Wednesday, July 9, 2008

கம்யூனிஸ்டுகள் விலகியதால் இனி இந்தியாவில் வேகமான பொருளாதார வளர்ச்சி இருக்கும் : மெரில் லிஞ்ச்



புதுடில்லி : இந்தியாவை ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கொடுத்து வந்த ஆதரவை நேற்று கம்யூனிஸ்டுகள் விலக்கிக்கொண்டன. கம்யூனிஸ்டுகளின் விலகி விட்டதால் இனிமேல் இந்தியாவில் வேகமான பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று பிரபல நிதி நிர்வாக நிறுவனமான மெரில் லிஞ்ச் கருத்து தெரிவித்திருக்கிறது. மேலும் இதனால் அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளவும் வழி பிறக்கும் என்று அது தெரிவித்திருக்கிறது. இதன் விளைவு பங்கு சந்தையில் உடனடியாக தெரிய வரும். ( இன்று மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 614.61 புள்ளிகளும் தேசிய பங்கு சந்தையில் நிப்டி 168.55 புள்ளிகளும் உயர்ந்திருந்தன.) இன்சூரன்ஸ் துறையில் வெளிநாட்டினருக்கு இருந்த உச்சவரம்பு உயர்த்தப்படும். இந்தியாவில் ரீடெய்ல் வர்த்தகத்தில் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று மெரில் லிஞ்ச் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய அறிக்கையில் சொல்லியிருக்கிறது. காங்கிரஸூக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக ஆதரவு அளித்து வந்த கம்யூனிஸ்டுகள், அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆதரவை விலக்கிக்கொண்டது. மேலும் பார்லிமென்டில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறும் கேட்டிருக்கிறது. கம்யூனிஸ்டுகள் விலகிக்கொண்டாலும் சமஜ்வாடி கட்சியினர் காங்கிரஸூக்கு ஆதரவு அளிக்க முன் வந்துள்ளதால், ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்று சொல்லப்படுகிறது.


நன்றி : தினமலர்