Thursday, July 10, 2008

பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் : 614 புள்ளிகள் உயர்ந்தன


மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கம்யூனிஸ்டுகள் நேற்று விலக்கிக்கொள்வதாக அறிவித்திருந்ததால் மத்திய அரசு கவிழ்ந்து விடுமோ என்ற அச்சம் நேற்று இருந்தது. அதனால் நேற்று பங்கு சந்தையில் சென்செக்ஸ் 176 புள்ளிகள் குறைந்திருந்தது. ஆனால் இன்று, கம்யூனிஸ்டுகள் விலகினாலும் நாங்கள் ஆதரவு தருகிறோம் என்று சமஜ்வாடி கட்சியினர் சொல்லி விட்டதால் ஆட்சி கவிழாது என்ற எண்ணம் மக்களிடையே தோன்றி விட்டது. இதனாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 5 டாலருக்கு மேல் குறைந்து விட்டதாலும் இன்று மும்பை பங்கு சந்தையில் காலை வர்த்தகம் துவங்கியதுமே சென்செக்ஸ் உயர துவங்கி விட்டது. வர்த்தகம் துவங்கிய இரு நிமிடங்களி லேயே சென்செக்ஸ் 441.84 புள்ளிகளும்தேசிய பங்கு சந்தையில் நிப்டி 129.85 புள்ளிகளும் உயர்ந்திருந்தன. பின்னர் இன்று முழுவதும் உயர்ந்துகொண்டே இருந்த சென்செக்ஸ், மதியத்திற்கு பின் வேகமாக உயர துவங்கியது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 614.61 புள்ளிகள் ( 4.60 சதவீதம் ) உயர்ந்து 13,964.26 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 168.55 புள்ளிகள் ( 4.23 சதவீதம் ) உயர்ந்து 4,157.10 புள்ளிகளில் முடிந்தது. இன்று முழுவதும் காளைகளின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. அதாவது பங்குகள் பெருமளவு வாங்கப்பட்டன. இன்று சென்செக்ஸ் 14 ஆயிரத்தை நெருங்கியும் நிப்டி 4150க்கு மேலும் வந்துவிட்டதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் நன்றி : தினமலர்