Tuesday, November 10, 2009

பயன்படாத பயிர்க் காப்பீடு

நாட்டின் 100 சதவீத உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், கிட்டத்தட்ட 60 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பையும் வழங்குவது விவசாயம். இத்தகைய பெருமைமிகு விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாய கடமை. ஆனால், விவசாயத்தைக் காக்கும் திட்டங்கள் எதுவும் ஆக்கப்பூர்வமானதாகவோ போதுமானதாகவோ இல்லை.

ஆந்திரப் பிரதேசத்தின் பல பகுதிகள் கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டன. காரீப் பருவத்தில் பயிரிடப்பட்ட பெருமளவு பயிர்கள் மடிந்தன. நஷ்டமடைந்த விவசாயிகள் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை கோரி விண்ணப்பித்தனர். பல மாதங்களாகியும் இழப்பீடு கிடைக்கவில்லை. முதல்வர் ரோசய்யாவும், வேளாண் அமைச்சரும் பலமுறை கடிதம் எழுதிய பிறகும்கூட எதுவும் நடக்கவில்லை. இழப்பீடு வழங்குவதில் மத்திய அரசின் பங்குத் தொகை இன்னும் கிடைக்காததே இதற்குக் காரணம்.

மத்திய அரசு தர வேண்டிய ரூ.358.58 கோடியால் மட்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பெரிய நிவாரணம் கிடைத்துவிடப்போவதில்லை. எனினும், விவசாயிகளின் பிரச்னையில் மத்திய அரசுக்கு உரிய அக்கறையில்லை என்பதைத் தெரிந்து கொள்ள இது ஓர் உதாரணமாக அமைந்துவிட்டது.

ஆந்திர விவசாயிகள் கோரியிருக்கும் மொத்த இழப்பீட்டுத் தொகையே ரூ. 806.07 கோடிதான். நஷ்டத்தில் சிறு துரும்புதான் இது. இதற்குக் காரணம் விவசாயிகள் அனைவரும் பயிர்க்காப்பீடு என்கிற பாதுகாப்பின்கீழ் வராததுதான்.

பயிர்க்காப்பீடு செய்தவர்கள்கூட, அவர்களாக முன்வந்து அதைச் செய்யவில்லை. அவர்களுக்குக் கடன் கொடுத்த வங்கிகள் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியதன் விளைவாக, வேறு வழியில்லாமல் இந்தத் திட்டத்தில் அவர்கள் சேர்ந்தார்கள்.

நடைமுறையில் சிறு விவசாயிகளும், குத்தகைக்கு விவசாயம் செய்வோரும் வங்கிகள் மூலமாகக் கடன் பெறுவதில்லை. இதனால், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் சேரும் விவசாயிகளின் எண்ணிக்கை மிகக் குறைந்த விகிதத்தில் இருக்கிறது. அதுவும், தானாக முன்வந்து காப்பீடு செய்வோர் மிகச் சொற்பம்.

காப்பீடு செய்வோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பிரீமியத் தொகை அதிகமாக இருக்கிறது. பருவத்தையும், பயிரையும் பொறுத்து 2 முதல் 20 சதவீதம் வரை பிரீமியம் வசூலிக்கப்படுகிறது. கடன்களுக்கு அரசு வழங்கும் வட்டித் தள்ளுபடியைக் காட்டிலும் இது அதிகமானது என்பது வருந்தத்தக்க விஷயம்.

நாடு விடுதலையடைந்த காலத்திலேயே பயிர்க்காப்பீட்டின் அவசியத்தை தலைவர்கள் உணர்ந்திருந்தார்கள். 1947-48-ல் இதுபற்றி ஆராய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டது. இரண்டுவிதமான காப்பீட்டு மாதிரிகளை இந்தக் குழு ஆய்வு செய்தது. பயிர்கள் நாசமாகும்போது, ஒவ்வொரு விவசாயியின் நஷ்டத்தையும் தனித்தனியே கணக்கிட்டு அதன்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்பது முதலாவது மாதிரி. அப்படியில்லாமல், ஒரே மாதிரியான பருவநிலை கொண்ட கிராமம், யூனியன், தாலுகா போன்றவற்றில் ஏற்பட்டிருக்கும் மொத்த நஷ்டத்தைக் கணக்கிட்டு, அதற்கேற்ப விவசாயிகளுக்கு இழப்பீடு தரலாம் என்பது இரண்டாவது மாதிரி.

ஒவ்வொரு விவசாயியின் தனித்தனி இழப்பீட்டைக் கணக்கிடுவதில் சிரமம் ஏற்படும் எனக் கருதப்பட்டது. தவறான நஷ்டக் கணக்கு காட்டப்படலாம், வேறு மாதிரியான முறைகேடுகளும் சாத்தியம் என்பதால், இந்தியாவில் முதலாவது மாதிரி, நடைமுறைக்கு ஒத்துவராது என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இரண்டாவது காப்பீட்டு மாதிரியை நடைமுறைப்படுத்துவதற்காக மாநிலங்களின் ஒப்புதல் கோரி மத்திய அரசு அனுப்பியது. எனினும், இந்தத் திட்டத்தால் தங்களுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையைக் காரணம் காட்டி பல மாநிலங்கள் இதை ஏற்க மறுத்தன.

1965-ம் ஆண்டில் மீண்டும் இதே திட்டம் கொண்டுவரப்பட்டபோதும் இதே கதைதான். மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பைச் சரிக்கட்டும் வகையில், மறுகாப்பீடு செய்யும் பணியை மத்திய அரசே செய்யும் எனக் கூறியபிறகும், எந்த மாநிலமும் திட்டத்தை ஏற்க முன்வரவில்லை.

1970-ல் எச்-4 பருத்திக்கு மட்டும் பிரத்யேகமான காப்பீட்டுத் திட்டத்தை எல்ஐசி அறிமுகப்படுத்தியது. அந்தச் சூழலில் 1972-ம் ஆண்டு காப்பீட்டுத் துறை தேசியமயமாக்கப்பட்டது. இதனால், ஜிஐசி எனப்படும் பொதுக்காப்பீட்டு நிறுவனம் எச்-4 பருத்திக்குக் காப்பீடு வழங்கும் பணியை ஏற்றது. இதன்பிறகு, நிலக்கடலை, கோதுமை, உருளைக்கிழங்கு போன்ற பயிர்களும் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. எனினும், தமிழகம், குஜராத், மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டும் இந்தக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருந்தது. 1978-79 வரை அமலில் இருந்த இந்தத் திட்டத்தில், ரூ. 3,110 விவசாயிகள் மட்டுமே சேர்ந்திருந்தனர். மொத்தம் வசூலான பிரீமியத் தொகை ரூ. 4.54 லட்சம். காப்பீட்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ. 37.88 லட்சம்.

இதன் பிறகு, 1979-ல் விவசாயக் கடன் பெறுவோர் கட்டாயமாகப் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும் என்கிற திட்டம் அறிமுகமானது. 1984-85 வரை ஒட்டுமொத்தமாக இந்தத் திட்டத்தில் 13 மாநிலங்களைச் சேர்ந்த 6.23 லட்சம் விவசாயிகள் சேர்ந்தனர். இந்தத் திட்டத்தில் ரூ.1 கோடியே 97 லட்சம் பிரீமியத் தொகை வசூலானது. ரூ. 1 கோடியே 57 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

ஒட்டுமொத்த பயிர்க் காப்பீட்டுத் திட்டம் எனப்படும் புதிய திட்டம் 1985-ம் ஆண்டில் அறிமுகமானது. 1999-வரை இந்தத் திட்டத்தில் 7.62 கோடி விவசாயிகள் சேர்ந்தனர். ரூ. 24 ஆயிரத்து 922 கோடி மதிப்பிலான பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் ரூ. 403 கோடி பிரீமியம் வசூலிக்கப்பட்டது. ரூ. 2,365 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.

இந்த இழப்பீட்டுத் தொகையில் ரூ. 803 கோடியை மாநிலங்களும் மீதியை மத்திய அரசும் வழங்கின. பிரீமியத் தொகையைக் காட்டிலும் இழப்பீட்டுத் தொகை மிக அதிகமாக இருந்ததால், பிரீமியத் தொகையை மாற்றியமைக்கத் திட்டக்குழு முடிவு செய்தது.

இதையடுத்து, 1999-ல் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் என்கிற புதிய திட்டம் அறிமுகமானது. முன்பிருந்த காப்பீட்டுத் திட்டத்தில் இழப்பீட்டுத் தொகையின் மூன்றில் ஒருபகுதியை காப்பீட்டு நிறுவனம் வழங்கியது. புதிய திட்டத்தில் காப்பீட்டு நிறுவனத்தின் பங்களிப்பு நீக்கப்பட்டு, இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசும் மாநில அரசும் சரிபாதியாகப் பகிர்ந்து வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இதன் பிறகு வேளாண் காப்பீட்டு நிறுவனம் 2002-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. பொதுக் காப்பீட்டு நிறுவனம், நேஷனல், ஓரியண்டல், யுனைடெட் ஆகிய காப்பீட்டு நிறுவனங்களும் நபார்டும் சேர்ந்து இந்த அமைப்பை நிறுவின. தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டியதே இதன் பணி.

இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 19 பருவங்கள் முடிந்திருக்கின்றன. இழப்பீடு கோருவதில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. ஆந்திரப் பிரதேசத்துக்கு இதுவரை ரூ.1,762.46 கோடி இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் ரூ.801.20 கோடி நிலுவையில் உள்ளது. அதேபோல், தமிழகத்துக்கு ரூ.436.5 கோடி இழப்பீடு கிடைத்திருக்கிறது. இன்னும் ரூ.663.82 கோடி வர வேண்டியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் இந்த ஆண்டின் இழப்பீட்டுத் தொகை மட்டும் ரூ.663.82 கோடியாக இருக்கிறது.

இது இந்தியா முழுவதுமான ஒட்டுமொத்த இழப்பீட்டுத் தொகையில் கிட்டத்தட்ட 30 சதவீதமாகும். ஆனால் பலன் பெறுவது என்னவோ வெறும் 11 லட்சம் விவசாயிகள் மட்டுமே. மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் இது மிக மிகக் குறைவு.

காப்பீட்டுத் திட்டம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளைச் சென்றடையவில்லை என்பதையே இந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இதற்குக் முழுக் காரணம் அரசின் வணிக ரீதியான அணுகுமுறைதான்.

தற்போதைய அனுபவத்தின் மூலமாவது, விவசாயிகளின் உண்மையான பிரச்னைகளை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். பயிர்கள் மடிந்த பிறகு, மிகத் தாமதமாக இழப்பீடு வழங்குவது நடைமுறைக்கு ஒவ்வாதது. உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கி, தொடர்ந்து பயிரிடுவதற்கான வழியை ஏற்படுத்தித் தரவேண்டும். விவசாயத்தின் உண்மையான பிரச்னைகளைப் புரிந்து கொள்ளாமல் ஏதோ கணக்கீட்டின் அடிப்படையில் இழப்பீடு வழங்குவதால் மட்டும் இந்தச் சிக்கல்கள் தீர்ந்துவிடாது.
கட்டுரையாளர் :பி.எஸ்.எம்.ராவ்
நன்றி : தினமணி

1 comment:

Admin said...

உங்களின் விவசாயம் சார்ந்த தகவல் கோப்புகளை படித்தேன். விவசாயம் விவசாயி ... இப்படி விவசாயம் சாந்த கருத்துக்களை விவசாய தகவல் ஊடக இணையத்தில் பதிவு செய்யுங்கள். விவசாயம் சார்ந்த நபர்கள் உங்கள் கட்டுரைகளை கருத்துக்களை படிக்க அதிக வாய்ப்புகள் ஏற்படும். www.agriinfomedia.com

இது தமிழின் முதல் ஆன்லைன் தினசரி விவசாய செய்தி தகவல் இணையம் ....