Tuesday, November 25, 2008

அமெரிக்காவின் அடுத்த நிதி அமைச்சராகிறார் திமோதி கெய்த்னர்

தற்போது நியுயார்க் மாகாண பெடரல் ரிசர்வ் வங்கி தலைவராக இருக்கும் திமோதி கெய்த்னரை, அடுத்த அமெரிக்க நிதி அமைச்சராக பாரக் ஒபாமா நியமித்திருக்கிறார். அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமா, அந்நாட்டு வழக்கப்படி வரும் ஜனவரி மாதம் 20 ம் தேதி அதிபராக பொறுப்பேற்கிறார். இப்போது அவர், புதிய அமைச்சர்களை தேர்ந்தெடுக்கும் வேலையை தீவிரமாக செய்து கொண்டிருக்கிறார். நம்நாட்டைப்போல் இல்லாமல் அந்நாட்டின் அதிபர், யாரை வேண்டுமானாலும் தன் அமைச்சராக நியமித்துக்கொள்ளலாம். அமைச்சர்கள் தேர்தலில் நின்று வெற்றிபெற வேண்டும் என்று அவசியமில்லை. அதிபராக பார்த்து அவருக்கு பொறுத்தமான நபர்களை அமைச்சர்களாக நியமித்துக்கொள்ள வேண்டியதுதான். இப்போது உலகம் முழுவதிலும் கடும் நிதி நெருக்கடி இருந்து வருவதாலும், அமெரிக்க பொருளாதாரம் சரிந்து வருவதாலும், ஒபாமா யாரை நிதி அமைச்சராக நியமிக்கப்போகிறார் என்றுதான் உலக நாடுகள்ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நேற்று அவர், தற்போது நியுயார்க் மாகாண பெடரல் ரிசர்வ் வங்கி தலைவராக இருக்கும் திமோதி கெய்த்னரைத்தான் புதிய நிதி அமைச்சராக நியமிப்பதாக அறிவித்திருக்கிறார். அமெரிக்க நிதி அமைச்சர் பதவிக்கு கெய்த்னர் ஒரு பொறுத்தமான நபர் என்றே பொருளாதார வல்லுனர்களும் நிதி வங்கி நிபுணர்களும் கருதுகிறார்கள். இவர் தவிர லாரன்ஸ் சம்மர்ஸ் என்பவரை வெள்ளை மாளிகையின் தேசிய பொருளாதார கவுன்சில் தலைவராகவும், அதிபரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவராக கிருஷ்டினா ரோமர் என்பவரையும் ஒபாமா நியமித்திருக்கிறார். புதிய அமைச்சர்களை தேர்ந்தெடுத்தது குறித்து சிகாகோவில் பேசிய பாரக் ஒபாமா, புதிய சிந்தனை உள்ளவர்களை மட்டுமே நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.
நன்றி : தினமலர்

No comments: