Wednesday, January 27, 2010

அவர்களும் தொழிலாளர்கள்!

தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர் ஈட்டுறுதித் திட்ட (இ.எஸ்.ஐ.) மருத்துவமனைகளை மேம்படுத்தவும், புதிய மருத்துவமனை வளாகங்களை உருவாக்கவும் தமிழ்நாட்டுக்கு ரூ. 890 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருப்பது, தமிழகத் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இருப்பினும், இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளால் பயன்பெறும் தொழிலாளர்கள் அனைவரும் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமே. இதை மனதில் கொண்டு பார்க்கும்போது, இந்த மருத்துவமனையின் எல்லைக்குள் வரமுடியாத தொழிலாளர்கள் பல கோடிப் பேர் இருப்பதை உணர முடியும்.

அண்மைக்காலமாக அயல்பணி ஒப்புகை என்பது எல்லாத் தொழில்துறைக்கும் பொதுவானதாக மாறி வருகிறது. உதிரி பாகங்களைத் தனியாரிடத்தில் கொடுத்து, செய்து வாங்கி, அதைத் தொழிற்கூடத்துக்குக் கொண்டுவந்து பொருத்துகிற, பயன்படுத்துகிற நிலைமை உருவாகியுள்ளது. மேலும், நிரந்தரப் பணியாளர்களுக்குப் பதிலாக ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிக்கும் வழக்கமும் பரவலாக ஏற்பட்டுவிட்டது. இதனால் இ.எஸ்.ஐ. திட்டத்தில் சந்தா செலுத்தி உறுப்பினராக இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 2006-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி இந்தியாவில் இ.எஸ்.ஐ. சந்தாதாரர்கள் எண்ணிக்கை 84 லட்சம் தொழிலாளர்கள் மட்டுமே.

இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள், மருத்துவர்கள், மருத்துவக் கருவிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் இருக்கின்றன. ஆனால், இ.எஸ்.ஐ. சந்தாதாரர் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், அந்தந்தத் தொழிற்கூடங்களில் பணியாற்றும் தாற்காலிகப் பணியாளர்களுக்கும் இந்த மருத்துவச் சேவை கிடைக்கச் செய்வதில் என்ன சிக்கல் ஏற்படக்கூடும்?

அவ்வாறு செய்வது நல்ல யோசனைதான் என்று ஏற்றுக்கொள்ளும் மத்திய அரசு, நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்று காரணம் சொல்கிறது. அரசு அதிகாரிகள் சொல்லும் விளக்கம் இதுதான்: இ.எஸ்.ஐ. திட்டம் என்பது தொழிலாளர், தொழிற்கூடம் இரண்டும் உறுப்பினர்களாகச் சேர்ந்து நிதிசெலுத்தும் திட்டம். இதில் தொழிலாளர் தனது சம்பளத்தில் 1.75 சதவீதத்தையும் தொழிற்கூடம் தனது பங்காக 4.75 சதவீதத்தையும் செலுத்துகின்றனர். இத்திட்டத்தில் சிகிச்சை மட்டுமன்றி, மருத்துவமனைக்கு வந்ததால் பணிக்குச் செல்ல முடியாமல் ஏற்படும் சம்பள இழப்பு, பணிக்கால விபத்தில் தாற்காலிக ஊனம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு என பல்வேறு சலுகைகள் உள்ளன. இதையெல்லாம் தாற்காலிகப் பணியாளர்களுக்குத் தரஇயலாது என்பதுதான் அரசுத் துறையின் விளக்கம்.

தாற்காலிகத் தொழிலாளர்கள் இத்தகைய இழப்பீடுகள் பெறத் தகுதி இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால், காய்ச்சலுக்கும், சாதாரண காயங்களுக்கும் மருத்துவ ஆலோசனை பெறவும், அதற்கான மாத்திரைகளைப் பெறவும் செய்தால், அதனால் என்ன செலவு ஆகிவிடப்போகிறது? தாற்காலிகத் தொழிலாளர் இ.எஸ்.ஐ. சந்தாதாரர் இல்லையென்ற போதிலும்கூட, அவர் சார்ந்துள்ள நிறுவனம் சந்தாதாரர் என்பதால் இந்தச் சிறிய மருத்துவச் சேவையை அவர்களுக்கும் ஏன் நீட்டிக்கக்கூடாது?

மேலும், 50 ரூபாய்க்குக் குறைவாகத் தினக்கூலி பெறும் நபரிடம் சந்தா வசூலிக்காமல், அந்தத் தொழில்நிறுவனத்தின் பங்கை மட்டுமே சந்தாவாகப் பெற்று அந்தத் தொழிலாளியைச் சந்தாதாரராகக் கருதி சிகிச்சை அளிக்க வழிவகை செய்யும் சட்டம், தாற்காலிகத் தொழிலாளர்கள் மற்றும் பதிலி தொழிலாளர்கள் விஷயத்திலும் சலுகைகளை நீட்டிக்க சில சட்டத் திருத்தங்களைச் செய்தால் என்ன? இவர்களைப்போன்றே, மத்திய, மாநில அரசுகளின் அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) பெற்றுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களையும் இந்த மருத்துவமனைகளில் சிறு நோய்களுக்காக மருத்துவ ஆலோசனையும் மாத்திரைகளும் பெறச் செய்தாலும் பலர் நன்மை அடைவார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய ஊழியர்கள் குறைந்த சம்பளம் பெற்று வருவதுடன், உடல்நலம் பாதிக்கப்படும்போது அரசு மருத்துவமனைகளையோ அல்லது தனியார் மருத்துவமனைகளையோ நாட வேண்டியிருக்கிறது. குறிப்பாக, காய்ச்சல், கண் பரிசோதனை போன்ற எளிய மருத்துவ ஆலோசனைகளுக்கும்கூட இத்தொழிலாளர்கள், நிறுவனத்தின் பணிநேரம் (ஷிப்ட்) காரணமாக தனியார் மருத்துவமனைகளையே நாடுவதோடு, தங்கள் சக்திக்கு மீறி செலவு செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை நிலை.

இத்தொழிலாளர்களுக்கு பெரிய அறுவைச் சிகிச்சை அவசியமெனில் இவர்களில் 90 சதவீதம் பேர் தமிழக அரசின் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் பயன் பெற முடியும் என்றாலும், சிறுசிறு உடல்கோளாறுகளுக்கு மருத்துவச் செலவுகளை தாமே ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

முன்பெல்லாம் பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத் தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தி, அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை ஏற்படுத்தி நிர்வகித்தன. காலப்போக்கில், ஏதாவது ஒரு மருத்துவமனையில் தொழிலாளர்களுக்கு சிகிச்சை பெறவும் அதற்கான தொகையை நிறுவனம் செலுத்துவதுமான ஏற்பாடு உண்டானது. அதன்பின்னர் எல்லாமும் மறக்கப்பட்டுவிட்டது. கோடிகோடியாக லாபம் சம்பாதிக்கும் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள்கூட, தங்கள் தொழிலாளர்களின் உடல்நலனில் அக்கறை காட்டுவதில்லை.

இந்நிலையில், அரசுதான் இவர்களுக்கு உதவ வேண்டும். இ.எஸ்.ஐ. நிர்வாகக் குழுவில் தொழிலாளர், தொழிற்கூடம், மத்திய, மாநில அரசுகள், மருத்துவத்துறை பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். இத்தகைய நடைமுறையைத் தமிழகம் ஒரு முன்னோடியாக அமல்படுத்தலாம். தேவைப்பட்டால், இந்தத் தொழிலாளர் சார்பில், தொழிற்கூடங்களுக்குப் பதிலாக தமிழக அரசே ஒரு தோராயமான தொகையை இ.எஸ்.ஐ.-க்கு செலுத்துவதன் மூலம் ஆட்சேபணைகளையும் இல்லாமல் செய்துவிட முடியும். நிரந்தரப் பணியாளர்கள் குறைவதால், இ.எஸ்.ஐ. சந்தாதாரர் எண்ணிக்கையும் குறைந்துவரும் நிலையில், இந்த இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்கட்டமைப்புகளை ஏன் மற்ற தொழிலாளர்களுக்காகத் திறந்துவிடக்கூடாது!
நன்றி : தினமணி

அமைதிப் பேச்சில் அர்த்தம் இல்லை

இந்தியா, பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது தொடர்பாக இருநாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், அறிவுஜீவிகள் அடங்கிய குழுவினர் தில்லியில் அண்மையில் கூடி ஆலோசித்துள்ளனர்.

அமைதிப் பேச்சை மீண்டும் தொடங்க இதுதான் சரியான தருணம் என, இக் கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் முன்னாள் சட்ட அமைச்சர் இக்பால் ஹைதர், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்தியாவில் அமைதியைக் குலைக்க வேண்டும் என்று வெறியுடன் செயல்படும் பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்த எந்தத் தீவிர நடவடிக்கையும் எடுக்காத பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதால் பயன் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2008, நவம்பர் 26-ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவதாக இந்தியா அறிவித்தது. எல்லை தாண்டி இந்தியாவுக்குள் புகுந்து நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்கும்வரை பேச்சுவார்த்தை கிடையாது என இந்தியா திட்டவட்டமாகக் கூறியது.

ஆனால், இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளின் ஊடுருவல் தொடர்ந்தவாறே உள்ளது. மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைப் போன்றே அண்மையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலும் நடந்துள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள பஞ்சாப் ஹோட்டலுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து 100-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்த பயங்கரவாதிகள் இருவரைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்தப் பயங்கரவாதிகளை பாகிஸ்தானில் இருந்தபடி செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேசி வழிநடத்தியுள்ளனர்.

மும்பையில் நடந்த தாக்குதலின்போதும் பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தானில் இருந்துதான் கட்டளைகள் வந்தன. இப்போதும் அதே பாணியில் தாக்குதல் நடத்திப் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் பயங்கரவாதிகளின் திட்டம். நல்லவேளையாக காஷ்மீர் போலீஸôர் மற்றும் சி.ஆர்.பி.எப். போலீஸôரின் துணிச்சலான நடவடிக்கையால் பெரும் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடிந்தது.

மும்பைத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியபோது அதைப் பாகிஸ்தான் கண்டுகொள்ளவில்லை.

முதலில் ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டாலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறி, நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. பின்னர் அவரை மீண்டும் கைது செய்ய அனுமதிக்கக்கோரி "அப்பீல்' செய்துள்ளது பாகிஸ்தான் அரசு. அந்த மனு நிலுவையில் உள்ளது.

இதேபோல, மும்பைத் தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷாகிர் ரஹ்மான் லக்வி, அப்துல் வாஹித், மஷார் இக்பால், ஷாகித் ஜமீல் ரியாஸ், ஹமாத் இக்பால் ஆகிய 5 பயங்கரவாதிகள் மீதான வழக்கும் இழுத்தடிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்துகொண்டு இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்தாதவரை, அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என இந்தியா எச்சரித்தபோது, இந்தியாதான் அமைதிப் பேச்சைத் துண்டிப்பதாக எகிறும் பாகிஸ்தான், பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. ஸ்ரீநகர் தாக்குதல் இதற்கு ஓர் உதாரணம். இதற்கான செல்பேசி ஆதாரங்களைக் கொடுத்தாலும் பாகிஸ்தான் வழக்கம்போல மறுக்கவே செய்யும்.

இதேபோல, எல்லையிலும் சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை மீறி பலமுறை தாக்குதல் நடத்துகிறது பாகிஸ்தான். துப்பாக்கியால் சுடுவதுடன் இல்லாமல் ஏவுகணைத் தாக்குதலையே நடத்துகிறது.

தங்கள் மண்ணில் பயங்கரவாதிகள் செயல்பட அனுமதிக்கக் கூடாது என பாகிஸ்தானை இந்தியா மட்டுமன்றி அமெரிக்காவும் பலமுறை எச்சரித்துள்ளது. ஆனால், பலனில்லை.

இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து ஏராளமான பயங்கரவாதிகள் தயாராக உள்ளதாக இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனியும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வேளையில், காஷ்மீர் மாநிலத்தில் பிரீபெய்டு செல்போன் இணைப்புக்கு அனுமதி இல்லை, படைகள் குறைக்கப்படமாட்டாது என்பன உள்ளிட்ட சில உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருவது பாராட்டத்தக்கது.

""ஒன்றிரண்டு சம்பவங்களை வைத்து காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதம் தலையெடுத்துள்ளதாகக் கருதக்கூடாது'' என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறுவதை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

அதேபோல, ""ஸ்ரீநகர் சம்பவத்தைக் காரணம்காட்டி காஷ்மீரிலிருந்து பாதுகாப்புப் படையினரை விலக்கிக் கொள்வதை நிறுத்தக்கூடாது'' என மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி கூறுவதிலும் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

தினம் தினம் குண்டுவெடிப்புகள், மனிதகுண்டு தாக்குதல்கள் என பயங்கரவாதத்தின் வலியை தானே உணர்ந்து கொண்டபோதும், பலுசிஸ்தானில் நடைபெறும் குழப்பங்களுக்கு இந்தியா தான் காரணம் என அபாண்டமாகக் குற்றம்சாட்டி விஷமத்தனத்துடன் நடந்துகொள்கிறது பாகிஸ்தான்.

அமைதிப்பேச்சைத் தொடர வேண்டும் என்று பாகிஸ்தான் அறிவுஜீவிகளும் மக்களும் விரும்பினாலும் ஆட்சியாளர்களுக்கு அதில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவின் கோரிக்கைகள் தொடர்பாக பாகிஸ்தான் உண்மையான உறுதியான நடவடிக்கைகளை எடுக்காதவரை, அமைதிப்பேச்சு என்பதற்கே அர்த்தம் இல்லை.
கட்டுரையாளர் :எஸ். ராஜாராம்
நன்றி : தினமணி

Monday, January 25, 2010

வரும் ஆண்டுகளில் கட்டமைப்பு வசதிக்காக அதிக முதலீடு

வரும் ஆண்டுகளில் கட்டமைப்பு வசதிக்காக அதிக முதலீடு செய்யப் பட வேண்டியிருக்கும் என்று பிரபல நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முக்கிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதை தொடர்ந்து, கட்டமைப்பு துறைகளின் முன்னேற்றத்திற்காக அடுத்த 10 ஆண்டுகளில் 1.7 லட்சம் கோடி டாலர் மதிப்பிற்கு முதலீடுகள் தேவைப்படும் என கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி புரூக்ஸ் எண்ட்விசில் தெரிவித்தார். இந்திய ரூபாயின் மதிப்பில் இது ரூ.78.20 லட்சம் கோடியாகும்.
சராசரியாக ஓர் ஆண்டில் மேற்கொள்ளப்படும் முதலீடு ரூ.6.52 லட்சம் கோடியாகும். இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு வசதித் துறையில் வளமான வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது. எனவே, இத்துறையில் முதலீடு செய்வதில் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இருப்பினும், உள்நாட்டு நிறுவனங்கள்தான் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ளும் என புரூக்ஸ் மேலும் தெரிவித்தார்

Saturday, January 23, 2010

நாம்தான் கிடைத்தோமா?

மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விவகாரம் முற்றி சந்திக்கு வந்திருக்கிறது. மரபணு மாற்றக் கத்தரிக்காயை இந்தியாவில் பயன்படுத்தலாமா, கூடாதா என்பதை இறுதியாக முடிவு செய்யவேண்டியது அதற்கான நிபுணர் குழுதான் என்று வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் கூற, இல்லையில்லை இறுதி முடிவை எடுக்க வேண்டியது மத்திய அரசுதான் என்று அடுத்த நாளே மறுத்து நமது வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

தேசியவாத காங்கிரஸ் என்ற தோழமைக் கட்சியின் தனிப்பெரும் தலைவர் சரத் பவார். அவருடைய சமீபகால அரசியல் நடவடிக்கைகள், மக்கள், அதிலும் குறிப்பாக விவசாயிகள், நலன் சாராது கூட்டுறவுச் சர்க்கரை ஆலை அதிபர்கள், சர்க்கரை மொத்த வியாபாரிகள், இறக்குமதியாளர்கள் ஆகியோர் நலன் சார்ந்து இருப்பது விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. நெல், கோதுமை, கரும்பு சாகுபடியாளர்களுக்குக் கட்டுபடியாகும் கொள்முதல் விலையை வாங்கித் தருவதில் அதிக ஆர்வம் காட்டாத சரத் பவார், இறக்குமதி கோதுமைக்குக் கூடுதல் விலை தருவதற்குத் தயக்கம் இல்லை என்று வெளிப்படையாகவே அறிவித்து கோதுமை உற்பத்தியாளர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்.

இதையெல்லாம் கூறக் காரணம், மரபணு மாற்றப்பட்ட கத்தரி விஷயத்தில் நிபுணர் குழுவின் முடிவே இறுதியானது என்று கூறி, இந்த நாட்டுக்கு மிகப்பெரிய தீங்கு இழைக்கப்பட காரணமாக அவர் இருந்துவிடுவாரோ என்கிற அச்சம்தான். நல்லவேளை ஜெய்ராம் ரமேஷ் குறுக்கிட்டு அவருக்குக் கடிவாளம் போட்டிருக்கிறார்.

பி.டி. கத்தரிக்காய் விதைகளை "மேகோ' (மகாராஷ்டிர உயர்விளைச்சல் விதை நிறுவனம்) என்கிற நிறுவனம் தயாரிக்கிறது. அமெரிக்க பி.டி. நிறுவனம் தான் மகாராஷ்டிரத்தில் இப்படி ஒரு புதிய பெயரில் சில இந்தியர்களை முன்னிலைப்படுத்தி ஓர் இந்திய நிறுவனம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் மரபணு மாற்றப்பட்ட இந்தக் கத்தரிக்காய் விதை உலகின் எந்தப் பகுதியிலும் இதுவரை பெருமளவு நிலப்பரப்பில் விதைக்கப்பட்டு நேரடியாக சோதிக்கப்படவே இல்லை என்பதுதான்.

மரபணு மாற்றப்பட்ட பருத்தியாவது பரவாயில்லை. கத்தரிக்காய் என்பது நேரிடையாக மக்களால் உணவாகச் சாப்பிடப்படுவது. இதில் நச்சுக்கலப்பு இருந்தால் அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேலும், அமெரிக்காவிலும் ஏனைய மேலைநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர்கள் விவசாயத்துக்காக இருக்கும்போது, மரபணுப் பரிசோதனைகளை அங்கே நடத்தாமல் இந்தியா போன்ற ஏமாளி நாடுகளில் நடத்தி, நம்மைப் பரிசோதனைக் களமாக்குவதன் ராஜதந்திரம், சிறந்த அரசியல் ராஜதந்திரியான சரத் பவாருக்கு ஏன் தெரியவில்லை என்கிற கேள்வியும் எழுகிறது.

இதே பி.டி. ரக பருத்தி விதைகளை வாங்கி சாகுபடி செய்து, சாகுபடி பொய்த்ததால் கடனில் மூழ்கி தற்கொலை செய்துகொண்ட இந்திய விவசாயிகள் எண்ணிக்கை சில ஆயிரம். அவர்களுக்கு இந்த நிறுவனம் எந்த நஷ்டஈட்டையும் அளித்ததாகத் தகவலே கிடையாது. ஆலைகளில் இந்தப் பருத்தியைக் கையாண்ட தொழிலாளர்களுக்கு ஒருவித அரிப்பும், இதர உடல் உபாதைகளும் ஏற்பட்டது பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பசுமைப்புரட்சியை இந்த நாட்டில் கொண்டு வந்தபோது மிகவும் பெருமிதம் கொண்ட நமக்கு அதன் தீமைகள் புரிய பல ஆண்டுகள் பிடித்தன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

மரபணு மாற்றிய கத்தரிக்காயைப் பன்னாட்டு நிறுவனம்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதன் நோக்கம் இந்தியர்கள் கத்தரிச் சாகுபடியில் அமோக லாபம் சம்பாதிக்க வேண்டும், பூச்சி அரிக்காத காய்கறிகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும், ஓர் ஏக்கருக்கு இப்போது கிடைப்பதைவிட 3 மடங்கு 5 மடங்கு என்று கத்தரிக்காய் விளைய வேண்டும் என்பதெல்லாம் அல்ல. இவையெல்லாம் வியாபார உத்திக்காகக் கூறப்பட்டாலும் நம்முடைய பாரம்பரிய கத்தரிக்காய் ரகங்களைப் புழக்கத்திலிருந்து அகற்றுவதுதான் அவர்களின் நோக்கம். அதன் பிறகு கத்தரிக்காய் என்றாலே நாம் ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனம் தயாரித்துத்தரும் ரகத்தைத்தான் வாங்க வேண்டியிருக்கும். அப்போது அதற்குத் தரும் விலையும் அமோகமாக இருக்கும்.

அதைவிடுங்கள், அதனால் நிலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படக்கூடிய கெடுதல்களை எப்படி முன்கூட்டியே அனுமானிப்பது? நாம் காரணம் இல்லாமலேயே சந்தேகப்படும் பத்தாம்பசலிகளாகவே கூட இருந்து தொலைப்போம், நாளை இதனால் கெடு விளைவுகள் ஏற்பட்டால் நம்மைக் காப்பாற்றப் போவது யார்? போபாலில் பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிரையும் வாழ்வையும் உறிஞ்சிய யூனியன் கார்பைடு என்ற பன்னாட்டு நிறுவனம் இன்று எங்கே? அதன் தலைவராக இருந்த ஆண்டர்சன் எங்கே? அவரைக் கொண்டுவந்து நீதியின் முன் நிறுத்த மன்மோகன் அரசு எடுத்த தீவிர முயற்சிகள் என்ன? பாதிக்கப்பட்டவர்கள் இப்போதும் முழுமையான நஷ்டஈடு கிடைக்காமல் தவிக்கிறார்களே, அவர்களுக்கு விடிவுதான் என்ன?

நாளை மரபணு கத்தரிக்காயால் அப்படியொரு கெடு பலன் ஏற்பட்டுவிட்டால் அதற்குப் பிணை நிற்கப் போவது யார்? இந்தியாவில் அணு மின் நிலையம் அமைக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், ஏதேனும் பெரிய அசம்பாவிதம் நேரிட்டால் மிகவும் குறைந்தபட்ச நஷ்ட ஈடு தந்தாலே போதும், வேறு எந்த ஜாமீனும் தேவையில்லை என்று ஒப்பந்தம் தயாரிக்கும் இந்த தேசபக்தர்களை நம்பியா நம் நாட்டு நிலங்களை புதிய மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு ஒப்படைப்பது?

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆணிவேரையே கெல்லி எறிய தண்டியிலே ஒரு கைப்பிடி உப்பைக் கையில் எடுத்தார் அண்ணல் மகாத்மா காந்தி. நாமெல்லாம் உப்புப் போட்டுத்தான் சாப்பிடுகிறோமா? என் செய்வது, ஐநூறு ரூபாய்க்கும் ஆயிரம் ரூபாய்க்கும் விற்பதற்குத்தான் வோட்டு என்றாகிவிட்ட பிறகு, விலைபேசுவது நம் நாட்டு சரத் பவாராக இருந்தால் என்ன, அமெரிக்க ஆண்டர்சனாக இருந்தால்தான் என்ன?
நன்றி : தினமணி

லார்சன் அண்டு டூப்ரோ அனல் மின் உற்பத்தி பிரிவில் ரூ.25,000 கோடி முதலீடு

நாட்டின் மிகப் பெரிய பொறியியல் துறை நிறுவனமான லார்சன் அண்டு டூப்ரோ (எல்-டி) அதன் அனல் மின் உற்பத்தி வணிகப் பிரிவில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.25,000 கோடி முதலீடு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து எல்-டியின் முழுமையான துணை நிறுவனமான எல் அண்டு டி பவர், 2015ம் ஆண்டுக்குள் 5,500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். பல்வேறு அனல் மின் திட்டங்களுடன், சில நீர்மின் உற்பத்தி திட்டங்கள் வாயிலாக இந்த மின் உற்பத்தி இலக்கு எட்டப்படும். இமாச்சல பிரதேசம், உத்தராஞ்சல் மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் நீர்மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கான ஆர்டரைப் பெறும் போட்டியில் ஈடுபட்டுள்ளது. எல்-டி பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி இது குறித்து கூறும்போது, நிறுவனம் பஞ்சாப் மாநிலம் ராஜபுராவில் மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது. இரண்டு பிரிவுகளாக நிர்மாணிக்கப்படும் இத்திட்டம் தலா 660 மெகா வாட் திறன் கொண்டதாக இருக்கும். இதற்கான பணிகள்
தொடங்கப்பட்டு விட்டன. முதல் பிரிவு 2013ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார். எல்-டி பவர் நிறுவனம் சென்ற ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து இந்நிறுவனம் ரூ.16,000 கோடி மதிப்பிற்கு பல்வேறு மின் திட்டங்களை
நிறைவேற்றுவதற்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளது. மத்திய அரசு, தனியார் பங்களிப்புடன் 4,000 மெகா வாட் திறனில் மெகா மின் உற்பத்தி திட்டங்களை நிர்மாணிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. எனவே இதற்கான ஒப்பந்தங்களைப் பெறும் முயற்சியிலும் இந்நிறுவனம் ஈடுபட உள்ளது. தற்போது முந்த்ரா (குஜராத்), சாசன் (மத்தியபிரதேசம்), கிருஷ்ணப்பட்டினம் (ஆந்திரா) திலையா (ஜார்க்கண்ட் மாநிலம்), ரோஸா (உத்தரபிரதேசம்) ஆகிய இடங்களில் தலா 4,000 மெகா வாட் திறனில் மெகா மின் உற்பத்தி திட்டங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு இது போன்ற மேலும் ஐந்து திட்டங்களை நிர்மாணிக்கும் வகையில் சில பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் போட்டி அடிப்படையில் ஏலப்புள்ளி மூலம் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும்.
நன்றி : தினமலர்


குறைந்த விலை ஷாப்பிங் : 'பிக் பஜார்' அறிவிப்பு

இந்த ஆண்டின் மிக மிகக் குறைந்த விலையில், நான்கு நாள் ஷாப்பிங் திருவிழாவை, 'பிக் பஜார்' அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்தி: இந்தியாவில், 70 நகரங்களில் அமைந்துள்ள பிக் பஜாரின் 120 கிளைகளில், இன்று முதல் வரும் 26ம் தேதி வரை, நான்கு நாட்கள், இந்த ஷாப்பிங் திருவிழா நடைபெறுகிறது. இந்திய நுகர்வோருக்கு மனநிறைவான சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற தொடர் முயற்சியின் விளைவாக, இது போன்ற திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. பிக் பஜார், புட் பஜார் தவிர பியூச்சர் குழுமத்தின்,இதர சில்லறை விற்பனை நிறுவனங்களான பர்னிச்சர் பஜார், எலக்ட்ரானிக் பஜார், ஹோம் பஜார் உள்ளிட்டவையும், இந்த மாபெரும் திருவிழாவில் இடம் பெறும்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான டி சர்ட்டுகள் இரண்டு வாங்கினால், இரண்டு இலவசம், ஜீன்ஸ் ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம், சல்வார் கம்மீஸ் துப்பட்டா செட் பல்வேறு ரகங்களில் 50 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கும்.நோக்கியா, சோனி எரிக்சன், சாம்சங் மொபைல் போன் ஆகியவை 25 சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கும். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு மட்டுமே, இந்த

சலுகைகள் பொருந்தும். இதை தவிர, இன்னும் ஏராளமான பொருட்களுக்கு, பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை, பிக் பஜார் வழங்குகிறது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


Friday, January 22, 2010

மனம் வெளுக்க ஒரு வாரியம்!

அன்றாட வாழ்வில் ஒருவன் பணப்பையைத் திருடிவிட்டால், அவனுக்குத் தண்டனை கிடைக்கிறது. பட்டப்பகலில் வெட்டிக் கொன்றான் என்பதற்காக ஒருவனுக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனைகூட விதிக்கிறது. உளவு பார்த்து, நேரம் பார்த்துத் தப்புகள் பல செய்து, திருடியோ ஏமாற்றியோ உலவும் ஒரு கள்வர் கூட்டத்தை, மொத்தமாகக் கண்டுபிடித்துக் கைவிலங்கு மாட்டிச் சிறைக்கு அனுப்புகின்றனர். "சீட்டுக் கம்பெனி' என்று தொடங்கி, பல நூறாயிரம் கோடி என மக்களை வஞ்சித்து ஏமாற்றுபவர்களைச் சட்டம் விட்டுவைப்பதில்லை. கைக்கூலி, ஊழல், லஞ்சம் எனப் பெருகிவரும் தீமைகூடச் சிலபோது அகப்பட்டுக் கொள்கிறது.

சுற்றுப்புறச் சூழ்நிலை மாசுபடுத்துபவர்களையும் மாசு பரவலையும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் நாளும் எச்சரித்தபடி இருக்கிறது. ஆனால்... மனத்தை மாசுபடுத்தும் சுற்றுச்சூழலைப் பற்றி யாரும் எண்ணிப் பார்ப்பதே இல்லை. புறச்சூழலை மாசுபடுத்துவதற்குக்கூட, மாற்றுத் தேடி விடலாம். அகச்சூழலை மாசுபடுத்துவதால், ஒரு சமுதாயம் அழிவதை, சிறுகச் சிறுக நஞ்சூட்டிக் கொல்வதுபோல், பண்பாட்டை-நாகரிகத்தை-நாணத்தை அழிப்பதைத் தடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை; மாசுபடுத்துபவர்களைத் தண்டிக்க வழியில்லை.

÷தொலைக்காட்சிகளாலும் திரைக்காட்சிகளாலும் நன்மைகள் விளையாமல் இல்லை. கால் பங்கு நன்மை என்றால், முக்கால் பங்கு தீமை வளர்க்கப்படுகிறது; பரப்பப்படுகிறது; பல கோடி மக்களின் நெஞ்சத்தில் நச்சுக் கிருமிகள் புகுத்தப்படுகின்றன.

÷ஒரு வடஇந்தியப் படத்தின் தமிழாக்கம். அதில் சிலர் பெரியதொரு மாளிகையின் பின்பக்கமாக ஏறி, உள்ளே குதித்து, உறங்குபவர்களை மிரட்டி, கட்டி வைத்து, வெகு லாவகமாகத் திருடிச் செல்வதை அப்படியே கற்றுக்கொடுப்பதுபோல் காட்டினர். இப்படி ஒரு திருடும் விதத்தைக் கற்றுக்கொண்ட இளைஞன், சில ஆண்டுகளுக்கு முன்பு, நீதிமன்றத்தில், அப்படக் காட்சியே தனக்கு வழிகாட்டியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான்.

கற்பழிப்புக் காட்சி என்று வைத்துக் கொள்ளுங்கள். முன்பு ஒரு முரடன், ஓர் இளம்பெண்ணை விரட்டிக்கொண்டு ஓடுவான்; அவளும் ஓடுவாள். அவள் தலையிலிருந்து ஒரு பூங்கொத்து கீழே விழும். பின்னால் ஓடிவந்த "வில்லன்' காலணியில் பட்டு அது நசுங்கிப்போகும். பின்னர் அப்பெண் அலங்கோலமாகக் கிடப்பதைக் காட்டுவார்கள். இடையில் நடந்தது குறிப்பாக உணரப்படும்.

இன்று ஒரு பெண்ணை ஏமாற்றி, மலைகள், பாறைகள் உள்ள இடத்துக்குக் கடத்திப்போய், அங்கே அவளைச் சேலையை உரிவதுமுதல், மானபங்கப்படுத்துவதுவரை "செய்முறைப் பயிற்சி'போல் காட்டுகிறார்கள். இப்படியே கதையிலும் திருமணம் செய்வதாக ஏமாற்றுதல், ஒருவரை ஒருவர் வஞ்சித்தல், கூடஇருந்தே குழிபறிப்பது எப்படி என விலாவாரியாக, விளம்பரமாகக் கற்றுக்கொடுத்தல் என ஆயிரம் காட்சிகள் நாள்தோறும் காட்டப்படுகின்றன.

அரைகுறை ஆடைபோய், ஒரு சிறு துணி மட்டும் ஒட்டிக்கொண்டிருக்கும். இதில் கதை மட்டுமன்று, பாடல்களும் அப்படித்தான். பாடல்களுக்கேற்ற காட்சிகளா, காட்சிகளுக்கேற்ற பாடல்களா என்பதே சிக்கலான கேள்விதான். ஒட்டிக் கொள்ளவா, கட்டிக்கொள்ளவா, தொட்டுக்கொள்ளவா, கூடிப் போவலாமா, ஓடிப் போவலாமா - இப்படித்தான் - இதைவிட, வெட்கத்தைவிட்டுப் பார்க்க வேண்டிய ஆட்டமும் பாட்டமும்! இவை யாவும் பார்த்துக் கொண்டிருக்கும் பல ஆயிரம் மக்களின் மனத்தில்போய் பதியும்; அதனால் ஒட்டுமொத்த சமுதாயம் பாதிக்கப்படும்; வருங்கால இளைய சமுதாயம் கெட்டு அழியும் என்று யாரும் கவலைப்படவில்லை.

எல்லாம் மக்களை ஈர்த்து, விளம்பரங்களைப் பெருக்கிப் பணத்தைப் பெருக்கும் பேராசையின் விளைவுதான். "ஆசைக்கோர் அளவில்லை, இந்த அகிலமெல்லாம் கட்டி ஆளினும்' என்பதற்கு ஒப்ப, மேன்மேலும் தீமைகளே கண்களைக் கவரவும் கருத்தைக் கெடுக்கவும் முற்படுகின்றன.

மனம் சார்ந்ததன் வண்ணமாகும் இயல்புடையது. மன ஓர்மையே தியானம் எனப்படுகிறது. இறைவனை "ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே' என்பர். அதுதான் மனத்தை "உரு'வேற்றி, நல்வழிப்படுத்துவது. மேலும் மேலும் தீயவற்றையே கண்டு கேட்டு உண்டு மோந்து அதிலேயே மனம் தோய்பவன், அதன் வண்ணமாகி விடுகிறான். இது பொழுதுபோக்குக்காக என்றும், மக்கள் மன இறுக்கத்தைத் தளர்த்துவதற்காக என்றும் சிறிது நேரமேனும் கடும் முயற்சி, உழைப்பை மறந்து மகிழ்ச்சிப்படுத்துவத ற்காக என்றும் சமாதானம் கூற முடியாது.

இவைகளையே நல்ல முறையில் காட்டி, இவற்றை விடப் பல மடங்கு மகிழ்ச்சிப்படுத்தலாம். அதற்குக் கூடுதல் திறமை வேண்டும். இன்று பச்சையாகவும் கொச்சையாகவும் காட்டுகிறார்களே, இதற்குத் திறமை தேவையில்லை. தெருவில் போகிறவன்கூட, ஒரு திரைப்பட இயக்குநராக, கதை, உரையாடல் எழுதுபவராக, பாடலாசிரியராக ஆகிவிட முடியும்.

மனத்தை எப்பொழுதும் உயர்வை நோக்கிச் செலுத்த வேண்டும். அப்படியெல்லாம் சொன்னால் படம் ஓடாது, பணம் போய்விடும் என்பது சத்தற்ற வாதம். திறமையாளன் காட்டுப் பூவிலும் மலர் மணம் இருப்பதை, அழகு பளிச்சிடுவதைக் காட்டுவான். எத்தனை நல்ல கதைகளை, நல்ல பாடல்களை நாம் கண்டு, கேட்டு மகிழ்ந்துள்ளோம்.

இன்று இந்த ஊடகங்களால் மொழியும் சிதைக்கப்படுகிறது. ஓர் உரையாடல், பண்பலை வானொலியில், ஒரு கிராமத்துப்பெண், தான் வீட்டுவேலைதான் செய்வதாகக் கூறவே, அவளிடம் "ஓ நீங்க ஹவுஸ் ஒய்பா' என்று எதிரொலிக்கிறார் கேட்டவர். அவ்வளவுதான். அதன்பிறகு எல்லாப் பெண்களும் தத்தம் வீட்டுவேலை செய்யும் இல்லத்தரசிகளாக இருந்தும், "ஹவுஸ் ஒய்ப்' என்றே கூறத் தொடங்கி விடுகின்றனர். ஏதோ பதவி உயர்வு கிடைத்துவிட்டதாம்!

÷சமையற்கலை கற்றுக்கொடுக்கும் போதும் அது படிப்பறிவில்லாத பெண்களும் பாமர மக்களும் பார்க்கும் காட்சி என்பதை மறந்து, ரைஸ், ஸôல்ட், பெப்பர், பொட்டாடோ, டொமாட்டோ, ஸ்பூன், குவான்டிட்டி, டேஸ்டு என இவ்வாறே கூறித் தங்கள் மேதைமையை வெளிப்படுத்தி மகிழ்கின்றனர்.

சிக்மண்ட் பிராய்டு மனிதருக்கு மூன்று மனம் உண்டு என்றார் மேல் மனம், நடுமனம், ஆழ்மனம் என்று. ஆழ்மனத்தில் போய்ப் பதிவன, ஒருவரின் குருதியில் மரபணுக்களில் போய்க் கலக்கின்றன. இவையே குடிவழி, பரம்பரைக்குப் போய்த் தொடர்கின்றன. தாத்தா இசைப்பேரறிஞராய்த் திகழ்ந்தால், ஓர் இடைவெளி விட்டுப் பேரனிடம்கூட அது வெளிப்படக்கூடும். இவ்வாறே நன்மையும் தொடரும்; தீமையும் தொடரும்.

"மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும்' என்பது வள்ளுவம். ஆழ்மனத்திலும் தூயவராக உள்ளவர்க்கே, நல்ல பண்புள்ள பிள்ளைகள் பிறக்கும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். "எழுமை எழுபிறப்பு' என்பார் அவர். அதாவது இத்தகையவை ஏழு பரம்பரை வரைகூடத் தொடரக்கூடுமாம்.

இன்றைய தொலைக்காட்சிகள் பெரிதும் மனத்தை மாசுபடுத்தும், பண்பாட்டைக் கெடுக்கும், மொழியைச் சிதைக்கும் கருவிகளாகவே செயல்படுகின்றன.

இக் காட்சிகளில் பல துறை வல்லுநர்கள்கூட, அளவற்ற ஆங்கிலச் சொற்களை அள்ளி வீசிக் கலந்து பேசி, தங்களின் "மேதா விலாசத்தை' விளம்பரப்படுத்திப் பெருமை தேடிக்கொள்ள நினைக்கிறார்கள்.

இங்கிலாந்து வானொலியில், ஆங்கிலத்தில் வாசிக்கப்படும் செய்திகளைக் கேட்பவர்கள், தங்கள் ஆங்கில மொழி உச்சரிப்பையும் மொழித்திறனையும் வளர்த்துக் கொள்வர் என்று கூறப்படுவதுண்டு.

ஆயினும் இன்று நம் நாட்டில், இத் தொலைக்காட்சி, திரைக்காட்சியினர், பிற நாட்டினர்-குறிப்பாக ஐரோப்பிய அமெரிக்க நாட்டினரின்-பண்பாட்டுச் சிதைவுக்கான படப்பிடிப்புகளை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டே, நம் நாட்டில் இதுவரை இல்லாத சிதைவுகளையும் புகுத்துகின்றனர். நன்மைகளைவிட்டுவிட்டுத் தீமைகளையே மேய்கின்றனர்.

புற மாசுத் தடுப்பு வாரியங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுக்கள்போல, மனமாசுத் தடுப்புக் கழகங்களும் தோன்ற வேண்டும். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் புறக்கேடுகளை, தீமைகளை ஒழிக்க முயல்வதுபோல, மனத்திற்குள் தீமைகளையே விதைக்கும் காட்சிகளைப் பரப்பும் அகச்சூழல் கேடுகளையும் தடை செய்ய வேண்டும்.

இத்தகைய தொலைக்காட்சிகள், திரைப்படங்கள் போன்றவற்றை, போட்டி கருதி, கூடுதலாகப் பரப்புபவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இம் மன மாசு பரம்பரைக்குத் தொடரும்; கொடிய தொற்றுநோய்போல ஊரெல்லாம் பரவி இவற்றை எடுத்துக்காட்டிப் பணம் குவிப்பவர்தம் குடும்பம், உறவு, பேரன், பேத்தியையும் ஒருகாலத்தில் பாதிக்கவே செய்யும். எனவே இது "தற்கொலைக்குச் சமமாகும்' என அவர்கள் உணர வேண்டும். சமுதாய ஒட்டுமொத்த மனத்துக்கு இவர்கள் போடும் "தூக்குக் கயிறு' இவர்களை மட்டும் விட்டுவிடுமா என்ன?

இவற்றை எல்லாம் யாரைய்யா கேட்பார்கள்; நீங்கள் "பழம் பஞ்சாங்கம்' என்று யாரேனும் கூக்குரலிடலாம். அது உண்மைதான். "திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது' என்று பாடுவதுபோல் நாமும் திருப்பிப் பாட வேண்டியதுதான். ஏனெனில் சமுதாயத்தைத் திரும்ப மீட்டெடுக்க முடியாத தீமைகளை விளைவிக்கும் கொடிய தீமை இது.
கட்டுரையாளர் :தமிழண்ணல்
நன்றி : தினமணி

அரசு உ ணவகங்கள் திறக்கப்படுமா?

தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை ஆகிய போக்குவரத்துக் கழகக் கோட்டங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பொங்கல் பண்டிகையின்போது, சென்னை உள்ளிட்ட அனைத்துப் போக்குவரத்துக் கழகக் கோட்டங்களில் இருந்தும் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பொங்கல் பண்டிகைக்காக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டவர்கள் அலைந்து திரிந்து பயணச்சீட்டுகளை வாங்கி, இருக்கைகள்கூட கிடைக்காமல் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்தனர்.

அரக்கப்பறக்க ஓடிவந்து பேருந்துகளைப் பிடித்த பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது அரசு பஸ்களின் கூடுதல் கட்டணமும், கூட்ட நெரிசலும் மட்டுமல்ல, நெடுஞ்சாலைகளில் உள்ள தனியார் உணவகங்களும்தான்.

அங்கு விற்பனை செய்யப்பட்ட சுகாதாரமற்ற உணவு, நட்சத்திர ஹோட்டல்க ளையும் மிஞ்சும் அளவுக்கு விலை உயர்வு மற்றும் மூச்சைத் திணறடித்த கழிவறைத் துர்நாற்றங்களே இந்த அதிர்ச்சிக்குக் காரணம்.

சிறுபொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் கடலை உள்ளிட்ட "ஸ்நாக்ஸ்'கள் கூட குறைந்தபட்சம் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டன. வெந்நீரைவிடக் கேவலமான காபி, டீ ஆகியவற்றின் விலையோ ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனையாயின. சாப்பாடு மற்றும் குளிர்பானங்களின் விலையோ வாங்க முடியாத அளவுக்கு விண்ணைத் தொட்டிருந்தன. எந்த அளவுக்கு விலை உயர்ந்திருந்ததோ, அந்த அளவுக்கு உணவின் தரமும் மோசமாக இருந்தது. உணவுக்கு அதிகவிலை கொடுத்ததற்காக கவலைப்படாதவர்கள் கூட, அதைச் சாப்பிடுவதற்காகக் கண்ணீர்விட்டனர்.

உணவுப்பொருள்கள் தான் அதிகவிலை என்றால், கழிவறைகளிலும் ரூ.5 முதல் ரூ.10 வரை அதிரடியாகக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. பெண்களும், குழந்தைகளும் வேறு வழியின்றி கழிவறைக்குச் செல்ல நேர்ந்தது. ஆனால் கழிவறையின் நிலையோ படுமோசம். சுத்தம் செய்யப்படாமலும், சில இடங்களில் தண்ணீர் இன்றியும் காணப்பட்டன.

இதனால் கழிவறைக்குச் சென்றவர்களுக்கெல்லாம் மயக்கம்தான் வந்தது. கூடுதல் கட்டணங்கள் கொடுத்தும், பேருந்துகளில் தான் இருக்கைகள் கிடைக்கவில்லை. உணவகங்களிலும், கழிவறைகளிலுமா இந்த நிலை? என்று பயணிகள் புலம்பித் தீர்த்தனர்.

கழிவறைக் கட்டணங்களால் அதிர்ச்சிக்குள்ளான பயணிகள் சாலைகளிலேயே இயற்கை உபாதையைக் கழித்தனர். இதனால் போக்குவரத்தை விரைவுபடுத்துவதற்காக போடப்பட்ட தங்கநாற்கர சாலைகள் சிறுநீர் ஆறாய் காட்சியளித்தது.

÷விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி அருகில் உள்ள ஓர் உணவகத்தில் குண்டர்கள் ஆங்காங்கே கையில் தடிகளுடன் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் மிரட்டியது பயணிகளை மட்டும் அல்ல, பேருந்துகளை ஓரமாக நிறுத்தச்சொல்லி ஓட்டுநர்களையும் தான்.

சாலையோரம் இயற்கை உபாதையைக் கழிக்க முயன்றவர்களைத் தடிகளைக் காட்டி எச்சரித்ததோடு, தகாத வார்த்தைகளாலும் திட்டினர். இதனால் அதிர்ந்துபோன பயணிகளுக்கு கொள்ளையர்களும், ரௌடிகளும் ஹோட்டல் வைத்துவிட்டார்களோ என்ற எண்ணமே தோன்றியது.

ஆனால் பேருந்து ஓட்டுநர்களோ, கூட்டமே இல்லாதே உணவகங்களையெல்லாம் விட்டுவிட்டு கூட்ட நெரிசல் மிக்க, குண்டர்கள் நிறுத்தப்பட்டிருந்த உணவகங்களிலேயே பேருந்துகளை நிறுத்தினர்.

ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு அங்கே அசைவ உணவுடன் பான்பராக், வெற்றிலை பாக்கு, பிஸ்கெட் பாக்கெட் உள்ளிட்ட பொருள்கள் இலவசமாகத் தரப்படுகின்றன; இதற்காக இப்படிக் கஷ்டப்படுத்துகிறார்களே என்று பயணிகள் சிலர் கூறினர்.

குண்டர்களின் செயல்களால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர் பேருந்தின் நடத்துநரிடம் கேட்டபோது, குறிப்பிட்ட உணவகங்களில் நிறுத்துமாறு போக்குவரத்துக் கழகங்களின் மூலம் தங்களுக்கு வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இது உண்மையா? அல்லது மக்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக நடத்துநர் விட்ட கதையா என்பதற்குப் போக்குவரத்துக் கழகம் தான் பதில் சொல்ல வேண்டும்.

"குடி'மகன்களுக்காக மதுபானக் கடைகளை நடத்தும் தமிழக அரசு, குடிமக்களுக்காக உணவகங்களைத் திறக்கலாம். அல்லது இந்த உணவகங்களை அந்தந்த மாவட்ட நிர்வாகங்களிடமோ அல்லது மாவட்டப் போக்குவரத்துக் கழகங்களின் பொறுப்பிலோ ஒப்படைக்கலாம். இதன் மூலம் நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துத் துறைக்கு கூடுதல் வருவாய் கிடைக்குமே. கூடுதல் கட்டணத்தாலும், கூட்ட நெரிசலாலும் பாதிக்கப்படும் மக்களுக்கு உணவையாவது சரியான விலையில் தரமானதாக வழங்கினால் ஆறுதலாக இருக்குமே.

அதுமுடியாத பட்சத்தில் ஏல முறையில் தனியாருக்கு உணவகங்களை ஒதுக்கலாம். அவர்களும் உணவுப்பொருள்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்தால், அதைத்தடுக்கும் வகையில் வாரம் ஒருமுறை சுகாதார ஆய்வாளர்களைக் கொண்டு உணவுப்பொருள்களின் தரத்தை ஆய்வு செய்யலாம்.

அனைத்து உணவுப்பொருள்களுக்கும் குறிப்பிட்ட விலையை எழுதி பயணிகளின் பார்வையில் படும்படி உணவகங்களின் வாசலில் வைக்கலாம். உணவுப்பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் அதுகுறித்து புகார் அளிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்களைத் தரலாம். ஆனாலும் உணவகங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை விட அரசே நடத்தினால், பொதுமக்களிடம் இருந்து தனியார் உணவகங்கள் கொள்ளையடிப்பது தடுக்கப்படும்.

ரயில்வே துறையைப்போல் போக்குவரத்துத் துறையும் உணவுப்பொருள்களை விற்பனை செய்ய தமிழக முதல்வரும், போக்குவரத்துத் துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பு.
கட்டுரையாளர் : ஏ.வி.பெருமாள்
நன்றி : தினமணி

போஸ்ட்ஆபீசில் பெறலாம் ஐ.சி.ஐ.சி.ஐ., ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசியை

தமிழகத்தில் உள்ள போஸ்ட் ஆபீசில், ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்சியலின் ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசியை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்காக தபால் துறையுடன் ஐ.சி.ஐ.சி.ஐ., புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்சியல். இதுகுறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்சியல் விற்பனை பிரிவு மூத்த துணைத் தலைவர் அனுப் ராவ் கூறும்போது, இந்த ஒப்பந்தப்படி தமிழகத்தில் உள்ள 12,179 போஸ்ட் ஆபீஸ்களில் ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்சியல் ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசியில் சேரலாம். ஏற்கனவே பாலிசியில் சேர்ந்துள்ளவர்கள், இணைய தளம் மூலம் இணைக்கப்பட்டுள்ள 1,129 போஸ்ட் ஆபிஸ்களில் பிரீமியம் செலுத்தலாம் என்று தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


Thursday, January 21, 2010

கசக்கும் உண்மைகள்

வரப்போகும் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) தயாரிக்கும் வேலையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். பொருளாதார அறிஞர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகத்துறையினர் ஆகியோருடனான ஆலோசனைகள் முடிந்துவிட்டன. ரிசர்வ் வங்கி கவர்னர் உள்ளிட்ட நிதித்துறை நிர்வாகிகளுடன் இப்போது ஆலோசனை நடந்து கொண்டி ருக்கிறது.

பணவீக்க விகிதமும் பட்ஜெட் பற்றாக்குறையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த இரண்டும்தான் முகர்ஜி இப்போது உடனே கவனித்தாக வேண்டிய முக்கிய பிரச்னைகள்.

பணவீக்க விகிதம் இப்படியே அதிகரித்துக் கொண்டே போனால் அது மத்திய அரசின் திட்ட ஒதுக்கீடுகளை அர்த்தம் இல்லாமல் செய்துவிடும். அரசியல் ரீதியாகவும் ஆளும் கூட்டணிக்குத் தேர்தலில் பெருத்த தோல்வியை வழங்கும். பட்ஜெட் பற்றாக்குறையை இப்படியே வளரவிட்டால் அது நிதி நெருக்கடியில் போய் முடியும். பணவீக்க விகிதம் என்பதை பாமர மக்கள் மொழியில் சொல்வதென்றால் விலைவாசி உயர்வுதான்.

விலைவாசி உயர்வு பற்றி ஏழை, நடுத்தரக் குடும்பங்களுக்கு உள்ள கவலையும் மத்திய அரசுக்கு உள்ள கவலையும் ஒன்றல்ல. விலைவாசி உயர்வால் வாங்கும் சக்தி குறைகிறதே, சத்துள்ள காய்கறிகளையும் நல்ல உணவுப்பொருள்களையும் நிறைய வாங்க முடியவில்லையே, எவ்வளவு சம்பாதித்தாலும் சாப்பாட்டுக்கே போகிறதே என்பதுதான் ஏழை, நடுத்தர மக்களின் கவலை.

மத்திய அரசின் கவலை பொருளாதார ரீதியிலானது. பணவீக்க விகிதம் இப்படி அதிகரித்துக் கொண்டே போனால் பட்ஜெட் பற்றாக்குறை அளவு அதிகரித்துவிடுமே, வரிவிதிப்பையும் அதிகப்படுத்த முடியாதே, தொழில் - வர்த்தகத்துறைகளுக்குத் தரும் வரிச் சலுகைகளையும் இதர பணச் சலுகைகளையும் குறைக்க முடியாமல், பொருளாதார நிர்வாகம் ஆட்டம் கண்டுவிடுமே என்பதுதான்.

ஏழைகளின் வாழ்க்கைத் தரம் குறைவது குறித்து மத்திய அரசுக்கு அக்கறையே இல்லை என்று கூறிவிட முடியாது, அதே சமயம் அவர்களுடைய கவலை பட்ஜெட் பற்றாக்குறையும் இதர பொருளாதாரக் காரணிகளும்தான் என்பதை மறுக்க முடியாது. சில வேளைகளில் பணவீக்க விகிதம் அதிகரித்தால்தான் தொழில்துறையில் உற்பத்தியே சூடு பிடிக்கும் என்பதால் ஆட்சியாளர்கள் அதை வரவேற்பதும் உண்டு.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் நம்முடைய நிதி அமைச்சர்கள் மக்களுடைய பிரச்னைகளை அவர்களுடைய கோணத்தில் இருந்து பார்த்தாலும் அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோர் கூறும் ஆலோசனைகளைக் கேட்பதையும், தொழிலதிபர்கள் - வியாபாரிகள் கேட்கும் சலுகைகளை வழங்குவதையுமே மரபாகக் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

இதற்கு உதாரணம் தேடி எங்கும் அலைய வேண்டாம். நாடு முழுக்க உணவு தானியங்களையும் காய்கறி, பழங்களையும் சேமித்து வைக்க போதிய உலர் கிடங்குகளும் குளிர்பதனக் கிடங்குகளும் இல்லை என்று கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் உரத்துக் கூறி வருகின்றன. ஆனால் அந்தத் திசையில் ஒரு அடியைக்கூட மத்திய அரசும் மாநில அரசுகளும் எடுத்துவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக பொது விநியோகத் திட்டத்தைச் சீரமைப்பது பற்றியது. நாடு முழுக்க உள்ள ஏழைகள், பழங்குடிகள், மலைவாசி மக்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், சாலை வசதிகளே இல்லாத கிராமங்கள் போன்றவற்றில் வசிப்பவர்களுக்கு அத்தியாவசியப் பண்டங்கள் கிடைப்பதற்காகப் பொது விநியோக முறையை வலுப்படுத்த வேண்டும் என்பதைக் கடந்த 15 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சிக்கு வருகிறவர்கள் ஆமோதிக்கிறார்கள், ஆனால் அதற்காக அலட்டிக் கொள்வதே இல்லை. விலைவாசி உயர்வு குறித்து வலியுறுத்திக் கேட்டால், விலைவாசியைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் கடமை என்று தட்டிக் கழிக்கிறார்கள்.

அத்தியாவசியப் பண்டங்களில் ஊக வியாபாரத்தையும், முன்பேர வர்த்தகத்தையும் அனுமதித்துவிட்டு விலைவாசியைக் குறைப்போம் என்று கூறுவது வெறும் உதட்டளவு உறுதிமொழியாகத்தானே இருக்கிறது? அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், சிறு தானியங்கள், சர்க்கரை போன்றவற்றின் விலை பல மடங்கு அதிகரித்தாலும் சாகுபடியாளர்களான விவசாயிகளுக்குக் கிடைப்பதோ அதில் நாலில் ஒரு பகுதிதான். இடைத்தரகர்களும் ஊக வியாபாரிகளும் மொத்த வியாபாரிகளும்தான் பெரும் பங்கை விழுங்குகிறார்கள். அவர்களுடைய செல்வாக்கு காரணமாகவே அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.

கரும்பு சாகுபடி செய்தால் கட்டுபடியாகும் விலை கிடைப்பதில்லை. கரும்பாலைகள் தொடங்கி அரசு அமைப்புகள் வரை அனைவராலும் அலைக்கழிக்கப்படுவதே மிச்சம் என்ற விரக்தி காரணமாகவே கரும்பு சாகுபடியே இனி வேண்டாம் என்று ஏராளமான மாநிலங்களில் விவசாயிகள் அதிலிருந்து விலகி வருகின்றனர். உள்நாட்டில் கரும்பு பயிரிடப்படும் நிலப்பரப்பு குறைவதற்கும் இதுவே காரணம்.

கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளுக்குச் சாதகமாக முடிவுகளை உடனுக்குடன் எடுக்கும் அரசு, கரும்புச் சாகுபடியாளர்களுக்கோ, சர்க்கரை நுகர்வோருக்கோ ஆதரவாக வலுவான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்பதே உண்மை. பொது விநியோகத் திட்டத்தை வலுப்படுத்த போதிய நிதி இல்லை என்ற பல்லவியையே மத்திய, மாநில அரசுகள் பாடிவருகின்றன. அதே வேளையில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. அந்த நிதியை பொது விநியோகத் திட்டத்துக்குப் பயன்படுத்தினால்தான் என்ன?

அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற தானியங்களைப் பாதுகாப்பாகச் சேமித்துவைக்க உலர் கிடங்குகளையும் பழங்கள், காய்கறிகளைப் பதமாக வைத்திருக்க குளிர்பதனக் கிடங்குகளையும் அவரவர் தொகுதிகளில் இந்த நிதியைக் கொண்டு அமைத்துக் கொள்ளுங்கள் என்று 3 ஆண்டுகளுக்கு நிதியைத் திருப்பிவிட்டால் என்ன?

தனியார் சூப்பர் மார்க்கெட்டுகள் சங்கிலித் தொடராகக் கடைகளைத் திறப்பது சாத்தியம் என்றால் ஆயிரம் கரங்களைக் கொண்ட மத்திய, மாநில அரசுகளால் பொது விநியோகச் சங்கிலியை அமைக்க முடியாதா?

மக்களால் மக்களே மக்களை ஆளும் அரசாக இருந்தால் இது சாத்தியம்; ஊக வியாபாரிகளுக்காக ஊக வியாபாரிகளால் ஊக வியாபாரிகளே நடத்தும் அரசாக இருக்கும்போது அசாத்தியம்!
நன்றி : தினமணி

மும்பை பங்குச்சந்தையின் பொதுத்துறை நிறுவன இணையத்தளம் ‌அறிமுகம்

மும்பை பங்குச்சந்தையில், பொதுத்துறை நிறுவனங்கள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளும் விதமாக புதிதாக பொதுத்துறை நிறுவன இணையத்தளம் ஒன்று தொடங்கப் பட்டள்ளது. இதனை டில்லியில் மத்திய கனரக தொழில்-பொதுத்துறை அமைச்சர் விலாசராவ் தேஷ்முக் தொடங்கி வைத்தார். இந்த இணையத்தளத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த முதலீடு, பங்கு விலைகளில் மாற்றம் உள்ளிட்ட பல முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளம் குறித்து மும்பை பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியும், மேலாண்மை இயக்குநருமான மது கண்ணன் கூறும் போது, இலாபம் ஈட்டும் பல பொதுத்துறை நிறுவனங்கள் பங்குச் சந்தை வர்த்தகத்தில் இல்லாமல் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களில் அரசு வசம் உள்ளவற்றில் 49 விழுக்காடு அரசு அதன் வசம் வைத்துக் கொள்ளும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளது.

மற்ற பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் கூடிய விரைவில் நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் ,சட்லஜ் ஜல் வித்யாத் நிகாம் லிமிடெட்,தேசிய அனல் மின் நிலையம், ரூரல் எலக்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


Wednesday, January 20, 2010

கார்களை மிஞ்சுது சைக்கிள் விலை

பயணம் செய்வதற்கு மட்டுமல்லாமல் உடற்பயிற்சி, மலை ஏற்றம் போன்றவற்றுக்கு பயன்படும் சைக்கிள்கள், 2.5 லட்ச ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சைக்கிள் ஏழைகளின் வாகனம் என்ற காலம் மலையேறி விட்டது. தற்போது, சர்வதேச கண்ணோட்டத்தில் சைக்கிள்கள் வடிவமைக்கப்படுவதால் அவற்றின் விலை, 2.5 லட்ச ரூபாய் வரை விற்கப்படுகிறது.

டில்லியில் சமீபத்தில் பல்வேறு வாகனங்களின் கண்காட்சி நடந்தது. விதவிதமான கார்கள், டூவீலர்கள் இந்த கண்காட்சியை அலங்கரித்தன. தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற பாணியில் சைக்கிள் நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை, இந்த கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருந்தன. இந்த கண்காட்சியில் ஹீரோ, ஹெர்குலஸ், பி.எஸ்.ஏ., ரேலி, பியான்சி, அடிடாஸ், பயர்பாக்ஸ், ட்ரெக் உள்ளிட்ட சைக்கிள் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தன. பயர் பாக்ஸ் நிறுவன அதிகாரி அஜித் காந்தி குறிப்பிடுகையில், 'தற்போது சைக்கிள்கள் உடற்பயிற்சிக்காகவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரத்துக்கும், சண்டை காட்சிகளில் பயன்படுத்தவும் வாங்கப்படுகிறது. சைக்கிள் பயணம் செய்வதற்கு மட்டுமே, என்ற நிலை மாறி விட்டது' என்றார். அடிடாஸ் நிறுவன மேலாளர் ரித்திஷ் அரோரா குறிப்பிடுகையில், 'ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து எங்கள் நிறுவனம் பல்வேறு வகையான சைக்கிள்களை தயாரித்து வருகிறது. மலைப்பாங்கான பகுதிகளில் இடறாமல், தடுமாறாமல் செல்வதற்குரிய டயர்களை பயன்படுத்தி, ஏராளமான கியர்களை கொண்ட சைக்கிள்களை தயாரித்துள்ளோம். இவற்றின் விலை, ஆறாயிரம் முதல் இரண்டரை லட்ச ரூபாய் வரை விற்கப்படுகிறது' என்றார்.

நன்றி : தினமலர்


பெடரல் வங்கியை வாங்க ஐடிபிஐ முயற்சி

கேரளாவைச் சேர்ந்த தனியார் வங்கியான பெடரல் வங்கியை, அரசுத் துறை வங்கியான ஐடிபிஐ வாங்க உள்ளது. இதற்கான நடைமுறைகளை முழுமையாக முடித்துவிட்டதாக ஐடிபிஐ தெரிவித்துள்ளது. ஆனால் கைமாறும் தொகை பற்றி எதுவும் கூறப்படவில்லை. இந்த இணைப்புக்குப் பிறகு, மற்ற அரசு வணிக வங்கிகளுக்கு இணையான கிளைகள், வாடிக்கையாளர்கள் மற்றும் டெபாஸிட்டுகளை ஐடிபிஐ வங்கியும் பெற்று விடும்.

தென்னிந்தியாவின் பெரிய தனியார் வங்கியான பெடரல் வங்கிக்கு 641 கிளைகள் உள்ளன. ரூ 33439 கோடி டெபாஸிட்டுகள் கொண்ட இந்த வங்கியின் ஆண்டு வர்த்தகம் மட்டும் ரூ 59000 கோடி. சில ஆண்டுகளுக்கு முன் வெஸ்டர்ன் யூனியன் வங்கியை இதே போல கையகப்படுத்தியது ஐடிபிஐ. இப்போது பெடரல் வங்கி தவிர, சவுத் இந்தியன் வங்கி, கர்நாடக வங்கி போன்றவற்றை வாங்கவும் திட்டமிட்டுள்ளது. பெடரல் வங்கியை வாங்கும் ஐடிபிஐயின் முயற்சி பற்றி அதன் தலைவர் யோகேஷ் அகர்வால் வெளிப்படையாகப் பேசி வருகிறார். ஆனால் பெடரல் வங்கி நிர்வாக இயக்குநர் வேணுகோபாலோ மௌனம் சாதிக்கிறார்.

நன்றி : தினமலர்


Tuesday, January 19, 2010

மாருதி சுசூகியின் 'ஈக்கோ' குடும்ப கார்


இந்தியாவில் ஆட்டோ மொபைல் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசூகி, ஆறு வண்ணங்களில் புதிய குடும்பக் காரான, 'ஈக்கோ'வை அறிமுகம் செய்துள்ளது. மாருதி சுசூகியின் ஈக்கோ, ஐந்து கதவுகளை கொண்ட, 'சி' பிரிவு கார். இந்தியாவிற்காக இக்காரை மாருதி நிறுவனம் மாறுபட்ட வடிவமைப்புடன் ஏழு சீட்டுகள் மற்றும் ஐந்து சீட்டுகள் கொண்ட ஈக்கோ குடும்பக் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஸ்டைலாகவும், அதிக இடவசதி கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஈக்கோவில் புதிய சக்தி வாய்ந்த நான்கு சிலிண்டர் 1,200 சி.சி., இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டருக்கு 15.1 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்யலாம். மெட்டாலிக் கிஸ்டெனிங் கிரே, மெட்டாலிக் சில்கி சில்வர், மெட்டாலிக் மிட்னைட் பிளாக், மெட்டாலிக் ப்ளூ பிளேஸ், பிரைட் ரெட் மற்றும் சூப்பிரியர் ஒயிட் என ஆறு வண்ணங்களில் இக்கார்கள் உள்ளன. ஈக்கோவில் முன், நடு மற்றும் பின்பக்க சீட்டுகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன. குடும்பங்களுக்கு ஏற்ற வகையில் பெரியதாகவும், வர்த்தகத்திற்கு ஏற்றதாகவும் இரட்டை நோக்கங்களை ஈக்கோ நிறைவேற்றுகிறது என்று மாருதி சுசூகி நிறுவன மண்டல மேலாளர் சந்தா, வர்த்தக மேலாளர் மனோகர் பட் ஆகியோர் தெரிவித்தனர்.

நன்றி : தினமலர்


போதும் போலித்தனம்!

கடந்த இரண்டு மாதமாக இந்தியாவின் பல பாகங்களில்,குறிப்பாகப் பெருநகரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பல மருந்துக் கடைகளில் போலி மருந்துகளும்,போதை மருந்துகளும் விற்கப்படும் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.போதாக்குறைக்கு,பல மருந்துக் கடைகளில் காலாவதியான மருந்துகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் திருப்பித் தரப்படுவதற்குப் பதிலாக ஏமாளி வாடிக்கையாளர்களின் தலையில் கட்டப்படுவதும் தெரிய வந்திருக்கிறது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.2000-க்கும் அதிகமான வழக்குகள் மருந்துக்கடை அதிபர்கள்மீது தொடரப்பட்டுள்ளன.

1940-ல் பிரிட்டிஷார் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட மருந்து மற்றும் அழகுச் சாதனங்கள் சட்டம் எந்த அளவுக்கு இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த உதவியிருக்கிறது என்பது சந்தேகம்தான்.அந்தச் சட்டப்படி குற்றவாளிகளுக்கு அபராதம் விதிப்பதுடன் அவர்களது மருந்து விற்பனை செய்யும் உரிமம் பறிக்கப்படவும் செய்யலாம்,அவ்வளவே.

போலி மருந்துகள் விற்கப்படுவதைத் தடுப்பதற்காக எல்லா மாநிலங்களிலும் தனியாக ஒரு பிரிவு மக்கள் நல்வாழ்வுத் துறையில் இருந்தாலும்,அந்தப் பிரிவு போதிய ஆள்பலம் இல்லாத,தேவையான அதிகாரம் இல்லாத ஒரு பிரிவாகத்தான் செயல்படுகிறது.தமிழகத்தையே எடுத்துக் கொண்டால் இந்தப் பிரிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 70 அதிகாரிகளில் 40 மருந்துக் கண்காணிப்பாளர்கள்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.ஏறத்தாழ 30 இடங்கள் கடந்த மாதம் வரை நிரப்பப்படாமல் இருந்தன.

சென்னையில் மட்டும் 400-க்கும் அதிகமான மருந்துக் கடைகள் இருக்கின்றன.ஆனால் மருந்துக் கண்காணிப்பாளர்கள் வெறும் 12 பேர் தான்.இவர்களுக்கு ஜீப்போ,தேவையான பணியாளர்கள் பலமோ உண்டா என்றால் அதுவும் இல்லை.இதே நிலைதான்,இந்தியா முழுவதும்!

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா மருத்துவத் துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்பதில் மாறுபட்ட கருத்தில்லைதான்.ஆனால் அந்த முன்னேற்றம் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும்,மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுக்கும்,மருத்துவமனைகளுக்கும் பயன்படும் அளவுக்குச் சாதாரண பொதுமக்களுக்குப் பயன்படுகிறதா என்று கேட்டால் சந்தேகம்தான்.

இந்தியாவில் மருந்து தயாரிப்புத் துறையின் ஓராண்டு விற்றுமுதல் சுமார் ரூ.85,000 கோடி.அதில்,சுமார் ரூ.35,000 கோடி மதிப்புள்ள மருந்துகள் ஏற்றுமதியாகின்றன.இந்த ஏற்றுமதியில் போலி மருந்துகளும் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏற்கெனவே சீனா,இந்தியாவில் தயாரித்தவை என்கிற முத்திரையுடன் உலகச் சந்தையில் போலி மருந்துகளை விநியோகித்து இந்தியாவின் ஏற்றுமதியைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் இந்தியாவிலேயே போலி மருந்துகள் அதிக அளவில் தயாரிக்கப்படுவதாகச் செய்திகள் வரும்போது உலக அரங்கில் இந்தியாவில் தயாராகும் மருந்துகளின் தரம் கேள்விக்குறியாகி நமது ஏற்றுமதி கணிசமாகப் பாதிக்கப்படலாம்.

இந்தியச் சந்தையில் விற்கப்படும் மருந்துகளில் 3 விழுக்காடு மருந்துகள் போலியானவை என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு.போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனை பற்றித் தகவல் அளித்தால்,கைப்பற்றப்படும் போலி மருந்துகளின் தொகையில் 20 சதவிகிதம் அல்லது ரூ.25 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்கிற மத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பு எந்த அளவுக்குப் பயனளிக்கிறது என்பது தெரியவில்லை.போதுமான கண்காணிப்பாளர்களும்,அவர்களுக்குத் தேவையான வசதிகளும்,ஆள்பலமும் இல்லாமல் இதுபோன்ற அறிவிப்புகளால் என்ன பயன் இருக்க முடியும்?

மருந்து மற்றும் அழகுப் பொருள்கள் சட்டம் திருத்தப்பட்டு,குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் மட்டும்தான் போலி மருந்துகளையும் போதை மருந்து விநியோகத்தையும் தடுக்க முடியும் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா என்ன?மக்கள் விழிப்புணர்வு பெறாத வரையில் ஆட்சியாளர்கள் கண்துடைப்புச் சட்டங்களைப் போட்டுத் தப்பித்துக் கொள்வார்கள்!
நன்றி : தினமணி

எலுமிச்ச‌ை சுவையில் புதிய குளிர்பானம்: கோகோகோலா அறிமுகம்

எலுமிச்சை சுவை கொண்ட புதிய குளிர்பானத்தை கோகோ கோலா நிறுவனம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த குளிர்பானத்திற்கு மினிட் மெய்ட் நிம்பு என பெயரிடப் பட்டுள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் கூறும்போது, எலுமிச்சை சாறு அடிப்படையிலான சுவை கொண்ட குளிர்பானமாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. இது வீட்டில் தயாரிக்கப்படும் எலுமிச்சை போன்று புத்துணர்வு அனுபவத்தை அளிக்கும் என்று‌ தெரிவித்தார்.
400 மில்லி மற்றும் 1 லிட்டர் பெட் பாட்டில்களில் இவை விற்பனைக்கு வந்துள்ளன. தமிழகம் முழுவதும் இது படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். விலை முறையே ரூ. 15 மற்றும் ரூ. 40.

புதிதாக அறிமுகப்படுத்தப் பட்ட குளிர்பானம் குறித்து, சந்தைப் பிரிவுத் துணைத் தலைவர் ரிக்கார்டோ ஃபோர்ட் கூறும்போது, தமிழகத்தில் திருநெல்வேலியில் கங்கை கொண்டான் ஆலை மற்றும் ஆந்திரத்தில் சித்தூரில் உள்ள ஆலையில் இது தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த குளிர்பானத்தில் எவ்வித பதப்படுத்திகள் மற்றும் வண்ணச் சேர்ப்புகள் ஏதும் சேர்க்கப்படவில்லை. 'முற்றிலும் வீட்டு சுவை' என்ற வாசகத்துடன் இதை நாடு முழுவதும் பிரபலப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


Monday, January 18, 2010

நீதிக்குத் தலைவணங்கு

பொங்கல் நாளில், கேட்டாலே மனதுக்கு இனிமை தரும் தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். அதாவது, "இந்தியத் தலைமை நீதிபதி அலுவலகமும் அரசு அதிகார அமைப்புதான். எனவே அந்த அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்கு உட்பட்டதுதான்' என்று ஏற்கெனவே தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

இந்தத் தீர்ப்பின் மூலம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதும், சட்டத்துக்கு அப்பாற்பட்டு தனிச்சலுகை பெற்றிருப்போர் யாருமில்லை என்பதும் இன்னொருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்புக்காக சுபாஷ் சி. அகர்வால் என்பவர் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கி நீதிமன்றப் படிகளை ஏறி இறங்கியிருக்கிறார். "மற்ற நீதிபதிகளுக்கு என்னென்ன பொறுப்பு உள்ளதோ அதே பொறுப்புதான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் உள்ளது. பணி விதிமுறைகளுக்கு உள்பட்டு சொத்து விவரங்களை வெளியிட வேண்டிய கடமை, தலைமை நீதிபதி அலுவலகத்துக்கும் உள்ளது' என்று தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அதைத் தலைமை நீதிபதி அலுவலகத்தால் ஏனோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததைப் போலவே, தற்போது உறுதி செய்யப்பட்ட இந்தத் தீர்ப்பையும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளது உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம். நீதிக்குத் தலைவணங்க நீதியே தயங்குகிறது.

ஓர் அமைச்சர் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி சொத்து சேர்த்தார் என்றால் அந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டியது நீதித்துறைதான். ஆனால் அந்த வழக்கை நடத்தும் நீதிபதி, அந்த அமைச்சர் சட்டவிரோதமாகத் தரும் நிலபுலன்களை ஏற்றுக்கொண்டால், சமூகத்தில் மறைக்கப்பட்ட ஓர் அநியாயம், நீதிமன்றத்திலும் அம்பலப்படாமல் போகும். மக்கள் கண்முன்பாக வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களும் அந்த வழக்குகளிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். அவர்களது ஊழல் சொத்துக்கு நியாயப் பூச்சு கிடைத்துவிடும்.

ஆகையால்தான், அரசியல் மற்றும் அரசுத் துறையில் ஊழல் இருந்தாலும், அதற்குத் தீர்ப்புச் சொல்ல வேண்டிய நீதித்துறை மந்தணங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்பதுதான், நீதிபதிகள் சொத்துவிவரங்களை அறிவிக்க வேண்டும் என்கிற இந்த வழக்கின் நோக்கம். மேல்முறையீடுகளை கைவிட்டு, நீதிக்குத் தலைவணங்க வேண்டும் என்பதுதான் எல்லாருடைய விருப்பமாக இருக்க முடியும்.

ஒரு முக்கிய பதவியில் இருப்பவரோ, பொதுவாழ்க்கையில் இருப்பவரோ, ஏன் அரசு ஊழியரோ ஆண்டுதோறும் தனது வருமானம் மற்றும் சொத்து விவரங்களை வெளியிட்டால்தான் அவரது வருமானத்துக்குள் அவர் வாழ்ந்திருக்கிறாரா என்பதைப் பொதுமக்கள் கண்காணிக்க முடியும்.

இந்தச் சொத்துகளைத் தங்கள் உறவினர்கள் பெயரில் பினாமியாக வாங்கிப் போடுவார் என்ற வாதம் உண்மைதான். அப்படியான புகார்கள் எழும்போது, அந்த நபரின் தொழில் மற்றும் வருமானத்தின் அடிப்படையில் அரசு ஆய்வு செய்து வருமானத்துக்கு மீறிய சொத்துகளைப் பறிமுதல் செய்ய முடியும். மேலும், தங்கள் பெயரில் இல்லாத சொத்துகளைத் தராமல் ஏமாற்றுவது எளிது என்பதால், இதில் மிகச் சிலர் தவிர பெரும்பாலானோர் பினாமி பெயரில் சொத்து வாங்குவதில் ஈடுபட மாட்டார்கள். லஞ்சப் பணத்தை வெளிப்படையாகச் செலவிட முடியாது என்ற நிலைமை ஏற்படும்போதுதான் லஞ்சத்தின் கோர நகங்கள் கூர்மழுங்கும்.

தலைமை நீதிபதி அலுவலகம் இந்தத் தீர்ப்பை எந்த மனக்கசப்பும், முகச்சுளிப்பும் இல்லாமல் ஏற்கும்போதுதான், இந்தச் சட்டத்தின் அடிநாதம் ஒவ்வொரு அரசுத் துறையின் கடைநிலை ஊழியர் வரை ஒலிக்கும். அர்த்தமுள்ளதாக மாறும்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில்கூட நிறைய மாற்றங்கள் தேவையாக இருக்கிறது. நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கும் முறை இந்தியாவில் மட்டுமே உள்ளது. வேறு எந்த நாட்டிலும் இல்லை. நீதிபதிகள் குழு உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போது, அவர்கள் நல்ல நீதிபதிகளைத் தேடிப்போய் தேர்வு செய்வதில்லை என்பதாலும், தங்கள் முன் இருக்கும் நீதிபதிகளில் சிலரைப் பரிசீலிக்கிறார்கள் என்பதாலும்தான் இன்றைய நீதித்துறையின் கற்புக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.

நீதிபதிகளின் குழு பரிசீலனை செய்வதற்கான பல நீதிபதிகளைத் தேர்வு செய்ய ஒரு நீதித்துறை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும், ஐந்து நீதிபதிகளை நியமிக்கக் குறைந்தது 40 பேரை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் உள்ளன. அவற்றையும்கூட, நீதித்துறை தலைவணங்கி ஏற்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்து உடையவராகத் தலைமை நீதிபதியே இருக்கிறார். இவ்வாறு நீதிபதிகள் சொத்துகளை வெளிப்படையாக அறிவித்தால் அவர்கள் தொழில்ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளாவார்கள் என்பது அவரது கருத்து.

கோயில் உண்டியல் பணத்தை எண்ணுவது சேவை என்றாலும்கூட, பணியை முடித்து வெளியேறும்போது வேஷ்டியை உதறிக் காட்டுவது தனது நேர்மையை சந்தேகிப்பதாக ஒருவர் கருதினால், அந்தச் சோதனைக்கு உடன்பட மறுத்தால், அல்லது தங்கள் வாதத்தை நியாயப்படுத்தினால் அதுவே அத்தகையோருக்கு களங்கமாக அமைந்துவிடும். அதைப் போன்றதுதான், நீதிபதிகள் தங்கள் சொத்துகளைக் காட்ட வேண்டியதில்லை என்கிற வறட்டு கெüரவப் பிரச்னையும் நீதித்துறை மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்பதை நீதித்துறை புரிந்துகொள்வது அவசியம்.
நன்றி : தினமணி

அமெரிக்காவில் மேலும் 4 வங்கிகள் மூடல்

அமெரிக்கா, பொருளாதார சரிவில் இருந்து மீட்டு வந்தாலும், அதன் தாக்கம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அங்கு வங்கிகள் மூடும் நிலை தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அமெரிக்க வங்கித் துறையில் 4 வங்கிகள் திவாலாகி உள்ளன. ஜனவரி 15ம் தேதி அன்று மட்டும் பார்ன்ஸ் பேங்கிங் கம்பெனி, செயின்ட் ஸ்டீபன் வங்கி, டவுன் கம்யூனிட்டி வங்கி உள்ளிட்ட மூன்று வங்கிகள் மூடப் பட்டன. கடந்த வாரம் வாஷிங்டனைச் சேர்ந்த ஹாரிசன் வங்கி திவாலானது. இந்த ஆண்டின் தொடக்க மாதத்திலேயே நான்கு வங்கிகள் திவாலாகியுள்ளது அமெரிக்க வங்கித் துறையைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
நன்றி : தினமலர்


வங்கம் தந்த வரலாற்று நாயகன்

இந்தியத் திருநாட்டின் இருள்படர்ந்த ஆங்கிலேய அன்னிய ஆட்சிக்காலக்கட்டத்தில், அதே பிரிட்டிஷ் நாட்டுக்கு உயர்கல்வி பயில்வதற்காகச் சென்று, அங்கிருந்தே காலனியாதிக்க நுகத்தடியிலிருந்து தாய்நாட்டை விடுவிக்கிற உத்வேகத்தோடு திரும்பி வந்து, விடுதலைப் போராட்ட வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட ஒரு தலைமுறையே உண்டு. அதில் ஒருவராக இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் நம்மிடையே கலங்கரை விளக்கமாய் நின்று இலங்கிய வரலாற்று நாயகர்களின் வரிசையில் எஞ்சி நின்ற ஒருவர்தான் ஜோதிபாசு.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆரம்பகாலத் தலைமை, விடுதலைப் போராட்டத்தில் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து செயலாற்றித்தான் தங்கள் அரசியல் பயணத்தைத் தொடங்கியது என்பது வரலாற்றுப் பதிவு. அந்தப் பாரம்பரியத்துக்கும் சொந்தக்காரர்தான் 96 வயதுவரை வாழ்ந்து வழிகாட்டிய ஜோதிபாசு.

சட்டப்படிப்புக்காக ஜோதிபாசு 1935-ம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். ஜோதிபாசு லண்டன் சென்ற காலத்திற்கு முன்பாகவே மகாத்மா காந்தி தனது பாரிஸ்டர் பட்டப்படிப்பை முடித்துத் திரும்பி விட்டிருந்தார். அங்கு இந்திய மாணவர்கள் ஒன்று சேர்ந்து இயங்கிய இந்தியா லீகின் தலைவராக இருந்தவர் சுதந்திர இந்தியாவின் நேரு அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இடம்பெற்ற வி.கே.கிருஷ்ண மேனன். இவரையும் உள்ளிட்டு இங்கிலாந்தில் ஜோதிபாசுவுடன் சேர்ந்து செயல்பட்டவர்களின் பட்டியல் மிக நீண்டது.

ஹிரேன் முகர்ஜி, புபேஷ் குப்தா, ரஜனி படேல், பி.என்.ஹக்சர், மோகன் குமாரமங்கலம், இந்திரஜித் குப்தா, நிகில் சக்ரவர்த்தி, என்.கே.கிருஷ்ணன், அருண் போஸ், பெரோஸ் காந்தி போன்றவர்கள் பின்னாளில் இந்திய அரசியல் சமூக அரங்கில் சிறப்பிடம் பெற்று விளங்கியவர்கள். இவர்களில் பலர் ஒன்றாகச் சேர்ந்து இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு பிரிட்டிஷ் மண்ணிலேயே ஆதரவும், நிதியும் திரட்டும் பணியில் முனைந்து லண்டன் மஜ்லிகள் அமைப்பைத் தொடங்கினர். அந்த அமைப்பின் முதல் செயலாளராகத் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கியவர் ஜோதிபாசு.

அந்த நாள்களில் இங்கிலாந்தில் செயல்பட்ட இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் ஓர் ஆதர்ச சக்தியாகத் திகழ்ந்தவர் ஜவாஹர்லால் நேரு. நேரு இங்கிலாந்துக்குச் சென்ற இரு சந்தர்ப்பங்களில் லண்டன் மஜ்லிகள் சார்பாக ஜோதிபாசு அவருக்கு வரவேற்பு விழா நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தாய்நாட்டின் விடுதலைக்கான வேட்கை ஆர்த்தெழுந்த அந்த இளமைப் பருவத்தில் ஜோதிபாசு உள்ளிட்ட இந்திய இளைஞர்களின் நெஞ்சங்களில் ஏகாதிபத்திய நாடுகளின் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் அனைவருக்கும் எதிரான உணர்வுகளும் பற்றிப் படர்ந்தன. இதன் தொடர்ச்சியாக அவர்களிடையே மார்க்சியம் மற்றும் இடதுசாரி அரசியல் ஆர்வமும் ஈடுபாடும் வளரலானது. பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களாக விளங்கிய ஹரி பாலிட், ரஜனி பாமி தத், பென் ப்ராட்லி போன்றோரோடு ஜோதிபாசுவுக்கு ஏற்பட்ட தொடர்பும் நெருக்கமும் அவரை ஒரு கம்யூனிஸ்டாகப் பரிணமிக்கச் செய்தது. அதன் விளைவாக லண்டனிலிருந்து நாடு திரும்பிய சில நாள்களிலேயே கட்சியின் முழுநேர ஊழியராக ஜோதிபாசுவின் வாழ்க்கை தொடங்கி விட்டது.

ஆரம்பநாள் கம்யூனிஸ்டுகள் அனைவரையும் போலவே ஜோதிபாசுவும், கட்சியின் முடிவுக்கிணங்க தொழிற்சங்கப் பணியில் ஈடுபட்டார். முதலில் துறைமுகத் தொழிலாளர்களின் மத்தியிலும், அடுத்து ரயில்வே தொழிற்சங்க இயக்கத்திலும் தன்னைப் பிணைத்துக் கொண்ட ஜோதிபாசுவுக்கு, அதன் வாயிலாகவே சட்டமன்ற நுழைவுக்கும் வழி திறந்தது. அன்றைய வங்காள மாகாண சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் ரயில்வே தொழிலாளர்களை வாக்காளர்களாகக் கொண்ட தொகுதி ஒன்றில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு ஜோதிபாசு முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினரானார். அந்த வெற்றியின் பின்னணி முக்கியமானது.

1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காங்கிரஸ் தலைமை அறிவித்தது. மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டார்கள். இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்த சூழலில், ஒரு கட்டத்தில் அது பாசிச எதிர்ப்பு யுத்தமாக உருவெடுத்தது. அப்போது கம்யூனிஸ்டுகள் எடுத்த நிலைப்பாடு, சர்வதேசியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் சரியானதே என்றாலும், கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. இது இன்றளவும் இந்திய அரசியலில் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களால் விவாதப் பொருளாக ஆக்கப்பட்டு வந்துள்ள ஒரு பிரச்னை. 1946-ல் மாகாண சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட ஜோதிபாசு உள்ளிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு எதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டு பிரதானமாக முன்வைக்கப்பட்டது. அதையும் எதிர்கொண்டுதான் ஜோதிபாசுவின் சட்டமன்றப் பிரவேசம் நிகழ்ந்தது.

சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் பெறும் சம்பளத்தைக் கட்சிக்குக் கொடுத்து விடுவேன், கட்சி எனக்கு ஊதியம் வழங்கும் என்று ஜோதிபாசு தனது சுயசரிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது இன்றைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பின்பற்றப்படும் நடைமுறை.

நாடு சுதந்திரமடைந்து, புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு, இந்தியா ஒரு ஜனநாயகக் குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் நடைபெற்ற 1952-ம் ஆண்டின் முதல் பொதுத் தேர்தலிலும் ஜோதிபாசு கோல்கத்தாவின் பாராநகர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரானார். 1972-ல் மேற்கு வங்கத்தில் அரங்கேறிய அரை பாசிச அடக்குமுறைக்கு இடையிலான மோசடித் தேர்தல் ஒன்றைத்தவிர, ஜோதிபாசு இத்தொகுதியிலிருந்தே வெற்றி பெற்று வந்தார். பின்னர் அவர் முதலமைச்சரான 1977-ம் ஆண்டுத் தேர்தலில் சத்கர்ச்சியா தொகுதிக்கு மாறினார். ஜனநாயக இந்தியாவின் அரசியல் வரலாற்றில் 23 ஆண்டுகள் தொடர்ந்து முதலமைச்சராக நீடித்த பெருமைக்குரிய ஒரே தலைவராக ஜோதிபாசு முத்திரை பதித்துள்ளார். இது அவரது நீண்ட நெடிய பொது வாழ்க்கையின் ஒரு சிறப்பம்சம் மட்டுமே. ஜோதிபாசுவின் வாழ்க்கைப் பயணம் இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் ஈட்டுத் தந்துள்ள பயன்களும், படிப்பினைகளும் பன்முகப்பட்டவை என்பதை நினைவு கூர வேண்டும்.

ஜோதிபாசு தன்னுடைய அரசியல் அனுபவங்களைப் பதிவு செய்ய முற்பட்டபோது அதற்கு அவரிட்ட தலைப்பு "மக்களோடு மக்களாக' என்பதே. அந்த நினைவலைகளை அறிமுகப்படுத்துகையில் அவர் குறிப்பிட்டார்: மக்களின் விடுதலையையே மையமாகக் கொண்ட எனது அரசியல் வாழ்வின்போது பல சிக்கலான பிரச்னைகளை நான் எதிர்நோக்கியிருக்கிறேன். மக்கள் வெற்றிக்கொடியை நாட்டியதையும் பார்த்திருக்கிறேன். அதேபோன்று, சில நேரங்களில் அவர்களின் தோல்விக்கு ஒரு சாட்சியமாகவும் விளங்கியிருக்கிறேன். மக்கள் மட்டுமே வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஏராளமான சோதனைகளுக்கும், துயரங்களுக்கும் மத்தியில் மக்களே இறுதியில் வெற்றியடையப் போகிறார்கள். இந்த உறுதியான நம்பிக்கைதான் ஜோதிபாசுவை நாட்டு மக்களும் குறிப்பாக மேற்கு வங்க மக்களும் ஆழமாக நேசித்ததற்கும், அவர் மக்களை நேசித்ததற்கும் அடிப்படையாக இருந்தது.

ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் என்ற முறையில் ஜோதிபாசுவின் அரசியல் போராட்டம் காங்கிரசுக்கு எதிரானதாகவே இருந்தது. ஆனால் கட்சி மாச்சரியங்களைக் கடந்து காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்கள் பலரிடத்தில் அவர் நட்பும் மரியாதையும் பாராட்டி வந்துள்ளார். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, இந்திய வரலாற்றில் வகித்த முக்கியமான பாத்திரத்தை அங்கீகரித்துப் பாராட்ட ஜோதிபாசு தவறியதேயில்லை. தேசிய விடுதலை லட்சியத்தில் தனக்கிருந்த உறுதிப்பாட்டை உலக அரசியலின் இதர முற்போக்கு சக்திகளோடு இணைக்கும் அறிவுத்திறனை நேரு பெற்றிருந்தார் என்று மனந்திறந்து புகழாரம் சூட்டியவர் ஜோதிபாசு. ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவை வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்பதில் நேரு தீவிர ஆர்வமும், நம்பிக்கையும் கொண்டவராக விளங்கினார். கூட்டுச்சேரா இயக்கத்தை உருவாக்கிய நிறுவனர் என்ற முறையில் அவர் சர்வதேச அரசியலில் எந்தச் சவாலையும் சந்திக்கும் நாடாக இந்தியாவை ஆக்கினார் என்று ஜோதிபாசு குறிப்பிட்டது, நேருவின் வரலாற்றுப் பங்களிப்பு பற்றிய துல்லியமான மதிப்பீடாகும்.

கூட்டாட்சிக் கோட்பாட்டை அங்கீகரிக்காத மத்திய காங்கிரஸ் அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்குகள் 1975-ம் ஆண்டின் அவசர நிலைமையின்போது உச்சகட்டத்தை எட்டியது.

இதுபற்றி இந்திரா காந்தியிடமே ஜோதிபாசு கேட்டபோது, அரசாங்கத்தின் அறிவுரையைக் கேட்கும் மனோநிலையில் மக்கள் இல்லை. மக்களைச் சரியான பாதைக்குக் கொண்டு வர ஓர் அதிர்ச்சி வைத்தியம் தேவைப்பட்டது என்று அவர் பதிலளித்தாராம். ஆனால், இரண்டாண்டுகளுக்குள்ளாக சர்வாதிகாரத்தை நிராகரித்து, அவசர நிலையை முடிவுக்குக் கொண்டு வந்து இந்திய ஜனநாயகப் பாரம்பரியம் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டதை ஜோதிபாசு வியந்து போற்றினார்.

மத்திய, மாநில உறவுகளை ஓர் ஆரோக்கியமான அடிப்படையில் மறுசீரமைக்க வேண்டும் என்பதற்காக ஜோதிபாசு காங்கிரசல்லாத மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டி இது தொடர்பான ஒரு பிரகடனத்தை நாட்டு மக்கள் முன்வைக்க முயற்சி மேற்கொண்டது இன்றும் கூடப் பொருத்தமானதொரு சீரிய நடவடிக்கையாகும். கூடவே மாநிலத்திற்குள்ளேயே எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் சுயாட்சி அதிகாரங்களை வழங்குவது என்பதையும், மாநில அரசின் அதிகாரங்களைப் பரவலாக்கி உள்ளாட்சி அமைப்புகளைப் பலப்படுத்துவதன் மூலம் ஜனநாயகம் முழுமை பெறும் என்பதையும் நடைமுறைப்படுத்திக் காட்டியவரும் அவரே. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை ஜோதிபாசுவின் ஆட்சிக்காலத்தில்தான் மேற்குவங்கம் பெற்றது. பின்னர் அது அகில இந்திய அளவில் விரிவாக்கம் பெற்றது.

வகுப்புவாத-அடிப்படைவாத அரசியல் என்பது இந்தியாவின் நீண்டகாலப் பாரம்பரியத்துக்கே எதிரானது என்று உறுதியான கருத்தின் அடிப்படையில், ரவீந்திரநாத் தாகூர் வலியுறுத்திய, வேற்றுமையில் ஒற்றுமை என்ற லட்சியத்தையும், மதச்சார்பின்மைக் கோட்பாட்டையும் உயர்த்திப் பிடிப்பதில் ஜோதிபாசு தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர்.

உலகப் போக்குகளிலிருந்து இந்தியா தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள இயலாது என்கிறபோதே, 1991-ல் நம்நாடு உள்நாட்டுப் பொருளாதாரத்தைத் தயார்படுத்திக் கொள்ளாமலேயே தாராளமயத்துக்கு இ ட்டுச் செல்லப்பட்டது என்று ஜோதிபாசு கருதினார். அறுபத்தி இரண்டு ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னும், மக்கள்தொகையில் 10 முதல் 15 சதவிகிதத்தினர் மட்டுமே பயன் அடைந்திருக்கக்கூடிய ஒரு சமூகத்தைத்தான் நாம் உருவாக்கியுள்ளோம். புறக்கணிக்கப்பட்டுள்ள 85 முதல் 90 சதவிகிதம் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் நிலை இன்றில்லையே என்பது குறித்துத் தன் வேதனையை வெளிப்படுத்தியவர் ஜோதிபாசு.

÷1998-ம் ஆண்டு நவம்பர் 14 அன்று தில்லியில் ஜவாஹர்லால் நேரு நினைவுச் சொற்பொழிவை ஆற்றியபோது ஜோதிபாசு கூறியது, இன்றைய இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு சவாலும் அறைகூவலுமாகும். அவர் சொன்னார்: நம்முடைய சமூக-அரசியல் சூழலில் உள்ள மாசுபடுத்தும் கறைகளைப் போக்குவது அவசியமாகச் செய்யப்பட வேண்டிய ஒன்று. பொது வாழ்வில் ஒழுக்கம் என்பது பலியாகி வருகிறது.

இத்தகைய நிலைமைக்கு அரசியல்வாதிகளே பிரதானப் பொறுப்பாளியாவார்கள். இந்தப் போக்கை எதிர்த்துப் போராடுவதற்கான மக்களுடைய உணர்வு அதிகரிக்கப்பட வேண்டும். அழுகிப்போன இந்த நிலைமையைத் தடுத்து நிறுத்துவதில் ஒரு தலையாய பங்கை வகிக்கப் பொறுப்புணர்வு கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் முன்வர வேண்டும்.

வங்கம் தந்த வரலாற்று நாயகனின் இந்த வைரவரிகள் சமூகப் பிரக்ஞை கொண்ட அனைத்துத் தரப்பினரும் நெஞ்சில் பதித்து நிறைவேற்ற வேண்டிய கடமைச் சாசனம்!
கட்டுரையாளர் :உ .ரா. வரதராசன்
நன்றி : தினமணி

லால் சலாம்!

ஒரு மாமலை சாய்ந்துவிட்டது; இனி எதிர்காலம் சூன்யமாகத் தெரிகிறது; அடுத்து என்ன, எப்படி என்பது போன்ற கேள்விகளுக்கு இடமே அளிக்காமல், அதே நேரத்தில் மரணத்தின் துயரமும் இழப்பின் தாக்கமும் குறைந்துவிடவும் செய்யாமல் நிகழ்ந்திருக்கிறது ஜோதிபாசுவின் மரணம். கடந்த பல மாதங்களாகவே எதிர்பார்த்திருந்த ஒன்றுதான் என்றாலும், அந்த மாமனிதரின் இழப்பு என்பது இந்திய அரசியலில் ஈடு செய்ய முடியாத ஒன்றுதான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியுமா என்ன?

மேற்கு வங்காளம் பல இடதுசாரி சிந்தனையாளர்களை இந்திய அரசியலுக்கு வழங்கி இருக்கிறது. பூபேஷ் குப்தா, கீதா முகர்ஜி, ஜோதிர்மாய் பாசு, இந்திரஜித் குப்தா, ஹிரேன் முகர்ஜி, ஏ. பி. பரதன் என்று ஒரு மிகப் பெரிய பட்டியல் நீள்கிறது. மேலே குறிப்பிட்ட தலைவர்கள் அனைவருமே தலைசிறந்த பாராளுமன்றவாதிகளாகவும், கம்யூனிச சித்தாந்தவாதிகளாகவும் திகழ்ந்தனரே தவிர, பொதுவுடைமைச் சிந்தனை சார்ந்த அடிப்படை ஜனநாயக அரசியலைக் கற்றுத் தேர்ந்தவர்களா என்றால் கிடையாது. அதுதான் ஜோதிபாசுவின் பலம்.

அரசியலையும் கொள்கைப் பிடிப்பையும் சரியான விகிதத்தில் பயன்படுத்தத் தெரிந்திருந்ததால்தான் ஜோதிபாசுவால் 23 ஆண்டுகள் மேற்கு வங்க முதல்வராகத் தொடர்ந்து பதவியைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது.

ஜூலை 8, 1914-ல் பிறந்த ஜோதிபாசுவின் வாழ்க்கையில் இடதுசாரி இயக்கச் சிந்தனையின் தாக்கம் அவர் லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெறச் சென்றபோது ஏற்பட்டது. ரயில்வே தொழிலாளர் யூனியன்தான் ஜோதிபாசுவின் தொழிற்சங்க ஈடுபாட்டிற்கும் அரசியல் வாழ்க்கைக்கும் அடித்தளமாக இருந்தது. அவரது முதல் சட்டப்பேரவை பிரவேசமே ரயில்வே தொகுதியிலிருந்துதான் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. டாக்டர் பி.சி. ராய் தலைமையிலான காங்கிரஸ் அரசு பலமாக அமைந்திருந்த காலத்தில், ஜோதிபாசு எதிர்க்கட்சி உறுப்பினராக எழுப்பிய விவாதங்களும் நடத்திய போராட்டங்களும் ஏராளம், ஏராளம்.

1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை ஏற்படுத்திய நிறுவனத் தலைவர்களில் ஜோதிபாசு முக்கியமான பங்கு வகித்தார். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய அரசியல்குழு உறுப்பினர்கள் ஒன்பது பேரில் ஜோதிபாசுவும் ஒருவர்.

1969-ல், காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து புதிய கட்சி துவங்கிய அஜாய் முகர்ஜியின் வங்காள காங்கிரஸýடன் இணைந்து இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி அமைத்தனர். அஜாய் முகர்ஜி முதல்வராகவும் அந்த அமைச்சரவையில் ஜோதிபாசு உள்துறை அமைச்சராகவும் பதவி ஏற்றனர். அந்தக் கூட்டணி ஆட்சி ஏன் கவிழ்ந்தது தெரியுமா? உள்துறை அமைச்சரான ஜோதிபாசு தன்னை செயல்படவிடுவதில்லை என்று முதல்வர் அஜாய் முகர்ஜி பகிரங்கமாகக் குற்றம் சாட்டி, சட்டப்பேரவையில் முதல்வரான தானே, தர்னா இருக்கப் போவதாக அறிவித்த கேலிக்கூத்துகள் மேற்கு வங்க சரித்திர நிகழ்வுகள்.

ஜோதிபாசுவின் வெற்றிக்குக் காரணம், காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை சாதுர்யமாக ஒருங்கிணைத்து, வெற்றிகரமாக ஓர் இடதுசாரிக் கூட்டணி அரசை நடத்தியது. இன்னொரு காரணம், இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு முன்னோடியாக நிலச் சீர்திருத்தங்களையும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரப் பகிர்வையும் முறையாகச் செய்து முடித்தது. இவையாவையும்விட, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக் கட்சியை வலுப்படுத்தியதும் கட்சி பலத்தைப் பயன்படுத்தி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதும்தான்.

1996-ல் மார்க்சிஸ்ட் கட்சி மத்திய அரசில் பங்கு பெறாதது ஒரு வரலாற்றுப் பிழை என்று ஜோதிபாசு கூறியது மீண்டும் மீண்டும் நினைவுகூரப்படுகிறது. ஆட்சியில் பங்குபெற மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் குழு ஒப்புக்கொண்டிருந்தால், ஜோதிபாசு இந்தியாவின் முதல் இடதுசாரி பிரதமராகியிருப்பார். ஆனால் கட்சித் தலைமையின் விருப்பத்தை அரசியல்குழு ஏற்கவில்லை. கட்சியின் கொள்கைகளையும் செயல் திட்டங்களையும் நடைமுறைப்படுத்த முடியாத ஒரு கூட்டணி ஆட்சியில் பங்கு பெறுவதால் என்ன பயன் என்று அரசியல் குழு கருதியது. கட்சியின் முடிவை கனத்த மனதுடன் தலைவணங்கி ஏற்ற தலைவர் ஜோதிபாசு. இன்னொரு தலைவர், இன்னொரு கட்சி இப்படியொரு சவாலை எதிர்கொள்ளுமா?

சரியான நேரத்தில் ஜோதிபாசு தன் பதவியைத் துறந்து ஓய்வு பெற்றுவிட்டார். இன்னமும் சிறிது காலம் கடத்தியிருந்தால், அவரது இயலாமை அவரைக் கேலிப் பொருளாக்கி ஜோதிபாசு என்கிற மிகப்பெரிய ஆளுமையைத் தகர்த்திருக்கும். ஜோதிபாசு ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் இடதுசாரிக் கூட்டணி வலுவிழக்கத் தொடங்கி இருப்பதில் இருந்தே இந்தத் தனிமனிதரின் செல்வாக்கும் ஆளுமைத் திறனும் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

நாளை ஜோதிபாசுவின் இறுதி ஊர்வலத்தில் மரியாதை செலுத்த அணிவகுத்து நிற்கப்போகும் செஞ்சட்டைப் படையினரின் முன்னால் ஒரு மிகப் பெரிய கேள்விக்குறி தொக்கி நிற்கும். இனிமேல் இடதுசாரி இயக்கத்தை வழிநடத்தவும், பொருளாதாரக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு, ஜாதிய, மத சக்திகளால் கவரப்பட்டிருக்கும் அடித்தட்டு மக்களை வழிநடத்தவும் யார் தலைமை ஏற்கப் போகிறார்கள் என்கிற கேள்விக்குறிதான் அது.

ஜோதிபாசுவின் மரணம் இடதுசாரி இயக்கத்தில் ஒரு திருப்புமுனையாக அமையுமேயானால் மட்டுமே அவர் குறிப்பிட்ட வரலாற்றுப் பிழை திருத்தப்படும்.
நன்றி : தினமணி

Sunday, January 17, 2010

ஊசலாடும் அரசு உதவிபெறும் பள்ளிகள்

ஒரு தாய், தன்னுடைய குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டும்போது "ஒரு கண்ணில் வெண்ணெயும் மறு கண்ணில் சுண்ணாம்பும்' என்ற பழமொழி கூறுவதுண்டு.

கல்வித்துறையில் அரசு பள்ளிகளுக்குச் சற்றும் குறையாத வகையில் கல்விச் சேவையை அளித்து வரும் அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களுக்கு நிதி உதவி அளிக்க அரசு முன்வராதது குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டும் தாயின் செயலுக்கு ஒப்பானது என்கிறார்கள் அரசு உதவிபெறும் கல்வி நிலையத்தினர்.

தமிழகத்தில் அரசு கல்வி நிலையங்கள், தனியார் கல்வி நிலையங்கள், அரசு உதவிபெறும் தனியார் கல்வி நிலையங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

கல்விக் கட்டண வசூல், ஆசிரியர், அலுவலர்கள் நியமனம், அவர்களுக்கான ஊதிய நிர்ணயம் ஆகியவற்றைத் தனியார் கல்வி நிலையங்கள் தாங்களே முடிவுசெய்கின்றன.

ஆனால், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் ஆசிரியர்கள், அலுவலர்கள் நியமனம் அரசு வழிகாட்டுதலிலேயே நடத்தப்படுகிறது.

ஆசிரியர், அலுவலர்களுக்கு ஊதியம் வழங்குவது என்பதைத் தவிர அரசுப் பள்ளிகளுக்குக் கிடைக்கும் மற்ற சலுகைகள் எதுவும் உதவிபெறும் பள்ளிகளுக்குக் கிடைப்பதில்லை.

எனவே, மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, ஆசிரியர் எண்ணிக்கையைக் கூடுதலாக்குவது ஆகியவற்றை அந்தந்தக் கல்வி நிலைய நிர்வாகங்களே செயல்படுத்த வேண்டியுள்ளது.

புதிய ஆசிரியர்களை நியமித்து, அவர்களுக்கான ஊதியத்தை பெற்றோர்}ஆசிரியர் கழகத்தின் மூலம் அளிக்கும் கட்டாயமும் அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்படுகிறது.

அதன்படி, பெற்றோர்}ஆசிரியர் கழகத்துக்கு மாணவ, மாணவியரிடமிருந்து வசூலிக்கப்படும் தொகையும் மிக மிகக் குறைவேயாகும். இதைவைத்து மாதா மாதம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது இயலாத காரியம் என்பதும் கல்வி நிலைய நிர்வாகிகள் கருத்து.

தற்போது இலவசக் கல்வித் திட்டத்தால் மாணவர்களிடையே எவ்விதக் கல்விக் கட்டணத்தையும் அப்பள்ளி நிர்வாகங்கள் வசூலிக்க முடியாத நிலையும் உள்ளது.

அரசு உதவிபெறும் கல்வி நிலையங்கள் பெரும்பாலும் சேவை நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டவையே. குறிப்பிட்ட சமூகத்தினர் சார்பிலோ அல்லது சேவை மனப்பான்மை உள்ளவர்கள் கூட்டாகச் சேர்ந்தோ, சமூக முன்னேற்றத்தில் அக்கறையுள்ள தனிப்பட்டவராலோ ஆரம்பிக்கப்பட்டு பின் அரசு உதவி பெற்றவைகளாக அவை மாறியிருப்பதே உண்மை.

இதுபோன்று மாநிலத்தில் 5048 ஆரம்பப் பள்ளிகளும், 1643 தொடக்கப் பள்ளிகளும், 630 உயர்நிலைப் பள்ளிகளும், 1067 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் விதி விலக்காக ஒரு சில பள்ளிகள் மட்டுமே தற்போது வர்த்தக நோக்கில் செயல்படுபடத் தொடங்கி உள்ளன. ஆனால், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் பெரும்பாலானவை இன்றும் சேவை நோக்கம் குறையாமல் செயல்படுகின்றன. இவற்றில் பல, நூற்றாண்டு கடந்தவையாகவும், பாரதியார் போன்ற மகாகவிகள் பணிபுரிந்த பெருமைக்குரியதாகவும் திகழ்கின்றன.

இதுபோன்ற பள்ளிகளில் தற்போது மாணவர் எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்ததைவிட 3 மடங்கு உயர்ந்துள்ளன. ஆனால், ஆசிரியர் எண்ணிக்கை மட்டும் ஆரம்பத்தில் இருந்தது போலவே உள்ளது.

குறிப்பாக, நூலகர்கள், ஓவிய ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் அப்பள்ளிகளின் நூலகங்கள் சிதிலமடைந்து கிடக்கும் அவல நிலையும் உள்ளது.

இவ்வகைப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர் காலியிடத்தைக் கூட அந்தந்தப் பள்ளி நிர்வாகமே சொந்த நிதியில் நிரப்ப வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் கல்வித்துறை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதே நிலை நீடித்தால் கல்வி நிலையத்தைத் தொடர்ந்து நடத்த நிதிப் பற்றாக்குறை ஏற்படும். அதனால் நிதி திரட்டவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, மாணவர்களிடம் மறைமுகமாக கட்டணம் வசூலிக்க வேண்டியதிருக்கும். அப்படி நிதி வசூலிக்காவிட்டால், கல்வி நிலையத்தை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள் அக்கல்வி நிலைய நிர்வாகிகள்.

தற்போது இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஒவ்வோர் பள்ளிக்கும் பல லட்சம் நிதி அளிக்கப்படுகிறது.

ஆனால், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் கழிப்பறை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் போதிய அளவுக்கு இல்லை. எனினும் அதற்கான நிதியைக் கூட அரசு அளிக்க முன்வராதது துரதிருஷ்டவசமானது என்கிறார்கள் ஆசிரியர்கள்.

இதனால், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், நிர்வாகிகளும் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் அல்லது மக்களவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியைக் கோருகிற நிலை ஏற்படுகிறது.

அரசியல்வாதிகளின் உதவியைக் கோரும்போது, அவர்களது சிபாரிசை ஏற்கும் கட்டாயம் ஏற்படுவதால், மாணவர் சேர்க்கையின்போது நியாயமாக நடக்கமுடியவில்லை என்பதும் ஆசிரியர்கள் கூற்று.

எனவே, அரசு உதவிபெறும் பள்ளிகளது சேவை நோக்கம், அதன் பாரம்பரியப் பெருமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டாவது அரசு சிறப்பு நிதியை அளிக்கவேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரது வேண்டுகோள்.

சேவை நோக்கில் முழுமையாகச் செயல்பட முடியாமலும், வர்த்தக ரீதியில் மூழ்காமலும் ஊசலாட்டத்தில் தள்ளாடும் பாரம்பரியமிக்க அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் அரசு தன் உதவிக்கரத்தை நீட்டுவது "தந்தை மகனுக்காற்றும் கடமை' போன்றதே!
கட்டுரையாளர் :வ.ஜெயபாண்டி
நன்றி : தினமணி

Saturday, January 16, 2010

புத்தொளி பாய்ச்சிய புனிதர்!

ஜாதியிலே,​​ மதங்களிலே,​​ சாத்திரச் சண்டைகளிலே அகப்பட்டு,​​ புகழ் மங்கிக்கிடந்த இந்தியத் திருநாட்டின் நிலையை மாற்ற -​ அதன் உயர்வை உலகுக்குப் பறைசாற்றத் தோன்றிய பெருந்தகை சுவாமி விவேகானந்தர்.​ அவர் இந்நாட்டுக்கு ஆற்றியுள்ள தொண்டு அளப்பரியதாகும்.

விவேகானந்தரைச் சான்றோனாக,​​ துறவியாக,​​ நாவலனாக,​​ தத்துவ ஞானியாக,​​ சீர்திருத்தச் செம்மலாகக் காண்பர் பலர்.​ இவை அனைத்துக்கும் மேலான ஒரு பரிமாணம் அவருக்கு உண்டு.​ ஊக்கமின்றி,​​ உள்ள உரமிழந்து அன்னியருக்கு அடிமைகளாக வாழ்ந்த இந்தியர் நெஞ்சில் புத்தொளி பாய்ச்சியவர் அவர்.​ முடைநாற்றம் வீசும் மூடப்பழக்கங்களையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு,​​ ஆயிரம் தெய்வங்களைத் தேடி அலைந்த இந்நாட்டு மக்களுக்கு அறிவு நெறி காட்டியவர்.

தன்னம்பிக்கையும்,​​ அச்சமின்மையுமே அவர் சொல்லிலும்,​​ செயலிலும் உயிர் நாதமாகத் திகழ்ந்தன.​ ""பண்டைய மதங்கள் கடவுளின் மீது நம்பிக்கையற்றவனை "நாத்திகன்' என்றன.​ ஆனால் புதிய மதமோ எவனொருவனுக்குத் தன் மீதே நம்பிக்கை இல்லையோ அவனையே நாத்திகன் என அழைக்கிறது'' ​(சுவாமி விவேகானந்தரின் எழுத்தும் பேச்சும் தொகுதி:​ 2 பக்.301) எனப் புதிய சித்தாந்தம் ஒன்றை அவர் வலியுறுத்தினார்.​ வலிமையே வாழ்வெனவும்,​​ வலியின்மை மரணமெனவும் முழங்கினார்.​ ""மக்களுக்குப் போதிக்கப்பட வேண்டிய ஒரே மதம் அச்சமின்மை'' ​(தொகுதி:​ பக்.160) என வலியுறுத்தினார்.​ உபநிஷதங்களிலிருந்து வெளிப்படும் கருத்து இதுவே என்றார்.​ மக்களிடையே இருந்த அச்சம் எனும் பிணியைக் கண்டதோடல்லாமல்,​​ அந்நோயின் மூலத்தையும் தெளிவுற அறிந்திருந்தார்.

அறியாமை!​ தன்வலி புரியாமையால் விளைந்த அறியாமை;​ எல்லாவற்றையும் செய்யக் கூடிய ஆற்றலின் ஊற்று நம்முள்ளே சுரந்துகொண்டிருக்க,​​ அறியாமையால் அதை அறியாதிருத்தல் பேதைமை எனவும்,​​ ""முடியாது,​​ என்னால் இயலாது என்று மட்டும் சொல்லாதீர்கள்.​ நீங்கள் எல்லையற்றவர்கள்.​ காலமும்,​​ இடமும் கூட உங்கள் இயல்புடன் ஒப்பிடும் போது ஒன்றுமே இல்லை.​ நீங்கள் எதையும் செய்ய முடியும்.​ எல்லாம் வல்லவர் நீங்கள்'' ​(பக்.300) எனவும் கூறினார்.

தன் குருநாதர் ராமகிருஷ்ணரின் மறைவுக்குப்பின்,​​ இந்திய நாட்டின் உண்மை நிலை அறிய,​​ இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டார் விவேகானந்தர்.​ நாட்டில் பரவிக்கிடந்த வறுமையையும்,​​ அதனால் மக்களுற்ற இன்னல்களையும் கண்டு கலங்கினார் அவர்.​ ""பசித்த மானிடனுக்கு மதத்தைப் போதிப்பது பயனற்றது'' எனத் தனது குருநாதரின் மொழியை அனுபவத்தால் உணர்ந்தார் சுவாமி விவேகானந்தர்.​ வறியவரோடு வறியவராக அப்பயணத்தின் போது அவர் வாழ்ந்தார்.

விவேகானந்தர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது,​​ செல்வந்தர்கள் பலர் பணம் தர முன்வந்தனர்.​ ஆனால் விவேகானந்தர்,​​ தன் அன்பர்களை நடுத்தர மக்களிடம் சென்று பொருள் வேண்டச் சொன்னார்.​ தான் நடுத்தர ஏழை மக்களின் பிரதிநிதியாகவே அமெரிக்கா செல்ல விரும்புவதாகப் பெருமையுடன் சொன்னார்!

""இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை'' என்னும் குறள் வரியின் இலக்கணமாகவே அவர் வாழ்வு அமைந்திருந்தது.​ அவர் எளிய வாழ்க்கை முறையையும்,​​ உண்மைத் துறவு நிலையையும் அவர் வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகள் நமக்கு உணர்த்தும்.​ குறிப்பாக,​​ இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு இறுதியாகக் குமரிமுனையை அடைந்த விவேகானந்தர்,​​ கடலில் இருந்த பாறையின் உச்சியில் அமர்ந்து தியானம் செய்ய விழைந்தார்.​ ஆனால்,​​ படகேறிச்செல்ல அவரிடம் பணம் இல்லை.​ சுறா மீன்கள் நிரம்ப உள்ள குமரிக்கடலில் குதித்து,​​ நீந்திப் பாறையை அடைந்து,​​ தியானம் மேற்கொண்டார்.

அயல் நாடுகளில் விவேகானந்தரின் நாவன்மையையும்,​​ உள்ளத்திண்மையையும்,​​ மனத்தன்மையையும்,​​ மதி நுட்பத்தையும் கண்டு வியந்தோர் பலர்.​ 1893-ம் ஆண்டு சிகாகோவில் அனைத்துலக சமயப் பெருமன்றத்தில் விவேகானந்தர் ஆற்றிய,​​ கேட்போர் பிணிக்குந்தன்மை வாய்ந்த உரை இந்தியாவின் புகழை உலகறியச் செய்தது.​ அப் பெருமன்றத்தில் விவேகானந்தர் உரையாற்றிய பாங்கையும்,​​ தன் நாநலத்தால் மக்களை அவர் கவர்ந்த விதத்தையும் பிரஞ்சு நாட்டு அறிஞர் ரோமென்ரோலந்து தான் எழுதிய,​​ "விவேகானந்தரின் வாழ்க்கை' என்ற நூலில் சிறப்புடன் விளக்கியுள்ளார்.

""யாரும் அறியாத அம் முப்பது வயது இளந்துறவி,​​ கார்டின் கிப்பன்ஸôல் சிகாகோவில் 1893-ம் ஆண்டு துவக்கிவைக்கப்பட்ட அனைத்துலகச் சமயப் பெருமன்றத்தில் புகுந்தபோது,​​ அவரின் கம்பீரத் தோற்றம் உடனிருந்தோரை மெய்மறக்கச் செய்தது.​ அவர் வலிவும்,​​ பொலிவும்,​​ கருவிழிகளும்,​​ தோற்றமிடுக்கும்,​​ சொற்பொழிவைத் துவக்கியவுடன் நல்லிசையென ஒலித்த அவர்தம் குரலும்,​​ அவர் நிறம் கண்டு அவர் மீது முன்பு வேற்றுமை மனப்பான்மை கொண்டிருந்த அமெரிக்க,​​ ஐரோப்பிய மக்களையும் கவர்ந்திழுத்தன.​ அப்போர்க்குணம் கொண்ட இந்தியத் துறவி அமெரிக்காவில் தன் ஆழ்ந்த முத்திரையைப் பதித்துச் சென்றார்'' ​(பக்.5).

இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் தான் கூறவந்த கருத்துகளை எவ்வித அச்சமும்,​​ தயக்கமுமின்றி வெளிப்படுத்தினார்.​ தன் அமெரிக்கப் பயணத்தின்போது அமெரிக்கச் சிந்தனையாளர் இங்கர்சாலை சந்தித்தார் விவேகானந்தர்.​ அவர் விவேகானந்தரின் அச்சமற்ற போக்கையும்,​​ அந்நாளிலான அமெரிக்காவின் நிலைமையையும் மனதில் கொண்டு,​​ ""ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் இந்நாட்டுக்கு வந்து போதித்திருப்பீர்களாயின்,​​ உங்களை தூக்கிலோ,​​ தீயிலோ இட்டிருப்பர் இந்நாட்டவர்'' என்றார் ​(தொகுதி:2 பக்.27).

மதத்துக்கும்,​​ மானுடத்துக்கும் உள்ள தொடர்பை நன்கு உணர்ந்திருந்தார் விவேகானந்தர்.​ ஆன்மிகத்துக்கும் நடைமுறை வாழ்வுக்கும் இடைவெளி ஏதும் இல்லை என்பதை தம் சொற்பொழிவுகள் மூலம் நிறுவினார்.​ இக்கருத்தை அறுதியிடும் வண்ணம்,​​ "செயல்முறை வேதாந்தம்' என்னும் கோட்பாட்டைக் கண்டார்.​ ஆன்மிகம் என்பது வாழும் நெறி;​ அது வாழ்க்கையைக் கண்டு அஞ்சி ஓடுவோர் சென்றடையும் கூடாரமன்று என்பது அவர் கருத்து.​ இதை அவர் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்று நமக்கு உணர்த்தும்.

ஒருமுறை விவேகானந்தரைக் காண முதுநிலைப் பட்டப்படிப்புப் பயின்று வந்த மாணவன் ஒருவன் வந்தான்.​ அவன் துறவு பூண விவேகானந்தரின் கட்டளையை வேண்டி நின்றான்.​ அம் மாணவன் துறவு பூணக்காரணம்,​​ அவன் படித்துக் கொண்டிருந்த முதுநிலைப் பட்டப்படிப்பு சிரமமாக இருந்ததுதான் என்பதைக் கண்டறிந்த விவேகானந்தர்,​​ முதுநிலைப் படிப்பைக் காட்டிலும் துறவு வாழ்க்கை கடினமானது என நயம்படக் கூறி,​​ அம் மாணவனுக்கு உண்மையை உணர்த்தினார்.

மதத்தின் மீதுள்ள பற்று மதவெறியாக உருவெடுப்பதைக் கடிந்தவர் விவேகானந்தர்.​ மதவெறியே மதநெறியாகப் போற்றிக் கொள்ளப்படும் இந்நாளில்,​​ விவேகானந்தரின் பணிச்சிறப்பும்,​​ பேச்சும் முக்கியத்துவம் பெறுகின்றன;​ பெரிதும் வேண்டப்படுகின்றன.​ மேலை நாடுகளுக்குச் சென்று திரும்பியதும் மதுரையில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுப் பேசுகையில்,​​ மதவெறிக்கு ஆட்படாமல் இருக்குமாறு மக்களை வேண்டினார்.

""தற்போது இந்தியாவில் மகத்தான மத மறுமலர்ச்சி தோன்றியுள்ளது.​ இதில் பெருமை இருப்பதைப் போலவே ஆபத்தும் உள்ளது.​ ஏனெனில் சில வேளைகளில் இந்த மறுமலர்ச்சி,​​ கொள்கை வெறியை வளர்க்கிறது;​ சில நேரங்களில் அவ்வெறி,​​ எல்லை கடந்தும் போய்விடுகிறது.​ மறுமலர்ச்சிக்குக் காரணமானவர்களுக்குக் கூட அதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை வருகிறது.​ எனவே,​​ எச்சரிக்கையாக இருப்பது நல்லது'' ​(தொகுதி:3 பக்.172) எனக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் மட்டுமன்றி,​​ வெளிநாடுகளில் உரை நிகழ்த்தும்போதும்,​​ மதவெறியை வன்மையாக அவர் கண்டித்தார்.​ "உலகளாவிய மதம்' எனும் தலைப்பில் 1900-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் உரை நிகழ்த்துகையில்,​​ ""உலகில் உள்ள நோய்கள் யாவினும் மிகக் கொடிய நோய் மதவெறி எனும் நோயே'' என்றார்.

விவேகானந்தரின் செயலிலும் பேச்சிலும் பிற மதங்களுக்கு எதிரான காழ்ப்புணர்வு எப்போதும் இருந்ததில்லை.​ உலக மதங்கள் யாவும் தமக்குள் இருக்கும் பிணக்குகளைத் துறந்து உலகளாவிய தன்மை எய்த வேண்டும் என விழைந்தார் விவேகானந்தர்.​ ""மதங்கள் யாவும் பரந்த நோக்குடையனவே.​ பல மதங்களைப் போதித்து வரும் மதவாதிகள் அவர்தம் பணிகளைச் சற்று நிறுத்தினால்,​​ நாம் இவ்வுண்மையை நொடிப்பொழுதில் உணரலாம்'' ​(தொகுதி:​ 2 பக்.367)

ஜாதியின் பெயரால் நடந்த அநீதிகளைக் கண்டு வெகுண்டெழுந்தவர் விவேகானந்தர்.​ மேல் வகுப்பினருக்கு ஒரு நீதி;​ கீழ் வகுப்பினருக்கு ஒரு நீதி என்று சமுதாயத்தில் அமைந்துள்ள வேறுபாடு சாத்திரத்தால் விளைந்ததன்று;​ சதியால் நேர்ந்தது என முரசறைந்தார்.​ ""சாதி வெறி பிடித்தோரும் ஒரு சில மதவாதிகளும் இந்நாட்டினை இழிநிலைக்குத் தள்ளிவிட்டனர்'' ​(தொகுதி:​ 6 பக்.317) என வேதனைப்பட்டார்.

இந்தியா உயர வேண்டுமெனில் இந்தியர் ஜாதிப் பித்தைத் தவிர்த்து பேதமற்ற உயர் நெறி போற்றி ஒழுகுதல் அவசியம் என விரும்பினார்.​ இந்து சமயத்தின் மேன்மையை மக்களுக்கு உணர்த்தாமல் ஜாதி-மதவெறியை வளர்ப்போரைக் கடுமையாக எதிர்த்தார் விவேகானந்தர்.​ ""உங்கள் சமயம் மகத்தானது,​​ ஆனால் அதன் மேன்மையை மக்களுக்கு உணர்த்தாமல் அவர்களை மடமைக்கு ஆட்படுத்துகின்றீர்.​ வற்றாத சுனை பொங்கிக் கொண்டிருக்க,​​ மக்களைச் சாக்கடை நீரைப் பருகச் செய்கின்றீர்'' ​(தொகுதி:​ 5 பக்.223) என வேதனையுடன் குறிப்பிட்டார்.

விவேகானந்தர் விசாலப் பார்வையால் உலகை விழுங்கியவர்.​ அறிவின்பாற்பட்டதே சமயம் என நிறுவியவர்.​ "தன்னிற் பிறிதில்லை தெய்வம்' எனத் தன்னம்பிக்கையை வளர்த்தவர்.​ அவர் கருத்துகள் புதியதோர் உலகம் காண நம்மை ஊக்குவன.​ அவர் மண்ணுலகில் வாழ்ந்தது 39 ஆண்டுகள் தான் என்றாலும் அவர் மூட்டிய கனல்,​​ அணையா விளக்கென ஒளிர்விடும் என நம்பிக்கை அவருக்கு இருந்தது.​ ""ஒரு விவேகானந்தர் என்ன,​​ காலப்போக்கில் எத்தனையோ விவேகானந்தர்கள் தோன்றத்தான் போகிறார்கள்'' என்பது அவரது நம்பிக்கை.

அந்த நம்பிக்கை வீண்போகாமல் காப்பாற்றப்படும் பெரும் பொறுப்பு நமது இளைய தலைமுறைக்கு உண்டு.​
கட்டுரையாளர்:ப.சேரலாதன்
நன்றி : தினமணி

இந்தியாவின் அடுத்து வரும் ஆண்டுகள்

புத்தாண்டு பிறந்தவுடன், அடுத்து வர உள்ள ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் எப்படி இருக்கும்; மக்களின் வாழ்க்கைத் தரம் எப்படி அமையும் என்று சிந்திப்பது ஆரோக்கியமான ஒரு வழக்கமே.

ஆனால், கடந்த காலங்களில், ஆரோக்கியமற்ற சில ஆருடங்கள் சொல்லப்பட்டதும், நல்ல வேளையாக, அவை பொய்த்துப் போனதும் நினைவுக்கு வருகின்றன.

ஒன்று, 1967-ம் ஆண்டில் நிகழ்ந்தது: அது சமயம் நாட்டின் நான்காவது பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மழையின்மையால் கடும் வறட்சி நிலவிய நேரம். போதாக்குறைக்கு, அந்தத் தேர்தலுக்குச் சிறிது காலம் முன்னர்தான் இந்தியா ஒரு போரையும் சந்தித்திருந்தது. நாட்டின் அரசியல் தலைமை அவ்வளவு வலுவாக இருக்கவில்லை. அப்போது, இங்கிலாந்து நாட்டின் பிரபல முன்னணி நாளேடு, ""இதுவே இந்தியாவின் கடைசிப் பொதுத் தேர்தல்'' என்று எழுதியது!

இன்னொரு நிகழ்வு, 1947-ம் ஆண்டில் நடந்தது. இது பலருக்கு நினைவிலிருக்கும். ஆருடம் கூறியவர் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சர்ச்சில்! இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறினால், நாடு சின்னாபின்னமாகிவிடும், என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்!

கடந்த காலத்தை விட்டு, நிகழ்காலத்துக்கு வருவோம்! 2009-ம் ஆண்டு, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான நிதி ஆண்டின் முதல் அரையாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.9 சதவீதம். முந்தைய ஆண்டு இதே காலத்தில் இருந்ததைவிட இது சற்று அதிகம். இந்த ஜி.டி.பி. வளர்ச்சிக்கு முக்கிய காரணம், அரசு மேற்கொண்ட பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள்தான். இந்த ஊக்குவிப்பு நடவடிக்கையை அரசு திடீரென்று விலக்கிக் கொண்டால், இதே அளவு வளர்ச்சி தொடருமா என்பது சந்தேகம்தான்.

அதேநேரம், இந்தியாவின் வரவு செலவில் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே போகிறது. பற்றாக்குறையைக் குறைக்க வேண்டுமானால், வரிகளைக் கூட்டுவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும். ஜி.டி.பி.யின் வளர்ச்சி 8 சதவீதமாக அதிகரிக்க முடியாது.

தற்போது, பொதுமக்களை ஆட்டிப் படைக்கும் மிகப் பெரும் பிரச்னை, விலைவாசி உயர்வுதான். கடந்த ஓராண்டில் நாம் கண்கூடாகப் பார்த்த விஷயம், ஜி.டி.பி. வளர்ச்சியால் விலைவாசி குறைந்துவிடாது என்பதுதான். ஆக, வளர்ச்சி விகிதம் அதிகரிப்புக்கும் விலைவாசிக்கும் தொடர்பு இல்லை.

விலைவாசியில், ஒரு முரண்பாட்டையும் காண முடிகிறது. கணினி உள்ளிட்ட மின்னணுப் பொருள்களின் விலைகள் குறைகின்றன. இறக்குமதி செய்யப்பட்ட தொழில் கூடங்களில் உற்பத்தியான பொருள்களின் விலைகளும் குறைகின்றன. ஆனால் உணவுப் பொருள்களின் விலை மட்டும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

உணவுப் பண்டங்களின் விலை உயர்வுக்கு விளைச்சல் குறைவு என்பதைத் தவிர வேறு பல காரணங்கள் உண்டு.

அவற்றில், முன் பேர வணிகம் ஒரு முக்கிய காரணம். குறைந்த அளவே முதலீடு செய்து, அதிக அளவில் பண்டங்களை வர உள்ள ஒரு குறிப்பிட்ட தேதியில் கொள்முதல் செய்வதுதான் முன் பேர வணிகம். இதனால் விலைகள் உயர வாய்ப்பு உள்ளது. 2007-ம் ஆண்டு அரிசி, கோதுமை, உளுந்து, துவரம்பருப்பு ஆகிய நான்கு பொருள்களுக்கு முன் பேர வணிகத்தை மத்திய அரசு தடை செய்தது. இந்தத் தடை தொடர வேண்டும். இதர உணவுப் பண்டங்களுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும்.

பொதுவாகவே, உலக அளவில் உணவுப் பண்டங்களின் விலை ஏறிக் கொண்டே போகிறது. காரணம் அநேக நாடுகளில் உணவுப் பொருள்களின் விளைச்சல் சரிந்துள்ளது. இதுவும் இந்தியாவில் விலைகள் உயரக் காரணம். இந் நிலையில் அத்தியாவசியப் பொருள்களின் விலை குறைவதற்கு உடனடியாக வாய்ப்பு இல்லை.

பொது விநியோகத் திட்டத்தில் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் மலிந்துள்ளன. இதைச் சரி செய்யாமல் விலைவாசியைக் கட்டுப்படுத்த இயலாது. ரேஷன் பொருள்கள் கடத்தல், கள்ளச்சந்தை, பதுக்குதல் போன்ற சமூக விரோதச் செயல்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும். இது மாநில அரசுகளின் தலையாய கடமை. இந்த உயிர்நாடிப் பிரச்னைக்குத் தீர்வு காணாவிடில், வளர்ச்சி 8 சதவீதம் எட்டினாலும், அதனால் மக்களுக்குப் பயன் இல்லை.

கடந்த ஆண்டுகளில், அமெரிக்கப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்தது. மிதவாதப் போக்கை கடைபிடித்ததால், இந்திய வங்கிகள் தப்பித்தன. ஆனால், நம் நாட்டில் தோல் உற்பத்தி, ஜவுளித் துறை, ஆபரணக் கற்கள் பட்டை தீட்டுதல், பல்வகை கைவினைப் பொருள்கள் போன்றவற்றின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கிய வரிச் சலுகையால் இத்துறைகள் ஓரளவு சமாளித்து வருகின்றன. எனவே, அரசு தற்போது வழங்கும் உதவிகளை அவசரப்பட்டு நிறுத்திவிடக் கூடாது. அவை தொடர வேண்டும்.

பாரத ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்திவிடக் கூடாது. அப்படி ஒரு வேளை உயர்த்தினால் அது எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும்.

இவ்வளவையும் மீறி, உலகின் முன்னணி தர நிர்ணய அமைப்புகள் என்ன கூறுகின்றனவெனில், உலகிலேயே, சீனாவுக்கு அடுத்தபடியாக, வேகமாக வளரும் நாடு இந்தியாதான், என்பதே. காரணம், சர்வதேச அளவில், பொருளாதார மந்த நிலை நீடித்தாலும், இந்தியா நடப்பாண்டில் 8 சதவீத வளர்ச்சி அடையும் என்பதும், சீனா 9.6 சதவீத வளர்ச்சி அடையும் என்பதே.

÷வாஷிங்டனிலிருந்து செயல்படும், "பியூ' பொருளாதார ஆய்வுக் கழகம், 25 வளரும் நாடுகளில் நடத்திய ஆய்வின் அடிப்படையில் வெளியிட்டுள்ள கணிப்பும் இதையே உறுதி செய்கிறது. அது மேலும் கூறுகையில், பல வளரும் நாடுகளைவிட இந்திய மக்களின் தன்னம்பிக்கை 2002-ம் ஆண்டுக்குப் பிறகு, இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்பதே ஆகும்.

÷வளர்ச்சிக்குத் தேவையான மூன்று முக்கிய அம்சங்கள் என்னவெனில், மூலதனம், தொழிலாளர் திறன் மற்றும் உற்பத்தித் திறன்.

÷இந்தியாவில் சேமிப்பு மற்றும் முதலீடு படிப்படியாக வளர்ந்து, இப்போது மொத்த உற்பத்தி மதிப்பில் 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. சீனாவும் இதே அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

÷அடுத்ததாக தொழிலாளர் திறன் என்னும் குறியீடு. இதில் இந்திய சீனாவைக் காட்டிலும் ஆண்டுக்கு 1.8 சதவீதம் வேகமாக வளருகிறது. இந்திய மக்கள் தொகையில் இளைஞர்கள் மற்றும் உழைக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகம்.

÷மூன்றாவது, உற்பத்தித் திறன் வளர்ச்சியில் சீனாவை விட இந்தியா ஆண்டுக்கு 2 சதவீதம் பின்தங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக உள்ள நிலை இது. இதற்கு சர்வதேச வல்லுநர்கள் தரும் விளக்கம் சிந்தனையைத் தூண்டுவதாகும். இதே 5 ஆண்டு காலமாக, சீனா கடைப்பிடித்து வரும் நாணய மதிப்பீட்டு முறை உத்தியே இதற்குக் காரணம் என்பதே அது.

÷சீனா எதிர்கொள்ளும் இரண்டாவது பிரச்னை, சுற்றுச்சூழலைப் பாதிக்கும் அதீதமான "கார்பன் புகை வெளியேற்றம்'. இவ்விரண்டு காரணங்களால், சர்வதேச பொருளாதார அமைப்புகளும், வல்லுநர்களும் சீனா மீது அதிருப்தி கொண்டுள்ளனர். எனவே உற்பத்தித் திறனில் சீனாவுக்கு இருப்பதாகக் கருதப்படும் சாதகமான சூழல் விரைவில் மறைந்து விடும் என்பதும், அது இந்திய உற்பத்தித் திறன் வளர்ச்சிக்குச் சாதகமாக அமையும் என்பதும் வல்லுநர்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளது. புதிய வளர்ச்சி வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய வளர்ச்சியாக இருக்கும் என சர்வதேச நிபுணர்களும் கணிக்கின்றனர்.

