Saturday, November 22, 2008

2010ல் சிறிய கார் : போர்டு இந்தியா திட்டம்

அமெரிக்காவின் போர்டு கார் நிறுவனம், 2010ல் அதன் சிறிய காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தி திட்டமிட்டிருக்கிறது. அத்துடன் பல புதிய மாடல்களையும் இங்கு அறிமுகப்படத்த திட்டமிட்டிருப்பதாக, போர்டு இந்தியாவின் எக்ஸிகூடிவ் டைரக்டர் ( மார்க்கெட்டிங், சேல்ஸ் அண்ட் சர்வீஸ் ) நிகல் வார்க் தெரிவித்தார். சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் கடும் நிதி நெருக்கடிலும் கூட, இந்திய கார் சந்தை எப்போதுமே எங்களுக்கு ஒரு சாதகமான சந்தையாகவே இருந்து வருகிறது. சர்வதேச அளவில் கார் விற்பனை சரிந்திருந்தாலும் இந்திய சந்தையில் பெரிய சரிவு ஏதும் ஏற்படவில்லை என்று சொன்ன அவர், 2010ல் நாங்கள் சிறிய காரைத்தான் அறிமுகப்படுத்த இருக்கிறோம். மினி காரை அல்ல என்றும் சொன்னார். 2010 முதல் காலாண்டில் எங்களது சிறிய கார் இந்திய சந்தைக்கு வரும். அதன் பின் பல புதிய மாடல்களையும் இங்கு அறிமுகப்படுத்த இருக்கிறோம் என்றார்.
நன்றி : தினமலர்


துபாய் செயற்கை தீவில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ரிசார்ட் நேற்று திறப்பு

ஐக்கிய அரபு குடியரசில் உள்ள வளைகுடா கடற்கரையில், செயற்கையாக பனைமர ஓலை வடிவில் அமைக்கப்பட்டுள்ள தீவில் கட்டப்பட்டுள்ள உலகின் அதிக காஸ்ட்லியான பிரமாண்ட ரிசார்ட் அட்லாண்டிஸ், நேற்று திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழா நிகழ்ச்சிக்காக 20 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டிருக்கிறது. திறப்பு விழா நிகழ்ச்சியில் உலகின் முன்னணி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ உள்பட பல முன்னணி பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர். அப்போது நடத்தப்பட்ட பிரமாண்ட வானவேடிக்கை, வேறு கிரகத்தில் இருப்பவர்களுக்குகூட தெரிந்திருக்கும் என்று சொல்லும் அளவுக்கு நடத்தப்பட்டது. பெய்ஜிங் ஒலிம்பிக் துவக்க விழாவில் நடத்தப்பட்ட வாணவேடிக்கையை காட்டிலும் ஆறு மடங்கு அதிகமாக இங்கு நடத்தப்பட்டது. துவக்கவிழா நிகழ்ச்சியில் பாட்டு பாடிய ஆஸ்திரேலிய பாப் பாடகி கைலி மினோகுவுக்கு, அதற்காக 4 மில்லியன் டாலர் கொடுக்கப்பட்டதாம். 1.5 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டிருக்கும் இந்த பிரமாண்ட ரிசார்ட்டில் 1539 ரூம்களும், 150 சூட்களும், 35 அதி நவீன சூட்களும் இருக்கின்றன. இதில் உள்ள சாதாரன ரூமில் ஒரு நாள் தங்குவதற்கான, குறைந்த பட்ச வாடகையே 1,675 பவுண்ட் ( சுமார் ரூ.1,24,000 ) என்று சொல்லப்படுகிறது. ஒரு நாள் இரவு தங்குவதற்கு ரூ.18 லட்சம் வாங்கும் ஸ்பெஷல் சூட்டும் அங்கு இருக்கிறது. இந்த ஹோட்டலின் இரு மெயின் பில்டிங்களுக்கு மத்தியில் கட்டப்பட்டிருக்கும் ஸ்பெஷல் சூட்டில் நேற்று ஆரம்ப நாளில், அமெரிக்காவின் டி.வி. ஷோ பிரபலலம் ஓபரா வின்ட்ஃபிரே தங்கியிருந்தார். கொஞ்சம் நேரத்தில் அவர் அங்கிருந்து கிளம்பி விட்டதால் அந்த சூட்டில், பின்னர் நம் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தங்கியிருக்கிறார்.
நன்றி : தினமலர்

அடுக்கு மாடி குடியிருப்புகள் விலை கடும் சரிவு: கூவி, கூவி விற்கின்றனர் குர்கான் பில்டர்கள்

வட்டி வீதம் அதிகரிப்பு, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட மந்தநிலை போன்ற காரணங்களால் குர்கானில் ஒரு கோடி ரூபாய்க்கு விலை கூறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம் தற்போது 55 லட்சம் ரூபாய்க்கு கூவி, கூவி விற்கப்படுகின்றன.டில்லி அருகே குர்கானில், செக்டார் 37 பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன், மூன்று படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம், 80 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டன. ஆனால், சர்வதேச அளவில் பல நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, வட்டி வீதம் அதிகரிப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் உருவாகியுள்ள மந்தநிலை போன்ற காரணங்களால், தற்போது அதுபோன்ற அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம், 38 முதல் 40 லட்சம் ரூபாய்க்குத்தான் விற்பனையாகின்றன.அதேபோல், முன்னர் ஒரு கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்ட, நான்கு படுக்கை அறை மற்றும் வேலையாட்கள் தங்கும் வசதியுடன் கூடிய குடியிருப்புகள் எல்லாம் தற்போது 55 லட்சம் ரூபாய்க்குத்தான் விற்பனையாகின்றன. அதுவும் கூவி, கூவி விற்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.'சில மாதங்களுக்கு முன், நான்கு படுக்கை அறை கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகளை எல்லாம் பில்டர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு விற்று வந்தனர். தற்போது, அவற்றை வாங்குவோரும் இல்லை. அவற்றில் முதலீடு செய்வோரும் இல்லை. 'ரியல் எஸ்டேட் புரோக்கர்களுக்கான கமிஷன் இரு மடங்காக அதிகரிக்கப் பட்டும் பயனில்லை. அவர்களால் ஆட் களை கொண்டு வர முடியவில்லை. அடுக்குமாடி குடியிருப்புகளை விற்க, பில்டர்கள் படாதபாடு படுகின்றனர்' என்கிறார் கவுரவ் மோசஸ் என்ற ரியல் எஸ்டேட் டீலர்.
'கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகளை விற்க பில்டர்கள் ஆர்வமாக உள்ளனர். வீட்டை வாங்க நினைப்பவர், அவற்றைப் பார்த்த உடனேயே, பில்டர்கள் எங்களை பல முறை தொடர்பு கொண்டு பேசுகின்றனர். ஏராளமான பில்டர்கள் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால், பல பில்டர்களின் நிலைமை கேள்விக் குறியாகி விடும்.'புதிதாக வீடு கட்டும் திட்டத்தை, பல பில்டர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். கடந்த ஜூலை மாதங்களில் வீடு கட்டும் திட்டங்களை துவக்கிய பலர், தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கின்றனர். அடுத்த சில மாதங்களிலாவது நிலைமை மேம்படும் என எதிர்பார்க்கிறோம். மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளின் சதுர அடி விலையும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது' என்கிறார் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஒருவர்.
நன்றி : தினமலர்

யாகூ நிறுவனத்துக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரி

யாகூ இன்கார்பரேஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் ஜெர்ரி யாங், புதியவர் பணியமர்த்தப் பட்டதும், பதவி விலக உள்ளார்.யாகூ நிறுவனத்தின் துணை நிறுவனர் ஜெர்ரி யாங், 2007 ஜூன் மாதம் இந்நிறுனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப் பேற்றார். இவர் மீண்டும் தலைவர் பதவிக்கு திரும்ப உள்ளார். இதனால், புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்க, யாகூ இயக்குனர்கள் குழு முடிவு செய்துள்ளது.'யாகூ நிறுவனத்தை துவக்கியதில் இருந்து, நம்பிக்கைக்குரிய சர்வதேச நிறுவனமாக வளர்ச்சிப்பாதையை சென்றடைந்துள்ளது. கோடிக்கணக்கான மக்களுக்கும், எங்களது வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பானதை அளிப்பதே எனது நோக்கம்' என்று, யாங் கூறியுள்ளார்.'சர்வதேச வியூகத்தில் கவனம் செலுத்துவதே எனது நோக்கமாக உள்ளது. யாகூ நிறுவனத்துக்கு சிறப்பானதை செய்வதையே விரும்புகிறேன்' என்றும், அவர் கூறியுள்ளார்.நிர்வாகிகள் தேர்வு நிறுவனமான, ஹெய்டிரிக் அண்ட் ஸ்டிரகுள்ஸ், யாகூ நிறுவனத்துக்கு தலைமை நிர்வாக அதிகாரியை உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் தேடி வருகிறது.
யாகூவின் தலைமை மாற்றத்தால், சீனாவில் அலிபாபா குழுமத்தில் இந்நிறுவனம் செய் துள்ள 400 கோடி ரூபாய் முதலீட்டில் எந்த மாற்றமும் வராது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
நன்றி : தினமலர்