Tuesday, January 19, 2010

மாருதி சுசூகியின் 'ஈக்கோ' குடும்ப கார்


இந்தியாவில் ஆட்டோ மொபைல் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசூகி, ஆறு வண்ணங்களில் புதிய குடும்பக் காரான, 'ஈக்கோ'வை அறிமுகம் செய்துள்ளது. மாருதி சுசூகியின் ஈக்கோ, ஐந்து கதவுகளை கொண்ட, 'சி' பிரிவு கார். இந்தியாவிற்காக இக்காரை மாருதி நிறுவனம் மாறுபட்ட வடிவமைப்புடன் ஏழு சீட்டுகள் மற்றும் ஐந்து சீட்டுகள் கொண்ட ஈக்கோ குடும்பக் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஸ்டைலாகவும், அதிக இடவசதி கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஈக்கோவில் புதிய சக்தி வாய்ந்த நான்கு சிலிண்டர் 1,200 சி.சி., இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டருக்கு 15.1 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்யலாம். மெட்டாலிக் கிஸ்டெனிங் கிரே, மெட்டாலிக் சில்கி சில்வர், மெட்டாலிக் மிட்னைட் பிளாக், மெட்டாலிக் ப்ளூ பிளேஸ், பிரைட் ரெட் மற்றும் சூப்பிரியர் ஒயிட் என ஆறு வண்ணங்களில் இக்கார்கள் உள்ளன. ஈக்கோவில் முன், நடு மற்றும் பின்பக்க சீட்டுகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன. குடும்பங்களுக்கு ஏற்ற வகையில் பெரியதாகவும், வர்த்தகத்திற்கு ஏற்றதாகவும் இரட்டை நோக்கங்களை ஈக்கோ நிறைவேற்றுகிறது என்று மாருதி சுசூகி நிறுவன மண்டல மேலாளர் சந்தா, வர்த்தக மேலாளர் மனோகர் பட் ஆகியோர் தெரிவித்தனர்.

நன்றி : தினமலர்


போதும் போலித்தனம்!

கடந்த இரண்டு மாதமாக இந்தியாவின் பல பாகங்களில்,குறிப்பாகப் பெருநகரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பல மருந்துக் கடைகளில் போலி மருந்துகளும்,போதை மருந்துகளும் விற்கப்படும் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.போதாக்குறைக்கு,பல மருந்துக் கடைகளில் காலாவதியான மருந்துகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் திருப்பித் தரப்படுவதற்குப் பதிலாக ஏமாளி வாடிக்கையாளர்களின் தலையில் கட்டப்படுவதும் தெரிய வந்திருக்கிறது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.2000-க்கும் அதிகமான வழக்குகள் மருந்துக்கடை அதிபர்கள்மீது தொடரப்பட்டுள்ளன.

1940-ல் பிரிட்டிஷார் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட மருந்து மற்றும் அழகுச் சாதனங்கள் சட்டம் எந்த அளவுக்கு இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த உதவியிருக்கிறது என்பது சந்தேகம்தான்.அந்தச் சட்டப்படி குற்றவாளிகளுக்கு அபராதம் விதிப்பதுடன் அவர்களது மருந்து விற்பனை செய்யும் உரிமம் பறிக்கப்படவும் செய்யலாம்,அவ்வளவே.

போலி மருந்துகள் விற்கப்படுவதைத் தடுப்பதற்காக எல்லா மாநிலங்களிலும் தனியாக ஒரு பிரிவு மக்கள் நல்வாழ்வுத் துறையில் இருந்தாலும்,அந்தப் பிரிவு போதிய ஆள்பலம் இல்லாத,தேவையான அதிகாரம் இல்லாத ஒரு பிரிவாகத்தான் செயல்படுகிறது.தமிழகத்தையே எடுத்துக் கொண்டால் இந்தப் பிரிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 70 அதிகாரிகளில் 40 மருந்துக் கண்காணிப்பாளர்கள்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.ஏறத்தாழ 30 இடங்கள் கடந்த மாதம் வரை நிரப்பப்படாமல் இருந்தன.

சென்னையில் மட்டும் 400-க்கும் அதிகமான மருந்துக் கடைகள் இருக்கின்றன.ஆனால் மருந்துக் கண்காணிப்பாளர்கள் வெறும் 12 பேர் தான்.இவர்களுக்கு ஜீப்போ,தேவையான பணியாளர்கள் பலமோ உண்டா என்றால் அதுவும் இல்லை.இதே நிலைதான்,இந்தியா முழுவதும்!

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா மருத்துவத் துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்பதில் மாறுபட்ட கருத்தில்லைதான்.ஆனால் அந்த முன்னேற்றம் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும்,மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுக்கும்,மருத்துவமனைகளுக்கும் பயன்படும் அளவுக்குச் சாதாரண பொதுமக்களுக்குப் பயன்படுகிறதா என்று கேட்டால் சந்தேகம்தான்.

இந்தியாவில் மருந்து தயாரிப்புத் துறையின் ஓராண்டு விற்றுமுதல் சுமார் ரூ.85,000 கோடி.அதில்,சுமார் ரூ.35,000 கோடி மதிப்புள்ள மருந்துகள் ஏற்றுமதியாகின்றன.இந்த ஏற்றுமதியில் போலி மருந்துகளும் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏற்கெனவே சீனா,இந்தியாவில் தயாரித்தவை என்கிற முத்திரையுடன் உலகச் சந்தையில் போலி மருந்துகளை விநியோகித்து இந்தியாவின் ஏற்றுமதியைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் இந்தியாவிலேயே போலி மருந்துகள் அதிக அளவில் தயாரிக்கப்படுவதாகச் செய்திகள் வரும்போது உலக அரங்கில் இந்தியாவில் தயாராகும் மருந்துகளின் தரம் கேள்விக்குறியாகி நமது ஏற்றுமதி கணிசமாகப் பாதிக்கப்படலாம்.

இந்தியச் சந்தையில் விற்கப்படும் மருந்துகளில் 3 விழுக்காடு மருந்துகள் போலியானவை என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு.போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனை பற்றித் தகவல் அளித்தால்,கைப்பற்றப்படும் போலி மருந்துகளின் தொகையில் 20 சதவிகிதம் அல்லது ரூ.25 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்கிற மத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பு எந்த அளவுக்குப் பயனளிக்கிறது என்பது தெரியவில்லை.போதுமான கண்காணிப்பாளர்களும்,அவர்களுக்குத் தேவையான வசதிகளும்,ஆள்பலமும் இல்லாமல் இதுபோன்ற அறிவிப்புகளால் என்ன பயன் இருக்க முடியும்?

மருந்து மற்றும் அழகுப் பொருள்கள் சட்டம் திருத்தப்பட்டு,குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் மட்டும்தான் போலி மருந்துகளையும் போதை மருந்து விநியோகத்தையும் தடுக்க முடியும் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா என்ன?மக்கள் விழிப்புணர்வு பெறாத வரையில் ஆட்சியாளர்கள் கண்துடைப்புச் சட்டங்களைப் போட்டுத் தப்பித்துக் கொள்வார்கள்!
நன்றி : தினமணி

எலுமிச்ச‌ை சுவையில் புதிய குளிர்பானம்: கோகோகோலா அறிமுகம்

எலுமிச்சை சுவை கொண்ட புதிய குளிர்பானத்தை கோகோ கோலா நிறுவனம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த குளிர்பானத்திற்கு மினிட் மெய்ட் நிம்பு என பெயரிடப் பட்டுள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் கூறும்போது, எலுமிச்சை சாறு அடிப்படையிலான சுவை கொண்ட குளிர்பானமாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. இது வீட்டில் தயாரிக்கப்படும் எலுமிச்சை போன்று புத்துணர்வு அனுபவத்தை அளிக்கும் என்று‌ தெரிவித்தார்.
400 மில்லி மற்றும் 1 லிட்டர் பெட் பாட்டில்களில் இவை விற்பனைக்கு வந்துள்ளன. தமிழகம் முழுவதும் இது படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். விலை முறையே ரூ. 15 மற்றும் ரூ. 40.

புதிதாக அறிமுகப்படுத்தப் பட்ட குளிர்பானம் குறித்து, சந்தைப் பிரிவுத் துணைத் தலைவர் ரிக்கார்டோ ஃபோர்ட் கூறும்போது, தமிழகத்தில் திருநெல்வேலியில் கங்கை கொண்டான் ஆலை மற்றும் ஆந்திரத்தில் சித்தூரில் உள்ள ஆலையில் இது தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த குளிர்பானத்தில் எவ்வித பதப்படுத்திகள் மற்றும் வண்ணச் சேர்ப்புகள் ஏதும் சேர்க்கப்படவில்லை. 'முற்றிலும் வீட்டு சுவை' என்ற வாசகத்துடன் இதை நாடு முழுவதும் பிரபலப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்