Tuesday, December 8, 2009

இப்போது துபாய்; அடுத்து? வர்த்தக வட்டாரத்தில் பீதி

துபாயில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, சர்வதேச சந்தையை அசைத்து பார்த்து விட்டது. துபாய்க்கு பிறகு, இனி எந்த நாட்டில் இது போன்ற பிரச்னை ஏற்படும் என்ற பீதி, சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. துபாயில் அரசுக்கு சொந்தமான 'துபாய் வேர்ல்ட்' என்ற நிறுவனம், தான் வாங்கிய 3,70,000 கோடி ரூபாய் கடனை, உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த முடியாமல் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதையடுத்து, கடனுக்கான தவணையை ஆறு மாதத்துக்கு தள்ளி வைக்கும்படி, கடன் கொடுத்தவர்களை இந்நிறுவனம் கேட்டுக் கொண்டது. இது, சர்வதேச நிதிச் சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பணக்கார நாடான துபாயிலேயே நிதி நெருக்கடி உள்ளது என்ற பேச்சு எழுந்ததையடுத்து, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன.

இதையடுத்து, இது போன்ற நிதி நெருக்கடி அடுத்து, எந்த நாட்டில் ஏற்படுமோ என்ற பீதி எழுந்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் கூட இந்த கவலை உள்ளது. பொருளாதார மந்த நிலையை சமாளிப்பதற்காக, இந்த நாடுகளில் அரசு செலவினங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால், பட்ஜெட்டில் பற்றாக்குறை விழுமோ என்ற பேச்சு உள்ளது. கடன்களை திருப்பிச் செலுத்தும் அளவுக்கு கஜானா வலிமையாக உள்ளதா என்ற கவலையான குரல்கள் ஒலிக்கத் துவங்கி விட்டன. ஜெர்மனியிலும் அரசின் கடன் அளவு எகிறியுள்ளது. ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் அளவுக்கு ஜெர்மனியில் அரசு கடன் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பிரிட்டனிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. அயர்லாந்தில், அடுத்த ஆண்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில், அரசின் கடன் 83 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனைக்கும் கடந்த 2007ல், மொத்த பொருளாதார வளர்ச்சியில் அரசின் கடன் 25 சதவீதமாக மட்டுமே இருந்தது. லட்வியாவும் பெருமளவு கடனில் சிக்கியுள்ளது. இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், 'பல்வேறு நாடுகளில் அரசு கடன் திரும்பச் செலுத்த முடியாத அளவுக்கு இருந்தால், உடனடியாக சர்வதேச நிதியகம் (ஐ.எம்.எப்.,) இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்; சிறப்பு பொருளாதார சலுகைகளை அறிவிக்க வேண்டும்' என்றனர்.
நன்றி : தினமலர்


No comments: