Thursday, October 30, 2008

நிதி நெருக்கடி விவகாரம்: சிதம்பரம் ஆலோசனை

சர்வதேச அளவில் நிதிச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியை சமாளிப்பது குறித்து அமெரிக்கா ஜி-20 நாடுகளின் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில் இந்தியாவின் நிலை குறித்து முடிவு செய்வதற்காக நேற்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், விரிவான ஆலோசனை நடத்தினார். அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சுனாமி, சர்வதேச நாடுகளை வெகுவாக பாதித்துள்ளது. இதில் இந்தியாவும் ஒன்று. இதன் காரணமாக பல நாடுகளில் பங்குச்சந்தைகள் படுத்துவிட்டன. இதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து பல நாடுகள் மண்டையை போட்டு குழப்பி வருகின்றன. நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான திட்டங்கள் வகுப்பது குறித்து முடிவு செய்வதற்காக 'ஜி-20' நாடுகளின் மாநாட்டிற்கு அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டை அமெரிக்க அதிபர் புஷ் கூட்டியுள்ளார். அடுத்த மாதம் 15ம் தேதி நடக்கிறது. இதில் இந்தியாவும் பங்கேற்கிறது. இந்தியாவின் நிலையை எடுத்துரைப்பது தொடர்பாக, நிதி அமைச்சர் சிதம்பரம் நேற்று உயர்மட்ட கமிட்டி கூட்டத்தை கூட்டியிருந்தார். இந்த கூட்டத்தில், இந்திய பொருளாதார சங்கிலி தொடரில் முக்கிய அங்கம் வகிக்கும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். திட்ட கமிஷன் துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, நிதி செயலர் அருண் ராமநாதன், ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ், செபி சேர்மன் சி.பி.பாவே, நிதி கமிஷன் தலைவர் விஜய் கேல்கர், பொருளாதார விவகார செயலர் அசோக் சாவ்லா ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாடு குறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாநாட்டில் இந்தியாவின் நிலை குறித்து நாங்கள் விவாதித்தோம். விரைவில் கூடி விவாதிக்க உள்ளோம். இதன் அடிப்படையில் அறிக்கையை மத்திய நிதி அமைச்சகம் தயாரிக்க உள்ளது ' என்றார். 'ஜி-20' மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அதிகாரப்பூர்வ அழைப்பு நேற்றுதான் வந்துள்ளது. இந்நிலையில், இந்த கூட்டம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி :தினமலர்



No comments: