Saturday, December 26, 2009

குறைந்து வரும் விவசாய நிலங்கள்

அரிசி இறக்குமதி செய்ய,​​ நீண்டகா​ லத்​திற்​குப் பின்​னர் மத்​திய அரசு சமீ​பத்​தில் அனு​மதி வழங்​கி​யுள்ளது.​ இந்தியாவின் உயிர்நாடித் ​ தொழில் விவசாயம்.​ அதிலும்,​​ அரிசி இந்தியர்களின் முக்கிய உணவாக உள்ள நிலையில் இத்தகைய இறக்குமதிக்கான அனுமதி நாட்டில் ​ விவசாயம் தேய்ந்து வருவதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் ​(2009,​ ஜூலை 24-ம் தேதி)​ மாநிலங்களவையில் தெரிவித்த தகவல்படி,​​ இந்தியாவின் ​ அரிசி உற்பத்தி முந்தைய ஆண்டை விட 21 சதவீதம் குறைந்துள்ளது.​ அதாவது 1 கோடியே 45 லட்சம் ஹெக்டேராக இருந்த நெல் ​ பயிரீடு 1 கோடியே 10 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது.

நாட்டின் அரிசி உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் உத்தரப்பிரதேசம்,​​ பிகார்,​​ மேற்கு வங்கம்,​​ சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நெல் ​ பயிரிடுவது கணிசமான அளவுக்குக் குறைந்திருக்கிறது.​ ​

தமிழகத்தின் மொத்த உணவுதானிய உற்பத்தியில் 85 சதவீதத்தை அரிசிதான் பெற்றுள்ளது.​ மாநிலத்தில் சுமார் 19 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது.​ ஆனால்,​​ இங்கும் விவசாய நிலங்கள் மெல்ல மெல்ல சுருங்கி வருகிறது.​ தமிழகத்தின் நெற்களஞ்சியமாகக் கருதப்பட்ட தஞ்சைப் பகுதி தற்போது பெரும் பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.​ ஆம்,​​ காவிரிப் படுகைப் ​ பகுதிகளில் தனியார் அனல்மின் நிலையங்கள் அமைக்கப்படுவதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்கப்படுகின்றன.​ இதனால்,​​ வாங்கப்படும் விவசாய நிலங்கள் மட்டுமன்றி அதன் அருகிலுள்ள விளைநிலங்கள் ​ மற்றும் மக்கள் வாழும் பகுதிகளில் கடும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது.​ ​ ​

கிராமங்களில் ஒரு சில ஏக்கர் விளைநிலத்தை மட்டும் வைத்திருப்பவர்கள்கூட கல்லூரி,​​ மருத்துவமனை,​​ தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட் ​ உரிமையாளர்களிடம் தங்கள் நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.​ இதைத் தடுப்பதற்கு கேரளத்தில் உள்ளதுபோல் விளைநிலத்தை குடியிருப்புப் பகுதி உள்ளிட்ட வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த கடும் விதிமுறைகளை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த ​ வேண்டும்.

2005}06-ம் ஆண்டு தகவல்படி அரிசி உற்பத்தியில் விழுப்புரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.​ இம்மாவட்டத்தில் 1,68,435 ஹெக்டேர் ​ நிலத்தில் நெல் பயிரிடப்படுகிறது என்று தமிழக அரசின் இணையதளம் தெரிவிக்கிறது.​ ​(நாகை மாவட்டம் இரண்டாமிடத்திலும்,​​ தஞ்சை ​ மாவட்டம் மூன்றாமிடத்திலும் உள்ளன.)​ நாடு முழுவதும் பெரும்பாலான புறநகர்ப் பகுதிகளில் கட்டுமானத் துறை மிக வேகமாக வளர்ச்சி ​ பெற்று வருகிற நிலையில்,​​ தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம்,​​ காஞ்சிபுரம்,​​ திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தற்போது ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலத்தை செங்கல் சூளைகளாக மாற்றத் தொடங்கியுள்ளனர்.​ ​

செங்கல் சூளைத் தொழில் லாபகரமாக உள்ளது என்றாலும்,​​ இது பூமி வெப்பமயமாவதை மேலும் அதிகரிக்கச் செய்யும் அபாயமும் ​ இருக்கிறது.​ சுமார் ஒரு லட்சம் செங்கற்களைத் தயாரிக்க 30 முதல் 40 டன் மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.​ இதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுகின்ற நிலையில் காடுகள் அழிக்கப்படுவதுடன் பூமி வெப்பமும் அதிகரிக்கிறது.

குடியிருப்புப் பகுதிகள் பெருகிய நிலையில் ஏரி நீர்ப்பாசனம்,​​ கால்வாய் நீர்ப்பாசனம் ஆகிய பாரம்பரிய நீர்ப்பாசன முறைகள் குறைந்து கிணற்றுநீர்ப் பாசனம் அதிகரிக்கத் தொடங்கியது.​ ஆனால்,​​ தற்போது கிணற்றுநீர்ப் பாசனமும் வெகுவாகக் குறைந்துள்ளது.​ 1974-ல் ​ தமிழகத்தில் சுமார் 7 லட்சம் பம்ப்செட்டுகள் இருந்தன.​ ஆனால்,​​ தற்போது சுமார் 20 லட்சம் பம்ப்செட்டுகள் உள்ளன.

மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் மணல் கொள்ளை நடைபெற்று வருவது ஊரறிந்த ரகசியம்.​ இதனால் ஆற்றுப் படுகைகளில் ​ நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அருகிலுள்ள விவசாயப் பாசனக் கிணறுகள் வறண்டு வருகின்றன.​ இதனால்,​​ தண்ணீர் இல்லாத நிலையில் -​ வானமும் பொய்த்துவிடுகின்ற சூழலில் -​ விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.​ இதனால் ​ விளைநிலங்கள் 'விலை'நிலங்களாக வேறு பணிகளுக்கு மாற்றம் பெறுகின்றன.

தமிழகத்தில் 2004}2005-ம் ஆண்டில் மொத்த உணவுதானிய உற்பத்தி 61,46,044 டன்கள் ஆகும்.​ ஆனால்,​​ 2005}06-ல் 61,16,145 ​ டன்கள் தான்.​ இது முந்தைய ஆண்டைவிட 29,899 டன்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல் எஸ்டேட் துறை தற்போதைய அளவுக்கு அசுர வளர்ச்சி பெறாத காலத்திலேயே இத்தகைய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றால்,​​ விளைநிலங்கள் வீட்டுமனைகளாகவும்,​​ தொழிற்சாலைகளாகவும்,​​ சிறப்புப் பொருளாதார மண்டலங்களாகவும் உருமாறி வரும் இன்றைய ​ காலத்தில் விவசாயத்தின் பரிதாப நிலை என்னவாக இருக்கும் என்பதைக் கணித்துக்கொள்ளுங்கள்.

கிராமப்புற வங்கிகள்,​​ விவசாய கூட்டுறவு வங்கிகள் ஆகியவை விவசாயிகளுக்கு அளிக்கும் மொத்தக் கடன்களைவிட,​​ வர்த்தக வங்கிகள் ​ தொழிற்சாலைகளுக்கு அளிக்கும் கடன்களின் அளவு நம் நாட்டில் எப்போதுமே பல மடங்கு அதிகமாக உள்ளது.​

இந்நிலை மாறி ​ விவசாயத்துக்குத் தேசிய வங்கிகளும் தனியார் வங்கிகளும் பெருமளவில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

உரங்களுக்காக விவசாயிகள் பெரும் தொகையைச் செலவழிக்க வேண்டியிருப்பதால் இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாய முறை குறித்த ​ விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த அரசும் சமூக ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.

இந்தியாவின் 75 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட கிராமங்களில் வசிக்கும் ​ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு மத்திய,​​ மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கையில் இறங்க வேண்டும்.​ கிராமப்புற இளைஞர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த ​ குறுந்தொழில்களில் ஈடுபட அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.​ அவர்களுக்கு வங்கிக் கடன்கள் மேலும் எளிதாகக் கிடைக்கும் வகையில் ​ நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.​ ​

இன்றைய தலைமுறையினர் விவசாயத்தின் மீது எந்தவித ஈடுபாடும் இல்லாத நிலையை முற்றிலும் மாற்ற அரசு முனைப்புடன் பல ஊக்குவிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே விவசாயத்தையும் அதுசார்ந்த கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த முடியும்.​​
கட்டுரையாளர் : மணிஷ்
நன்றி : தினமணி

ஐந்தில் மகிழாதது...

தமிழ்நாட்டில் செயல்வழிக் கல்வி தொடங்கப்பட்டபோது சில ஆசிரியர் சங்கங்கள் மத்தியில் முணுமுணுப்பு ஏற்பட்டாலும்,​​ "தொடக்கப்பள்ளி பாடத்திட்டத்தை மாற்றி அமையுங்கள்,​​ வீட்டுப்பாடங்களை ஒழியுங்கள்' என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமார்த்திய சென் இப்போது கூறியுள்ள கருத்தைப் பார்க்கும்போது,​​ செயல்வழிக் கல்வி நன்மை பயக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

அமார்த்திய சென் ஏதோ போகிற போக்கில் இந்த கருத்தைச் சொல்லிவிட்டுப் போகவில்லை.​ அவர் தனக்குக் கிடைத்த நோபல் பரிசுத் தொகையில் ஒரு பகுதியைக் கொண்டு நிறுவிய கிழக்கு அறக்கட்டளை ​(இந்தியா)​ என்ற அமைப்பு,​​ ​ மேற்கு வங்க மாநிலத்தில் 6 மாவட்டங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளை 2001-02ம் ஆண்டு ஆய்வுக்கு எடுத்துகொண்டு தொடர்ச்சியாக கண்காணித்த பின்னர் வெளியிட்ட அறிக்கையை வைத்துதான் அவர் கூறியிருக்கிறார்.

தொடக்கப் பள்ளிக் குழந்தைகளை வீட்டுப் பாடங்கள் செய்யும்படி சொல்லும்போது,​​ அக்குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்துக்கு உரித்தான விளையாட்டு,​​ மகிழ்ச்சிகளை இழந்துவிடுகிறார்கள் என்பது மட்டுமல்ல,​​ சமூகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சமூக,​​ பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் சேர்ந்துகொள்கின்றன.​ வசதி படைத்தவர்களும் சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவர்களும் தங்கள் குழந்தைகளை தனிவகுப்புகளுக்கு ​(டியூஷன்)​ அனுப்புகின்றனர்.​ இது அவர்களின் கல்வித் தரத்திலும் பிரதிபலிக்கிறது.

இந்த ஆய்வுகளின்படி,​​ தொடக்கப்பள்ளியில் 3 மற்றும் 4ம் வகுப்பு படிக்கும் சிறார்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 29 சதவீத குழந்தைகளால் எழுதப் படிக்க முடியவில்லை.​ முஸ்லிம் குழந்தைகளில் 27 சதவீதம் பேரும்,​​ பொதுப் பிரிவில் 8 சதவீத குழந்தைகளாலும் எழுதப் படிக்க முடியவில்லை.​ இதற்கு ​ தொடக்கப் பள்ளி பாடத்திட்டத்தில் உள்ள கோளாறுகளுடன் குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்யச் சொல்வதும்தான் என்பதே இந்த ஆய்வின் வெளிப்பாடு.

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் குழந்தைகள் கல்வி கற்கும் முறையே வேறாக இருக்கிறது.​ குழந்தைகளுக்கு 5 வயதுவரை வகுப்புகளில்கூட எழுத பணிக்கப்படுவதில்லை.​ உரையாடல்,​​ விளையாடுதல் இவை மட்டுமே அவர்களின் வகுப்பறையாக இருக்கின்றன.​ குழந்தைகள் அங்கே குழந்தைகளாகவே இருக்கின்றனர்.​ 5 வயதுக்குப் பிறகு,​​ தொடக்கப் பள்ளி வகுப்புகளில் அறிவியல்,​​ ​ ​ மொழி ஆகியவற்றின் அடிப்படை,​​ படித்தல்,​​ எழுதுதல்,​​ ஓவியம் போன்ற குழந்தைகளின் ஆர்வத்துக்கேற்ற நுண்கலை அறிமுகம் என சொல்லித்தரப்படுகிறது.​ பிறகுதான் பாடதிட்டத்தை மிகவும் செறிவானதாக கனமானதாக மாற்றுகின்றனர்.​ ஆனால் இந்த நிலைமை இந்தியாவில் இல்லை.

நர்சரி பள்ளிகள் அறிமுகமாகாத நிலையில்,​​ இந்தியாவிலும் குழந்தைகள் 5 வயது வரை நன்றாக விளையாடினார்கள்.​ வீட்டில் பெரியவர்களிடம் கதை கேட்டார்கள்.​ பேசினார்கள்,​​ சொல்லிக்கொடுத்த வழிபாட்டு பாடல்களையும் கதைகளையும் திருப்பிச் சொன்னார்கள்.​ பிறகுதான் அவர்கள் முதல் வகுப்பில் நேரிடையாக சேர்ந்து பயின்றார்கள்.​ அப்போதும்கூட முதல் வகுப்பு செல்லும் குழந்தையுடன் ஒரு கரும்பலகையும்,​​ தமிழ் மொழிப் புத்தகம் ஒன்றும் கூட்டல் கழித்தலுக்கான வாய்ப்பாடு புத்தகமும் மட்டுமே கையில் இருந்தது.​ மூன்றாம் வகுப்பில்தான் ஆங்கில அரிச்சுவடி கற்றுத்தரப்பட்டது.

இப்போதெல்லாம் பிரி-நர்சரி வகுப்புகள்,​​ கிரீச் என குழந்தைகள் வீட்டில் தங்கவே இல்லாத சூழல்களை இந்திய சமுதாயம் வரிந்து உருவாக்கிக் கொண்டுவிட்டது.​ நர்சரி குழந்தைகளை தங்கள் பிஞ்சு விரல்களைக் கொண்டு ஆங்கிலத்தை எழுதிப் பழக்குகிறார்கள்.​ எண்களை ஆயிரம் வரை எழுதித் தள்ளுகிறார்கள்.​ வீட்டுப் பாடங்களையும் செய்கிறார்கள்.​ புத்தக மூட்டைகளைச் சுமந்து செல்கிறார்கள்.​ தனிவகுப்புகளுக்கும் செல்கிறார்கள்.​ இத்தனைக்குப் பிறகும் அவர்களுக்கு விளையாட,​​ குழந்தைப் பருவத்தை அனுபவிக்க எங்கே நேரம் இருக்க முடியும்!

ஆங்கிலேயர் காலத்தில் முதல் பாரம் முடித்தவர்கள்கூட எழுதுவது பேசுவது படிப்பது மூன்றையும் தவறில்லாமல் செய்ய முடிந்தபோது இன்றைய பிளஸ் 2 மாணவர்கூட தவறில்லாமல் தமிழைக்கூட எழுதவும் முடியாத நிலை உருவானதை நினைக்க வேண்டியிருக்கிறது.

தற்போது சமச்சீர் கல்விக்காக பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.​ அந்த பாடத்திட்டங்கள்,​​ அமார்த்திய சென் குறிப்பிடும் வகையில்,​​ எளிமையானதாகவும் வீட்டுப்பாடங்களுக்குத் தேவை இல்லாத வகையிலும் இருக்கிறதா என்பது தெரியவில்லை.​ ஆனால் இப்போது தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள செயல்வழிக் கல்விக்கு எந்தக் குந்தகமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு மனிதன் வளர்ந்த பிறகு அசைபோட குழந்தைப் பருவ நினைவுகள் இல்லாவிட்டால்,​​ அவன் சமூகக் குற்றங்கள் செய்யும் வாய்ப்புகள் நேரிடுவதோடு,​​ உணர்வுபூர்வமான சிக்கல்களிலிருந்து மீள்வதில் பெரும் குழப்பத்தையும்,​​ இயலாமையையும் சந்திக்க நேர்கிறது என்பதுதான் உளவியல் கூறும் உண்மை.

"உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல,​​ அவர்கள் உங்கள் கனவின் குழந்தைகள்' என்பதற்காக,​​ நம்முடைய நிறைவேறாத வாழ்க்கை லட்சியங்களை அவர்கள் மீது திணிப்பது நியாயமாகாது.​ ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது என்ற பழமொழியை படிப்புக்காக மட்டுமே சொல்லப்பட்டதாக நாம் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம்.​ ஐந்தில் மகிழ்ச்சியாக இல்லாதது ஐம்பதிலும் மகிழ்ச்சியாக இருக்காது என்றும் புரிந்துகொள்ள வேண்டும்.
நன்றி : தினமணி

தமிழகம் பிரிக்கப்பட வேண்டுமா?

தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை மத்திய அரசு கொள்கையளவில் ஏற்றுக் கொண்டதையடுத்து நாட்டின் பிற பகுதிகளிலும் தனிமாநிலக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.​ வன்முறை மூலம் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.​ இந்திய அரசுக்கு இந்த மொழிதான் புரிகிறது.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தைப் பிரித்து புந்தேல்கண்ட்,​​ பஸ்சிமாஞ்சல் ​(மேற்கு உத்தரப் பிரதேசம்)​ மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்று அம் மாநில முதல்வர் மாயாவதி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.​ இப்போது உ.பி.யின் கிழக்குப் பகுதிகளைப் பிரித்து பூர்வாஞ்சல் மாநிலத்தை அமைப்பதற்கான அரசியல் சட்ட நடைமுறைகளை விரைவுபடுத்துமாறு பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்கத்தைப் பிரித்து கூர்க்கா தனிமாநிலம் அமைக்க வேண்டுமென்று பாஜகவும்,​​ கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவும் கோரிக்கை எழுப்பியுள்ளன.​ இது 102 ஆண்டுகாலக் கோரிக்கையாம்.​ எல்லைப் பகுதியின் காவலர்களாக இருக்கும் அவர்கள் உணர்வுரீதியாகவும்,​​ புவியியல் ரீதியாகவும் மேற்குவங்க மாநிலத்தின் மற்ற பகுதியிலிருந்து தனிமைப்பட்டுக் கிடக்கின்றனராம்.

மகாராஷ்டிர மாநிலத்தில் விதர்ப்பா தனிமாநிலக் கோரிக்கையும் எழுந்துள்ளது.​ மகாராஷ்டிர பாஜகவின் இந்தக் கோரிக்கையை அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா எதிர்க்கிறது.​ விதர்ப்பா தனி மாநிலக் கோரிக்கையை எழுப்புபவர்கள் ஒருங்கிணைந்த மகாராஷ்டிரத்துக்காக உயிர் நீத்த 105 தியாகிகளின் கனவுகளைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று அது கூறுகிறது.

இதேபோல போடோ மக்கள் முன்னணி உறுப்பினர் பிஸ்வமூர்த்தி,​​ "போடோலேண்ட்' அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்திலேயே கோரியுள்ளார்.​ அசாம் மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

பிகார் மாநிலத்தைப் பிரித்து,​​ "மிதிலாஞ்சல்' மாநிலமும்,​​ குஜராத் மாநிலத்தைப் பிரித்து,​​ "சௌராஷ்டிரா' மாநிலமும் அமைக்க வேண்டும்;​ உ.பி.யின் கிழக்குப் பகுதியையும் பிகாரின் சில பகுதிகளையும் பிரித்து "போஜ்புர்' மாநிலமும் அமைக்க வேண்டும் என இது தொடர்கிறது.

2000-ல் பிகாரிலிருந்து "ஜார்க்கண்ட்' மாநிலமும்,​​ உ.பி.யிலிருந்து "உத்தரகண்ட்' மாநிலமும்,​​ மத்தியப் பிரதேசத்திலிருந்து "சத்தீஸ்கர்' மாநிலமும் பிரிக்கப்பட்டன.​ இப்போது தெலங்கானா அமையுமானால் இது இந்தியாவின் 29-வது மாநிலமாகும்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒரு புதிய குரல் கேட்கிறது.​ தமிழகத்தை இரண்டாகப் பிரித்தால் நல்லது.​ சிறிய மாநிலமாக இருந்தால் வளர்ச்சியிருக்கும்;​ நிர்வாகமும் எளிதாக இருக்கும்.​ ஆனால் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பது பாமகவின் முன்னுரிமைக் கோரிக்கை அல்ல என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.​ இதனை வேறு சிலரும் வரவேற்றுள்ளனர்.

ஆனால் தமிழக முதல்வர் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.​ ""அப்படிப்பட்ட கருத்து திமுகவிலும் இல்லை;​ தமிழ்நாட்டு மக்களுக்கும் இல்லை'' என்று கூறியுள்ளார்.

தமிழகத்தை இரண்டாகப் பிரிப்பது போன்ற யோசனைகள் மிகவும் ஆபத்தானவை மட்டுமல்ல,​​ அபத்தமானவை.​ இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று தொடங்கும்போதே,​​ "ஏன் இதனை சேர நாடு,​​ சோழ நாடு,​​ பாண்டிய நாடு என மூன்றாகப் பிரிக்கக் கூடாதா?' என்ற அடுத்த கேள்வியும் எழும்.​ அத்துடன் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டதன் நோக்கமும் நீர்த்துப் போகும்.

அந்தக் காலத்தில் தமிழகம் பல நாடுகளாக இருந்தது என்பது உண்மைதான்.​ சேர நாடு,​​ சோழ நாடு,​​ பாண்டிய நாடு என்பவை முடியுடை மூவேந்தர்களால் ஆளப்பட்டன.​ அத்துடன் பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு கி.மு.​ 300 முதல் 600-ம் ஆண்டு வரை அரசாட்சி செய்திருக்கின்றனர்.​ பல்லவர்களை வென்று காஞ்சியைக் கைப்பற்றி சாளுக்கியர்களும் சிலகாலம் ஆட்சி செய்துள்ளனர்.

இதுதவிர,​​ தொண்டை நாடு,​​ கொங்கு நாடுகளும் இருந்தன.​ மூவேந்தருக்குக் கட்டுப்பட்டும்,​​ கட்டுப்படாமலும் குன்றுதோறும் கோட்டைகளைக் கட்டிக்கொண்டு பல சிற்றரசர்கள் தனியாகவே ஆண்டுவந்தனர்.​ மேலும் தமிழ்நாட்டில் பல ஊர்களே நாடு என்ற பெயரில் வழங்கின.​ ஒரத்த நாடு,​​ பாப்பா நாடு,​​ பைங்கா நாடு,​​ வள நாடு எனக் கூறலாம்.​ இந்த ஊர்களே ஒரு நாடாக பல பண்ணையார்களால் ஆளப்பட்டுள்ளன.​ இன்றும் அவ்வூர்களில் அவர்களின் வம்சாவளியினர் இருக்கின்றனர்.​ இவையெல்லாம் கடந்த கால வரலாறு.

நாடு விடுதலை பெற்றதும்,​​ மாநில வரையறை பற்றிய கேள்வி எழுந்தது.​ பிரதமர் நேருவின் தட்சிணப் பிரதேசத் திட்டம் ஏற்கப்படாததால் மொழிவழியாக மாநிலங்களைப் பிரித்து அமைப்பதற்காக "மாநிலப் புனரமைப்புக் குழு' நியமிக்கப்பட்டது.​ அதன் பரிந்துரை செயல்படுத்தப்பட்டது.

அப்போது சென்னை மாகாணம் என்பது திராவிட நாடாக-பல மொழிகள் பேசும் மாநிலமாக இருந்தது.​ 1953-ல் சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரம் முதலில் பிரிந்தது.​ 1956-ல் மலபார் மாவட்டம் பிரிந்து கேரளத்தில் இணைந்தது.​ தென் கன்னட மாவட்டம் பிரிக்கப்பட்டு கர்நாடகத்துடன் சேர்ந்தது.​ மீதம் இருந்ததே தமிழ்நாடானது.

கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் வடக்கு எல்லையாக வேங்கட மலையும்,​​ தெற்கு எல்லையாக குமரியாறும்,​​ கிழக்கும்,​​ மேற்கும் கடலாகவும் இருந்தன என்று தமிழக வரலாறு கூறுகிறது.​ இதனையே,​​ "வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து' என பண்டைய புலவர்களும் பாடியுள்ளனர்.

ஆனால் மொழிவழி மாநிலப் பிரிவினையின்போது தமிழகத்தின் பல பகுதிகள் பறிபோய்விட்டன.​ தமிழகத்தின் வட எல்லையான வேங்கடம்,​​ சித்தூர் முதலிய பகுதிகள் ஆந்திரத்துக்கும்,​​ தேவிகுளம்,​​ பீர்மேடு முதலிய தமிழ்ப்பகுதிகள் கேரளத்துக்கும்,​​ கோலார் தங்கவயல் முதலிய தமிழ்நிலம் கர்​ நாடகத்துக்கும் எடுத்துத் தரப்பட்டபோது இதுபற்றி இங்கே யாரும் கவலைப்படவில்லை.

தமிழ்நாட்டில் இருந்த பெரிய கட்சிகள் எல்லாம் கண்டும்,​​ காணாமல் இருந்தபோது,​​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி.யும்,​​ அவர் கட்சியினருமே குரல் கொடுத்தனர்.​ எல்லைப் போராட்டங்களை எடுத்து நடத்தினர்.​ வடஎல்லை பாதுகாப்புக் குழுவின் செயலாளராக இருந்த கே.​ விநாயகம்,​​ சித்தூர் மாவட்டத்தில் வாழ்ந்த 4 லட்சம் தமிழர்களுக்காகப் பாடுபட்ட மங்கலக்கிழார் இவர்களைத் தமிழக வரலாறு மறக்காது.

எனவே இழந்த மண்ணை மீட்காவிட்டாலும்,​​ இருக்கும் மண்ணையாவது இழந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்.​ மாநிலத்தைக் கூறுபோடுவதைவிட அதன் முன்னேற்றத்துக்காக உழைப்பதே பெருமையாகும்.

தமிழ்நாட்டில் நிர்வாகம் எளிதாக இருக்க வேண்டுமானால் அரசுத் துறைகள் எல்லாம் மாநிலம் முழுவதும் பரவலாக்கப்பட வேண்டும்.​ எல்லாவற்றையும் தலைநகரிலேயே தேக்கி வைப்பது கடந்த காலங்களில் தேவையாக இருக்கலாம்;​ இனித் தேவை இல்லை.​ நாட்டின் கடைகோடியில் இருக்கும் ஒருவர் எல்லாவற்றுக்கும் அரசுத்துறையை நாடி சென்னைக்கு மூட்டை கட்டிக் கொண்டு வர வேண்டும் என்பது என்ன நியாயம்?​

தொழில் துறையை கோவை அல்லது திருப்பூருக்கும், வேளாண்மைத்துறையை தஞ்சாவூர் அல்லது திருச்சிக்கும் மாற்றவேண்டும். இது தவிர மதுரை, நெல்லை, சேலம் முதலிய புறநகரங்களுக்கும் பிற துறைகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.அதிகாரங்கள் ஓர் இடத்தில் குவிவது ஆபத்தாகும்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.​ தமிழ்நாட்டின் தலைநகர் மாநிலத்தின் மையப்பகுதியாகிய திருச்சியில் இருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தார்.​ ஆனால் அதற்கான முயற்சிகளை அவர் மேற்கொள்ள விடாமல் அதிகாரிகளே தடுத்து விட்டனர் என்று அப்போது கூறப்பட்டது.​ தலைநகரை மாற்றுவதற்குப் பதிலாகத் துறைகளை மாற்றுவது எளிதாகும்.

இன்றைய அறிவியல் உலகில் அமைச்சர்கள் எங்கு வேண்டுமானாலும் இருந்து கொண்டு நிர்வாகத்தை நடத்த முடியும்.​ "விடியோ கான்பரன்ஸ்' முறை இப்போதே செயல்பாட்டில் இருக்கிறது;​ மனம் வைத்தால் மார்க்கமா இல்லை?

அழகிய தேன்கூட்டைக் கல்வீசிக் கலைப்பதா?​ அவை கொட்ட வரும்போது எட்டி எட்டி ஓடுவதா?​ தெலங்கானா பிரச்னையைத் தொட்டுவிட்டு மத்திய அரசு செய்வது அறியாமல் திகைத்து நிற்பது போதாதா?​ சும்மா கிடக்கும் சங்கை ஊதிக் கெடுக்க வேண்டாம்.
கட்டுரையாளர் :உதயை மு.​ வீரையன்
நன்றி : தினமணி