Friday, January 15, 2010

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சென்சார் வருமா?

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரின் எண்ணத்தையும் மழுங்கடிக்கச் செய்து வரும் தொலைக்காட்சி ஊடகங்களின் நிகழ்ச்சிகளைத் தணிக்கை செய்ய சென்சார் அமைப்பு வந்தால்தான் இந்தியாவின் பண்பாடு காப்பாற்றப்படும் என்ற நிலை ஏற்பட்டு வருகிறது.

சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் வினீத் (13). 7-ம் வகுப்பு மாணவர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பான ஒரு காட்சியைப் பார்த்துள்ளார். அந்தக் காட்சியில் ஒருவர் வாயில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீப்பிடிக்கச் செய்வது போன்று செய்து காட்டியுள்ளார். இதைப் பார்த்த அவர், தானும் அதுபோலச் செய்து பார்த்துள்ளார். விளைவு தீக் காயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்தார்.
இந்தச் செய்தியை நாளிதழ்களில் படித்த யாருக்கும் நெஞ்சம் பதறாமல் இருக்காது.

இளம்பிஞ்சுகளின் மனதில் நஞ்சினைத் தொடந்து விதைக்கும் பணியினை சில ஊடகங்கள் தங்களின் வாழ்நாள் லட்சியமாகவே கொண்டு செயலாற்றி வருகின்றன. அதிலும் அண்மைக்காலமாக நெஞ்சைப் பதற வைக்கும் நிகழ்ச்சிகளை சேனல்கள் பல தங்களின் வருமானத்துக்காகவும், நிகழ்ச்சி ரேட்டிங்கில் முன்னிலைக்கு வருவதற்காகவும் சாகசம் என்ற பெயரில் போட்டி போட்டு நடத்தி வருகின்றன.

நிகழ்ச்சிக்கு நடுநடுவே, இதை யாரும் வீட்டில் வைத்து செய்து பார்க்காதீர்கள்.
இது மிகவும் அபாயமானது என்ற அன்புக் கட்டளை வேறு. சிகரெட் பாக்கெட்டின் வெளிப்புறத்தில் புகை பிடிப்பது உடல் நலத்துக்குக் கேடு என்று கடமைக்காக போடுவதைப்போல தொலைக்காட்சி சேனல்களும் இந்த வாசகத்தை ஒளிபரப்புகின்றன.

தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கும் வயது முதிர்ந்த, வாழ்க்கையின் தத்துவத்தை அனுபவித்து உணர்ந்த பெண்களே அந்த சீரியலின் கதாபாத்திரமாக தானும் மாறி அந்தப் பாத்திரம் கண்ணீர்விட்டால் தானும் கண்ணீர் விட்டு, அது சிரித்தால் தானும் சிரித்து, அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து ஒன்றிப் போகும் நிலையில், பாவம் சிறுவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன..? தொலைக்காட்சிகளின் கீழ்ப்பகுதியில் எப்பொழுதாவது தோன்றி மறையும் எச்சரிக்கைச் செய்திகளைப் பார்த்து இவர்கள் எப்படிக் கடைப்பிடிப்பார்கள்..?

சிறு குழந்தைகள் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்களை அறிந்து கொள்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட மிகக்குறைந்த நேரத்திலேயே தொலைக்காட்சிகளில் காட்டப்படும் படங்களை, விஷயங்களை அறிந்து கொள்கிறார்கள் அல்லது அறியத் துடிக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில், இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறோமே, அதனால் ஏதேனும் விபரீத விளைவுகள் நடந்து விடாதா என்று எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும் தோன்றவில்லை என்பதுதான் வேதனை.
தொலைக்காட்சித் தொடர்களில் சிலவற்றைப் பார்த்தால், அதில் நடிக்கும் சிறுவர்களைத் தங்கள் வயதுக்கு மீறிய பேச்சைப் பேசச் செய்து இயக்குநர் ம கிழ்ந்திருப்பார். ஆனால், அதேபோன்று அந்தத் தொடரினைப் பார்க்கும் மற்ற குழந்தைகளும் பேசுமே; அது பண்பாட்டுக்கு உகந்ததாக இருக்காதே என்று அந்தத் தொடரின் இயக்குநர் கவலைப்படுவதே இல்லை.

இன்னும் சில தொலைக்காட்சிகள் கையடக்க கேமராவை மறைத்து வைத்து வழியில் செல்வோரை எல்லாம் வழிமறித்து, அவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தங்களின் கடமை(?) ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு, அவர்கள் (மாட்டுபவர்கள்) படும் அவஸ்தைகளைத் தாங்களும் ரசித்து, பின்னர் உலகிற்கெல்லாம் அதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டு கடைசியாக ஒரே வரியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி இது. யாரையும் புண்படுத்த அல்ல. என்று நமட்டுச் சிரிப்புடன் எளிதாகக் கூறிவிட்டு மறைகிறார்கள்.

ஆனால், அவ்வளவுநேரம் அந்தச் சம்பவம் அவர்களை எந்த அளவுக்குப் பாதித்திருக்கும் என்பதையும், தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் சம்பந்தப்பட்ட நபரை பற்றி என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி எல்லாம் அந்த சேனல்களுக்குக் கவலை இல்லை. அவர்களின் ஒரே கவலை எப்படி ரேட்டிங்கை ஏற்றுவது என்பதுதான்.

எனவே, மக்களின் மனங்களைத் தன்வசப்படுத்தி தான் கூறும் கருத்துகளைத் திணித்து வரும் வேலையைத் திறம்படச் செய்து வரும் சேனல்களின் நிகழ்ச்சிகள் மக்களைக் குறிப்பாக குழந்தைகளைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். அதற்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கண்டிப்பாகத் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்பதுதான் பிள்ளைகள் மேல் பற்றுக்கொண்டுள்ள அனைத்துப் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.
கட்டுரையாளர் : வி.குமாரமுருகன்
நன்றி : தினமணி

No comments: