Saturday, September 5, 2009

மும்பையில் ரூ.1.77 கோடி கிரெடிட் கார்டு மோசடி

மும்பையில் பிரபல வங்கியில், ஒரு கோடி 77 லட்ச ரூபாய் கிரெடிட் கார்டு மூலம் மோசடி நடந்துள்ளது. இந்த மோசடியில் கடைக்காரர்களுக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஹுக்கும்சிங் பிருத்விசிங் ராவ் என்பவனை மும்பை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிப்பட்டன. மும்பை போன்ற நகரங்களில் வாடிக்கையாளர் வசதிக்காக, வங்கிகள் 'எலக்ட்ரானிக் டேட்டா கேப்ச்சர்'(ஈ.டி.சி) மிஷின்களை நிறுவியுள்ளன. இவற்றில் கிரெடிட் கார்டு மூலம், வாங்கிய பொருட்களுக்குப் பணம் செலுத்தலாம். 7,500 ரூபாய்க்கு மேல் போனால் வாடிக்கையாளரின் அடை யாள அட்டை நகலை கடைக்காரர்கள் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

மும்பை அந்தேரியில் 'வெல்கம் எலக்ட்ரானிக்ஸ்' கடையில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஈ.டி.சி., மிஷினை வைத்திருந்தது. வங்கி ஊழியர்கள் அந்தக் கடையின் வங்கிக்கணக்கில் 50 லட்ச ரூபாய்க்கு விற்பனை நடந்ததைக் கண்டுபிடித்தனர். எப்போதும் மிகக் குறைவாகவே பரிவர்த்தனை செய்யும் அந்தக் கடையை சோதனையிட்டனர். அப்போது, போலி வாடிக்கையாளர் அட்டைகளும் போலி கிரெடிட் கார்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
இது குறித்து, மும்பைப் பெருநகர பொருளியல் குற்றப் பிரிவின் கூடுதல் கமிஷனர் சஞ்சய் சக்சேனா கூறுகையில், 'ஹுக்கும்சிங் இதே கடை மூலம்தான் மோசடி செய்துள்ளான்.


பல்வேறு வங்கிகளின் கிரெடிட் கார்டுகள் மூலம் இந்த மோசடி நடந்துள்ளது. கடைசியில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில்தான் ஒரு கோடி 77 லட்ச ரூபாய் கிரெடிட் கார்டு மூலம் மோசடி நடந்துள்ளது. மோசடிக்கு உடந்தையான 'வெல்கம் எலக்ட்ரானிக்ஸ்' கடைக்காரரையும் விசாரித்து வருகிறோம்' என்றார்.

நன்றி : தினமலர்


No comments: