Wednesday, November 12, 2008

புதிய தொழில் துவங்குவதற்கு வசதியாக குஜராத்தில் 25,000 ஹெக்டேர் நிலம் தயார்

புதிதாக தொழில் துவங்குபவர்களுக்கு, அதற்கு தேவையான நிலம் கிடைப்பதுதான் இப்போது ஒரு பெரும் பிரச்னையாக இருக்கிறது. எல்லா மாநிலங்களிலுமே இந்த பிரச்னை இருக்கிறது. அதனை போக்கும்விதமாக, குஜராத் அரசாங்கம் புதிதாக தொழில் துவங்குபவர்களுக்காகவே பிரத்யேகமாக 25,000 ஹெக்டேர் நிலத்தை பெற்று தயாராக வைத்திருக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதனால் யார் இங்கு வந்து தொழில் துவங்க விரும்பினாலும் அவர்களுக்கு தேவையான நிலத்தை எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் எங்களால் ஒதுக்கி கொடுக்க முடியும் என்று குஜராத் மாநில நிதி மற்றும் தொழில் அமைச்சர் சவ்ரப் பட்டேல் தெரிவித்தார். ஐதராபாத்தில் நடந்த இந்திய தொழில் கூட்டமைப்பில் கலந்து கொண்டபின் நடந்த நேர்காணல் நிகழ்ச்சியின்போது அவர் இதனை தெரிவித்தார். மேலும் குஜராத் அரசாங்கம் இப்போது 24 மணி நேரமும் தங்குதடையின்றி மின்சாரத்தை எல்லா தரப்பினருக்கும் அளித்து வருகிறது. அடுத்த வருடத்தில் இன்னும் ஒரு 2,500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் மூன்று வருடங்களில் மேலும் ஒரு 10,000 மெ.வாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். எனவே எங்கள் மாநிலத்தில் பவர்கட் என்பதே இருக்காது என்றார் அவர். முதலீட்டாளர்களுக்கு குஜராத் ஒரு நல்ல இடமாக இப்போது திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் முதலீடு செய்யப்படும் மொத்த முதலீட்டில் 22 சதவீதம் குஜராத்திற்கு தான் செல்கிறது என்று ரிசர்வ் பேங்க் சமீபத்தில் தெரிவித்ததை குறிப்பிட்ட அவர், சோலார் பவர் மற்றும் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் துறைக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றார்.
நன்றி : தினமலர்


No comments: