Friday, November 27, 2009

லிபரான் அறிக்கை: அத்வானிக்கு புது வாழ்வு?

பாரதிய ஜனதா கட்சியில் உள்கட்சிப் பூசலும், ராஜ்நாத் சிங்குக்குப் பிறகு புதிய தலைவர் யார் என்கிற சர்ச்சையும் ஓய்ந்துள்ள நிலையில், லிபரான் கமிஷன் அறிக்கை முன்கூட்டியே வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. இக் கமிஷன் 17 ஆண்டுகள் விசாரணை நடத்தி கடந்த ஜூன் 30-ம் தேதி தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.

இந்நிலையில் நீதிபதி லிபரான் கமிஷன் அறிக்கையின் ஒரு பகுதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே வெளியானது. பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான ஏ.பி.வாஜ்பாய், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 68 பேர் மீது கமிஷன் குற்றஞ்சாட்டியுள்ளது.

பாஜகவின் புதிய தலைவர் நிதின் கட்காரி என்று முடிவு செய்யப்பட்டு, அவர் இந்த ஆண்டு கடைசியில் பதவியேற்க உள்ளார். இதேபோல மாநிலங்களவையில் பா.ஜ.க. தலைவராக அருண் ஜேட்லி தொடர்ந்து நீடிப்பார் என்பதும், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எல்.கே.அத்வானி ராஜிநாமா செய்த பிறகு, அந்தப் பதவியை சுஷ்மா சுவராஜ் வகிக்க இருக்கிறார் என்பதும் தெளிவாகியுள்ளது.

கட்சிக்குப் புதிய தலைவரும், புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்ட பிறகு எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக அத்வானி தனது நண்பர்களிடம் கூறிவருகிறார். புதிய தலைமை செயல்படும்போது ஏதேனும் தவறு நேர்ந்துவிட்டால் அதற்குத் தம்மை யாரும் பொறுப்பாக்கிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுதான் இதற்கு முக்கிய காரணம்.

முரளி மனோகர் ஜோஷிதான் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவதின் விருப்பம். ஆனால், இதற்கு அத்வானி உடன்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

பா.ஜ.க. தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ்., சங்கப்பரிவாரத் தலைவர்களுக்கு இடையே கருத்து மோதல் நீடித்துவந்த நிலையில், நீதிபதி லிபரான் கமிஷன் அறிக்கை வெளியானது அவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்திவிடும் என்று தெரிகிறது.

லிபரான் அறிக்கை தாக்கல், அத்வானியின் கரத்தை மேலும் வலுப்படுத்தவே உதவும் என்பது பலரது கருத்தாகும். அதாவது இந்த அறிக்கை மீதான நடவடிக்கையாக அத்வானி சிறைக்குச் சென்றால் அது கட்சிக்கு வலுசேர்க்கும் என்றும் பலர் கருதுகின்றனர். எனினும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்த அறிக்கையின்பேரில் அத்வானியின் மீது நடவடிக்கை எடுத்து அவருக்குப் புதுவாழ்வு கொடுக்க காங்கிரஸ் விரும்பாது. ஆனால், அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர காங்கிரஸýக்கு வேறு வழி இருக்காது என்றே தோன்றுகிறது. ஏனெனில் சிறுபான்மை மக்களின் காவலர்கள் என்று கூறிவரும் சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங், ராஷ்ட்ரீய லோகதளம் தலைவர் லாலு பிரசாத், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் அத்வானி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் அரசை வலியுறுத்தக்கூடும்.

மத்திய அரசு கரும்பு கொள்முதல் விலை தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவித்தது. அதாவது கரும்புக்கான ஆதரவு விலையை மத்திய அரசு அறிவிக்கும். மாநில அரசு இதற்கு மேல் விலை நிர்ணயம் செய்தால் அதைச் சம்பந்தப்பட்ட மாநில அரசுதான் ஏற்க வேண்டும் என்று அவசரச் சட்டம் கூறுகிறது. இந்த அவசரச் சட்டத்துக்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்தச் சட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் விவசாயிகளைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் அரசு, அதைத் திசைதிருப்பும் முயற்சியில் லிபரான் கமிஷன் அறிக்கையைக் கசிய விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லிபரான் கமிஷன் அறிக்கை இந்தக் கூட்டத்தொடரின் கடைசியில்தான் தாக்கல் செய்யப்பட இருந்தது.

கரும்பு கொள்முதல் தொடர்பான அவசரச் சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியிலேயே பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மத்தியில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் சரத் பவார்தான் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். மிகவும் முக்கியமான விஷயத்தில் சரத் பவார் முன்யோசனையுடன் செயல்படாதது ஏன் என்று காங்கிரஸôர் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அண்மைத் தேர்தல்களில் வெற்றிபெற்றபோதிலும் எதிர்க்கட்சிகள் ஏதாவது ஒரு பிரச்னையைக் கையிலெடுத்துக் கொண்டு தங்களை முற்றுகையிடக்கூடும் என்பது காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாதது அல்ல.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைப் பொறுத்தவரை மாநிலங்களவையில் அதற்குப் பெரும்பான்மை இல்லை. மக்களவையில் அது திமுகவின் ஆதரவையே பெரிதும் நம்பியுள்ளது. "ஸ்பெக்டரம்' ஊழல் விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று அக்கட்சி ஏற்கெனவே காங்கிரஸýக்கு நிர்பந்தம் அளித்து வருகிறது. ஆனால், மத்திய தொலைத் தொடர்பு அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஊழல் நடந்துள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, சிபிஐ-க்கு நேரடியாகக் கடிதம் எழுதியுள்ளார். இது காங்கிரஸýக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்னை, தொலைத் தொடர்புத்துறையில் ஊழல், மதுகோடா விவகாரம் என பல்வேறு விவகாரங்கள் தலைதூக்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துவிடாமல் இருக்க காங்கிரஸ் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகத்தான் முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவை அடக்கிவைக்கும் பொருட்டு லிபரான் கமிஷன் அறிக்கையை கையிலெடுத்துக் கொண்டுள்ளது.

அயோத்தி விவகாரத்தை மக்கள் மறந்துவிட்ட நிலையில், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முடியாது என்பதை பாஜகவும் உணர்ந்துவிட்ட நிலையில் லிபரான் அறிக்கை வெளியாகியுள்ளது. இதன் மூலம் மீண்டும் அயோத்தி பேச்சு எழுந்துள்ளது.

17 தொகுப்புகளைக் கொண்ட லிபரான் கமிஷன் அறிக்கையின் ஒரு பகுதி வேண்டும் என்றே பத்திரிகை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. பாபர் மசூதி செயல் கமிட்டியைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் சரிவரச் செயல்படத் தவறிவிட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது காங்கிரûஸ ஆதரிக்காத முஸ்லிம்கள் இதுகுறித்து மௌனமாக இருந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின்போது பிரதமர் பதவி வகித்த பி.வி.நரசிம்மராவ் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாகவும் கமிஷன் கூறியுள்ளது.

பாஜக தலைவர் அத்வானி சரிவரச் செயல்படவில்லை என்று கடந்த சில மாதங்களாக சங்கப் பரிவாரங்கள் அவரைக் குறைகூறி வந்தன.

மேலும் அத்வானி ஆதரவாளர்களுக்கு முக்கியப் பதவி அளிக்கப்பட மாட்டாது என்றும் கூறிவந்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பின்னர் அத்வானியை அனுசரித்துச் செல்ல முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.

பாஜகவின் அடுத்த தலைவராக நிதின் கட்காரியை அத்வானிதான் முன்மொழிந்ததாகத் தெரிகிறது. நரேந்திர மோடியை கட்சித் தலைவராக்கிவிட வேண்டும் என்று அத்வானி விரும்பினார். அதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ஆனால், தற்போதைய சூழலில் கட்சித் தலைவர் பதவியை ஏற்க மோடி தயாராக இல்லை.

புதிய தலைவராகப் பொறுப்பேற்க உள்ள நிதின் கட்காரி சரிவரச் செயல்படத் தவறும்பட்சத்தில் அல்லது அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சிக்குத் தலைமையேற்று வழிநடத்திச் செல்ல நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

லிபரான் கமிஷன் அறிக்கை வெளியீடும், அதன் தொடர் நிகழ்வுகளும் அத்வானி எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர வழிவகுக்கலாம். அதை பாஜக தலைமையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் உருவாகலாம். அத்வானி எதிர்க்கட்சித் தலைவராக நீடிக்கிறாரோ இல்லையோ நிச்சயம் இது அவரது கரத்தை வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
கட்டுரையாளர் : நீரஜா சௌத்ரி
நன்றி : தினமணி

No comments: