Friday, November 20, 2009

சோனி எரிக்சன் சென்னை மையம் திடீர் மூடல்: ஊழியர்கள் தவிப்பு

சென்னை மணப்பாக்கத்தில் இயங்கிவந்த, சோனி எரிக்சன் மென் பொருள் மேம்பாட்டு மையத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள், மொத்தமாக வீட்டுக்கு அனுப்பப் பட்டனர். சோனி எரிக்சன் நிறுவனம், சென்னை அருகில் உள்ள மணப் பாக்கத்தில், 2007ம் ஆண்டு, மென் பொருள் மேம்பாட்டு மையத்தைத் துவக்கியது. இங்கு, புதிய மொபைல் போன்களை வடிவமைக்கும் பணி நடந்து வந்தது. சமீபத்தில் வெளியான டி-715 மொபைல், சென்னையில் வடிவமைக்கப்பட்டது தான். அந்த மொபைல் விற்பனை நன்றாகவே இருந்தது.
சோனி எரிக்சன் நிறுவனத்தின் தலைமையில் சமீபத்தில் மாற்றம் ஏற்பட்டது. புதிய தலைவராக பொறுப்பேற்றவர், உடனடியாக உலகம் முழுவதும் உள்ள அந்நிறுவனக் கிளைகளின் செயல்பாட்டை ஆராய்ந்தார். சென்னை மையம் லாபம் ஈட்டாதது தெரிந்தது. அவர் அனுப்பிய 10 பிரதிநிதிகள், சீனாவில் இருந்து நேற்று முன்தினம் சென்னை வந்தனர். காலை 10 மணிக்கு, 'மீட்டிங்' என அறிவித்து, அனைத்து ஊழியர்களையும் அழைத் தனர். 'சென்னை மையம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால், இனியும் இம்மையத்தை நடத்துவதாக இல்லை. இன்றே, இப்போதே இந்த மையம் மூடப்படுகிறது' என, அறிவித்தனர்.
காலையில் உற்சாகமாகப் பணிக்கு வந்திருந்த ஊழியர்கள், அதிர்ச்சியில் உறைந்தனர். இளம் பெண்களும், வாலிபர்களுமாக இருந்த அவர்கள், குய்யோ முய்யோ என குமுறினர்; அழுதனர். அதிகாரிகள், எதற்கும் மசிவதாக இல்லை. அனைத்து ஊழியர்களுக்கும் மூன்று மாத சம்பளம், காசோலையாக வழங்கப்பட்டது. பகல் 12 மணியளவில், மையத்தின் அனைத்து நெட்வொர்க்குகளும் துண்டிக்கப் பட்டன. ஒரு மணிக்கு கதவுகள் மூடப்பட்டன. மொத்த ஊழியர்கள் எத்தனை பேர், அதில் இந்தியர்கள் எத்தனைபேர், அவர்களின் பணிக்காலம் போன்ற தகவல்களை யாரும் கூற முன்வரவில்லை. மென்பொருள் தயாரிப்பு கம்பெனியின் நடைமுறைகளின் படி இந்த நடவடிக்கை இருக்கும் என்று கூறப்பட்டது. கண்ணீரும் கம்பலையுமாக அங்கேயே குழுமியிருந்த ஊழியர்கள், நஷ்ட ஈடாக ஆறு மாத சம்பளத் தொகையை வழங்கும்படி கேட்டு வருகின்றனர்.
நன்றி : தினமலர்


2 comments:

குப்பன்.யாஹூ said...

This is the risk of private company jobs

பாரதி said...

குப்பன்.யாஹூ வருகைக்கு நன்றி