Thursday, October 23, 2008

பங்குச் சந்தையில் தெரிகிறது முன்னேற்றம் : சேதுராமன் சாத்தப்பன்

சந்தை சிறிது மேலே தலை தூக்கிப் பார்க்கிறது. 'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று வள்ளலார் அன்று பாடினார். இன்று பாடியிருந்தால், 'வாடிய முகத்தை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடியிருப்பார். கடந்த வாரங்களில் குறைக்கப்பட்ட ரொக்க கையிருப்பு சதவீதம் 2.5 தவிர, இந்த வாரம் ரெப்போ ரேட் 1 சதவீதமும் குறைக்கப்பட்டது. இது பணப் புழக்கத்தை இன் னும் அதிகமாக்கும் என்றும், கடன்களுக்கு வங்கிகள் வசூலிக்கும் வட்டி விகிதங்கள் குறையும் என்ற நோக்கத்தில் செய்யப் பட்டுள்ளது. பணப்புழக்கம் அவ்வளவு மோசமாகவாக இருக்கிறது? ஒன்று வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பங்குகளை விற்று வெளிநாட்டுப் பணத்தை கொண்டு செல்வதால் பணப் புழக்கம் குறைகிறது. மேலும், டாலரின் மதிப்பு கூடி வருகிறது. பணம் உள்ளே வந்த போதெல்லாம் மிகவும் சந்தோஷப்பட்டோம். தற் போது போகும் போது பொறுமையாகத்தான் இருக்க வேண் டும். அவர்கள் தான் எடுத்துச் செல்கின்றனர். நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு என்ன வந்தது. எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சம் என்பது போல எடுத்துச் செல்கின்றனர். பொறுமை தேவை. பங்குச் சந்தை என்பது இது போன்ற நிகழ்வுகளை அடிக்கடி சந்திக்கும் இடம். அதில் பயணம் செய்ய பொறுமை தேவை. தற்போது அசாத்திய பொறுமை தேவை. டாலர் மதிப்பைக் குறைக்க வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் வங்கிகளில் வைக்கும் வைப்புத் தொகைகளுக்கு வட்டி விகிதங்களை கூட்டியுள்ளன.

இது வெளிநாட்டுப் பணம் உள்ளே வர ஏதுவாகும். அப்படி வரும் வரத்து கூடிவருகிறது. எங்கு வட்டி கூடுதலாகக் கிடைக்கிறதோ அங்கு தானே போவார்கள். திங்களன்று மும்பை பங்குச் சந்தை 2.5 சதவீதம் மேலே சென்று முடிவடைந்தது. அன்று 247 புள்ளிகள் கூடியது. வங்கிப் பங்குகளும், சாப்ட்வேர் பங்குகளும் மேலே சென்றன. நேற்று முன்தினம், ரிலையன்ஸ், எல் அண்டு டி., எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, இன்போசிஸ், டி.சி.எஸ்., சத்யம் கம்ப்யூட் டர்ஸ் நன்றாக மேலே சென்றது சந்தையையும் மேலே கொண்டு சென்றது. குறிப்பாக டி.சி.எஸ்., 12.9 சதவீதம் மேலே சென்றது. ஆசிய அளவில் சந்தைகள் குறைந்ததாலும், லாப நோக்குடன் விற்றதாலும் நேற்று சந்தை மிகவும் கீழே சென்றது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 513 புள்ளிகள் குறைந்து 10,169 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 169 புள்ளிகள் குறைந்து 3,065 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. மறுபடியும் மும்பை பங்குச் சந்தை 10,000க்கும் அருகில், வாய்ப்புகளா அல்லது சறுக்கல்களா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும். திங்கள், நேற்று முன்தினம் கிடைத்த லாபத்தை நேற்று ஏற்பட்ட நஷ்டத்தால் காணாமல் போனது. இந்திய பங்குச் சந்தையில் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் நார்வே 9,800 கோடி ரூபாய் முதலீடு செய்யும் என்பது சந்தையை பலப்படுத்த உதவும். காலாண்டு முடிவுகள்: செயில் சென்ற வருடம் இதே காலாண்டை விட 18 சதவீதம் லாபம் அதிகம் காண்பித்துள்ளது. அதே போல ஹீரோ ஹோண்டா சென்ற வருடம் இதே காலாண்டை விட 50 சதவீதம் லாபம் அதிகம் காண்பித்துள்ளது. ஜெயப்பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் சென்ற வருடம் இதே காலாண்டை விட 96 சதவீதம் லாபம் அதிகம் காண்பித்துள்ளது.

இதே போல எல்.ஐ.சி., ஹவுசிங், இந்தியா புல்ஸ் பைனான்சியல், யுனைடெட் ஸ்பிரிட், போலாரிஸ் சாப்ட்வேர், மாரிகோ, ஜீ என்டர்டெயின்மென்ட் ஆகிய கம்பெனிகளும் நல்ல காலாண்டு முடிவுகளைத் தந்துள்ளன.

ஏன் தங்கம் விலை குறைகிறது? பங்குச் சந்தையில் 10,000க்கும் கீழே வந்திருந்தது முதலீட்டாளர்களுக்கு லாபகரமானதாக தெரிந்ததால், தங்கத்தை விட்டு பங்குக்கு தாவ ஆரம்பித்தனர். இதனால், தங்கம் பரிதவித்துப் போய் கீழே இறங்கியது. கூடி வரும் டாலர் மதிப்பால் சிறிது விலை கூடி நிற்கிறது.

வரும் நாட்கள் எப்படி இருக்கும்? பலரும் அமெரிக்காவில் பொருளாதார சரிவு ஏற்படும் என்றும் அது நாடுகளையும், சந்தைகளையும் அசைத்துப் பார்க்கும் என்று எதிர்பார்க்கின்றனர். தற்போதே நிறையப் பார்த்தாகிவிட்டது. இந்திய சந்தை பல நாடுகளின் சந்தைகளை வைத்துப் பார்க்கும் போது அதிகம் சரிந்த சந்தைகளில் ஒன்றாக இருக்கிறது. ஆதலால் மேலும் பெரிதாக சரிய வாய்ப்பில்லை. 10,000க்கும் கீழே செல்லும் போது வாங்குபவர்கள் அதிகம் வருவார்கள்.
நன்றி : தினமலர்


No comments: