Tuesday, November 25, 2008

சரிவில் முடிந்தது இன்றைய பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில், பகல் 2 மணி வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ்,பின்னர் குறைய துவங்கியது. ஆசிய சந்தைகள் உயர்ந்திருந்ததை தொடர்ந்து உயர்ந்திருந்த சென்செக்ஸ், பின்னர் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகளில் ஏற்பட்ட சரிவை தொடர்ந்து சரிய துவங்கியதாக சொல்கிறார்கள். காலையில் உயர்ந்து கொண்டிருந்த சந்தையை பார்த்து உற்சாகத்தில் இருந்த வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும், மதியத்திற்கு மேல் சரிய துவங்கிய சந்தையை பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 207.59 புள்ளிகள் ( 2.33 சதவீதம் ) குறைந்து 8,695.53 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 54.25 புள்ளிகள் ( 2 சதவீதம் ) குறைந்து 2,654 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், எஸ்.பி.ஐ., பார்தி ஏர்டெல், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், இன்போசிஸ், ஹெச்.டி.எப்.சி., டி.சி.எஸ்., பெல், ஐ.டி.சி., மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை இன்று சரிவை சந்தித்தன. இன்று ஐரோப்பிய, அமெரிக்க சந்தைகள் சரிவில் இருந்தாலும் ஆசிய சந்தை உயர்ந்து தான் முடிந்திருந்தது.நிக்கி 5.22 சதவீதம், ஸ்டெயிட் டைம்ஸ் மற்றும் தைவான் முறையே 2 மற்றும் 2.6 சதவீதம், ஹேங்செங் 3.38 சதவீதம், ஜகர்தா மற்றும் கோஸ்பி முறையே 1.12 மற்றும் 1.36 சதவீதம் உயர்ந்திருந்தது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் சரிவில்தான் இருக்கின்றன.
நன்றி : தினமலர்


ஒப்பந்த ஊழியர்களை குறைக்க கூகிள் நிறுவனம் முடிவு ?

இன்டர்நெட் நிறுவனமான கூகிள், அதன் ஒப்பந்த ஊழியர்களை கணிசமாக குறைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.பொருளாதார சீர்குழைவு ஆரம்பித்ததற்கு முன்பிருந்தே நாங்கள் ஒப்பந்த ஊழியர்கள் எண்ணிக்கையை குறிப்பிட்ட அளவு குறைத்து விடயோசித்து வருகிறோம் என்று கூகிள் நிறுவனத்தை சேர்ந்த ஜேன் பென்னர் தெரிவித்தார்.ஆனால் எத்தனை ஊழியர்கள் குறைக்கப்படுகிறார்கள் என்பதை அவர் சொல்ல மறுத்து விட்டார். கூகிள் நிறுவனத்தில் 20,123 நிரந்தர ஊழியர்களும் சுமார் 10,000 ஒப்பந்த ஊழியர்களும் பணியாற்றுகிறார்கள்.
நன்றி : தினமலர்


ரூ.3 கோடி விலையுளள பென்ஸ் கார் இந்த மாதம் இந்தியா வருகிறது

பிரபல ஜெர்மன் கார் கம்பெனியான மெர்சிடஸ் பென்ஸ், அதன் ஏ.எம்.ஜி. வரிசை கார்களில் 6 மாடல்களை இந்த மாத இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. சர்வதேச அளவில் கார் மார்க்கெட் சரிந்திருந்தபோதும் உலகின் மிக காஸ்ட்லியான கார்களை தயாரிக்கும் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் அதன் ஏ.எம்.ஜி., மாடல் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. அதன் விலை ரூ.1.25 கோடியில் இருந்து ரூ.3 கோடி வரை இருக்கும் என்று அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. மெரிசிடஸ் பென்ஸ் கார்களிலேயே அதிக காஸ்ட்லியான கார்கள் என்று சொல்லப்படும் இந்த வகை கார்களுக்கு இந்தியாவில் ஆர்டர்கள் மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும். கார்கள் ஜெர்மனியில் இருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். கார்கள் இங்கு வந்து சேர இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகலாம். மெர்சிடஸ் பென்ஸின் ரேஸ் கார்கள் தயாரிக்கும் பிரிவு ஏ.எம்.ஜி., என்று அழைக்கப்படுகிறது. கார் மார்க்கெட்டை பொருத்தவரை, மிட்சைஸ் கார் விற்பனைதான் 5 சதவீதம் குறைந்திருக்கிறது. ரூ.25 லட்சத்துக்கு மேல் ரூ.ஒரு கோடி வரை விலையில் இருக்கும் சொகுசு கார்கள் விற்பனை சரியவில்லை. மாறாக உயர்ந்துதான் இருக்கிறது. ஜெர்மனியின் மிகப்பெரிய மூன்று சொகுசு கார் தயாரிப்பாளர்களான பென்ஸ், பி.எம்.டபிள்யூ.,மற்றும் ஆடி ஆகியவையின் சொகுசு கார் விற்பனை, கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் இரட்டிப்பாக உயர்ந்து தான் இருக்கிறது. இந்திய சந்தையில் சொகுசு கார்களான லம்போர்கினி, பென்ட்லி, ரால்ஸ் ராய்ஸ், போர்ச் ஆகியவற்றின் விற்பனை கணிசமாக உயர்ந்திருக்கிறது. ரால்ஸ் ராய்ஸ் நிறுவனம், இந்த வருடத்தில் விற்க எண்ணியிருந்த கார்களை இப்போதே விற்றுவிட்டதாக சொல்கிறது.போர்ச் கார்களின் விற்பனை இரட்டிப்பாகி இருக்கிறது. லம்பார்கினி, இந்த வருட இலக்கை இப்போதே அடைந்து விட்டதாக சொல்கிறது. ஏப்ரல் - அக்டோபரில் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் 1,936 கார்களை இந்தியாவில் விற்றிருக்கிறது. இது கடந்த வருடத்தை விட 46 சதவீதம் அதிகம். இந்த மாத இறுதிக்குள் வர இருக்கும் சொகுசு கார்கள் உட்பட மெர்சிடஸ் பென்ஸ் கார்களின் எல்லா மாடல்களையும் எளிய முறையில் வாங்க இனிமேல் நாம் ஐசிஐசிஐ பேங்க்கை அனுகலாம். அதற்கான ஏற்பாட்டை ஐசிஐசிஐ பேங்க்குடன் பென்ஸ் நிறுவனம் ஏற்படுத்தி கொடுக்கிறது.
நன்றி : தினமலர்


பதவி விலகியதும் நூலகம் துவங்குகிறார் ஜார்ஜ் புஷ்

அமெரிக்க அதிபராக இருக்கும் ஜார்ஜ் புஷ்ஷின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் 20 ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பின் அவர் என்ன செய்யப்போகிறார் என்று உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறது. இந்நிலையில் பெரு நாட்டுக்கு சென்ற அதிபர் புஷ்ஷின் மனைவி லாரா புஷ்ஷை சூழ்ந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள் இது பற்றி கேள்வி கேட்டு துளைத்தனர். அப்போது அவர், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியதும் அவர்களது சொந்த மாகாணமான டெக்ஸாஸ் செல்ல இருப்பதாகவும், அங்கு டல்லஸ் நகரில் நூலகம் ஒன்று துவங்க இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ஃபிரீடம் இன்ஸ்டிடியூட் ஒன்றை துவக்கவும் புஷ் விரும்பமாக இருக்கிறார் என்றார். நூலகத்திலும் ஃபிரீடம் இன்ஸ்டிடியூட்டிலும் புஷ் பொழுதை போக்கும்போது, லாரா புஷ் கல்வித்துறையில் சேவை செய்ய செல்ல இருக்கிறார். லாரா புஷ், அதிபர் மனைவியாக வெள்ளை மாளிøக்கு செல்லும் முன் டீச்சராகத்தான் வேலை பார்த்து வந்தார். மேலும் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கான மனித உரிமையை நிலைநாட்ட, அவர் போராட்டப் போவதாகவும் தெரிவித்தார். மேலும் இன்னொரு நபரிடம் ஜார்ஜ் புஷ், அவரது எதிர்காலம் குறித்து பேசியபோது, தான் ஒய்வு பெற்றபின் சொற்பொழிவு ஆற்றப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
நன்றி : தினமலர்


டிசம்பர் 24ம் தேதிக்குப்பின் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் : முரளி தியோரா

சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 24 ம் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதை அடுத்து, இந்தியாவிலும் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. நானும் அதே எண்ணத்தில்தான் இருக்கிறேன். ஆனால் டிசம்பர் 24ம் தேதிக்குப்பின்தான் விலையை குறைக்க முடியும் என்றார் தியோரா. சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு வாரங்களாக கச்சா எண்ணெய், சராசரியாக இருந்த விலையின் அடிப்படையில் எடுத்த கணக்கின்படி, இந்திய எண்ணெய் கம்பெனிகள் பெட்ரோல் விற்பனையில் நாள் ஒன்றுக்கு ரூ.16 கோடியும் டீசல் விற்பனையில் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடியும் லாபம் ஈட்டுகின்றன. இருந்தாலும் நியாய விலைகடை மூலம் மண்ணெண்ணெய் விற்கும்போதும் சமையல் கேஸ் விற்பனையிலும் நஷ்டம்தான் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு லிட்டர் மண்ணெண்ணெயிலும் ரூ. 22.40 ம்,ஒவ்வொரு சிலிண்டர் சமையல் கேஸ் விற்பவையிலும் ரூ.343.49 ம் நஷ்டம் ஏற்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் இதனால் ஏற்பட்டு வந்த நஷ்டம் குறைந்திருக்கிறது என்றார் தியோரா.
நன்றி : தினமலர்


வெளிநாட்டு பைலட்களை வெளியேற்றுவது பற்றி விரைவில் முடிவு : ஜெட் ஏர்வேஸ் சி.இ.ஓ.

ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது பற்றி, கடந்த ஞாயிறு அன்று ஜெட் ஏர்வேஸின் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்களிடையே நடந்த பேச்சுவார்த்தையின் போது, அதிகம் சம்பளம் வாங்கும் ஊழியர்களின் சம்பளத்தில் 5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை குறைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதை ஊழியர்களும் ஒத்துக்கொண்டனர். ஆனால் பைலட்களில் சம்பளத்தை குறைக்க மட்டும் பைலட்கள் ஒத்துக்கொள்ளவில்லை. வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து, இங்குள்ள பைலட்களை விட 50 சதவீதம் கூடுதல் சம்பளம் மற்றும் சலுகைகளை பெற்று, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அத்தனை வெளிநாட்டு பைலட்களையும் ஜெட் ஏர்வேஸில் இருந்து வெளியேற்றினால் தான் சம்பள குறைப்பு குறித்து பரிசீலிப்போம் என்று இந்திய பைலட்கள் போர்க்கொடி தூக்கினர். இது குறித்து நேற்று பதிலளித்த ஜெட் ஏர்வேஸின் சி.இ.ஓ., வோல்பங்க் புரோசாவர், வெளிநாட்டு பைலட்களை முழுவதுமாக வெளியேற்றுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றார். ஆனால் இப்போதைக்கு நாங்கள் இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார். இது கொஞ்சம் நிதானமாக யோசித்து முடிவு செய்யக்கூடிய விஷயமாக இருக்கிறது. எனவே இப்போதைக்கு ஒரு முடிவுக்கு எங்களால் வர முடியவில்லை. எனினும் கூடிய விரைவில் அவர்களை குறைப்பது பற்றிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்றார். அநேகமாக வெளிநாட்டு பைலட்களில் 15 சதவீதத்தினரை ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் விரைவில் குறைக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்திய பைலட்களோ அத்தனை வெளிநாட்டு பைலட்களையும் வெளியேற்றற வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். ஜெட் ஏர்வேஸில் இருக்கும் 1,000 பைலட்களில் 240 பேர் வெளிநாட்டு பைலட்கள். அவர்கள் ஜெட் ஏர்வேஸின் பெரிய விமானங்களை மட்டும் ஓட்டுகிறார்கள். அவர்கள் இந்திய பைலட்களை விட 40 முதல் 50 சதவீதம் வரை கூடுதலாக சம்பளம் பெறுகிறார்கள். எனவே நிர்வாகம் செலவை குறைக்க வேண்டும் என்று விரும்பினால் அவர்களிடமிருந்து அதை ஆரம்பிக்கலாமே என்று இந்திய பைலட்கள் சொல்கிறார்கள்.
நன்றி : தினமலர்


அமெரிக்க அரசின் உறுதிமொழியால் சிட்டி பேங்க்கின் பங்கு மதிப்பு 58 சதவீதம் உயர்ந்தது

மோசமான நிதி நிலையால் திவால் நிலை வரை வந்த அமெரிக்காவின் சிட்டி பேங்க்கை காப்பாற்ற, அதில் 20 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய அமெரிக்க நிதித்துறை ஒத்துக்கொண்டதை அடுத்து, பாதாளத்திற்கு சென்றிருந்த அந்த வங்கியின் பங்கு மதிப்பு நேற்று 58 சதவீதம் உயர்ந்து விட்டது. இது தவிர அந்த வங்கியில் வராக்கடனாக நீண்டகாலமாக இருக்கும் 306 பில்லியன் டாலர்களுக்கும், அமெரிக்க நிதித்துறை மற்றும் பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்பரேஷன் பொறுப்பேற்றுக்கொள்வதாகவும் அறிவித்திருக்கிறது. கடந்த மாதத்தில் தான் சிட்டி பேங்க்கில் பொதுமக்கள் பணம் 25 பில்லியன் டாலர்களை அமெரிக்க அரசு முதலீடு செய்திருக்கிறது. 2006ல் 270 பில்லியன் டாலர்களாக இருந்த சிட்டி பேங்க்கின் மதிப்பு, மோசமான நிதி நிலைக்கு தள்ளப்பட்டதால் கடந்த வாரம் வெள்ளி அன்று வெறும் 20.5 பில்லியன் டாலராக இறங்கி இருந்தது. கடந்த வாரத்தில் மட்டும் அதன் சந்தை மதிப்பு 60 சதவீதம் குறைந்திருந்தது. ஆனால் இழந்த 60 சதவீத மதிப்பில் 58 சதவீதத்தை நேற்று திரும்ப பெற்று விட்டது. கடும் நிதி நெருக்கடியில் இருந்து வரும் அந்த வங்கி, உலகம் முழுவதிலும் இருக்கும் அதன் கிளைகளில் பணியாற்றி வருபவர்களில் 75,000 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்தது நினைவிருக்கலாம்.
நன்றி : தினமலர்


அமெரிக்காவின் அடுத்த நிதி அமைச்சராகிறார் திமோதி கெய்த்னர்

தற்போது நியுயார்க் மாகாண பெடரல் ரிசர்வ் வங்கி தலைவராக இருக்கும் திமோதி கெய்த்னரை, அடுத்த அமெரிக்க நிதி அமைச்சராக பாரக் ஒபாமா நியமித்திருக்கிறார். அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமா, அந்நாட்டு வழக்கப்படி வரும் ஜனவரி மாதம் 20 ம் தேதி அதிபராக பொறுப்பேற்கிறார். இப்போது அவர், புதிய அமைச்சர்களை தேர்ந்தெடுக்கும் வேலையை தீவிரமாக செய்து கொண்டிருக்கிறார். நம்நாட்டைப்போல் இல்லாமல் அந்நாட்டின் அதிபர், யாரை வேண்டுமானாலும் தன் அமைச்சராக நியமித்துக்கொள்ளலாம். அமைச்சர்கள் தேர்தலில் நின்று வெற்றிபெற வேண்டும் என்று அவசியமில்லை. அதிபராக பார்த்து அவருக்கு பொறுத்தமான நபர்களை அமைச்சர்களாக நியமித்துக்கொள்ள வேண்டியதுதான். இப்போது உலகம் முழுவதிலும் கடும் நிதி நெருக்கடி இருந்து வருவதாலும், அமெரிக்க பொருளாதாரம் சரிந்து வருவதாலும், ஒபாமா யாரை நிதி அமைச்சராக நியமிக்கப்போகிறார் என்றுதான் உலக நாடுகள்ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நேற்று அவர், தற்போது நியுயார்க் மாகாண பெடரல் ரிசர்வ் வங்கி தலைவராக இருக்கும் திமோதி கெய்த்னரைத்தான் புதிய நிதி அமைச்சராக நியமிப்பதாக அறிவித்திருக்கிறார். அமெரிக்க நிதி அமைச்சர் பதவிக்கு கெய்த்னர் ஒரு பொறுத்தமான நபர் என்றே பொருளாதார வல்லுனர்களும் நிதி வங்கி நிபுணர்களும் கருதுகிறார்கள். இவர் தவிர லாரன்ஸ் சம்மர்ஸ் என்பவரை வெள்ளை மாளிகையின் தேசிய பொருளாதார கவுன்சில் தலைவராகவும், அதிபரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவராக கிருஷ்டினா ரோமர் என்பவரையும் ஒபாமா நியமித்திருக்கிறார். புதிய அமைச்சர்களை தேர்ந்தெடுத்தது குறித்து சிகாகோவில் பேசிய பாரக் ஒபாமா, புதிய சிந்தனை உள்ளவர்களை மட்டுமே நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.
நன்றி : தினமலர்

சென்னையில் சாதா பெட்ரோல் இல்லை : 'ஸ்பீடு' மட்டும் விற்பனை

சென்னையில் தற்போது சாதா பெட்ரோல் விற்பனை நிறுத்தப்பட்டு, 'ஸ்பீடு' ரக பெட்ரோல் விற்பனை மட்டுமே நடைபெறுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அதிக விலை கொடுத்து பெட்ரோல் வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக சென்னை நகரில் உள்ள பல்வேறு பெட்ரோல் 'பங்க்'களில் சாதா பெட்ரோலுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சாதா பெட்ரோல் இல்லை என அறிவிப்பு ஒட்டப் பட்டுள்ளது. 'ஸ்பீடு' ரக பெட்ரோல் மட்டும் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் சாதா பெட்ரோல் இருக்கும் 'பங்க்'களில் வாகனங்களின் கூட்டம் அலைமோதியது. நேற்று பெரும்பாலான 'பங்க்'களில் 'சாதாரண பெட்ரோல் இல்லை. ஸ்பீடு பெட்ரோல் தான் உள்ளது' என்ற பதில் தான் கிடைத்தது.
சாதாரண பெட்ரோலை விட, 'ஸ்பீடு' ரக பெட்ரோல் விலை சற்று அதிகம். மேலும், ஸ்பீடு பெட்ரோல் போட்டால் தொடர்ந்து அந்த வகை பெட்ரோலை போட்டு வந்தால் தான் இன்ஜின் பழுதடையாமல் இருக்கும். சாதாரண பெட்ரோல் கிடைக்காததால் வேறு வழியின்றி கூடுதல் விலை கொடுத்து 'ஸ்பீடு பெட்ரோல் வாங்கிச் சென்றனர். சில இடங்களில் இதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றதைக் காண முடிந்தது.
நன்றி : தினமலர்


பொருளாதார தேக்க நிலை எதிரொலி : கிரானைட் கல் வெட்டும் பணி நிறுத்தம்

ஆத்தூரில், அரிய வகை மஞ்சள் கிரானைட் கற்கள் எடுக்கும் பணியை, தமிழ்நாடு கனிம நிறுவனம் நிறுத்தியுள்ளது. பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியே இதற்கு காரணம்.தமிழகத்தில் சில பகுதிகளில், மட்டுமே உலகத்தரம் வாய்ந்த அரிய வகை மஞ்சள் கிரானைட் கற்கள் உள்ளன. அவற்றில் சேலம் மாவட்டம் ஆத்தூர் தலைவாசல் அருகே உள்ள கோவிந்தம்பாளையத்தில், உள்ள குவாரியும் ஒன்று.இங்கு, 60 ஏக்கர் வரையிலான அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. 'டாமின்' நிறுவனத்தினர், கடந்த ஜனவரியில், கிரானைட் குவாரியை துவக்கினர். இந்த குவாரியில் இருந்து எடுக்கப்படும், மஞ்சள் நிற கிரானைட் கற்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய உலகத்தரம் வாய்ந்தவை. சிவப்பு நிறம் தெளித் தார் போல், இருப்பது மஞ்சள் கிரானைட் கல்லின் சிறப்பு.ஏப்ரல் முதல் கிரானைட் முழுமையாக வெட்டி எடுக்கப்படும் பணி முழு வீச்சில் நடந் தது. மஞ்சள் கிரானைட் சிறிய கற்கள் ஒரு கனமீட்டர் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் வரையும், பெரியளவிலான கற்கள் 35 ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைப்பதாக கூறப்படுகிறது. இப்பணி வரும் 2037 வரை 'டாமின்' செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது.இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத் திய நாடுகளில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டது. அந்நாடுகளில் கட்டுமானப்பணிகள் அனைத்தும், ஸ்தம்பித்துள் ளன. அதனால், வெளிநாடுகளுக்கு கிரானைட் கற்கள் வாங்கி செல்லும் வியாபாரி யாரும் வரவில்லை. கிரானைட் கற்கள் ஏற்றுமதியாகாமல் குவாரிகளில் தேங்கியுள்ளன. கற்கள் வெட்டும் எந்திரங்களுக்கு எரிபொருள் செலவு பிடிக்கிறது. அதனால், கல் வெட் டும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி மாநில அரசு வாய்மொழியாக, உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், கோவிந்தம் பாளையம் மஞ்சள் கிரானைட் குவாரியில் பல கோடி ரூபாய் மதிப்பில், வெட்டி எடுக்கப்பட்ட கற்களோடு தற்போது பணி நிறுத்தப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


சிரமமான காலத்தை தாண்டிவிட்டோம்: நம்பிக்கையூட்டுகிறார் சிதம்பரம்

'பொருளாதார மந்த நிலை பாதிப்பு நமக்கு இருக்கிறது. ஆனால், அடுத்த ஆறு மாதங்களில் இந்த பாதிப்பு சுவடு குறையும்' என்று மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கூறினார். டில்லியில் நேற்று பொருளாதார ஆசிரியர்கள் பங்கேற்கும் மூன்று நாள் மாநாட்டைத் துவக்கி வைத்த அவர், நாட்டின் இன்றைய பொருளாதார நிலையையும் அதற்கான தீர்வுகளையும் விளக்கினார். உலக பொருளாதார சுனாமி பாதிப்பு இந்தியாவை அதிகம் தாக்காமல் இருப்பதற்கு 'சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட வெளிப்படையான அணுகுமுறையை' நாம் பின்பற்றுவது காரணம் என்ற அவர், இதுவரை கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் கூட்டணியில் இருந்ததால், பாதிப்பில் இருந்து தப்பியதாகக் கூறப்படும் கருத்தை நிராகரித்தார். காங்கிரஸ்காரர் என்ற முறையில் இந்த வெற்றியை தங்களது என்று கூறிக்கொள்வதில் தவறில்லை என்றும் சிதம்பரம் கூறினார்.நாடு இன்று சந்திக்கும் வளர்ச்சித் தேக்கம், அதற்குத் தீர்வு எப்படி, மத்திய பட்ஜெட் பற்றாக்குறை பாதிக்காது உட்பட பல தகவல்களைக் கூறினார்.
மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கள்:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி, கடந்த ஐந்தாண்டுகளில் மொத்த வளர்ச்சி அதிகரிக்க சிறந்த பணியாற்றியிருக்கிறது. இந்த ஆண்டு சிரமமான காலம். இருந்தாலும் மொத்த வளர்ச்சி 7 சதவீதம் என்று ஏற்படும் போது நிச்சயம் வளர்ச்சி பாதிப்பு இருக்காது. அதற்கு நிதி ஆதாரங்கள், ஊக்கம் தரும் அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும். தற்போது வங்கிகள் சற்று பணப்புழக்கத்துடன் செயல்படுவதைக் காண்கிறீர்கள், பொதுத்துறை வங்கிகள் கடன் மீதான வட்டி சதவீதத்தைக் குறைத்திருக்கின்றன. உருக்கு விலை சற்று இறங்கி வருகிறது. கச்சா எண்ணெய் விலை சர்வ தேச அளவில் இறங்கியிருக்கிறது. அதனால் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி அந்தத்துறை அமைச்சர் முடிவு கூறுவார்.இன்னமும் சில துறைகள் வளர்ச்சிக்காக அரசு உதவி செய்யும். ஆனால் அதற்கேற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு செயல்படும். இப்படி அதிக அளவில் செலவானால் நிதிப்பற்றாக்குறை வருமே என்றால், கடந்த 50 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை இன்னும் ஓராண்டிற்கு நீடிப்பதால் என்ன தவறு.இன்றைய நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையை அரசு அணுகும் விதத்தில் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா தன் யோசனைகளைக் கூறினால் அதை ஏற்க அரசு தயார். முந்தைய தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தை விட சிறந்த பொருளாதார அணுகுமுறையை இந்த அரசு தந்து, வெற்றியும் கண்டிருக்கிறது. அதேபோல கடந்த இரு மாதங்களுக்கு முன் இருந்த நிலை இன்று இல்லை.பங்குச் சந்தையிலிருந்து அன்னிய மூலதன முதலீட்டாளர் டாலராக எடுத்துச் சென்றது உண்டு. அதனால், நம் ரூபாய் மீது நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக அன்னிய முதலீட்டாளர் சந்தையில் முதலீடு செய்ய முன்வந்திருக்கின்றனர்.அடிப்படைக் கட்டமைப்பு தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தர பல்வேறு முன்னுரிமைகளை மேற்கொண்டிருக்கிறோம். அதே போல பணவீக்கம் குறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், வித்தியாசமாக நம்நாட்டில் கச்சா எண்ணெய் விலை உயர்வை விட காய்கறிகள், பழங்கள் விலை உயருகின்றன. அதற்கு தேவை, சப்ளை, ஒழுங்காகப் பாதுகாத்து வினியோகிக்கும் நடைமுறை தேவை. இந்த ஆட்சியில் விவசாயம், உணவு தானிய உற்பத்தி, சர்வ சிக்ஷா அபியான் திட்டம், சுகாதார அபிவிருத்தி ஆகியவற்றிற்கு, கடந்த முறை இருந்த தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியை விட இருமடங்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.இன்றுள்ள நிலையை உணர்ந்து நாம் சந்தித்த பிரச்னைகளில் இருந்து மீள வழி காணப்பட்டிருப்பதால், தற்போது உள்ள சூழ்நிலையை 'பொருளாதார தேக்கம், அதனால் பாதிப்பு' என்று மீடியா வர்ணிக்க வேண்டாம், மாறாக தனிநபர் நுகர்வு, மூலதன முதலீடு அதிகரித்திருக்கிறது என்பது ஏற்கப்பட வேண்டிய விஷயம். அதனால் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதற்கான புள்ளிவிவரம் இனி மேல் தான் வெளிவரும்.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.உடன், நிதித்துறைச் செயலர் அருண் ராமநாதன் மற்றும் அதிகாரிகளும், பி.ஐ.பி., தலைமை அதிகாரி தீபக்சந்து ஆகியோர் இருந்தனர்.
எம்.ஆர்.இராமலிங்கம்
நன்றி : தினமலர்