÷பொருளாதார முன்னேற்றம் ஒருபுறம் இருக்க, மிகப் பெரிய ஜனநாயக நாடாக இருத்தல்; முறையான பொதுத் தேர்தல்கள்; உலகத் தலைவர்களால் மதிக்கப்படும் அரசியல் தலைமை; அதிகரித்து வரும் அன்னிய நேரடி முதலீடுகள்; சுதந்திரமாகச் செயல்படும் பெருவாரியான செய்தித்தாள்கள்; உலகெங்கிலும் உள்ள மிகப் பெரிய வணிக நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாகச் செயல்படுகின்ற இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை ஆகிய பல சாதகமான அம்சங்கள் இந்தியாவின் சிறப்பான வளர்ச்சிக்குக் கட்டியம் கூறுகின்றன.

÷அதே நேரம், சில நெருடலான அம்சங்களும் இருக்கத்தான் செய்கின்றன. பெருகி வரும் மனித உரிமை மீறல்கள்; மக்களிடையே அதிகரித்து வரும் ஏழை-பணக்காரர் இடைவெளி; அரசியல் அரங்கில் ஊடுருவல் செய்யும் சமூக விரோத சக்திகள்; உள்நாட்டில் பாதுகாப்பின்மை ஆகியவை பெரும் அச்சுறுத்தல்களாக உள்ளன. இவற்றை, விரைந்து கட்டுப்படுத்தினால்தான்,இந்தியா வளமான நாடாக மட்டும் அல்லாமல் அமைதிப் பூங்காவாகவும் திகழ முடியும்.
கட்டுரையாளர் : எஸ். கோபாலகிருஷ்ணன்
நன்றி : தினமணி

அசல் அமிழ்கிறது... நகல் நர்த்தனமாடுகிறது...!

உழைப்பே உயர்வு தரும் என்று உழைப்புக்கு சற்றும் தொடர்பே இல்லாதவர்கள் அடிக்கடி உரக்கக் குரல் கொடுப்பது வாடிக்கையாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கவில்லை என்றால் உழைப்பவர்களும் ஒதுங்கிவிடுவார்களோ என்று அவர்கள் அஞ்சுவதும் புரிகிறது.

÷தமிழினம் தழைத்து ஓங்கியிருந்த காலத்தில் உழைப்பால் உயர்ந்தவர் என்று ஒருவரைச் சொல்லுகிறபோது, அவர் உடலுழைப்பால் உயர்ந்தவர் என்றே அறியப்பட்டார். சமீபகாலங்களில் அறிவியலின் அதீத வளர்ச்சியால் அமோக பலனடைந்து வருவோர் அறிவுழைப்பு என்று அறியப்படுகின்ற மூளை உழைப்பை முன்னிலைப்படுத்துவதில் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். மனித குலத்தின் உயிர்ப்புக்கே அடித்தளமாய் விளங்குகின்ற உடலுழைப்பை உதாசீனப்படுத்துவதில் அவர்கள் ஓரணியில் நிற்கின்றனர்.

÷ஒரு சமுதாயத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிற காரணிகளில் முதலானதும் முக்கியமானதும் உழைப்பாகும். அந்த உழைப்பின் இரு கூறுகளான உடலுழைப்பையும் அறிவுழைப்பையும் இரு கண்களைப்போன்று சமநிலையில் வைத்துப் போற்றுகிற சமுதாயம்தான் வளம் பெற்றுப் பீடுநடை போடும் என்பது சமூக-பொருளியல் தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு. ஆனால் இருவித உழைப்புகளுக்கும் மதிப்பையும் விலையையும் நிர்ணயிக்கிற அதிகாரம் அறிவுழைப்பாளர்களுக்கே இருப்பதால், அவர்கள் இந்த இரு உழைப்பின் மதிப்புகளுக்கிடையே பெரும் பிளவை ஏற்படுத்திவிட்டனர்.

÷பங்குச் சந்தை, இணைய வர்த்தகம், மென்பொருள் உற்பத்தி என்று பட்டியல் நீளுகிற அறிவுசார் துறைகள், உடலுழைப்பை ஓரங்கட்டிவிட்டு கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. உடலுழைப்புக்கு ஐந்தரை அறிவே போதும் என்கிற அறிவுழைப்பாளர்களின் அஞ்ஞான மனப்பாங்கினை, வேலிக்கு ஓணான் சாட்சி என்பதுபோல ஆட்சியாளர்களும் ஆமோதிக்கும் பேரவலத்தைக் கேட்பாரில்லை.

÷பாமர மக்களின் உடலுழைப்பால் உருப்பெற்ற விளைவிப்புகளையும் உற்பத்திகளையும் அறிவுழைப்பு என்கிற ஆயுதத்தின் துணையுடன் ஒருசாரார் மாத்திரம் அனுபவித்ததன் விளைவால் சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பெரும் பிளவு ஏற்பட்டிருக்கிறது. இதுதான் பொருளாதாரச் சரிவின் மூலகாரணம் என்பதை ஓங்கிக் கூறலாம்.

÷பொருளாதார மந்தநிலை எப்போது சீராகும் என்று எதிர்பார்த்து நிற்கும் இந்த வேளையில், இருவித உழைப்புகளுக்கிடையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாகுபாட்டினை மீள்பார்வை செய்வது, சமுதாயத்தின் மீட்சிக்குப் பேருதவியாக இருக்கும்.

÷100 நாள் வேலைத்திட்டத்தில் உடலுழைப்பை அளிப்பவர்களுக்கு தினக்கூலி 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 100 ரூபாயாகக் கொடுக்கப்படும் என்று, மனம் விசாலமாகிவிட்ட நிலச்சுவான்தார் போன்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் அறிவுழைப்பாளர்கள் மட்டும் எப்படி லகரங்களில் சம்பளம் வாங்குகின்றனர்.

÷அதன் சூட்சுமம் மிகவும் சுலபமானது. அசல் உழைப்பைத் தரும் உடலுழைப்பாளி அந்த உழைப்பை நகல் எடுக்க முடியாது. நகல் எடுக்கவல்ல உழைப்பைத் தரும் அறிவுழைப்பாளி அதை எத்தனை நகல் வேண்டுமானாலும் எடுத்துப் பணமாக்கிக் கொள்ளலாம்.

÷100 அறிவுழைப்பாளிகள் ஒன்று சேர்ந்து 10 கோடி ரூபாய் செலவில் ஒரு மென்பொருளை உருவாக்குகிறார்கள் என்று வைத்துக்கொண்டால், அதைக் குறுந்தகடாக்கி பல லட்சம் பிரதிகளை எடுத்துப் பலநூறு கோடிகளுக்கு அவற்றை விற்றுக்கொள்ளலாம்.

÷அவ்வாறு உருவாக்கிய மென்பொருளுக்கு அறிவுசார் சொத்துரிமை வாங்கிக்கொண்டு தொடர்ந்து பன்னெடுங்காலத்திற்கும், ஒருமுறை செய்த அறிவுழைப்பை மீண்டும் மீண்டும் விற்றுப் பணமாக்குகின்றனர். இப்படிச் சுலபமாகச் சேருகின்ற பணத்தில்தான் லகரங்களை சம்பளமாகக் கொடுத்து சமுதாயப் பிளவை உண்டாக்கி வருகின்றனர்.

÷உடலுழைப்பை நம்பி இருக்கின்றவன் பொருளீட்ட வேண்டுமென்றால் அவன் மீண்டும் மீண்டும் உழைத்தாக வேண்டும். இன்றைய இந்தியப் பொருளாதாரத்தின் மாட்சி இதுதான். தொடர்ந்து உடலால் உழைப்பவன் வறுமையிலேயே உழல வேண்டும், ஆனால் அறிவால் உழைப்பவன் அதை நகலெடுக்கும் அதிநவீன உத்தியைப் பயன்படுத்தி சட்டத்தின் துணையோடு பெரும் பொருளீட்டி வாழலாம்.

÷இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள மெகா கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2009-ம் ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பட்டியல் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் ஒரு நாளைக்கு 45 ரூபாய்க்கும் குறைந்த வருமானத்தில் புழுவினும் கீழாய் வாழ்ந்தபடி உடலுழைப்பை அர்ப்பணிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 35 கோடி. அசல் அமிழ்ந்து கிடக்கிறது, நகல் நர்த்தனமாடுகிறது.

÷விவசாயமே சுவாசமாகிப் போய்விட்ட நம்நாட்டுக்குக் கட்டுப்பாடற்ற அறிவுசார் சொத்துரிமை எத்தகைய தீங்குகளை விளைவிக்கும் என்பது தெரிந்திருந்தும், இந்திய அரசு சர்வதேச அறிவுசார் சொத்துரிமை விதிமுறைகளுக்குத் தனது ஒப்புதல் முத்திரையைப் பதித்து வருகிறது.

÷இதிலே விந்தை என்னவென்றால், மனிதனின் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்ற அனைத்தும் உடலுழைப்பின் உருவாக்கமாகவே இருக்கிறது. என்றாலும் இவற்றையெல்லாம் சுலபமாகக் கிடைக்கும் பணத்தால் அறிவுழைப்பாளர்கள் கூடுதல் விலைகொடுத்து எளிதாகப் பெற்றுவிடுவதால் உழைத்து உருவாக்கிய வர்க்கத்தினருக்கேகூட அவை கிடைப்பதில்லை. வழிப்போக்கர்களுக்கும் விருந்தோம்பல் செய்து அவர்கள் இளைப்பாற திண்ணைகட்டி வாழ்ந்தவர்கள் இன்று இலவசங்களுக்காக வரிசைகட்டி நின்றே காலத்தைக் கழிக்கின்றனர்.

÷உடலுழைப்பின் மாண்பினை உலகுக்கு உணர்த்திய முதல் இனம் நம் தமிழினம் என்பதுதான் எஞ்சியிருக்கும் பெருமை. உலகப் பொதுமறையாம் திருக்குறளை நமக்களித்த ஐயன் வள்ளுவர் இதைப் பிரகடனம் செய்கிறார். "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் - தொழுதுண்டு பின்செல் பவர்' என்று. உடலை வருத்தி உழைக்கின்ற உழவனுக்கு முதல் மரியாதை செய்து, உலகிலேயே உடலுழைப்பை உயர்த்திப் பிடித்த பெருமகன் திருவள்ளுவர்தான் என்பதில் நெஞ்சம் நெகிழ்கிறது.

÷அதற்கும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த யுகக் கவிஞர் பாரதியார், "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று பின்வரவான தொழிலையும் சேர்த்து வணங்கிப் போற்றுகிறார்.

÷காந்தியடிகள் தமது சத்திய சோதனையில் உடலுழைப்பு பற்றிய சில தீர்க்கமான கருத்துகளை முன்வைக்கிறார். உழைப்பில் உயர்வு தாழ்வு கிடையாது என்கிற சத்தியவாக்குக்கு சாட்சியம் சொல்லிவிட்டு, ஒரு வழக்கறிஞரின் உழைப்பும் ஒரு சிகை அலங்காரத் தொழிலாளியின் உழைப்பும் ஒரே பெறுமானம் உள்ளவைதான் என்கிற ஆங்கில அறிஞர் ஜான் ரஸ்கின் கருத்தை அவர் அப்படியே ஆமோதிக்கிறார். மகாத்மா காந்தியின் பெயரைச் சொல்லி இன்று அரசியல் நடத்துகிறவர்கள் காந்தி ஜயந்தியன்றும், குடியரசு தினத்தன்றும் குல்லாய் போட்டுக் கொண்டு பேட்டி கொடுப்பதே காந்தியம் என்று எண்ணிக்கொள்வது காலத்தின் கோலம்.

÷முன்பெல்லாம் வேளாண் நிலங்கள் பொன்விளையும் பூமி என்று வாஞ்சையோடு அழைக்கப்பட்டன. அதன் விளைபொருள்களை விற்றுப் பொன்வாங்கும் சக்தி விவசாயிகளிடம் அன்று இருந்தது. இன்று நிலத்தையே விற்றால்தான் பொன்வாங்க முடியும் என்கிற சூழல் நிலவுகிறது.

÷விவசாயிகள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் மாத்திரமல்லாது, தொழிற்சாலைகளில் தொய்வின்றி உழைத்துவரும் தொழிலாளர்கள், கைவினைக் கலைஞர்கள், மீனவர்கள், இன்னபிற உடலுழைப்பாளர்கள் அனைவரும் தங்கள் இதயத்தின் ஒரு மூலையில் இன்னும் கசிகின்ற நம்பிக்கையால் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

÷லாபமும், சமூக மாண்பும் இல்லாத உடலுழைப்பை விடுத்து, இளைஞர்கள் விரக்தியின் விளிம்புக்குச் சென்று கொண்டிருப்பது சமுதாயத்துக்கு உகந்ததல்ல. உடலுழைப்புக்கு உரிய மதிப்பை, முதல் மரியாதையை விரைந்து மீட்டுத் தருகின்ற கடமையும் கடப்பாடும் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.

÷பிரெஞ்சுப் புரட்சியின்போது பாஸ்டில் சிறையை உடைத்து சமச்சீர் சமுதாயத்துக்கு வித்திட்டதும், ரஷியாவில் சார் மன்னர் ஆட்சிக்கு சாவுமணி அடித்து சோஷலிச சமுதாயம் அமைய அடித்தளமாக இருந்ததும், சீனத்தின் கூன்களை நிமிர்த்தி அதை செஞ்சீனமாக்கியதும் உடலுழைப்பாளர்களின் பெரும் பங்களிப்பே என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்படுவது அவர்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.
கட்டுரையாளர் :தில்லை நாகசாமி
நன்றி : தினமணி

Friday, January 15, 2010

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சென்சார் வருமா?

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரின் எண்ணத்தையும் மழுங்கடிக்கச் செய்து வரும் தொலைக்காட்சி ஊடகங்களின் நிகழ்ச்சிகளைத் தணிக்கை செய்ய சென்சார் அமைப்பு வந்தால்தான் இந்தியாவின் பண்பாடு காப்பாற்றப்படும் என்ற நிலை ஏற்பட்டு வருகிறது.

சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் வினீத் (13). 7-ம் வகுப்பு மாணவர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பான ஒரு காட்சியைப் பார்த்துள்ளார். அந்தக் காட்சியில் ஒருவர் வாயில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீப்பிடிக்கச் செய்வது போன்று செய்து காட்டியுள்ளார். இதைப் பார்த்த அவர், தானும் அதுபோலச் செய்து பார்த்துள்ளார். விளைவு தீக் காயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்தார்.
இந்தச் செய்தியை நாளிதழ்களில் படித்த யாருக்கும் நெஞ்சம் பதறாமல் இருக்காது.

இளம்பிஞ்சுகளின் மனதில் நஞ்சினைத் தொடந்து விதைக்கும் பணியினை சில ஊடகங்கள் தங்களின் வாழ்நாள் லட்சியமாகவே கொண்டு செயலாற்றி வருகின்றன. அதிலும் அண்மைக்காலமாக நெஞ்சைப் பதற வைக்கும் நிகழ்ச்சிகளை சேனல்கள் பல தங்களின் வருமானத்துக்காகவும், நிகழ்ச்சி ரேட்டிங்கில் முன்னிலைக்கு வருவதற்காகவும் சாகசம் என்ற பெயரில் போட்டி போட்டு நடத்தி வருகின்றன.

நிகழ்ச்சிக்கு நடுநடுவே, இதை யாரும் வீட்டில் வைத்து செய்து பார்க்காதீர்கள்.
இது மிகவும் அபாயமானது என்ற அன்புக் கட்டளை வேறு. சிகரெட் பாக்கெட்டின் வெளிப்புறத்தில் புகை பிடிப்பது உடல் நலத்துக்குக் கேடு என்று கடமைக்காக போடுவதைப்போல தொலைக்காட்சி சேனல்களும் இந்த வாசகத்தை ஒளிபரப்புகின்றன.

தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கும் வயது முதிர்ந்த, வாழ்க்கையின் தத்துவத்தை அனுபவித்து உணர்ந்த பெண்களே அந்த சீரியலின் கதாபாத்திரமாக தானும் மாறி அந்தப் பாத்திரம் கண்ணீர்விட்டால் தானும் கண்ணீர் விட்டு, அது சிரித்தால் தானும் சிரித்து, அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து ஒன்றிப் போகும் நிலையில், பாவம் சிறுவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன..? தொலைக்காட்சிகளின் கீழ்ப்பகுதியில் எப்பொழுதாவது தோன்றி மறையும் எச்சரிக்கைச் செய்திகளைப் பார்த்து இவர்கள் எப்படிக் கடைப்பிடிப்பார்கள்..?

சிறு குழந்தைகள் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்களை அறிந்து கொள்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட மிகக்குறைந்த நேரத்திலேயே தொலைக்காட்சிகளில் காட்டப்படும் படங்களை, விஷயங்களை அறிந்து கொள்கிறார்கள் அல்லது அறியத் துடிக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில், இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறோமே, அதனால் ஏதேனும் விபரீத விளைவுகள் நடந்து விடாதா என்று எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும் தோன்றவில்லை என்பதுதான் வேதனை.
தொலைக்காட்சித் தொடர்களில் சிலவற்றைப் பார்த்தால், அதில் நடிக்கும் சிறுவர்களைத் தங்கள் வயதுக்கு மீறிய பேச்சைப் பேசச் செய்து இயக்குநர் ம கிழ்ந்திருப்பார். ஆனால், அதேபோன்று அந்தத் தொடரினைப் பார்க்கும் மற்ற குழந்தைகளும் பேசுமே; அது பண்பாட்டுக்கு உகந்ததாக இருக்காதே என்று அந்தத் தொடரின் இயக்குநர் கவலைப்படுவதே இல்லை.

இன்னும் சில தொலைக்காட்சிகள் கையடக்க கேமராவை மறைத்து வைத்து வழியில் செல்வோரை எல்லாம் வழிமறித்து, அவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தங்களின் கடமை(?) ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு, அவர்கள் (மாட்டுபவர்கள்) படும் அவஸ்தைகளைத் தாங்களும் ரசித்து, பின்னர் உலகிற்கெல்லாம் அதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டு கடைசியாக ஒரே வரியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி இது. யாரையும் புண்படுத்த அல்ல. என்று நமட்டுச் சிரிப்புடன் எளிதாகக் கூறிவிட்டு மறைகிறார்கள்.

ஆனால், அவ்வளவுநேரம் அந்தச் சம்பவம் அவர்களை எந்த அளவுக்குப் பாதித்திருக்கும் என்பதையும், தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் சம்பந்தப்பட்ட நபரை பற்றி என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி எல்லாம் அந்த சேனல்களுக்குக் கவலை இல்லை. அவர்களின் ஒரே கவலை எப்படி ரேட்டிங்கை ஏற்றுவது என்பதுதான்.

எனவே, மக்களின் மனங்களைத் தன்வசப்படுத்தி தான் கூறும் கருத்துகளைத் திணித்து வரும் வேலையைத் திறம்படச் செய்து வரும் சேனல்களின் நிகழ்ச்சிகள் மக்களைக் குறிப்பாக குழந்தைகளைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். அதற்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கண்டிப்பாகத் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்பதுதான் பிள்ளைகள் மேல் பற்றுக்கொண்டுள்ள அனைத்துப் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.
கட்டுரையாளர் : வி.குமாரமுருகன்
நன்றி : தினமணி