Tuesday, November 25, 2008

பொருளாதார தேக்க நிலை எதிரொலி : கிரானைட் கல் வெட்டும் பணி நிறுத்தம்

ஆத்தூரில், அரிய வகை மஞ்சள் கிரானைட் கற்கள் எடுக்கும் பணியை, தமிழ்நாடு கனிம நிறுவனம் நிறுத்தியுள்ளது. பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியே இதற்கு காரணம்.தமிழகத்தில் சில பகுதிகளில், மட்டுமே உலகத்தரம் வாய்ந்த அரிய வகை மஞ்சள் கிரானைட் கற்கள் உள்ளன. அவற்றில் சேலம் மாவட்டம் ஆத்தூர் தலைவாசல் அருகே உள்ள கோவிந்தம்பாளையத்தில், உள்ள குவாரியும் ஒன்று.இங்கு, 60 ஏக்கர் வரையிலான அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. 'டாமின்' நிறுவனத்தினர், கடந்த ஜனவரியில், கிரானைட் குவாரியை துவக்கினர். இந்த குவாரியில் இருந்து எடுக்கப்படும், மஞ்சள் நிற கிரானைட் கற்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய உலகத்தரம் வாய்ந்தவை. சிவப்பு நிறம் தெளித் தார் போல், இருப்பது மஞ்சள் கிரானைட் கல்லின் சிறப்பு.ஏப்ரல் முதல் கிரானைட் முழுமையாக வெட்டி எடுக்கப்படும் பணி முழு வீச்சில் நடந் தது. மஞ்சள் கிரானைட் சிறிய கற்கள் ஒரு கனமீட்டர் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் வரையும், பெரியளவிலான கற்கள் 35 ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைப்பதாக கூறப்படுகிறது. இப்பணி வரும் 2037 வரை 'டாமின்' செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது.இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத் திய நாடுகளில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டது. அந்நாடுகளில் கட்டுமானப்பணிகள் அனைத்தும், ஸ்தம்பித்துள் ளன. அதனால், வெளிநாடுகளுக்கு கிரானைட் கற்கள் வாங்கி செல்லும் வியாபாரி யாரும் வரவில்லை. கிரானைட் கற்கள் ஏற்றுமதியாகாமல் குவாரிகளில் தேங்கியுள்ளன. கற்கள் வெட்டும் எந்திரங்களுக்கு எரிபொருள் செலவு பிடிக்கிறது. அதனால், கல் வெட் டும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி மாநில அரசு வாய்மொழியாக, உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், கோவிந்தம் பாளையம் மஞ்சள் கிரானைட் குவாரியில் பல கோடி ரூபாய் மதிப்பில், வெட்டி எடுக்கப்பட்ட கற்களோடு தற்போது பணி நிறுத்தப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


No comments: