Wednesday, September 24, 2008

இரண்டு மாத மவுனத்துக்கு பின் மீண்டும் சிமென்ட் விலை உயருது


மும்பை: இரண்டு மாத இழு பறிக்கு பின், சிமென்ட் விலை மீண்டும் வரும் 1 தேதி முதல் உயருகிறது; மூட்டைக்கு ஐந்து ரூபாய் வரை அதிகரிக்கிறது. ரியல் எஸ்டேட் வர்த்தகம் கொடிகட்டிப்பறப் பதை அடுத்து, கட்டுமானப் பணிகள் அதிகரித்து வருகின்றன. மும்பை, டில்லி மற்றும் தென் மாநிலங்களில் அதிகளவில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. மாநில அளவில் விற்பனை செய்யப்படும் சிமென்ட் மூட்டைகளுக்கு விலை அதிகரிக்கவில்லை என்றாலும், ஏ.சி.சி., அம்புஜா, ஜே.கே., லட்சுமி மற்றும் பினானி போன்ற பிராண்டு சிமென்ட் மூட்டை விலை வரும் 1ம் தேதி முதல் உயருகிறது. கடந்த ஓராண்டில், சிமென்ட் விலை, 4 சதவீதம் அதிகரித்துள்ளது. 50 கிலோ மூட்டை 245 முதல் 275க்கும் இழுத்தடித்தபடி உள்ளது. போக்குவரத்து செலவு தான் இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. 'சிமென்ட் உற்பத்திக்கு முக்கியமான மூலப் பொருளான நிலக்கரி விலை 60 சதவீதம் உயர்ந்து விட்டது. அதனால் தான் சிமென்ட் விலையை கட்டுப்படுத்த முடியவில்லை' என்று, சிமென்ட் உற்பத்தியாளர் கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்தியாவில் 70 சிமென்ட் கம்பெனிகள் உள்ளன; ஆண்டுக்கு 17 கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்கின்றன.

நன்றி : தினமலர்

சிங்கூரில் இருந்து வெளியேறுகிறது டாடா ; பான்ட்நகரில் இருந்து நானோ கார் அக்டோபரில் வெளியீடு


பூனே : சிங்கூரில் இருந்து வெளியேறுவது என்று டாடா மோட்டார்ஸ் முடிவு செய்து விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உத்தரகாண்ட் மாநிலத்தில் பான்ட் நகரில் இருக்கும் அதன் தொழிற்சாலையில் இருந்து நாள் ஒன்றுக்கு 100 நானோ கார்கள் வீதம் தயாரிக்கப்பட்டு, அக்டோபர் மத்தியில் 1000 கார்களை வெளியிட டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான நானோ இஞ்சின் மற்றும் கியர்பார்ஸ் பூனே அருகில் இருக்கும் சிக்லி தொழிற்சாலையில் இருந்து பான்ட் நகர் தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறது. ஆரம்பத்தில் ஜூலை அல்லது ஆகஸ்டில் நானோ காரை வெளியிட்டு விட வேண்டும் என்று டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டிருந்தது. சிங்கூரில் இருக்கும் அதன் தொழிற்சாலையால் ஏற்பட்ட பிரச்னையால் இப்போது அது அக்டோபருக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த நிதி ஆண்டிற்குள் ஒரு லட்சம் நானோ கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த டாடா மோட்டார்ஸ், இப்போது அதை 50 ஆயிரமாக குறைத்திருக்கிறது. நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பை பங்கு சந்தையில் இதுவரை இது குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

நன்றி : தினமலர்