார்ந்த ஒரு சில நிறுவனங்களின் ஊழியர்கள் மட்டுமே ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இனிமேல், பல சரக்கு கடை நடத்துபவர்கள், பிளம்பர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், கூலித்தொழிலாளர்கள் முதல் அனைத்து குடிமக்களும் ஓய்வூதியம் பெறலாம். இத்திட்டத்தின் வாயிலாக பயன் பெற விரும்பும் பொதுமக்கள், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000 முதலீடு செய்ய வேண்டும்.
சென்ற ஆண்டில், மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமின்றி, அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத அனைத்து துறை ஊழியர்களுக்கும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதன்படி, இத்திட்டத்தை ஓய்வூதிய நிதி கட்டுப்பாட்டு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பி.எஃப்.ஆர்.டீ.ஏ) இவ்வாண்டு ஏப்ரல் 1-ந் தேதியிலிருந்து அறிமுகப்படுத்த முடிவு செய்திருந்தது. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், ஏப்ரல் 1-ந் தேதியிலிருந்து புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினால், அது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக, ஓய்வூதிய கட்டுப்பாட்டு மற்றும் மேம்பாட்டு ஆணையம், தேர்தல் கமிஷனின் அனுமதியை கோரியது. இதற்கு, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, இத்திட்டம் மே 1-ந் தேதியிலிருந்து அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வூதிய திட்டத்திற்காக திரட்டப்படும் நிதி, அரசு கடன்பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படும். இந்த முதலீடுகளை நிர்வகிப்பதற்காக, கட்டுப்பாட்டு அமைப்பு புதிதாக ஆறு நிறுவனங்களை நியமித்துள்ளது.
நன்றி : தினமலர்


Monday, March 30, 2009

கடும் சரிவுடன் முடிந்தது பங்கு சந்தை

இன்றைய பங்கு சந்தை கடும் சரிவுடன் முடிந்திருக்கிறது. கடந்த 5 வர்த்தக நாட்களில் பெற்றிருந்த புள்ளிகளை இன்று இழந்து விட்டது. சர்வதேச அளவில் பங்கு சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக இந்திய பங்கு சந்தையிலும் இன்று பங்குகளை விற்கும் போக்கு அதிகமாக காணப்பட்டது. சென்செக்ஸ் 9,600 புள்ளிகளுக்கும் கீழேயும், நிப்டி 3,000 புள்ளிகளுக்கும் கீழேயும் சென்று முடிந்திருக்கிறது. பேங்கிங், ரியல் எஸ்டேட், மெட்டல், டெக்னாலஜி, மற்றும் இன்ப்ராஸ்டரச்சர் துறை பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. இன்று நாள் முழுவதும் சரிவுடன் இருந்த மும்பை பங்கு சந்தையில், வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 480.35 புள்ளிகள் ( 4.78 சதவீதம் ) குறைந்து 9,568.14 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையல் நிப்டி 130.50 புள்ளிகள் ( 4.2 சதவீதம் ) குறைந்து 2,978.15 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் அதிகம் பாதிப்படைந்த நிறுவனங்கள் எஸ்.பி.ஐ., ஓ.என்.ஜி.சி., ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி, செய்ல், பெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், டிஎல்எஃப், ஹெச்டிஎஃப்சி பேங்க், மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவைதான். சன் பார்மா, பிபிசிஎல், என்டிபிசி ஆகிய மூன்று நிறுவன பங்குகள் மட்டுமே விலை உயர்ந்திருந்தது.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது

கச்சா எண்ணெய் விலை இன்று பேரலுக்கு 1.13 டாலர் குறைந்திருக்கிறது. அமெரிக்காவின் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை ( மே டெலிவரிக்கானது ) இன்று பேரலுக்கு 1.13 டாலர் குறைந்து 51.25 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 92 சென்ட் குறைந்து 51.06 டாலராக இருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையிலேயே இருப்பதால், அங்கு வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதாலும், அமெரிக்கா சேமித்து வைக்கும் கச்சா எண்ணெய்யின் அளவு குறைந்து வருவதாலும் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதாக சொல்கிறார்கள். மார்ச் மாதத்தில் மட்டும் அமெரிக்காவில் 6,60,000 பேர் வேலையை இழந்திருக்கிறார்கள். இதன்படி பார்த்தால் கடந்த செப்டம்பரில் இருந்து இதுவரை அங்கு 33 லட்சம் பேர் வேலையை இழந்திருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்


யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் டாடா மோட்டார்ஸ் உடன்பாடு

டாடா மோட்டார்ஸின் வாகனங்களுக்கு கடன் கொடுப்பதற்காக, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கும் டாடா மோட்டார்ஸூக்குமிடையே உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனை டாடா மோட்டார்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் 1,450 கிளைகளிலும், டாடா மோட்டார்ஸின் 470 விற்பனை நிலையங்களிலும் இந்த வங்கி மூலம் வாடன கடன் பெற முடியும். டாடாவின் மலிவு விலை காரான நானோவை புக் செய்வதற்கும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா அங்கீகாரம் பெற்றிருக்கிறது. காரின் விலையில் ( ஆன் ரோடு ) 90 சதவீதம் வரை கடனான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கொடுக்கிறது. அதிக பட்சமாக ஆறு வருடங்கள் வரை திருப்பி செலுத்தும் வசதியுடன் வாகன கடன் பெற்றுக்கொள்ளலாம்.
நன்றி : தினமலர்


ஒபாமாவின் திட்டப்படிஜெனரல் மோட்டர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகினார்

வெள்ளை மாளிகை கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கடும் நிதி சிக்கலில் இருக்கும் ஜெனரல் மோட்டார்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ரிக் வேகனர் பதவியில் இருந்து விலகினார். கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் உலகின் மிகப்பெரிய கார் கம்பெனியான ஜெனரல் மோட்டார்ஸூம், இன்னொரு கார் கம்பெனியான கிரைஸ்லருக்கும் அமெரிக்க அரசிடம் இருந்து 17.4 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ. 87,000 கோடி ) ஏற்கனவே நிதி உதவியாக பெற்றிருக்கின்றன. இது போதாது என்று இன்னும் 5 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ.25,000 கோடி ) கிரைஸ்லரும், 16.7 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ.83,500 கோடி ) ஜெனரல் மோட்டார்ஸூம் கேட்கின்றன. இது குறித்து பாரக் ஒபாமா, சி.பி.எஸ். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அரசிடம் இருந்து மேலும் உதவி பெற வேண்டும் என்றால் அவைகள், தங்களது நிர்வாகத்தில் பல மாறுதல்களை செய்ய வேண்டியதிருக்கிறது என்றார். ஆனால் இன்னும் அந்த மாறுதல்களை அவைகள் செய்யவில்லை என்றும் நாங்கள் ஒரு வெற்றிகரமான ஆட்டோ இன்டஸ்டிரியை மீண்டும் உருவாக்க எண்ணியிருக்கிறோம் என்றும் சொன்னார் ஒபாமா. இவைகளுக்கு மேலும் நிதி உதவி அளிப்பது தொடர்பாக மேற்கொள்ள இருக்கும் திட்டங்கள் குறித்து அவர் தீவிரமாக பரிசீலித்தும் வருகிறார்.இதன் தொடர்ச்சியாக ஜெனரல் மோட்டார்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் ரிக் வேகனரை அந்த பதவியில் இருந்து விலகுமாறு வெள்ளை மாளிகை கேட்டுக்கொண்டது. அதனை ஏற்றுக்கொண்ட வேகனர் பதவி விலகி விட்டார்.56 வயதாகும் வேகனர், அந்த பதவியில் கடந்த ஆறு ஆண்டுகளாக இருந்து வந்தவர். 1977 ம் ஆண்டில் இருந்தே ஜெனரல் மோட்டார்ஸில் பணியாற்றி வருபவர். கடும் நிதி சிக்கலில் இருக்கும் ஜெனரல் மோட்டார்ஸ், 47,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யவும், கிரைஸ்லர் 3,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யவும் திட்டமிட்டிருக்கின்றன. மேலும் விற்பனையாகாமல் இருக்கும் பல மாடல்களை தயாரிக்காமல் நிறுத்தி வைக்கவும் இரு நிறுவனங்களும் திட்டமிட்டிருக்கின்றன. ஊழியர்கள் வேலை நீக்கம் 2009 இறுதிக்கும் இருக்கும் என்றும், அவ்வாறு வேலை நீக்கம் செய்யப்பட்டால், அதுதான் அமெரிக்க வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத மிகப்பெரிய ஜாப்கட் ஆக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் ஜெனரல் மோட்டார்ஸூக்கு இப்போது இருக்கும் 47 தொழிற்சாலையை 2012 க்குள் 33 ஆக குறைத்து விடவும் அது தீர்மானித்திருக்கிறது. மேலும் அது தயாரித்து வரும் 8 மாடல் கார்களை இனிமேல் 4 ஆகவும் குறைக்கப்போகிறது, செவர்லே, புய்க், கெடில்லாக் மற்றும் ஜிஎம்சி ஆகிய நான்கு மாடல் கார்களை மட்டுமே இனிமேல் ஜெனரல் மோட்டார்ஸ் தயாரிக்க இருக்கிறது.
நன்றி : தினமலர்


எந்த வங்கி ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்தாலும் 'ப்ரீ'

ஒரு குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர் மற்றொரு வங்கியின் ஏ.டி.எம்., மூலமாக பணம் எடுத்தால் அதற்கு இனிமேல் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. வருகிற 1ம் தேதி முதல் இந்த சலுகை அமலுக்கு வருகிறது.தற்போது, ஒரு குறிப் பிட்ட வங்கியின் வாடிக் கையாளர், மற்றொரு வங்கியின் ஏ.டி.எம்., (தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரம்) மூலமாக பணம் எடுத்தால் அதற்காக சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு பணப் பரிமாற்றத் துக்கு 20 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதனால், சாதாரண மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றொரு வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்தால் அதற்காக கட்டணம் எதுவும் செலுத்த தேவை இல்லை. எந்த வங்கியைச் சேர்ந்த வாடிக்கையாளர்களாக இருந்தாலும், நாட்டில் உள்ள பிற வங்கிகளின் ஏ.டி.எம்., மையத்தை பணம் எடுப்பதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.நாடு முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏ.டி.எம் (தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள்) அமைப்புகள் உள்ளன. சில வங்கிகள் தங்களுக்குள் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள தற்போது அனுமதித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


Sunday, March 29, 2009

எல்லாரது கவனமும் மீண்டும் திரும்புகிறது பங்குச் சந்தை பக்கம்-சேதுராமன் சாத்தப்பன்-

ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்பது போல பங்குச் சந்தை எல்லாரையும் பள்ளு பாட வைத்துக் கொண்டிருக்கிறது. முன், சந்தைக்கு வந்து நிறைய நஷ்டத்தில் இருந்தவர்கள் எல்லாருக்கும், கடந்த 20 நாட்களாக நிம்மதி தரும் செய்தியாக இருக்கிறது. 8,000 அளவில் சந்தைக்கு வராதவர் கள் எல்லாம், வந்திருக்கலாமே என்று ஏங்க வைத்திருக்கிறது. வியாழன் மும்பை பங்குச் சந்தை குதிரை 10 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி சென்று நின்றது. பணவீக்கம் இந்த வாரம் 0.27 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. சென்ற வார அளவை விட 0.14 சதவீதம் குறைவு. பூஜ்யத்திற்கு அருகில் ராஜ்யமிடுகிறது. அதே சமயம் உணவுப் பொருட்களின் பணவீக்கம் மார்ச் முதல் வாரத்தில் 7.35 சதவீதமாக இருந்து வருகிறது.பணவீக்கம் குறைந்ததால், திங்களன்று சந்தை ஜம்மென 335 புள்ளிகள் மேலே சென்று 10 ஆயிரத்தைத் தாண்டிச்சென்று நின்றது. வெளிநாட்டு நிறுவனங் கள் வாங்கியதும் ஒரு காரணம். கடந்த மூன்றரை மாதத்தில் இதுவே அதிகபட்ச அளவு.காரணம், பணவீக்கம் குறைந்ததால் இன்னும் அரசாங் கம் வட்டி விகிதங்களைக் குறைக்கலாம் என்ற எண்ணம் சந்தையில் மேலோங்கியிருந் தது தான். அதனால், குறிப்பாக வங்கிப் பங்குகள் மேலே சென்றன.பணவீக்கம் குறைந்து வருவதால், வட்டி விகிதம் குறையும் குறையும் என்று வியாழன் வரை எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அந்த பார்ட்டியைக் கெடுக்கும் விதமாக வந்த செய்தி என்னவென்றால், அரசாங்கம் இரண்டு லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்கள் வெளியிடும் என்பது தான்.அதே சமயம் 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முன் வெளியிட்ட கடன் பத்திரங்களை வெளிமார்க்கெட்டில் இருந்து வாங்கும் என்ற செய்தியும் வந்திருக்கிறது. ஆதனால், தற்போது திரட்டும் மொத்த பணத்தின் மதிப்பு ஒரு லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும். இது வட்டி விகிதங்களை பெரிய அளவில் குறைக்க வழி வகுக்காது.அதனால், இந்தச் செய்தி கேட்டவுடன் நேற்று முன்தினம் சந்தைகள் கீழேயே துவங்கின. மேலும், மார்ச் கடைசி என்பதால் மியூச்சுவல் பண்டுகள் தங்களது பண்டு களின் குறியீடு மேலேயே இருப்பதை விரும்பும். அதனால், அவர்களும் சந்தையில் வாங்குகின்றனர்.முடிவாக நேற்று முன்தினம் மும்பை பங்குச் சந்தை 45 புள்ளிகள் கூடி 10 ஆயிரத்து 48 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 26 புள்ளிகள் கூடி 3,108 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.தேர்வுகள் எல்லாம் முடிந்து தேர்ச்சிபெற்று விட்டேன் என்ற ரிசல்ட் வந்து மாணவன் போல குதூகலமாக இருந்தனர் சந்தை முதலீட்டாளர்கள். 10வது பாஸ் செய்து விட்டார்களே!
அமெரிக்காவின் நஷ்டம் - இந்தியாவின் லாபம்: உலகத்தின் மற்ற பாகங்களிலிருந்து பி.பி.ஓ., வேலைகள் இந்தியாவிற்குக் கிடைக்காது, இளைஞர்களுக்கு வருங் காலத்தில் வேலைகள் கிடைப்பது கடினம் என்ற செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன.இந்த செய்திகளுக்கிடையே தான் கடந்த வாரம் எச்.சி.எல்., கம்பெனி ரீடர்ஸ் டைஜஸ்டின் ஏழு வருட 350 மில்லியன் கான்ட்ராக்ட்டை பெற்றிருக்கிறது என்ற செய்தி வந்தது.தற்போது அமெரிக்காவின் ஐ.பி.எம்., அங்கு 5,000 பேரை வேலையிலிருந்து நீக்கி விட்டு அந்த வேலைகளை இந்தியாவிற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது என்ற செய்தியும் வருகிறது. வரட்டும்... நல்ல செய்திகள்.எச்.டி.எப்.சி., தனது புதிய வீட்டுக் கடன்களுக்கு 0.5 சதவீதம் வட்டிகளை குறைத்துள் ளது. நிரந்தர வட்டியில் வீட்டுக் கடன்கள் முன் வாங்கியவர்களுக்கு வட்டிக் குறைப்பு என்பது இருக்காது. ஆனால், சமீபத்தில் வட்டிகள் மிகவும் குறைந்து வருவதால், எச்.டி.எப்.சி., தனது பழைய வாடிக்கையாளர்களுக்கும் 0.5 சதவீதம் வட்டிக் குறைப்பு செய்துள்ளது.ஆனால், தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளின் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் மற்ற நிறுவனங்களை விட இன்னும் கவர்ச்சியாகவே இருக்கின்றன.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்? : காளைகளின் பிடியில் பங்குச் சந்தை இருக்கிறது என்றும் சொல்ல முடியாது. கரடிகளின் பின் இல்லாமல் இருப்பதை விட இது எவ்வளவோ மேலானது. சந்தைக்கு வந்து பார்ப்போம், சிறிது ரிஸ்க் எடுக்கலாம் என்ற எண்ணங்கள் வரத் துவங்கியிருக்கின்றன.இந்த எண்ணம் சிறிய முதலீட்டாளர்களிடம் மட்டும் இல்லை, எல்லோரிடமும் வந்திருக்கிறது.இது சந்தையை சிறிது மேலேயே நிறுத்தும். கடந்த 20 நாட்களாக உலகளவில் சந்தைகள் எல்லாமே மேலே தான் இருக்கின்றன.கடந்த 20 நாட்களில் ரஷ்ய சந்தைகள் அதிகபட்சமாக 29 சதவீதம் மேலே சென்றுள்ளன. அதையடுத்து, ஹாங்காங் 24 சதவீதம் மேலே சென்றுள்ளது. சந்தை மேலேயே இருப்பதால் புதிய வெளியீடுகளையும் எதிர்பார்க்கலாம்.
நன்றி : தினமலர்


வட்டி வீதம் மேலும் குறையும் : மன்மோகன் சிங் தகவல்

நாட்டின் நடப்பு பொருளாதார நிலை குறித்து முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, வட்டி வீதம் மேலும் குறையும் என்றும், நிறுவனங்களின் கடன் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் உறுதி அளித்தார்.
சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜி-20 நாடுகளின் மாநாடு லண்டனில் அடுத்த மாதம் 2ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. மாநாட்டில் இந்தியா சார்பில் என்ன விஷயங்களை எடுத்து வைக்கலாம் என்பது குறித்தும், தற்போதைய பொருளாதார நிலை குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும் முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். தொழிலதிபர்கள் ரத்தன் டாடா, குமார் பிர்லா, கே.பி. காமத், சசிருயா, சாஜன் ஜிண்டால், ஆர்.பி. கோயங்கா உள்ளிட்டோருடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறுகையில், 'சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழ்நிலை உள்ளது. இந்த ஆண்டிலும், அடுத்த ஆண்டிலும் கடும் சவாலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதை தடுக்கும் வகையில், மேலும் சில பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டியது அவசியம்' என்றார்.
ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிலதிபர் ஹர்ஷ் பட்டி சிங்கானியா கூறுகையில், 'கடன்களுக் கான வட்டி வீதம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி ரிசர்வ் வங்கியிடம்வலியுறுத்தியுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்' என்றார்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், 'பணவீக்கம் மிகவும் குறைந்துள்ளதால், வட்டி வீதம் மேலும் குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க நிறுவனங்களின் கடன் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். உற்பத்தி தேவைகளுக்காக உள்நாட்டுக் கடன் வசதி அதிகரிக்கப்படும்.'ஸ்டீல் மற்றும் சிமென்ட் போன்ற துறைகளில் முன்னேற்றம் காணப்படுகிறது. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவைகள் கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது. விவசாயத்துறையின் செயல்பாடும் நம்பிக்கை தரும் வகையில் உள்ளது. 2007-08ம் ஆண்டை விட நடப்பு நிதியாண்டில், பொதுத்துறை வங்கிகள் அதிக அளவில் கடன் வழங்கியுள்ளன' என்றார்.
நன்றி : தினமலர்


Saturday, March 28, 2009

கியர் வண்டிகளை இனிமேல் தயாரிப்பதில்லை : ஹோண்டா இந்தியா முடிவு

இனிமேல் கியர் உள்ள இரு சக்கர வாகனங்களை இந்தியாவில் தயாரிப்பது இல்லை என்று ஹோண்டா இந்தியா முடிவு செய்திருக்கிறது. கியர் இல்லாத இரு சக்கர வாகனங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டுவதால் அது, அதன் 150 சிசி மாடல் ' எடர்னோ ' வை சந்தையில் இருந்து வெளியேற்ற முடிவு செய்திருக்கிறது. ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்தின் 100 சதவீத இந்திய நிறுவனமான ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா, நேற்று ' ஆக்டிவா ' என்ற புதிய கியர் இல்லாத ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதன் விலை ரூ.39,800 ( எக்ஸ் ஷோரூம் - டில்லி ). நாங்கள் இனிமேல் ' எடர்னோ ' வை தயாரிக்கப்போவதில்லை. ஏனென்றால் இனிமேல் கியர் உள்ள இரு சக்கர வாகனங்களை தயாரிக்கப்போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம் என்றார் ஹோண்டா இந்தியாவின் தலைவர் மற்றும் சி.இ.ஓ.,ஷிஞ்சி அயோமா. இனிமேல் நாங்கள் கியர் இல்லாத ஸ்கூட்டர்கள் தயாரிப்பில்தான் கவனம் செலுத்த இருக்கிறோம். எனவே இப்போது அறிமுகப்படுத்தியிருக்கும் ஆக்டிவா மூலம் இரு சக்கர வாகன விற்பனையில் 18 சதவீத வளர்ச்சியை 2009 - 10 ல் எதிர்பார்க்கிறோம் என்றார். எங்களது எடர்னோ, வருடத்திற்கு 40 ஆயிரம் மட்டுமே விற்பனையானது. இது மிக மிக குறைந்த விற்பனை. எனவே தான் அதை சந்தையில் இருந்து வெளியேற்றுகிறோம் என்றார் அயோமா. எடர்னோவை விட, இப்போது அறிமுகப்படுத்தியிருக்கும் ஆக்டிவா 15 சதவீதம் அதிக மைலேஜ் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது என்றார் அவர்.
நன்றி : தினமலர்


டாடா குழுமத்தின் முக்கிய மூன்று அதிகாரிகள் விரைவில் மாற்றம்

டாடா குழுமத்தை சேர்ந்த டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்களில் மேலாண் இயக்குனர்கள் விரைவில் மாற்றப்பட இருக்கிறார்கள். சமீப காலமாக இந்த மூன்று பேரும் தான் டாடா குழுமத்தின் முக்கிய பெரிய அதிகாரிகளாக பேசப்படுகிறார்கள். ஆனால் இந்த மூன்று பேருமே விரைவில் அவர்களுக்கு பதிலாக வரப்போகிறவர் யார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். டாடா குழுமத்தில் இந்த மூன்றும்தான் முக்கிய நிறுவனங்கள் . டாடா குழுமத்தின் மொத்த வரவு செலவில் 80 சதவீத வரவு இந்த மூன்று நிறுவனங்களில்தான் நடக்கிறது. இதிலிருந்து முதலில் வெளியேற இருப்பது டாடா மோட்டார்ஸின் மேலாண் இயக்குநர் ரவி காந்த் தான். வரும் ஜூன் மாதம் அவர் ஓய்வு பெறுகிறார். டாடா குழுமத்தில் சட்டதிட்டப்படி, எக்ஸிகூடிவ் டைரக்டர்கள் கண்டிப்பாக 65 வயதில் ஓய்வு பெற்று விட வேண்டும். இவர் தவிர டாடா ஸ்டீல் மேலாண் இயக்குனர் முத்துராமன் செப்டம்பர் மாதத்திலும், டி.சி.எஸ்.சின் மேலாண் இயக்னர் ராமதுரை அக்டோபர் மாதத்திலும் ஓய்வு பெறுகின்றனர். முக்கியமான இந்த மூன்று பேரும் ஓய்வு பெற்றாலும் டாடாவில் இருந்து முழவதுமாக வெளியேறிவிட மாட்டார்கள். அங்குள்ள ' நான்- எக்ஸிகூடிவ் 'களுக்கு ஒய்வு பெரும் வயது 75 தான் என்பதால், இவர்கள் மூன்று பேருமே அதே நிறுவனத்தில் ' நான் - எக்ஸிகூடிவ் ' ஆக பணியாற்றுவார்கள் என்று சொல்லப்படுகிறது. ' நான் - எக்ஸிகூடிவ் ' களுக்கான ஓய்வு பெறும் வயது கடந்த சில வருடங்களுக்கு முன் தான் 70 இலிருந்து 75 ஆக உயர்த்தப்பட்டு, ரத்தன் டாடா தொடர்ந்து சேர்மனாக இருந்து வருகிறார்.
நன்றி : தினமலர்


எஸ்.பி.ஐ.,யில் ரூ.3,000 கோடி கிரிடிட் லிமிட் கேட்கிறது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ்

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் தனியார் விமான கம்பெனியான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் ரூ.1,500 கோடியில் இருந்து ரூ.3,000 கோடி வரை கிரிடிட் லிமிட் ( அதிகபட்டமாக வாங்கிக்கொள்ள அனுமதிக்கப்படும் கடன் ) கொடுக்கும் படி கேட்டிருக்கிறது. கிங்ஃபிஷர் நிறுவனத்தின் நிர்வாக செலவுக்கு பணம் தேவைப்படுவதால் கடன் தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது. இது குறித்து கிங்ஃபிஷரின் சேர்மன் விஜய் மல்லையா, கடந்த செவ்வாய் அன்று மும்பையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளதாகவும், அதற்காக , கம்பெனியின் வளர்ச்சி திட்டம் பற்றிய விபரங்கள் மற்றும் கடன் தேவைக்கான காரணம் போன்றவற்றை கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கடன் பெற்றுக்கொள்ளும் திட்டத்திற்கு ஸ்டேட் பேங்க் அதிகாரிகளும் சாதகமான பதிலையே அளித்திருப்பதாகவும், எவ்வளவு காலத்திற்கு கடன் அளிக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் இப்போது கடும் நிதி சிக்கலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பல நிறுவனங்களுக்கு அது பணம் கொடுக்க வேண்டியிருப்பதாகவும் ஜனவரி மாதத்தில் அது, ஏர்போர்ட் அத்தாரிடி ஆஃப் இந்தியாவுக்கு, பேங்க் கியாõரன்டி மற்றும் போஸ்ட் டேட்டட் செக் கைதான் கொடுத்ததாகவும் செல்லப்படுகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் மற்ற நிறுவனங்களைப்போலவே கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸூம் கடுமையாக நஷ்டமடைந்திருப்பதாக சொல்கிறார்கள். இந்த நிதி ஆண்டில் அது அடைந்திருக்கும் நஷ்டத்திற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதாலும், சர்வதேச விமான சேவைக்கான கட்டணம் அதிகமாக இருப்பதாலும், விமானங்களுக்கான குத்ததை பணம் அதிகமாக இருப்பதாலும், வட்டி உயர்ந்திருப்பதாலும் நஷ்டம் அதிகரிக்கிறது என்கிறது கிங்ஃபிஷர் நிறுவனம்.
நன்றி : தினமலர்


பாகிஸ்தானுக்கு உலக வங்கி 500 மில்லியன் டாலர் வட்டியில்லா கடன்

சீரழிந்து போயிருக்கும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக, உலக வங்கி, அந்நாட்டிற்கு 500 மில்லியன் டாலர் ( சுமார் ரூ.2,500 கோடி ) வட்டியில்லாத கடன் வழங்க ஒத்துக்கொண்டிருக்கிறது. இந்த கடன் மூலம் அந்நாடு மீண்டும் பொருளாதாரத்தில் மேம்பட்ட நாடாக உயரும் என்று உலக வங்கி தெரிவித்திருக்கிறது. கடந்த சில காலமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரச்னை காரணமாக பாகிஸ்தானின் நுண்பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. உள்நாட்டில் நிலவும் மோசமான அரசியல் நிகழ்வுகள் காரணமாக, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அந்நாடு இழந்து விட்டது என்றும், அதனால் உள்நாட்டு நுண்பொருளாதாரம் பெரிதாக பாதிக்கப் பட்டிருப்பதாக அந்த வங்கி தெரிவித்திருக்கிறது. மேலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யில் விலை ஏற்றத்தால் பாகிஸ்தானில் உணவுப்பொருட்களின் விலையும் உயர்ந்து என்றும், அதன் காரணமாக அங்கு பணவீக்கமும் அதிகரித்து விட்டது என்கிறார்கள். மேலும் சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்த நிலை காரணமாக, பாகிஸ்தானில் தயாராகும் பொருட்களுக்கான தேவை குறைந்து அதனால் அந்நாட்டு ஏற்றுமதியும் குறைந்து விட்டது என்கிறார்கள். இது போன்ற காரணங்களால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் அந்நாட்டு பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக, உலக வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் அசோசியேஷன் ( ஐடிஏ ) என்ற கடனளிக்கும் நிறுவனம், பாகிஸ்தானுக்கு 500 மில்லியன் டாலர் ( சுமார் 2,500 கோடி ரூபாய் ) வட்டியில்லா கடன் கொடுக்கிறது. வட்டி கிடையாது என்றாலும் இதற்காக சர்வீஸ் சார்ஜ் ஆக 0.75 சதவீதம் மட்டும் வசூலிக்கப்படும். 35 வருடங்களில் இந்த கடனை திருப்பி கொடுத்தால் போதுமானது.
நன்றி : தினமலர்


சத்யத்தை வாங்கும் திட்டத்தில் இருந்து விலகியது ஸ்பைஸ் குரூப்

நிதி மோசடியில் சிக்கி சீரழிந்து போயிருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸின் 51 சதவீத பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்து நிறைய நிறுவனங்கள் விண்ணப்பம் செய்திருந்தன. ஆனால் அதிலிருந்து சில நிறுவனங்கள் பின்னர் வேண்டாம் என்று அதிலிருந்து விலகிக்கொண்டன. இப்போது பி.கே.மோடிக்கு சொந்தமான ஸ்பைஸ் குரூப்பும் வேண்டாம் என்று விலகிக்கொண்டுள்ளது. இப்போதைக்கு நாங்கள் அதை வாங்க விரும்பவில்லை என்று ஸ்பைஸ் குரூப்பின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். கம்பெனி சட்ட வாரியத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, பங்குகளை விற்கும் நடவடிக்கைகள் வெளிப்படையாக ( டிரான்ஸ்பரன்ட் ஆக ) நடப்பதாக இருந்தால், மீண்டும் வாங்கும் முன்வருவோம் என்றார் ஸ்பைஸ் இன்னோவேட்டிவ் டெக்னாலஜிஸின் எக்ஸிகூட்டிவ் இயக்குனர் பிரீத்தி மல்ஹோத்ரா. இந்த விற்பனை, கம்பெனி சட்ட வாரியத்தின் சட்டதிட்டங்களுக்கு உள்பட்டு நடப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. எனவே அதன்படி நடந்தால் மட்டுமே நாங்கள் மீண்டும் அதை வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றார் அவர். மேலும் இந்த விற்பனையை அவர்கள் ( மத்திய அரசு நியமித்த சத்யத்தின் போர்டு ), வெளிப்படையான ஏலம் மூலம் நடத்தியிருக்கலாம். சர்வதேச அளவில் வெளிப்படையான ஏலம் மூலம் தான் கம்பெனிகள் விற்கப்படுகின்றன. கோரஸ் கம்பெனியை டாடா, வெளிப்படையான ஏலம் மூலம் தான் வாங்கியது. அவ்வாறு விற்கும்போது நிறைய விலை கிடைக்கலாம். சந்தேகங்களும் தீரும். ஆனால் சத்யத்தில் 51 சதவீத பங்குகள் மூடப்பட்ட ஏலம் மூலம் நடக்கிறது. எனவே இதில் நாங்கள் ஆர்வம் கொள்ளவில்லை என்றார் அவர்.
நன்றி : தினமலர்


மாதம் 6,250 ரூபாய் சம்பளம் பெறுபவரா? : நானோ வருகையால் வங்கி கடன் உண்டு

மாதம் 6,250க்கு மேல் சம் பளம் பெறுபவரா நீங்கள்? அப்படியானால், கார் வங்குவதற்கு உங்களுக்கு வங்கியில் கடன் கிடைக்கும். டாடாவின் ஒரு லட்ச ரூபாய் நானோ கார் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் வாங்கி பயன்படுத்தக் கூடிய வகையிலான கார் என தொழில் அதிபர் ரத்தன் டாடா இதை அறிவித்துள்ளார்.
இந்நிலையில், குறைந்த வருவாய் உடையவர்கள் இந்த காரை வாங்குவதற்கு வங்கிகளில் கடன் வசதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் தற்போது கார் கடன் வாங்க வேண்டுமெனில், ஒருவரது ஆண்டு வருமானம் ஒரு லட்ச ரூபாயாக இருக்க வேண்டும். சொந்தமாக தொழில் செய்பவராக இருந்தாலும் அவரது ஆண்டு வருமானமும் ஒரு லட்ச ரூபாயாக இருக்க வேண் டும். தற்போது நானோ கார் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதால், குறைந்த அளவு வருவாய் பெறுவோரும், அதை வாங்குவதற்கு வகை செய்யும் விதமாக கடன் பெறுவதற்கான வருமானத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரி ஒருவர் கூறுகையில்,'ஒருவரது ஆண்டு வருமானம் ரூ.75 ஆயிரமாக இருந்தால், அவருக்கு கார் வாங்குவதற்கு கடன் வசதி அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மாதம் 6,250 ரூபாய் சம்பளம் பெறுபவரும் இனிமேல் காருக்கான கடன் வசதியை பெற முடியும். அதே நேரத்தில், சொந்தமாக தொழில் செய்பவர், கார் கடன் பெற வேண்டுமெனில் அவரது ஆண்டு வருமானம் ஒரு லட்ச ரூபாயாக இருக்க வேண்டும்'என்றார்.
இதுகுறித்து வங்கி வட்டாரங்கள் கூறியதாவது: இரு சக்கர வாகனங்களை வாங்குவோரை, காருக்கு மாறச் செய்யும் வகையில் தான் நானோ கார் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்ச ரூபாய் நானோ காரின் 'எகானமி' மாடலை வாங்குவதற்கு 2,999 ரூபாய் முன்பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். நடுத்தர ரக காருக்கு 3,499 ரூபாயும், உயர் ரக காருக்கு 3,999ம் முன்பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். முன்பதிவு செய்த வாடிக்கையாளருக்கு நானோ கார் ஒதுக்கீடு செய்யப்பட்டால், முன்பதிவு கட்டணம், வங்கியின் நானோ கார் கடன் வசதி திட்டத்துக்கு மாற்றப்படும்.அதிகபட்சமாக ஏழு ஆண்டு காலத்திற்கு 11.75 சதவீதத்தில் இருந்து 12 சதவீத வட்டி வரை கடன் வழங்கப்படும். இவ்வாறு வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி : தினமலர்



Friday, March 27, 2009

சிறிது முன்னேற்றத்துடன் முடிந்தது பங்கு சந்தை

50 வர்த்தக நாட்களுக்குப்பின் நேற்று மீண்டும் 10,000 புள்ளிகளை தொட்டிருந்த சென்செக்ஸ், இன்றும் அதை தக்க வைத்துக்கொண்டது. அவ்வளவு தான். மற்றபடி இன்று பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. இன்று நாள் முழுவதும் பங்கு சந்தை குறியீட்டு எண்களான சென்செக்ஸ் மற்றும் நிப்டி, ஏறியும் இறங்கியும்தான் இருந்தது. இருந்தாலும் கடைசியாக வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 45.39 புள்ளிகள் ( 0.45 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 10,048.49 புள்ளிகளில் முடிவு பெற்றது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 26.40 புள்ளிகள் ( 0.86 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 3,108.65 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தின் போது மெட்டல், பார்மா, பேங்க், ஆட்டோ, ரியல்எஸ்டேட், கேப்பிட்டல் குட்ஸ் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஹிண்டல்கோ, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்திருந்தன. ஹெச்டிஎஃப்சி, இன்போசிஸ், பெல், ரிலையன்ஸ், மாருதி ஆகிய நிறுவன பங்குகள் விலை குறைந்திருந்தன.ரூ.68,489 கோடிக்கு இன்று வர்த்தகம் நடந்திருக்கிறது. பொதுவாக, சர்வதேச அளவில் பங்கு சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தொடர்ந்து இந்திய பங்கு சந்தைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 12 சதவீதமும் நிப்டி 10.5 சதவீதமும் உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


பென்ஸ், பி.எம்.டபிள்யூ, வி.டபிள்யூ கார் வேண்டுமா ? தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

உங்களுக்கு உலக புகழ்பெற்ற மெர்சிடஸ் பென்ஸ்,பி.எம்.டபிள்யூ, அல்லது வி.டபிள்யூ., கார் வாங்க விருப்பமா ? ஆனால் அதை வாங்கும் அளவுக்கு வசதி இல்லையா ?.கொஞ்சம் பணம் குறைகிறதா ? அப்படியானால் இப்போது அதை தள்ளுபடி விலையில் வாங்க ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. ரூ.ஒரு லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சம் வரை, மாடலுக்கு தகுந்த படி இப்போது அவைகள் தள்ளுபடி விலையில் கிடைக்க இருக்கின்றன. டைம்லர் பென்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மெர்சிடஸ் பென்ஸின் இ - கிளாஸ் மாடல் கார் ரூ.2.5 லட்சம் கேஷ் டிஸ்கவுன்ட் விலையில் கொடுக்கப்பட இருக்கிறது. அது தவிர, வட்டி இல்லாத எளிய தவணை முறையிலும் பென்ஸ் காரை வாங்கும் திட்டமும் கொண்டு வரப்படுகிறது. பொதுவாக, 5 மாடல்களில் வெளிவந்திருக்கும் இ-கிளாஸ் மெர்சிடஸ் பென்ஸ் கார்கள் ரூ.38 லட்சத்தில் இருந்து ரூ.42 லட்சம் வரை ( எக்ஸ்- ஷோரூம் - மும்பை ) விலையில் விற்கப்படுகின்றன. சந்தையில் இருந்து வெளியேறி விட்ட ( அவுட் ஆஃப் மாடல் ) இந்த மாடலில், விற்காமல் டீலர்களிடம தேங்கி இருக்கும் கார்களை தள்ளுபடி கொடுத்தும், எளிய தவணை முறையில் வட்டி இல்லாத கடனுக்கு கொடுத்தும் காலி செய்து விட பென்ஸ் கார் நிறுவனம் முன்வந்திருக்கிறது. இ-கிளாஸின் அடுத்த மாடல் கார் அடுத்த வருட ஆரம்பத்தில் வெளிவர இருக்கிறது. அவைகளின் விலை, ஏற்கனவே வெளிவந்த இ-கிளாஸ் கார்களின் விலையை விட அதிகமாக இருக்கும். எனவே பழைய மாடல் கார்களை தள்ளிவிட முடிவு செய்திருக்கிறார்கள். அதேபோல இன்னொரு பிரபல ஜெர்மன் சொகுசு காரான பி.எம்.டபிள்யூ.,வும், நம்ப முடியாதபடி, ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை விலை குறைத்து அவர்களது மூன்று மாடல்களை விற்கிறார்கள். இந்த வருடம் ஜனவரியில்தான் அவைகள் அறிமுகப்படுத்தப் பட்டிருந்தாலும், அதற்குள் சந்தையை விட்டு வெளியே போய் விட்டதால், அவைகளும் தள்ளுபடி விலையில் தள்ளி விடப்படுகின்றன. இப்போது அவைகளின் விற்பனை விலை ரூ.32.20 லட்சமாக இருக்கிறது. ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் கம்பெனியான ஜெர்மனியின் போக்ஸ்வாகன் காõர்களும் ரூ.80 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி கொடுத்து அதன் ' பசாட் ' மாடல் கார்களை விற்க முன் வந்திருக்கிறது. அதிக விலையில் இருக்கும் இந்த மாதிரி சொகுசு கார்கள் எல்லாம் இப்படி தள்ளுபடி விலையில் கொடுக்கப்படுவது குறித்து ஒரு டீலர் தெரிவிக்கையில், இந்த மூன்று நிறுவனங்களும் தள்ளுபடி கொடுத்து தள்ளி விட இருக்கும் மாடல்கள் மிக குறைந்த அளவே இந்தியா முழுவதும் உள்ள டீலர்களிடம் விற்காமல் தேங்கி இருக்கின்றன என்றார். இருந்தாலும் அதிக விலையுள்ள இம்மாதிரி கார்களை வாங்க விரும்புபவர்களுக்கு இது ஒரு இனிப்பான செய்திதான்.
நன்றி : தினமலர்


200 ஊழியர்களை வேலைநீக்கம் செய்கிறது கூகிள்

கூகிள் நிறுவனம், அதன் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் வேலைபார்ப்பவர்களில் 200 பேரை வேலையில் இருந்து நீக்குகிறது. அந்த துறையில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டிருப்ப தாகவும், அதனையடுத்து இப்போது ஆட்குறைப்பு செய்யப்படுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஜனவரி மாதத்தில் அதன் விளம்பர வருமானம் பெருமளவு குறைந்து போனதை அடுத்து, செலவை குறைக்கும் நடவடிக்கையில் அது ஈடுபட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஜனவரி மாதத்தில் 100 பேரை வேலையில் இருந்து நீக்கியது. பிப்ரவரியில் 40 பேரை நீக்கியது. கம்பெனியின் வளர்ச்சி திட்டங்களுக்காக அதிக அளவில் முதலீடு செய்து, எதிர்பார்த்த வளர்ச்சியை அடைய முடியவில்லை. எனவே அதிலிருந்து விலகி விடுவதுதான் நல்லது என்றார் கூகிளின் சீனியர் வைஸ் பிரசிடென்ட் ( குளோபல் சேல்ஸ் அண்ட் பிசினஸ் டெவலப்மென்ட் ) ஓமிட் கோர்தஸ்தானி. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் கூகிள் நிறுவனத்தில் 21,000 பேர் வேலை செய்கிறார்கள். அமெரிக்காவில் நம்பர் ஒன் இன்டர்நெட் சர்ச் இஞ்சின் கூகிள்தான். அதற்கு அங்கு 63 சதவீத மார்க்கெட் ஷேர் இருக்கிறது. 2008 ம் ஆண்டு கூகிளுக்கு கிடைத்த மொத்த வருமானம் 21.8 பில்லியன் டாலரில் 97 சதவீத வருமானம் விளம்பரம் மூலமாக வந்ததுதான்.
நன்றி : தினமலர்


அமெரிக்காவில் 5,000 ஊழியர்களை ஐ.பி.எம். ஆட்குறைப்பு செய்வதால் இந்தியாவுக்கு லாபம் ?

பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம்., அமெரிக்காவில் பணியாற்றும் அதன் ஊழியர்கள் எண்ணிக்கையில் 5,000 பேரை ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டிருக்கிறது. அவர்கள் செய்து வந்த வேலைகளில் பெரும்பாலான வேலைகள் இந்தியாவுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் ஆட்ளை குறைக்கும் ஐ.பி.எம்.,நிறுவனம், அதன் இந்தியா மற்றும் வெளி நாடுகளில் இருக்கும் அதன் அலுவலகங்களில் ஊழியர்கள் எண்ணிக்கையை கூட்டிக்கொண்டிருக்கிறது. 2006ம் வருஷத்தில், ஐ.பி.எம்., இன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையான 4 லட்சத்தில், 65 சதவீதத்தினர் வெளிநாடுகளில் வேலை பார்த்து வந்தனர். அது இந்த வருடத்தில் 71 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.பிராக்டர் அண்ட் கேம்பிள் போன்ற வாடிக்கையாளர்களுக்கு ஐ.பி.எம்., செய்து கொடுத்து வந்த கார்பரேட் டேட்டா சென்டர் மற்றும் ஹியூமன் ரிசோர்சஸ் வேலைகள் நடந்து வந்த துறைகளில் தான் இப்போது ஆள் குறைப்பு செய்யப்படுகிறது. சில வாடிக்கையாளர்கள் கொடுத்திருந்த ஆர்டர் முடிந்து விட்டதால் ஆட்குறைப்பு செய்ய வேண்டியதிருக்கிறது என்று ஐ.பி.எம்., நிறுவனம், அதன் ஊழியர்களிடம் சொன்னாலும், பெரும்பாலான வேலைகள் இந்தியா போன்ற நாடுகளுக்கு செல்வதால்தால் இங்கு ஆட்குறைப்பு செய்யப்படுகிறது என்கிறார்கள் அமெரிக்க ஊழியர்கள்.
நன்றி : தினமலர்


ரஷ்ய நிறுவனத்துடன் புது மொபைல் சேவை

ரஷ்ய பொதுத்துறை நிறுவனமும், இந்திய நிறுவனமும் இணைந்து, தமிழகத்தில் எம்.டி.எஸ்., எனும் புதிய மொபைல் சேவையை துவக்கியுள்ளன. இது குறித்து, சிஸ்டெமா ஷ்யாம் டெலி சர்வீசஸ் தலைமை செயல் அதிகாரி சீனிராவ் சாரிபள்ளி மற்றும் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது: ரஷ்யாவின் சிஸ்டெமா பொதுத்துறை நிறுவனமும், இந்தியாவின் ஷ்யாம் குழுமமும் இணைந்து சிஸ்டெமா ஷ்யாம் டெலிசர்வீசஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றன. இந்த நிறுவனம் தமிழகத்தில் எம்.டி.எஸ்., என்ற புதிய மொபைல் போன் சேவையை துவங்கியுள்ளது. சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் இந்த சேவையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரு மாதத்திற்குள் 580 நகரங்களில் சேவையை துவங்கவுள்ளோம். தற்போது 'பிரிபெய்டு' முறையில் சிம்கார்டு சேவையை அறிமுகம் செய்துள்ளோம். அறிமுகச் சலுகையாக 499 ரூபாய் செலுத்தி 'எம் கார்டு' திட்டத்தில் பிரிபெய்டு கார்டு பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும் பத்து லட்சம் நிமிடங்கள் இலவசமாக பேச முடியும்.
இதன்படி, எம்.டி.எஸ்., மொபைல் இணைப்பிலிருந்து, மற்றொரு எம்.டி.எஸ்., இணைப்பிற்கு செய்யும் அழைப்புகளுக்கு நாள் ஒன்றுக்கு 150 நிமிடங்கள் இலவசமாக பேசிக் கொள்ளலாம். நாட்டில் உள்ள அனைத்து நெட்வொர்கிற்கு செல்லும் எஸ்.எம்.எஸ்.,களுக்கு நாளொன்றுக்கு 10 எஸ்.எம்.எஸ்.,களை இலவசமாக அனுப்பிக் கொள்ளலாம். 'எம்சேவர் 99' திட்டத்தில் சேர்ந்தால் எம்.டி.எஸ்., சேவையிலிருந்து எம்.டி.எஸ்., மொபைல் சேவைக்கு செய்யும் அனைத்து லோக்கல் கால்களும் இலவசமாகும். 'எம்சேவர் 30' திட்டத்தில் இணைப்பு பெற்றால் முதல் 2 எஸ்.எம்.எஸ்.,களுக்கு பின் செய்யும் அனைத்து எஸ்.எம்.எஸ்.,களும் இலவசம். எம்.டி.எஸ்., மொபைல் சேவை எண்கள் 91500 என்ற சீரியலில் இருந்து துவங்கும். ஒரு மொபைல் சேவையில் இருந்து மற்றொரு மொபைல் சேவைக்கு மாறும் போது பழைய எண்ணையே தொடரும் வகையில் அரசு மாற்றங்களை கொண்டுவரவுள்ளது. முதல்கட்டமாக நான்கு மெட்ரோ நகரங்களில் இந்தச் சேவை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரி சீனிராவ் கூறினார்.

நன்றி : தினமலர்


பொருள் விலை உயர்வு: பணவீக்கமோ சரிவு

பணவீக்கம் இதுவரை இல்லாத வகையில் மார்ச் இரண்டாவது வாரத்தில், 0.27 சதவீதமாக குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தும் கூட இந்த நிலை உருவாகியுள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 0.44 சதவீதம். இதை விட 0.17 சதவீதம் குறைந் துள்ளது. பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருவதால், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பணசப்ளையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறும் போது, 'இன்னும் கூட அடுத்த சில வாரங்களுக்கு பணவீக்கம் குறையலாம். அதனால் பணச் சுருக்க பாதிப்பு வராது. பொதுவாக உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு இந்த ஆண்டின் கடைசியில் நீங்கும்' என்று கூறியுள்ளார்.
நன்றி : தினமலர்


ஏர் இந்தியாவின் கோடை கால சிறப்பு கட்டணம் அறிவிப்பு

ஏர் இந்தியா நிறுவனம், இன்று முதல் அமலுக்கு வரும் வகையிலான கோடை கால சிறப்பு கட்டணத்தை அறிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் அறிக்கை: நாட்டில் உள்ள 148 இடங்களுக்கான கோடை கால சிறப்பு கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. மும்பை-கோவா, சென்னை-ஐதராபாத், மும்பை-ஐதராபாத் நகரங்களுக்கு செல்ல 1,891 ரூபாய்; மும்பை-கோழிக்கோடு இடையே செல்ல 2,276 ரூபாய்; மும்பையில் இருந்து சென்னை, கொச்சி, திருவனந்தபுரம், டில்லிக்கும்; டில்லியில் இருந்து கோல் கட்டா, ஐதராபாத்துக்கும் பயணம் செய்ய 2,611 ரூபாய்; சென்னையில் இருந்து கோல்கட்டா, டில்லிக்கும்; டில்லியில் இருந்து திருவனந்தபுரத்திற்கும் 2,901 ரூபாய். இக்கட்டணம் பயணிகள் சேவை கட்டணம் உள்ளடக்கியது. அறிவிக்கப்பட்டுள்ள கோடை கால சிறப்பு கட்டணத்தை பயன்படுத்த விரும்புபவர்கள் டிக்கெட்டுகளை 30 நாட்களுக்கு முன்பாக பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த டிக்கெட் கட்டணம் திரும்ப பெற முடியாதது. வரும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


நானோ கார் வருகையால் மாருதி விலை குறையாது

'டாடாவின் நானோ கார் அறிமுகத்தால், 800 சி.சி., கார்கள் விற்பனை சிறிது குறையலாம். நானோ காருடனான போட்டியை சமாளிக்க ஆல்டோ மற்றும் எம் 800 போன்ற கார்களின் விலையை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை' என, மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனம் நேற்று தெரிவித்தது. இது குறித்து மாருதி சுசூகி கம்பெனி தலைவர் ஆர்.சி.பார்கவா நிருபர்களிடம் கூறியதாவது: நானோ கார் அறிமுகத்தால், 800 சி.சி., கார்கள் விற்பனையில் சில பாதிப்புகள் ஏற்படலாம். சந்தையை விரிவுப்படுத்த, நானோ கார் உதவும். எனினும் குறைந்த விலையிலான வாகனங்கள் தயாரிக்கும் திட்டம் எதுவும் எங்கள் கம்பெனியில் இல்லை. நடப்பு காலாண்டில் கார்கள் விற்பனை நன்றாக உள்ளது. ஆனால், தேர்தல் விவகாரம், புதிய அரசின் கொள்கைகள், வட்டி வீதங்கள் மற்றும் பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணிகளை பொறுத்தே விற்பனை அமையும். இவ்வாறு ஆர்.சி.பார்கவா கூறினார்.

நன்றி : தினமலர்



Thursday, March 26, 2009

விற்பனைக்கு வருகிறது ' வோல்வோ ' கார் கம்பெனி

சுவீடன் நாட்டை சேர்ந்த வோல்வோ கார் கம்பெனி விற்பனைக்கு வருகிறது. இப்போது அமெரிக்காவின் போர்டு மோட்டார் கம்பெனிக்கு சொந்தமாக இருக்கும் ' வோல்வோ ' வை விற்க, போர்டு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. வோல்வோ வை வாங்க விருப்பம் தெரிவித்திருக்கும் கம்பெனிகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக போர்டு கம்பெனியும் உறுதி செய்திருக்கிறது. இருந்தாலும் எந்தெந்த கம்பெனிகள் வாங்க விருப்பம் தெரிவித்திருக்கின்றன என்பதை போர்டு நிர்வாகம் தெரிவிக்க மறுத்து விட்டது. வோல்வோ கம்பெனியில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நஷ்டத்தை தாங்கிக்கொள்ள முடியாத போர்டு, அதனை விற்று விட முன் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. போர்டு கம்பெனியிடம் இருந்த ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார் கம்பெனிகளில் நஷ்டம் வருகிறது என்று தான் கடந்த 2008ல் 2.3 பில்லியன் டாலருக்கு அவைகளை டாடா மோட்டார்ஸூக்கு விற்றது. இப்போது வோல்வோ கம்பெனியையும் விற்க முன்வந்திருக்கிறது. ஸ்வீடனில் வெளியான தகவலின்படி, வோல்வோ வை வாங்க சீன கார் கம்பெனிகள் பல முன்வந்திருப்பதாக தெரிவிக்கிறது. சீனாவை சேர்ந்த செர்ரி ஆட்டோமொபைல், டொங்öஃபங் மோட்டார் குரூப், சோங்க்யுங் சாங்கன் ஆட்டோமொபைல் ஆகியவை ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. வோல்வோவை வாங்க ஆர்வம் தெரிவித்திருப்பவர்களிடம் போர்டு நிறுவனம், வோல்வோவின் எதிர்காலம் குறித்து விளக்கி வருவதாக சொல்லப்படுகிறது. 2008 கடைசி மூன்று மாதங்களில் மட்டும் வோல்வோ கம்பெனியில் 736 மில்லியன் டாலர் ( சுமார் ரூ.3,680 கோடி ) நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. 2008 ம் வருடம்,மொத்தமாக போர்டு கம்பெனி 14.6 பில்லியன் டாலர் ( சுமார் ரூ.73,000 கோடி ) நஷ்டம் அடைந்திருக்கிறது. கடந்த வருட கோடை காலத்தில் இருந்து நிலவி வரும் கடும் பொருளாதார மந்த நிலை காரணமாக, உலக அளவில் எல்லா கார் கம்பெனிகளிலுமே விற்பனை குறைந்திருக்கிறது. அதே போல போர்டு மற்றும் வோல்வோ நிறுவனங்களிலும் விற்பனை குறைந்திருக்கிறது. பெரும் நஷ்டமடைந்த கிரைஸ்லர் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்கள் அமெரிக்க அரசிடம் இருந்து மொத்தமாக 17.4 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ.87,000 கோடி ) உதவியாக பெற்றிருக்கின்றன.இன்னும்கூட 21.6 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ.1,08,000 கோடி ) உதவியாக கேட்டிருக்கின்றன. ஆனால் போர்டு நிறுவனமோ இது வரை அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியையும் கேட்டவில்லை. ஆனால் வோல்வோ ஒரு ஸ்வீடன் நிறுவனமாக இருப்பதால், அந்நாட்டு அரசு அதற்கு 2.3 பில்லியன் பவுண்ட்களை ( சுமார் ரூ.16,800 கோடி ) உதவித்தொகையாக கொடுத்திருக்கிறது. இன்னொரு ஸ்வீடன் கார் கம்பெனியான ' சாப் ' பிற்கும் ஸ்வீடன் அரசு 3.5 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ. 17,500 கோடி ) உதவியாக கொடுத்திருக்கின்றது. ' சாப் ' கார் கம்பெனி இப்போது அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸிடம் இருக்கிறது. அதையும் கூட விற்று விடலாமா என்று ஜெனரல் மோட்டார்ஸ் யோசித்து வருவதாக சொல்கிறார்கள்.
நன்றி : தினமலர்


மீண்டும் சென்செக்ஸ் 10 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சென்றது

50 வர்த்தக நாட்களுக்குப்பின் மீண்டும் சென்செக்ஸ் 10,000 புள்ளிகளை தாண்டி வந்திருக்கிறது. மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே உயர்ந்து கொண்டிருந்த குறியீட்டு எண் சென்செக்ஸ் மதியம் 3 மணி அளவில் 10,000 புள்ளிகளை தாண்டியது. பின்னர் அது கொஞ்சம் குறைந்தாலும் மீண்டும் 10,000 புள்ளிகளை அடைந்து விட்டது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 3,100 புள்ளிகள் வரை வந்து பின்னர் கடைசி 10 நிமிட வர்த்தகத்தின் போது கொஞ்சம் குறைந்து விட்டது.எனினும் 3,100 புள்ளிகளை ஒட்டியே இருக்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள இன்று பெருமளவில் வர்த்தகத்தில் கலந்து கொண்டதால் குறியீட்டு எண்கள் இந்தளவுக்கு உயர்ந்திருக்கின்றன. இன்ஃப்ராஸ்டரச்சர், மெட்டல், பேங்கிங், டெக்னாலஜி, ஆட்டோ, எஃப் எம் ஜி சி, மற்றும் ஆயில் அண்ட் கேஸ் நிறுவன பங்குகள் அதிக அளவில் வாங்கப்பட்டதால், சந்தை நாள் முழுவதும் ஏற்ற நிலையிலேயே இருந்தது. இன்றைய வர்த்தகத்தில் ஓ.என்.ஜி.சி.,பார்தி ஏர்டெல், பெல், டி சி எஸ், எல் அண்ட் டி, விப்ரோ, ஸ்டெர்லைட், மாருதி, மற்றும் டாடா பவர் நிறுவன பங்குகள் 5 - 6 சதவீதம் விலை உயர்ந்திருந்தன. எஸ்.பி.ஐ, ஐ.டி.சி, இன்போசிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், என் டி பி சி, ஹெச் டி எஃப் சி, ஹெச் யு எல், ஐசிஐசிஐ பேங்க், மற்றும் ஹெச் டி எஃப் சி பேங்க் பங்குகள் 2 - 4 சதவீதம் விலை உயர்ந்திருந்தன. இன்று எஃப் அண்ட் ஓ வின் முடிவு நாளானதால், இந்த வாரத்தில் இன்று தான் அதிக வர்த்தகம் நடந்துள்ளது. இன்று மட்டும் மொத்தம் ரூ.97,107.51 கோடி க்கு வர்த்தகம் நடந்திருக்கிறது. இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 335.20 புள்ளிகள் ( 3.47 சதவீதம் ) உயர்ந்து 10,003.10 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 97.90 புள்ளிகள் ( 3.28 சதவீதம் ) உயர்ந்து 3,082.25 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்று அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்கு சந்தைகளிலும் ஏற்ற நிலையே காணப்பட்டது.
நன்றி : தினமலர்


ரூ.4 முதல் ரூ.25 லட்சம் வரையுள்ள 30,000 வீடுகள் : ரஹேஜா டெவலப்பர்ஸ் திட்டம்

ரூ 4 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சம் வரை விலையில், 30,000 அடுக்குமாடி வீடுகளை தேசிய தலைநகர் பகுதியில் கட்ட, பிரபல கட்டுமான நிறுவனமான ரஹேஜா டெவலப்பர்ஸ் திட்டமிட்டிருக்கிறது. இன்னும் இரண்டு வருடங்களில் இவைகள் கட்டி முடிக்கப்பட இருக்கிறது. ரியல் எஸ்டேட் தொழில் மந்தமாக இருக்கிறது என்று நிலவி வரும் செய்தி உண்மையல்ல. வீடுகளுக்கு இப்போதும் நல்ல டிமாண்ட் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவும் கட்டுப்படியாகும் விலையில் இருக்கும் வீடுகளுக்கு தேவை இருந்து கொண்டே தான் இருக்கிறது. எனவே தேசிய தலைநகர் பகுதியில் 20,000 வீடுகள் கட்டுவதற்கு நாங்கள் அரசிடம் அனுமதி பெற்று வைத்திருக்கிறோம் என்றார் ரஹேஜா டெவலப்பர்ஸின் மேலாண் இயக்குனர் நவின் ரஹேஜா. இன்னும் இரண்டு வருடங்களில் நாங்கள் 30,000 வீடுகளை கட்ட திட்டமிட்டிருக்கிறோம். வீடுகளின் அளவை பொருத்து, அவைகளில் விலை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சம் வரை இருக்கும். குறைந்த பட்சமாக ஒரு வீடு 300 சதுர அடி பரப்பளவு கொண்டதாக இருக்கும்.கட்டுமானப்பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் துவங்கி, இரண்டு வருடங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்று சொன்ன ரஹேஜா, வீட்டை புக் செய்தவர்களுக்கு 2011 ல் வீடுகள் கொடுக்கப்படும் என்றார். மேலும் இந்த திட்டத்திற்காக நாங்கள் யாருடனும் கூட்டு சேர்வதாக இல்லை என்றும் சொன்னார். இருந்தாலும் இந்த திட்டத்திற்காக எவ்வளவு பணம் முதலீடு செய்யப்படுகிறது என்பதை அவர் சொல்லவில்லை.
நன்றி : தினமலர்


ரஷ்ய நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்குகிறது டாடா டீ

ரஷ்ய நிறுவனம் ஒன்றின் 51 சதவீத பங்குகளை டாடா டீ நிறுவனமும், இ.பி.ஆர்.டி.என்ற ஐரோப்பிய வங்கியும் சேர்ந்து வாங்க முயற்சி மேற்கொண்டுள்ளது. கிராண்ட் என்ற அந்த ரஷ்ய நிறுவனம், பேக்கிங் மற்றும் டிஸ்ட்ரிபூஷன் தொழில் செய்து வருகிறது. டாடா டீ யின் ஐரோப்பிய துணை நிறுவனம் ஒன்று இதற்கான வேலையில் இறங்கியிருக்கிறது. கிராண்ட் நிறுவனத்தில் ஏற்கனவே டாடா டீ க்கு 33.2 சதவீத பங்குகளும், இ.பி.ஆர்.டி.,க்கு 17.8 சதவீத பங்குகளும் இருக்கின்றன. மீதி 49 சதவீத பங்குகள் கிராண்ட் நிறுவனத்தின் புரமோட்டர்களிடம் இருக்கிறது.
நன்றி : தினமலர்


பணவீக்கம் மேலும் குறைந்து 0.27 சதவீதமாகியது

மார்ச் 14 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 0.27 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது, அதற்கு முந்தைய வாரத்தில் 0.44 சதவீதமாக இருந்தது. இது கடந்த 30 வருடங்களில் இல்லாத குறைந்த அளவு. இதே வேகத்தில் சென்றால் விரைவில் பணவீக்கம் 0.0 சதவீதமாகி விடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், பார்லி போன்ற உணவுப்பொருட்களின் விலை 0.1 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. உணவுப்பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால் சில உற்பத்தி பொருட்களும் விலையும் உயர்ந்திருக்கிறது. இருந்தும் கூட பணவீக்கம் குறைந்திருக்கிறது. பணவீக்கம் மேலும் குறைந்திருப்பதை அடுத்து பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி, நிதி கொள்கையில் மாற்றம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நன்றி : தினமலர்


இந்தியாவுக்கான விமான சேவையை பாதியாக குறைத்தது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

இந்தியாவுக்கான விமான சேவையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பாதியாக குறைத்திருக்கிறது. வேறு எந்த விமான கம்பெனியும் இதுவரை இந்த அளவுக்கு விமான சேவையை குறைத்தது இல்லை. இந்தியாவுக்கு 100 விமானங்கள் வரை இயக்கிக்கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், கடந்த சில மாதங்களில் அதில் 54 விமானங்களை குறைத்திருக்கிறது. மேலும் ஐந்து நகரங்களுக்கு விமான சேவையை முற்றிலுமாக நிறுத்தியும் இருக்கிறது. முன்பு 11 இந்திய நகரங்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இப்போது 6 நகரங்களுக்கு மட்டுமே இயக்குகிறது. இது குறித்து தமிழ்நாடு மற்றும் கர்னாடகாவுக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிர்வாகி சருகா விக்ரம - ஆதித்யா தெரிவித்தபோது, நாங்கள் லாபம் வராத ரூட்களில் விமான சேவையை நிறுத்தி விட முடிவு செய்தோம். அதனடிப்படை யில் தான் ஐந்து இந்திய நகரங்களுக்கு சேவையை நிறுத்த வேண்டியதாகி விட்டது என்றார். விமானங்களில் நிரம்பும் இருக்கைகள் எண்ணிக்கையும் 55 சதவீதம் குறைந்து, வாரத்திற்கு 2,000 ஆகி விட்டது. எனவே தான் நாங்களும் இப்போதுள்ள சூழ்நிலைக்கு தகுந்தபடி சேவையை குறைத்துக்கொண்டோம் என்றார்.
நன்றி ; தினமலர்


அமெரிக்க நடவடிக்கையால் மெதுவாக முன்னேறுகிறது பங்குச் சந்தை- சேதுராமன் சாத்தப்பன் -

சந்தை முன்னேறுகிறது; மெதுவாக முன்னேறுகிறது; 10,000 புள்ளிக்கு அருகில் சென்று முத்தமிட்டு கீழே இறங்கி வந்து விட்டது. ஏறு மயில் ஏறு என்கிறபடி கடந்த 15 நாட்களாக ஏறிக்கொண்டே இருக்கிறது.முக்கிய காரணம் என்ன? உலகளவில் சந்தைகள் மேலே சென்றது தான். ஏன் மேலே சென்றன? அமெரிக்காவின் பேக்கேஜ் தான் காரணம். அமெரிக்கா, தனது நாட்டிலுள்ள கம்பெனிகள், வங்கிகளின் பொருளாதார சிக்கல்களை தீர்க்க, பேக்கேஜ் மேல் பேக்கேஜாக அறிவித்துக் கொண்டே இருக்கிறது.அது, அங்கு சந்தைகளை மேலே கொண்டு சென்றன. அதனால், குறிப்பாக இந்திய சந்தைகளும் ஒரேயடியாக மேலே சென்றன. மும்பை பங்குச் சந்தை 457 புள்ளிகள் மேலே சென்றது.நேற்று முன்தினம் சந்தைகள் மேலேயே தான் துவங்கின. பின்னர், மேலும், கீழுமாகத் தான் இருந்தது. முடிவாக, 47 புள்ளிகள் கீழே சென்று முடிந்தது. டாடாவின் நானோவை பார்த்த அனைத்து வெளிநாட்டினரும் பாராட்டியதும் சந்தைக்கு காலையில் ஒரு புத்துணர்ச்சியை நிச்சயம் தந்திருக்கும். ஆனால், அது பின்னர் நீடிக்கவில்லை.நேற்று துவக்கம் கீழேயே இருந்தது. பின் மேலே சென்றது. ஒபாமா விடுத்த அறிக்கையாலும் சந்தைகள் மேலே சென்றன. இருந்தாலும், சந்தைகள் நேற்றைய தினம் மேலும், கீழும் இருந்தது. இதற்கு வேறு ஒரு காரணம் என்னவென்றால், இன்று முடிவுபெற இருக்கும் டிரைவேட்டிவ் சந்தைகளின் முடிவுகள் தான்.மெட்டல், கட்டுமானத்துறை, வங்கித்துறை ஆகியவை மேலே சென்றன. டி.எல்.எப்., கட்டுமானக் கம்பெனியின் நான்கு புதிய மால்கள், தீபாவளிக்குள் திறக்கப்படும் என்று தெரிவித்திருப்பதால் அந்த கம்பெனியின் பங்குகள் மேலே சென்றன. கச்சா எண்ணெய் விலை கூடிவருவதால் அது சம்பந்தப்பட்ட பங்குகள் மேலே சென்றன.இறுதியாக மும்பை பங்குச் சந்தை 196 புள்ளிகள் கூடி 9,667 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 45 புள்ளிகள் கூடி 2,984 புள்ளிகளுடனும் முடிந்தது. கடந்த ஒன்றரை மாதத்தின் அதிகபட்சத்திற்கு சென்றுள்ளது.டாலர் மதிப்பு: டாலர் மதிப்பு சிறிது சிறிதாக வருங்காலங்களில் குறையும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். பெரிய அளவு குறைவு உடனடியாக இல்லாவிடினும் சிறிது சிறிதாக இருக்கலாம். குறைவதற்கு இன்னொரு காரணம், ஏற்றுமதியாளர்கள் பயத்தில் சேமித்து வைத்திருந்த டாலர்களையெல்லாம் விற்று ரூபாய் ஆக்கியது தான்.டாலர் மதிப்பு கூடும் போது எல்லாவற்றையும் டாலர் அக்கவுன்டில் வைத்திருந்தனர். மதிப்பு குறைந்து கொண்டு வருகிறது என்று தெரிந்ததும் உடனடியாக விற்றுக் காசாக்குவோம் (ரூபாயாக்குவோம்) என்ற நினைப்புத் தான் பலருக்கு.தங்கம் தங்கமாகவே உறுதியாக இருக்கிறது. 15,000 அளவிலேயே இருக்கிறது. பங்குச் சந்தை மேலே செல்வதாலும், கச்சா எண்ணெய் மேலே செல்வதாலும் தங்கத்தில் இருக்கும் முதலீடுகள் சிறிது மாறவாய்ப்புகள் உள்ளன.ஒரு காலத்தில் நிறுவனங்களுக்கு தலைவராவது என்றால் அனைவருக்கும் மிகவும் விருப்பமாக இருந்தது. ஆனால், சத்யம் விவகாரத்திற்கு பின், நிறைய நிறுவனங்களின் தலைவர்கள் விலகி வருகின்றனர். விலகுபவர்களிலும் 90 சதவீதம் பேர் உடல்நிலை சரியில்லை என்ற காரணம் காட்டி விலகுகின்றனர். 200 பேர் வரை சமீபத்தில் விலகி உள்ளனர்.கடந்த 9ம் தேதி அன்று சந்தை கடந்த மூன்று ஆண்டின் கீழ் நிலையை எட்டியிருந்தது. அதாவது 8,160 புள்ளிகளை. தற்போது 9,667 புள்ளிகளை எட்டியுள்ளது. 17 நாட்களில் 18 சதவீதம் வரை லாபம் தந்துள்ளது. அது தான் பங்குச் சந்தை. சந்தையை சிறிது நாட்களாக பார்க்காதவர்கள், பேசாதவர்கள் எல்லாம் மறுபடி பார்க்கத் துவங்கி விட்டனர், பேசத் துவங்கிவிட்டனர். வடிவேலு பாணியில் சொல்லப்போனால், வந்துட்டாங்கய்யா, வந்துட்டாங்கய்யா... என்று சொல்லலாம்.
நன்றி : தினமலர்


மகளிர் குழுவுக்கு ரூ.1,400 கோடி கடன் : இந்தியன் வங்கி தலைவர் தகவல்

''நாடு முழுவதும் மகளிர் குழுவினருக்கு 1,400 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள் ளது,'' என, இந்தியன் வங்கி தலைவர் சுந்தரராஜன் தெரிவித்தார். இந்தியன் வங்கி தலைவரும், நிர்வாக இயக்குனருமான சுந்தரராஜன் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:இந்தியன் வங்கி சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க நாடு முழுவதும் 17 சிறப்பு கிளைகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் தற்போது ஆறாவது கிளையாக சேலத்தில் திறக்கப்பட்டுள்ளது.நாட்டில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. இந்த குழுக்களுக்கு 1,400 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 700 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், 99 சதவீத குழுக்கள் தாமாகவே முன்வந்து கடன் தொகையை கட்டுகின்றன. வராக்கடனாக 460 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இவ்வாறு சுந்தரராஜன் கூறினார்.
நன்றி : தினமலர்


Wednesday, March 25, 2009

ரூ.12 லட்சம் தானே விலை : அதிநவீன பைக்குகள் 51 விற்பனை

உலகின் மிக மலிவு விலை காரான நானோ அறிமுகப்படுத்தப்பட்ட அதே இந்தியாவில்தான், நானோவின் விலையை விட சுமார் 12 மடங்கு அதிக விலையுள்ள பைக்குகளும் அதிகம் விற்றிருக்கின்றன. ' மக்களின் கார் ' என்று அழைக்கப்படும் நானோவின் அதிரடியான விற்பனைக்கு ஊடே, எங்கே இவ்வளவு விலையுள்ள நம்முடைய பைக் விற்கப்போகிறது என்று நினைத்த ஜப்பானின் சுசுகி நிறுவனம், குறுகிய காலத்திற்குள்ளாகவே ரூ.12 லட்சம் விலையுள்ள பைக்குகள் 50 விற்பனை ஆகியிருப்பது ஆச்சரியத்தை தான் ஏற்படுத்தியிருக்கிறது. நானோ காரின் இஞ்சின் திறனை விட மூன்று மடங்கு அதிக திறன்கொண்ட பைக்குகளை சுசுகி நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஹயாபுஸா என்ற பைக் 1,340 சிசி திறனும், இன்ட்ரூடர் என்ற பைக் 1,763 சிசி திறன் கொண்ட இஞ்சினையும் கொண்டது. நானோ காரின் இஞ்சின் திறன் வெறும் 623 சிசி தான். மற்ற பைக் பிரியர்களைப்போல், பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாமும் ஹயாபுஸா பைக் ஒன்றை சமீபத்தில் வாங்கியிருப்பதாக சுசுகி தெரிவிக்கிறது. அதிக பணம் வைத்திருப்பவர்கள் மற்றும் பைக் பிரியர்களால் மட்டுமே வாங்கக்கூடிய இந்த பைக்குகள் இதுவரை இங்கு 51 விற்பனை ஆகியிருப்பதாக சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பி.லிமிடெட்டின் வைஸ் பிரசிடென்ட் ( சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் ) அதுல் குப்தா தெரிவிக்கிறார்.
நன்றி : தினமலர்


போர்டு ' ஐகான் ' விலை ஏப்ரலில் இருந்து உயருகிறது

போர்டு ஐகானின் விலை வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து உயருகிறது. ஏப்ரலில் இருந்து அதன் விலை 1.5 சதவீதம் வரை உயருகிறது என்று போர்டு இந்தியாவின் எக்ஸிகூடிவ் டைரக்டர் ( மார்க்கெட்டிங், சேல்ஸ், அண்ட் சர்வீஸ் ) நிகல் வார்க் தெரிவித்தார். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதால் நாங்கள் இந்த விலை உயர்வை செய்ய வேண்டியிருக்கிறது. ஏனென்றால் கடந்த மூன்று மாதங்களாகவே ரூபாயின் மதிப்பு குறைந்து, நேற்று அதன் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.50.70 ஆக குறைந்திருந்தது என்றார். இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதால், காருக்கான பாகங்களை இறக்குமதி செய்யும்போது அதிகம் ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது. எனவேதான் நாங்கள் காரின் விலையை உயர்த்தவேண்டியிருக்கிறது என்றார் அவர். கடந்த நவம்பரில் தான் போர்டு நிறுவனம், ஐகான் மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடல் காரை வெளியிட்டது. அதன் பெட்ரோல் காரின் விலை ரூ.4.59 லட்சமாகவும் ( எக்ஸ் - ஷோரூம் டில்லி ) டீசல் காரின் விலை ரூ.5.19 லட்சமாகவும் இருக்கிறது. இருந்தாலும் இப்போது விலை உயர்த்தியிருப்பது அதன் ஆரம்ப கட்ட மாடல் ஐகானுக்கு தான். மற்ற மாடல்களின் விலை ஏற்கனவே உயர்த்தப்பட்டுதான் இருக்கிறது. இப்போது பெட்ரோல் மாடல் கார்களுக்கு கிராக்கி அதிகரித்து வருவதால், நாங்களும் பெட்ரோல் மாடல் ' ஐகான் ' மற்றும் ' பியஸ்டா ' கார்களை அதிக அளவில் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறோம் என்றார் வார்க்.
நன்றி : தினமலர்


பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் : சென்செக்ஸ் 196 புள்ளிகள் உயர்ந்தது

பங்கு சந்தையில் இன்று நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. காலை வர்த்தகம் ஆரம்பித்த போது அதிகம் மாற்றமின்றி இருந்த பங்கு சந்தையில், மதியத்திற்கு மேல் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கேப்பிட்டல் குட்ஸ், மெட்டல், ரியல் எஸ்டேட், பேங்கிங், எஃப்.எம்.சி.ஜி., பிரைவேட் பவர் கம்பெனிகள்,மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், இன்போசிஸ் போன்ற நிறுவன பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதால் சந்தை உயர்ந்தே இருந்தது. இருந்தாலும் ஓ.என்.ஜி.சி., என்.டி.பி.சி.,பார்தி, ஹெச்.யு.எல், விப்ரோ, டாடா மோட்டார்ஸ், ரான்பாக்ஸி பங்குகள் அதிகம் விற்கப்பட்டது. மாலை வர்த்தகம் முடியும் போது மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 196.86 புள்ளிகள் ( 2.08 சதவீதம் ) உயர்ந்து 9,667.90 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 45.65 புள்ளிகள் ( 1.55 சதவீதம் ) உயர்ந்து 2,984.35 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்று அதிகம் பயனடைந்தது ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், டாடா பவர், ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், டிஎல்எஃப், ரிலையன்ஸ் இன்ஃப்ரா, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகியவைகள் தான். இவைகளின் பங்கு மதிப்பு 5.6 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. மற்ற எல்லோரையும் காட்டிலும் அதிகம் உயர்ந்திருந்தது யூனிடெக் நிறுவன பங்குகள் தான். அதன் மதிப்பு 16.87 சதவீதம் உயர்ந்திருந்தது.
நன்றி : தினமலர்


இப்போது ஹெச்.டி.எஃப்.சி.,பேங்க் தான் இந்தியாவின் மதிப்பு மிக்க தனியார் வங்கி

ஐசிஐசிஐ பேங்கை பின்னுக்கு தள்ளிவிட்டு, ஹெச்.டி.எஃப்.சி. பேங்க் இந்தியாவின் மதிப்பு மிக்க தனியார் வங்கி என்று பெயரெடுத்திருக்கிறது. மும்பை பங்கு சந்தையில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்கு மதிப்பு 6 சதவீதம் உயர்ந்திருப்பதை அடுத்து இந்த பெயர் கிடைத்திருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக இருக்கும் ஐசிஐசிஐ யின் சந்தை முதலீடு இன்று ரூ.39,516.58 கோடியாக குறைந்திருக்கிறது. ஆனால் அதன் போட்டி வங்கியும் இந்தியாவின் இரண்டாவது தனியார் வங்கியுமான ஹெச்.டி.எஃப்.சி.,யின் சந்தை முதலீடு ரூ.41,001 கோடியாக உயர்ந்திருக்கிறது. மும்பை பங்கு சந்தையில் இன்று பகல் நேர வர்த்தகத்தின் போது ஹெச்.டி.எஃப்.சி.,வங்கியின் பங்கு மதிப்பு 10.09 சதவீதம் உயர்ந்து, ரூ.973.90 ஆக இருந்தது. பொதுவாகவே இன்று அதன் பங்கு மதிப்பு 6.31 சதவீதம் உயர்ந்து ரூ.940.50 ஆக இருக்கிறது. அதே நேரம் பகல் நேர வர்த்தகத்தின் போது ஐசிஐசிஐ பேங்க்கின் பங்கு மதிப்பு 7.69 சதவீதம் மட்டும் உயர்ந்து ரூ.373.30 ஆகவும், பொதுவாக இன்று அதன் மதிப்பு 2.44 சதவீதம் மட்டும் உயர்ந்து ரூ.355.10 ஆக இருக்கிறது. சந்தை மூலதனத்தை பொருத்தவரை, கடந்த வருடம் வரை 10 நிறுவனங்களுக்குள் ஒன்றாக இருந்த ஐசிஐசிஐ பேங்க், இப்போது 18 வது இடத்திற்கு போயிருக்கிறது.
நன்றி : தினமலர்


நோவார்டிஸ் ( இந்தியா ) நிறுவனத்தின் 39 சதவீத பங்குகளை வாங்குகிறது நோவார்டிஸ்

சுவிட்சர்லாந்தை சேர்ந்த மருந்து நிறுவனமான நோவார்டிஸ், அதன் இந்திய துணை நிறுவனமான நோவார்டிஸ் ( இந்தியா ) வின் 39 சதவீத பங்குகளை கூடுதலாக வாங்கிக்கொள்ள முன் வந்திருக்கிறது. பங்கு ஒன்றுக்கு ரூ.351 விலை வைத்து மொத்தம் ரூ.440 கோடிக்கு ( 87 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ) இதனை வாங்கிக் கொள்ள இருப்பதாக, மும்பை பங்கு சந்தையில் நோவார்டிஸ் ( இந்தியா ) தெரிவித்திருக்கிறது. இப்போது அதன் இந்திய நிறுவனத்தின் 50.9 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நோவார்டிஸ், இன்னும் 39 சதவீத பங்குகளை வாங்குவதன் மூலம் 90 சதவீத பங்குகளை கொண்ட நிறுவனமாகி விடும். மார்ச் 24 ம் தேதியில் ரூ.275.60 விலையில் இருந்த நோவார்டிஸ் ( இந்தியா ) வின் பங்குகளை 27 சதவீதம் பிரீமியம் வைத்து ரூ.351 க்கு வாங்கிக்கொள்ள நோவார்டிஸ் முன் வந்திருக்கிறது. சமீபத்தில் நோவார்டிஸ் ( இந்தியா ) வின் பங்கு மதிப்பு 19.99 சதவீதம் வரை உயர்ந்திருப்பதை அடுத்து அதன் 39 சதவீத பங்குகளை, அதன் தாய் நிறுவனமான நோவார்டிஸ் வாங்கிக்கொள்ள முன்வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
நன்றி :தினமலர்


சத்யம் கம்ப்யூட்டர்ஸை வாங்க விருப்பம் தெரிவித்த சிலர் வேண்டாம் என்று விலகல்

சத்யம் கம்ப்யூட்டர்ஸின் 51 சதவீத பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்து பல நிறுவனங்கள் விண்ணப்பம் செய்திருந்தன. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. வந்திருக்கும் விண்ணப்பங்களை பிரித்து, அவர்கள் தகுதியானவர்கள்தானா என்று சரிபார்க்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், வாங்க விரும்பம் தெரிவித்திருந்த சில நிறுவனங்கள் இப்போது, விருப்பமில்லை என்று விலகிக்கொண்டதாக தெரிகிறது. தனியார் முதலீட்டு நிறுவனங்களான கோல்பெர்க் கிராவிஸ் ராபர்ட்ஸ், டெக்ஸாஸ் பசிபிக் குரூப், பேரிங் ஆகிய நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனமான ஹெவ்லட் பேக்கார்டும் விலகிக்கொண்டதாக தெரிகிறது. இருந்தாலும் மீதி விண்ணப்பங்களை சரி பார்க்கும் வேலைகள் நடந்து வருகின்றன. யாருக்கு சத்யத்தை கொடுக்கலாம் என்று ஏப்ரல் 15ம் தேதி அறிவித்து விடுவார்கள் என்று தெரிகிறது.ஏர்கனவே ஐகேட் என்ற அமெரிக்க நிறுவனம், சத்யத்தை வாங்க ஆர்வம் காண்பித்து, பின்னர் விண்ணப்பிக்காமல் இருந்து விட்டது. சத்யத்தின் வருமானம் குறைந்து வருவது, லாபம் மற்றும் கடன் எவ்வளவு என்பது சரியாக தெரியாத நிலை போன்ற காரணங்களால் அது வாங்க முன்வரவில்லை என்று சொல்லப்பட்டது.
நன்றி : தினமலர்


Tuesday, March 24, 2009

திப்பு சுல்தானின் நவரத்ன கற்கள் பதித்த சிம்மாசன அலங்கார பொருள் ஏலம் விடப்படுகிறது

மகாத்மா காந்தி உபயோகித்த பொருட்களை எலம் விட்டு கொஞ்சம் நாட்களே ஆகி இருக்கும் நிலையில் இப்போது திப்பு சுல்தானின் மதிப்பு மிக்க பொருள் ஒன்று ஏலத்திற்கு வருகிறது. திப்பு சுல்தானின் சிம்மாசனத்தை அலங்கரித்த நவரத்தினங்கள் பதித்த, தங்கத்தால் ஆன, புலியின் தலையை போன்ற தோற்றத்தை கொண்ட அலங்காரப்பொருள் லண்டனில் ஏப்ரல் 2 ம் தேதி ஏலம் விடப்படுகிறது. இங்கிலாந்தில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் இந்த பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கழித்து இப்போது ஏலத்திற்கு வருகிறது. இது அதற்கு முன் கடந்த 100 வருடங்களாக நார்த்தம்பர்லேண்ட் என்ற இடத்தில் இருக்கும் ஃபெதர்ஸ்டோன் கோட்டையில் இருந்திருக்கிறது. 1799ல் திப்பு சுல்தானை தோற்கடித்த ஆங்கிலேயர்கள், அவரின் சிம்மாசனத்தை பெயர்த்து அதிலிருந்த இந்த அலங்கார பொருளை எடுத்து சென்றதாக தெரிகிறது. திப்பு சுல்தானின் சிம்மாசனத்தில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்ட இன்னொரு பெரிய அலங்கார பொருள் வின்ஸ்டர் கோட்டையிலும், இன்னொரு பகுதி போவிஸ் கோட்டையிலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போது ஏலம் விட இருக்கும் அலங்கார பொருள் 8.00,000 பிரிட்டிஷ் பவுண்ட்க்கு ( சுமார் 5,84,00,000 ரூபாய் ) ஏலம் போகும் என்று சொல்லப்படுகிறது. இந்திய வரலாற்றில் மிக முக்கியமான பொருளாக கருதப்படும் இந்த பொருள், ஏலம் விடப்பட்டு யாரிடம் செல்லப்போகிறது என்பதை இந்திய மற்றும் பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்


டாடாவின் நானோ கார் ஒரு லட்ச ரூபாய்க்கு கிடைக்குமா ?

உலகின் மிக மலிவு விலை கார் என்று சொல்லப்படும் டாடாவின் நானோ, மக்களின் கைக்கு வரும் போது ஒரு லட்சம் ரூபாய்க்கு கிடைக்காது என்பது தெளிவாகிறது. ஏனென்றால், நானோவின் ஸ்டாண்டர்டு மாடல் காரின் எக்ஸ் - பேக்டரி விலையே ரூ.ஒரு லட்சம் என்று சொல்லப்படுகிறது. பின்னர் அது ஷோரூமுக்கு வரும்போது, ரூ.1,12,000 வரை விலையாகும் என்கிறார்கள். வாங்குபவர்கள் கைக்கு வரும்போது, ரோடு டாக்ஸ், இன்சூரன்ஸ் எல்லாம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதையெல்லாம் சேர்த்தால் ரூ.1,20,000 க்கு மேல் விலை வந்து விடும் என்கிறார்கள். இது நானோவின் பேசிக் மாடல் தான். இது தவிர இரண்டு டீலக்ஸ் மாடல்கள் இருக்கின்றன. பேசிக் மாடலே ரூ.1,20,000 க்கு மேல் விலைக்கு வந்து விடும் போது டீலக்ஸ் மாடல்களின் விலை ரூ.1,60,000 மற்றும் ரூ.2,00,000 வரை கூட வந்து விடும் என்கிறார்கள்.
நன்றி : தினமலர்


வங்கிகளை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்ற அமெரிக்க அரசு கொடுக்கிறது ஒரு லட்சம் கோடி டாலர்

கடும் கடன் சுமையால் வீழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்க வங்கிகளை, அதிலிருந்து மீட்டு கொண்டு வர, அமெரிக்க அரசு ஒரு லட்சம் கோடி டாலர் ( ஒரு டிரில்லியன் டாலர் ) வரை செலவு செய்ய முன்வந்திருக்கிறது. அமெரிக்க வங்கிகளில் கடன் பெறுபவர்கள், அதற்கு அடமானமாக எழுதி கொடுத்திருக்கும் சொத்துக்கள் இப்போது ஒன்றுக்கும் உதவாததாக இருக்கின்றன. ஒன்றுக்கும் உதவாத சொத்துக்களை அடமானம் வைத்து வாங்கிய கடன் தொகையையும் செலுத்தப்படாமல் இருந்து, அந்த சொத்தையாவது விற்று கடனை கழித்து விடலாம் என்று பார்த்தால் அதுவும் விலை போகாமல் இருந்தால் வங்கிகள் என்னதான் செய்யும்?. சொத்தையும் விற்க முடியாமல் கடனையும் திரும்ப வாங்க முடியாமல், கணக்கில் மட்டும் கடனை எழுதி வைத்திருந்தால் போதுமா?. இப்படி ஏராளமான சொத்துக்கள் அமெரிக்க வங்கிகளிடம் சும்மாவே இருக்கின்றன. கடனும் திருப்பி வராமல், சொத்தையும் விற்க முடியாமல் நிறைய வங்கிகள் திணறுகின்றன. அதனால்தான் பல வங்கிகள், வங்கியை நடத்த முடியாமல் திவால் ஆகி வருகின்றன. அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடிக்கு இதுவே முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இப்போது இதனை சரி செய்ய அமெரிக்க அரசு முன்வந்திருக்கிறது. இதன்படி, இந்த உதவாத சொத்துக்களை அமெரிக்க அரசே பெற்றுக்கொண்டு, அதை வைத்து வாங்கிய கடனை வங்கிக்கு கொடுத்து விடும். பின்னர் வேறு ஒரு நாளில் இந்த சொத்துக்களை அமெரிக்க அரசே விற்று அதில் கிடைக்கும் பணத்தை பெற்றுக்கொள்ளும். இந்த திட்டத்தால் நஷ்டம் ஏற்பட்டாலும் அல்லது லாபம் கிடைத்தாலும் அதனை அரசே ஏற்றுக்கொள்ளும். இந்த திட்டத்திற்காக அமெரிக்க அரசு 75 பில்லியன் டாலரில் இருந்து 100 பில்லியன் டாலர் வரை ( அதாவது ஒரு லட்சம் கோடி டாலர் ) செலவு செய்ய முன் வந்திருக்கிறது. மேலும் இந்த திட்டத்தை ' பப்ளிக் - பிரைவேட் இன்வெஸ்ட்மென்ட் புரோகிராம் ' படி செயல்படுத்தலாம் என்றும், அதற்காக தனியாரும் இதில் பங்கு பெறலாம் என்றும் அழைப்பு விடப்பட்டிருக்கிறது. அமெரிக்க அரசின் இந்த திட்டத்தால் அங்குள்ள பங்கு சந்தைகளான டவ் ஜோன்ஸ் குறியீட்டு எண் 500 புள்ளிகள் ( 6.8 சதவீதம் ), எஸ் அண்ட் பி குறியீட்டு எண் 54 புள்ளிகள் ( 7.1 சதவீதம் ), நாஸ்டாக் குறியீட்டு எண் 99 புள்ளிகள் ( 6.8 சதவீதம் ) உயர்ந்திருக்கின்றன.
நன்றி : தினமலர்


புதிய மாடல் கேமரா சோனி நிறுவனம் அறிமுகம்

இந்திய டிஜிட்டல் ஸ்டில் கேமரா சந்தையில் முன்னணி வகிக்கும் பொருட்டு, சோனி நிறுவனம் பல மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளது. டி, டபிள்யூ, எச் மற்றும் எஸ் வரிசை கேமராக்களுடன், சோனி நிறுவனம் தற்போது சைபர் ஷாட் கேமரா கலெக்ஷனில் 11 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளது. ஸ்போர்டிவ், கலர்புல், ஸ்லிம் டைமென் ஷன், சூப்பர் டிசைன் என பல்வேறு சிறப்பம் சங்களைக் கொண்ட இந்தக் கேமராவை எல்லா இடங்களுக்கும் எளிதாக எடுத்துச் செல்லலாம். சைபர் ஷாட் லைன் அப் கேமராவில் 10-12 மெகா பிக்சல் ரிசொல்யூஷன், மேம்பட்ட இமேஜிங் செயல்பாடுகளுக்கு பவர்புல் இமேஜிங் இன்னோவேஷன்ஸ் என வாடிக்கையாளர் விரும்பும் அனைத்து நவீனங்களும் உள்ளன. கடந்த 2008ம் ஆண்டு மூன்று லட்சத்து 70 ஆயிரமாக இருந்த சோனி கேமராக்கள் விற்பனை இந்தாண்டு ஐந்து லட்சமாக அதிகரிக்கும் என சோனி நிறுவனம் கணித்துள்ளது.
நன்றி : தினமலர்


தங்க நாணயம் விற்பனையில் அசத்தும் அஞ்சலகங்கள்

பங்குச்சந்தை, நிலம் இவற்றில் முதலீடு செய்வதை விட தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலையை கருத்தில் கொண்டு நடுத்தர மக்களும் கூட சிறிய அளவில் ஒரு கிராம், இரண்டு கிராமாவது சேர்க்க வேண்டும் என்று விரும்புகின்றனர். நகைக்கடைகளில் மட்டுமே தங்கம் விற்கப்பட்ட நிலை மாறி, வங்கிகளும் விற்பனை செய்யத் துவங்கின. கடந்தாண்டு அஞ்சல் துறையும், தனியார் நிறுவனத்துடன் இணைந்து தங்க நாணய விற்பனையை துவக்கியது. இத்திட்டத்தில் 24 காரட் சுத்த தங்கத்தில் அரை, ஒன்று, ஐந்து மற்றும் எட்டு கிராம் எடையுள்ள நாணயங்கள், சுவிட்சர்லாந்து வால்கேம்பி நிறுவனத்தின் தர நிர்ணய முத்திரையுடன், முற்றிலும் 'சீல்' வைக்கப்பட்ட வகையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டன. தங்க நாணய விற்பனையை கடந்தாண்டு அக்டோபர் 15ம் தேதி மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ராஜா, இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா அறிமுகப்படுத்தினர். அன்று முதல் நாடு முழுவதும் பல பகுதிகளில் உள்ள அஞ்சலகங்கள், தமிழகத்தில் 20 அஞ்சலகங்களில் தங்க நாணயங்கள் விற்பனை துவக்கப்பட்டது. கடந்த மாதம் மேலும் ஒன்பது அஞ்சலகங்கள், இம்மாதம் 13ம் தேதி 22 அஞ்சலகங்கள் என தற்போது தமிழகத்தில் 51 அஞ்சலகங்களில் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
விற்பனை துவக்கப்பட்டு ஐந்து மாதங்கள் முடிந்துள்ள நிலையில் கடந்த 15ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள 29 அஞ்சலகங்களில் இதுவரை 24.862 கிலோ விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை மத்திய கோட்டத்தில் மட்டும் 65 லட்சம் ரூபாய் வரை தங்கம் நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தங்க நாணய விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை தற்போது ஏப்ரல் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாணயங்கள் தினந்தோறும் மாறும் விலைக்கேற்ப விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், வெளிமார்க்கெட் விலையிலேயே தங்க நாணயங்கள் அஞ்சலகங்களில் கிடைக் கின்றன. இதுகுறித்து, அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தங்க நாணயம் விற்பனைக்கான அஞ்சலகங்கள், பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை வசதியை கருத்தில் கொண்டு தேர்வு செய்யப்படுகின்றன. ''அஞ்சலகங்களில் வாங்கும் தங்க நாணயத்திற்கு, 'பில்' தரப்படுகிறது. மேலும், அஞ்சலகம் அரசு நிறுவனம் என்பதால், பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் தங்க நாணயங்களை வாங்கிச் செல்கின்றனர். ''தங்க நாணயங்கள் விற்பனை, மற்ற நகைக் கடைகள் போல் இல்லாவிட்டாலும், பண்டிகை காலங்களிலும், பங்குச் சந்தை சரிவு உள்ளிட்ட காலங்களிலும் அதிகளவில் இருக்கும். சென்னை, திருச்சி பகுதி அஞ்சலகங்களிலும் அதிகளவு தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டுள் ளன,'' என்றார்.
நன்றி : தினமலர்


'நானோ' கார் வாங்குவோருக்கு அதிர்ஷ்டம்: கூடுதல் விலைக்கு கை மாற்றிவிட வாய்ப்பு

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாடாவின் ஒரு லட்ச ரூபாய் நானோ காருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. முதல் கட்ட விற்பனையில் இந்த காரை வாங்குவோருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. குறைந்த அளவிலேயே கார் தயாரிக்கப்படுவதால், தற்போது காரை வாங்குவோர், அதை கூடுதல் விலைக்கு மற்றொருவருக்கு மாற்றி விடும் வாய்ப்பு உள்ளது. தொழிலதிபர் ரத்தன் டாடாவின் கனவுத் திட்டம் நானோ கார். உலகிலேயே மிகக் குறைந்த விலையாக ஒரு லட்ச ரூபாய்க்கு கார் தயாரித்து விற்பனை செய்யப்படும் என அறிவித்தார். மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட பிரச்னை, நானோ கார் தயாரிப்பில் தாமதத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும், டாடாவுக்கு குஜராத் மாநிலம் ஆதரவுக் கரம் நீட்டியது. தற்போது, காரை தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், நானோ கார் நேற்று முறையாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. தயாரிப்பு மிகக் குறைவாக உள்ளதால், நானோ காருக்கு கடும் கிராக்கி நிலவுகிறது.
இதுகுறித்து ஆட்டோ மொபைல்ஸ் வட்டாரங்கள் கூறியதாவது: நானோ கார் தொடர்பாக ஐந்து கோடிக்கும் அதிகமானோரிடம் இருந்து விசாரிப்புகள் வந்துள்ளன. முதல் கட்ட தேவையைப் போக்குவதற்கு இரண்டு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் கார்கள் வரை தேவைப்படுகின்றன. மொத்த தேவையில் 2.5 சதவீதத்துக்கும் குறைவான அளவே முதல் கட்டமாக கார்கள் விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது. காருக்கான அனைத்து முன்பதிவுகளும் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில், முன்பதிவு செய்த அனைத்து வாடிக்கையாளர்களும் நானோ காரை பெறுவதற்கு இரண்டாண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். முன்னர், மாருதி 800 கார் விற்பனைக்கு வந்த போதும் இதே நிலை தான் ஏற்பட்டது. இதன் காரணமாக, தற்போது முதல் கட்ட விற்பனையில் நானோ காரை பெறும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்புள்ளது. குறைவான எண்ணிக்கையிலேயே கார் தயாரிக்கப்படுவதால், தங்கள் பெயரில் புக் செய்யப்பட்ட காரை, கூடுதல் விலைக்கு வேறொருவருக்கு விற்பனை செய்ய அவர்கள் முயற்சிக்கலாம். கார் தேவைப்படாதவர்கள் கூட, காருக்காக முன்பதிவு செய்து, அதை கூடுதல் விலைக்கு வேறொருவருக்கு விற்க முயற்சிக்கலாம். எப்படியாது நானோ காரை வாங்கியே தீர வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள்,காரின் விலையை விட கூடுதலாகக் கொடுத்து அதை வாங்க முயற்சிப்பர்.
நானோ கார் விற்பனை தொடர்பாக டாடா நிறுவனம் எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும், அதன் டீலர்கள் சில விவரங்களைத் தெரிவித்துள்ளனர். இதன்படி, நானோ கார் தொடர்பாக டாடா நிறுவனம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் உடன்பாடு செய்துள்ளது. நானோ கார் வாங்குவதற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிதி வசதி அளிக்கும். காருக்கு புக் செய்தவர்களின் பெயர்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக விற்பனைக்கு வரும் கார்களைப் பெறும் அதிர்ஷ்டசாலிகள் அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். புக் செய்யப்பட்டவரின் பெயருக்கு டீலர்களின் ஷோரூம்களுக்கு கார் வந்து விடும். வாடிக்கையாளர்கள் அங்கிருந்து தங்கள் கார்களை எடுத்துச் செல்லலாம். நிதி விவகாரங்களில் டீலர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. காரை டெலிவரி செய் யும் பணி மட்டுமே டீலர்களுக்கு உண்டு. இவ்வாறு ஆட்டோ மொபைல்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து கார் தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகையில், 'நானோ காருக்காக பெருமளவு வாடிக்கையாளர்கள் புக் செய்வது, டாடா நிறுவனத்தின் நிதி செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்யும். 'இரண்டு லட்சம் கார்கள் புக் செய்யப்பட்டால் கூட, அந்நிறுவனத்துக்கு அதன் மூலமாக 1,400 கோடி ரூபாய் கிடைக்கும். இந்த நிதியை டாடா நிறுவனம், தனது பல்வேறு நிதித் தேவைகளுக்கு பயன்படுத்தும்' என்றன.
நன்றி : தினமலர்


முன்கூட்டியே விற்பனைக்கு வந்து விட்டது 'நானோ' கார்: : சொன்னதைச் செய்தார் டாடா

உலகிலேயே மிகக் குறைந்த விலையுடைய நானோ கார், விற்பனைக்கு வந்து விட்டது. ஏற்கனவே அளித்த வாக்குறுதிப் படி, ஒரு லட்ச ரூபாய்க்கு நானோ கார்கள் விற்பனை செய்யப்படும் என்றும், அடுத்த மாதம் 9ம் தேதி முதல், காருக்கான முன்பதிவு துவங்கும் என்றும் தொழில் அதிபர் ரத்தன் டாடா நேற்று பெருமையுடன் தெரிவித்தார்.
மும்பையில் நேற்று நடந்த அதிகாரப்பூர்வ அறிமுக விழாவில், ரத்தன் டாடா பேசியதாவது: இந்த நாளை, சாலை போக்குவரத்தின் புதிய பரிமாணமாக கருதலாம். ஒரு லட்ச ரூபாய் விலையுள்ள கார் என்பதால், அதை மிகவும் மலிவான கார் என கூறப் படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்து தரப்பினரும் வாங்கி பயன்படுத்தக் கூடிய கார் என்று கூறலாம். ஏற்கனவே நாங்கள் என்ன வாக்குறுதி அளித்தோமோ அதை உறுதியாக பின்பற்றுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. நானோ காரின் எகானமி ரக கார், ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
இந்த உயர் ரக கார்களில் ஏசி, பவர் பிரேக், பவர் விண்டோ உள்ளிட்ட வசதிகள் இருக்கும். இந்த கார்களை மேற்கு ஐரோப்பா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் உள்ளது. நானோ கார்களுக்கான முன் பதிவு அடுத்த மாதம் 9ம் தேதி முதல் துவங்குகிறது. வரும் ஜூலை மாதம் முதல் டெலிவரி செய்யப்படும்.முதல் ஒரு லட்சம் நானோ கார்களை வாங்கவுள்ள வாடிக்கையாளர்கள், முன்பதிவு செய்தவர்களில் இருந்து குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவர். கார் முன்பதிவு செய்வதற்கு அதிகபட்ச வரையறை எதுவும் இல்லை. குஜராத் சனாந்த்தில் ஆண்டுக்கு 2.50 லட்சம் கார்கள் தாயரிக்க முடியும். பின்னர், இது ஆண்டுக்கு ஐந்து லட்சம் கார்களாக அதிகரிக்கப்படும். நாங்கள் எதிர் பார்த்ததுக்கு முன் கூட்டியே நானோ கார் விற்பனைக்கு வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
முதல்கட்டமாக, பந்த் நகர் தொழிற்சாலையில் இருந்து 50 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் கார்கள் வரை சப்ளை செய்யப் படும். பந்த் நகரில் கார் தயாரிப்பது தற்காலிகமான ஏற்பாடு தான். ஒரு கோடிக்கும் அதிகமான நானோ கார்கள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவை மேலும் அதிகரித்தால் அதற்கேற்ப நிறுவனத்தின் உற்பத்தி திறனும் அதிகரிக்கப்படும். இவ்வாறு டாடா கூறினார்.
டாடா மோட்டார்ஸ் மேலாண்மை இயக்குனர் ரவி காந்த் கூறியதாவது: நானோ காருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ300. நாடுமுழுவதும் உள்ள ஸ்டேட் பாங்குகளில் இதற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம். டாடா நானோ கார் வாங்க கடன் வசதி கிடைக்கவும் 15 வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது. அதன் மூலம் வாங்குபவர்களுக்கு தனிக்கட்டணமும் உண்டு. முதலில் ஒரு லட்சம் கார்கள் வினியோகத்திற்கு கம்ப்யூட்டர் மூலம் தேர்வு செய்யப்படும். அப்படி கார் கிடைக்காத பட்சத்தில், நானோ காருக்காக முன்பதிவு செய்து ஒரு ஆண்டுக்கும் மேலாக காத்திருப்போருக்கு 8.5 சதவீத வட்டி அளிக்கப்படும். இரண்டு ஆண்டுக்கும் மேலாக காத்திருப்போருக்கு 8.75 சதவீத வட்டி தரப்படும். . நானோ கார்கள், நான்கு நபர்கள் வசதியாக அமரக் கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 624 சிசி திறன் கொண்ட இந்த கார்கள், மூன்று வகைகளில் கிடைக்கும். இரு சக்கர வாகனங்களை விட குறைவாகவே இந்த கார்கள் கார்பனை வெளிப்படுத்தும். அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 26.6 கி.மீ., வரை செல்லும். இவ்வாறு ரவிகாந்த் கூறினார்.
நன்றி : தினமலர்


Monday, March 23, 2009

நானோ காருக்கான புக்கிங் ஏப்ரல் 9 ம் தேதி துவங்குகிறது ; கார் ஜூலையில் கிடைக்கும்

மக்கள் கார் என்று டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா வால் அழைக்கப்படுவதும், உலகின் மிக மலிவான கார் என்றும் சொல்லப்படுவதுமான நானோ காருக்கான புக்கிங் ஏப்ரல் 9 ம் தேதி துவங்கும் என்று ரத்தன் டாடா தெரிவித்திருக்கிறார். ஏப்ரல் 9 ம் தேதி துவங்கப்படும் புக்கிங், ஏப்ரல் 23ம் தேதி வரை இருக்கும் என்றும், முதலில் புக் செய்யும் ஒரு வட்சம் பேருக்கு முதலில் நானோ விற்கப்படும் என்றும் அதன் விலை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ரத்தன் டாடா தெரிவித்தார். ஒரு லட்சம் ரூபாய்க்கு நானோ கொடுக்கப்படும் என்று முதலில் நாங்கள் சொன்ன வாக்கு காப்பாற்றப்படும் என்று சொன்ன அவர், அதை தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களின் விலை உயர்வையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது என்றார். இருந்தாலும் இப்போது அதன் விலை கொஞ்சம் குறைந்திருப்பது ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது என்றார். முதலில் புக் செய்த ஒரு லட்சம் பேருக்கு வரும் ஜூலை மாத துவக்கத்தில் கார் சப்ளை செய்யப்படும் என்றும், அதற்கான விண்ணப்ப பாரம் இந்தியா எங்கும் 1,000 நகரங்களில் 30,000 இடங்களில் கிடைக்கும் என்றார். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் 850 கிளைகள் அதிகாரம் கொண்டதாக இருக்கும். கடன் மூலமாக வாங்க விரும்புபவர்கள் முதலில் ரூ.2,999 மட்டும் செலுத்தி விட்டு மீதியை கடன் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என்றார். புக்கிங்கை பெற்றுக்கொள்ள மேலும் 15 நிதி நிறுவனங்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அவர்கள் பெயர் இன்னும் மூன்று நாட்களில் அறிவிக்கப்படும். கார் கடனுக்கான வட்டி எவ்வளவு என்பதை கடன் கொடுக்கும் வங்கியே தீர்மானிக்கும் என்று சொன்ன ரவி காந்தி, பொதுத்துறை வங்கிகளும் கடன் கொடுக்க முன் வந்திருக்கின்றன என்றார். குஜராத்தில் சனாண்ட் என்ற இடத்தில் நானோ வுக்காக பிரத்யேகமாக துவங்கப்பட்டிருக்கும் தொழிற்சாலையில் வருடத்திற்கு 2.5 லட்சம் கார்களை தயாரிக்க முடியும். அது, விரைவில் 5 லட்சம் கார்களை தயாரிக்க கூடியதாக விரிவாக்கம் செய்யப்படும். 4.5 மீட்டர் நீளமும், 624 சிசி இஞ்சினையும் கொண்டா நானோ காரில் நான்கு பேர் பயணம் செய்யலாம். இப்போதுள்ள இரு சக்கர வாகனங்கள் வெளியிடும் புகையை விட குறைவான அளவே புகையை வெளியிடும் இந்த காரில் அதிகபட்சமாக லிட்டருக்கு 26.6 கி.மீ.தூரம் வரை போகலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்டாண்டர்டு, டீலக்ஸ் மற்றும் லக்ஸூரி என்று மூன்று மாடல்களில் நானோ கிடைக்கிறது. நானோவின் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுக்கு, தேவையை பொறுத்து 2011 வாக்கில் ஏற்றுமதி செய்யப்படும் என்றார் ரத்தன் டாடா.
நன்றி : தினமலர்