Monday, February 16, 2009

பிரணாப் முகர்ஜியின் பட்ஜெட் ஏமாற்றம் அளித்ததால் பங்கு சந்தையில் சரிவு

தற்போது பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் பொறுப்பில் இருக்கும் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிட்டு சொல்லும்படியாக எதுவும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நலிவடைந்து இருக்கும் இந்திய தொழில்துறையை மேம்படுத்தும் எந்த வித நடவடிக்கையையோ அல்லது வரிவிதிப்பில் மாற்றத்தையோ அறிவிக்காத அவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகளை விளக்கவே பெரும்பாலான நேரங்களை செலவிட்டார் என்கிறார்கள். இதனால் பிரணாப் முகர்ஜி பட்ஜெட்டை தாக்கல் செய்து கொண்டிருக்கும்போதே மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் சரிந்து கொண்டிருந்தன. பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் எதுவும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் இல்லாததால், அதற்கு இந்த வருட மத்தியில் தாக்கல் செய்யப்பட இருக்கிற பட்ஜெட்டை எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். பட்ஜெட் உறையின்போது, குறைந்த பட்ச பொது செயல்திட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அம்சங்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றி இருக்கிறது என்று சொன்ன பிரணாப் முகர்ஜி, நாங்கள் எதிர்பார்த்த 7 சதவீத வளர்ச்சியை நாடு அடைந்திருக்கிறது என்றார். எங்களது ஆட்சியில் தனி நபர் வருமானமும் 7.4 சதவீதம் உயர்ந்துள்ளது என்றார். பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் திட்டத்தின் மூலம், உள்கட்டமைப்பு துறையில் அதிக அளவில் முதலீட்டை பெற, வேண்டிய நடவடிக்கையை செய்ய இருக்கிறோம் என்று சொன்ன அவர், 2008 ஆகஸ்டில் இருந்து 2009 ஜனவரிக்குள் ரூ.70,000 கோடி மதிப்புள்ள 37 உள்கட்டமைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது என்றார். புதிதாக வரிவிதிப்பு எதுவும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் விதிக்கவில்லை. இன்று தாக்கல் செய்யப்ட்ட இடைக்கால பட்ஜெட் ஏமாற்றம் அளித்ததை அடுத்து மும்பை பங்கு சந்தையில் இன்று வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 329.29 புள்ளிகள் ( 3.42 சதவீதம் ) குறைந்து 9,305.45 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 99.85 புள்ளிகள் ( 3.39 சதவீதம் ) குறைந்து 2,848.50 புள்ளிகளில் முடிந்தது.
நன்றி : தினமலர்

No comments: