Monday, November 23, 2009

உன் குற்றமா? என் குற்றமா?

நகரத்தின் கடைவீதியில் சைக்கிள் ஓட்டவோ, நடைபாதையில் நடக்கவோ முடியாதபடி கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும்போது, அதற்காக ஒரு குடிமகன் எரிச்சலும் மனக்கொதிப்பும் அடைந்தால், அதை நகரத்தின் வளர்ச்சி என்று நினைத்து சமாதானம் அடைய வேண்டிய அவசியம் இல்லை.

அந்த மனக்கொதிப்பு நியாயமானதுதான் என்று நமக்குப் புரிய வைத்திருக்கிறார் கொலம்பியா நாட்டின் பொகோடா நகரமன்றத்தின் முன்னாள் தலைவர் என்ரிக் பெனலோசா. ஏனென்றால், "கார்நிறுத்தும் இடம் (பார்க்கிங்) என்பது அந்நாட்டுக் குடிமகனின் அரசியல் சாசனம் வழங்கிய உரிமை அல்ல. அது தனிப்பட்ட நபர்களின் பணத்தைக் கொண்டு, தனிப்பட்ட இடத்தில் தீர்வு காணப்பட வேண்டிய, தனிப்பட்ட பிரச்னை'

சென்னையில் இந்திய தொழிற்துறை சம்மேளனம் (சிஐஐ) நடத்திய கலந்துரையாடல் நிகழ்வில் இதை அவர் குறிப்பிடும்போது, நடைபாதையில் நடக்கும் சாதாரணக் குடிமகனின் ஆத்திரம் நியாயமடைகிறது.

இவர் இங்கே பேசியது மட்டுமல்ல, அவரது ஊரில் நடைமுறைப்படுத்தியவரும்கூட. சாலைகளில் கார் நிறுத்தங்களுக்குத் தடை விதித்தவர். "ஒரு நகரின் தரத்தை நிர்ணயிப்பது அந்நகரில் உள்ள மேம்பாலங்களோ, நெடுஞ்சாலைகளோ அல்ல. அகலமான நடைபாதைகள். ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்களைப் பாருங்கள். நடைபாதைகளுக்கும், சைக்கிளுக்கும் அதிக இடம் தந்திருக்கும்' என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

சென்னை நகரில் தற்போது அமைக்கப்படும் மேம்பாலங்கள்கூட 5 ஆண்டுகளுக்குப் பிறகு போக்குவரத்து நெரிசலைத்தான் தரும் என்றும் தீர்க்கமாகக் கூறுகிறார் அவர். "பொதுமக்களுக்கான பஸ் போக்குவரத்துதான் தேவை. ஒரு பஸ் தடத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 40,000 பேர் பயணம் செய்ய முடியும் என்றால், அதேநேரத்தில் ஒரு கார் தடத்தில் 2,000 பேர்தான் பயணம் செய்ய முடியும்' என்பது அவரது கருத்து.

ஏன் இது நமது ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் புரியவில்லை? ஏன் அவர்கள் இதையெல்லாம் யோசித்துப் பார்க்காமல், மேம்பாலங்களும், கார் பார்க்கிங் இடங்களையும் விரிவாக்கிக்கொண்டே போகிறார்கள்?

சென்னை போன்ற பெருநகரங்களில் முக்கிய கடைவீதிகளின் இருபுறமும் கார் நிறுத்துமிடம் உள்ளது. இதில் நிறுத்த இடமில்லாத கார்கள், குறிப்பாக அரசியல்வாதி அல்லது அதிகாரிக்குச் சொந்தமெனில், போலீஸýக்கு அஞ்சாமல் சாலையிலேயே நிறுத்தப்படுகிறது, போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக!

தமிழகத்தின் நகரங்களில் உள்ள பல பள்ளிகள் (இங்குதான் அதிகாரிகளின் குழந்தைகள் படிக்கிறார்கள்) பெற்றோரின் கார்களை, குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களை தங்கள் வளாகத்துக்குள் அனுமதிப்பதே இல்லை. இத்தனைக்கும் அந்தப் பள்ளியில் மிக விசாலமான விளையாட்டுத் திடல், கார்நிறுத்த வசதிகள் இருக்கின்றன. இத்தனை வாகனங்களும் சாலையில் நிறுத்தப்பட்டு, காலை மாலை இருவேளையும் சுமார் ஒருமணி நேரத்துக்கு அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதே நிலைமைதான் கல்யாண மண்டபங்களிலும். நகரின் முக்கியப் பகுதியில் பிரம்மாண்டமான கல்யாண மண்டபங்கள் உள்ளன. வருபவர் அனைவரும் காரில் வருகிறார்கள். மண்டப வளாகம் கொள்ளாமல் சாலைகளில் நிறுத்தப்படும் கார்கள் மூலம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறும் காலதாமதமும் சொல்லிமாளாது.

கார் வைத்திருப்பதாலோ, சாலை வரி கட்டுகிறார் என்பதாலோ ஒருவர் பொதுமக்களுக்குச் சொந்தமான பொதுஇடத்தை-சாலையை-அடைத்துக் கொண்டு பார்க்கிங் வசதி பெற முடியுமா? அதைத் தனது அடிப்படை உரிமையாகக் கோருவது சரியாகுமா?

கார்களை நிறுத்துவதற்கான பலஅடுக்கு மாடிகளைப் பிரத்யேகமாக அமைத்துத் தர வேண்டிய பொறுப்பு கார்களைத் தயாரித்து வீதிகளில் விடும் நிறுவனங்களுக்கும் உண்டு அல்லவா! தங்கள் சொந்தப் பணத்தில், சொந்தமாக இடம்வாங்கி, வசதி செய்து தர வேண்டிய அவர்களது கடமையை நகராட்சி, மாநகராட்சி மீது திணிப்பது சரியல்ல.

சாதாரண நகரத்தைக்கூட கார்கள் படாதபாடு படுத்துகின்றன. அண்மையில் ஒசூரில் 500 நானோ கார்கள் முன்பதிவு செய்தவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. மொத்தம் 4000 நானோ கார்கள் ஒசூரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே அங்கு 20,000 கார்கள் உள்ளன. மிகச் சிறிய நகராட்சி இந்தக் கார்களுக்கான நிறுத்துமிடம் உருவாக்கித் தர வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்? எந்த வகையில் சாத்தியம்?

கார் நிறுத்தும் அடுக்குமாடிகளைக் கட்டித்தர வேண்டிய பொறுப்பு, செலவு இரண்டிலும் கார் உற்பத்தி நிறுவனங்களைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டாமா? நகரத்தை கார்களால் நிரப்பும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புதான் என்ன?

இந்த வேளையில்தான் என்ரிக் பெனலோசா சொல்வதை மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது: ""கார் பார்க்கிங் என்பது ஒரு குடிமகனின் அரசியல் சாசன உரிமை அல்ல. அது தனிப்பட்ட நபர்களின் பணத்தைக் கொண்டு, தனிப்பட்ட இடத்தில் தீர்வு காணப்பட வேண்டிய, தனிப்பட்ட பிரச்னை''.

கார் வாங்கும் சக்தி ஒரு சிலருக்கு இருக்கிறது என்பதாலேயே பெரும்பாலான குடிமக்களால் நடைபாதையில் நடக்கவே முடியாதென்றால் அது...
நன்றி : தினமணி

No comments: