Monday, November 9, 2009

எந்த சேவையும் கிடைக்காத பொதுச்சேவை மையங்கள்: பாதிக்கப்பட்ட முகவர்கள் கோர்ட்டுக்கு செல்ல முடிவு

'நீங்கள் இருக்கும் இடத்திற்கே அனைத்து சேவைகளும் கிடைக்கும்' என்ற நம்பமுடியாத அறிவிப்புகளோடு, ஊராட்சி பகுதிகளில் திறக்கப்பட்ட பொதுச்சேவை மையங்களில், ஓராண்டாகியும் பொதுமக்களுக்கு எந்த சேவையும் கிடைக்கவில்லை. இதனால், இரண்டு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து முகவர்களானவர்கள், நீதி கேட்டு, கோர்ட்டுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், இனி எந்த தேவைக்காகவும் நகர பகுதி அலுவலகங்களுக்கோ, வங்கிகளுக்கோ சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. கட்டணம் செலுத்துவது முதல், சான்றிதழ் பெறுவது வரை, அத்தனை சேவைகளும் உங்களைத் தேடி கிடைக்கும் என்ற அறிவிப்புகளோடு, மும்பையைத் தலைமையிடமாக கொண்ட, '3 ஐ இன்போடெக்' நிறுவனம், மார்ச் 2008ல், அரசுடன் ஒப்பந்தம் போட்டு, பொதுச்சேவை மையங்களை நாடு முழுவதும் துவக்கியது. உத்தரபிரதேசம், குஜராத், கோவா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா, தமிழகம், அரியானா, டில்லி மாநிலங்களில், இந்நிறுவனம் துவக்கப்பட்டு இயங்கி வருகிறது. தமிழகத்தில் 2,000த்திற்கும் மேற்பட்ட மையங்கள் துவக்கப்பட்டன.

கடலூர் மாவட்டத்தில் 274 மையங்கள் துவக்க முடிவு செய்யப்பட்டு, 135 மையங்கள், கடந்த ஒரு ஆண்டாக இயங்கி வருகிறது. இன்சூரன்ஸ் பிரிமியம், தொலைபேசி, மொபைல் கட்டணம், ரீ சார்ஜ், மின் கட்டணம் செலுத்துதல், ரயில், பஸ், விமான பயணச்சீட்டு முன்பதிவு, அரசின் திட்டங்கள், ஆணைகள் பிரின்ட் அவுட், தேர்வு முடிவுகள். வங்கிச் சேவைகள், கம்ப்யூட்டர் கல்வி, விவசாயிகளுக்கு சிட்டா வழங்குதல், பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது, ஓட்டுனர் பழகுனர் உரிமம் பெறுதல், ஜோதிடம் பார்த்தல் உள்ளிட்ட, பல சேவைகள் கிடைப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டது. 'பொதுச் சேவை மையங்களில், வசூல் செய்யப்படும் கட்டணத் தொகைக்கு ஏற்பட்ட கமிஷன் கொடுக்கப்படும்' என கூறப்பட்டதால், போட்டி, போட்டு பலர் முகவர்களாக இணைந்தனர். ஒரு லட்சத்து 25 ஆயிரம் முன்பணம், மையத்திற்கான இடம், அதற்கு முன்பணம் என குறைந்தது, இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து, முகவர்களாக சேர்ந்தனர். முகவர்களானவர்களுக்கு நிறுவனம் சார்பில், விளம்பரப் பலகை, மையத்திற்கு கம்ப்யூட்டர், நெட் வசதி, பிரின்டர், ஜெராக்ஸ், ஸ்கேனர் உள்ள ஒரு இயந்திரம், லாக்கர், டேபிள், சேர், மின்விசிறி போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. மாவட்ட அதிகாரிகள், அரசியல் தலைவர்களை கொண்டு மையங்கள் திறக்கப்பட்டன. மிகுந்த எதிர்பார்ப்புகளோடு திறக்கப்பட்ட பொதுச்சேவை மையங்களில், இதுவரை அரசின் முக்கிய சேவைகள், எதுவும் வழங்கவில்லை. தற்போது, மொபைல் ரீ சார்ஜ் செய்யும் பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. தனியார் இன்சூரன்ஸ் திட்டத்தில், உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறது.


வங்கிச் சேவையும் இல்லை. ஒரு சில மையங்களில் மட்டும், ஸ்டேட் பாங்க் கணக்கு துவக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து முகவர்களானவர்கள், மையம் இயங்கும் இடத்திற்கு வாடகை, மின் கட்டணம், வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம், வாங்கிய பணத்திற்கு வட்டி என, மாதம் 5,000 முதல் 10,000 ரூபாய் வரை செலவாகிறது. ரீசார்ஜ் செய்வதன் மூலம், மாதம் 200 முதல் 300 வரை, வருமானம் கிடைப்பதாக கூறுகின்றனர். வருமானமின்றி பாதிக்கப்பட்டு வரும் முகவர்கள், நிறுவனத்தை தொடர்பு கொண்டால்,'விரைவில் அனைத்து சேவைகளும் கிடைத்துவிடும்' என்ற பதிலை, ஒரு ஆண்டாக கூறி வருவதாக புலம்புகின்றனர். பொறுத்துப் பார்த்த முகவர்கள் பலர், 'முன்பணத்தில் கொடுப்பதை கொடுங்கள்' என வாங்கி விலகியுள்ளனர்; பல மையங்கள் திறக்கப்படாமல், பூட்டியே கிடக்கிறது. இதனால், பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகவர்கள், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், ஸ்ரீமுஷ்ணத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். ஒரு ஆண்டாக ஏற்பட்டுள்ள இழப்புக்கு, '3 ஐ இன்போடெக்' நிறுவனம் நஷ்ட ஈடு வழங்கக் கேட்பது, அரசு பெயரைச் சொல்லி மோசடி செய்துள்ள நிறுவனத்தின் மீது, சென்னை பொருளாதார குற்றவியல் டி.ஜி.பி.,யிடம் மனு கொடுப்பது, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்வது என முடிவு செய்துள்ளனர். 'ஐ- சர்வ் எங்கே இருக்கோ, அங்கு சந்தோஷமும், சவுகரியமும் இருக்கும்' என்ற வாசகம் மட்டும் தான், நல்லா இருக்கே தவிர, மையங்களை நடத்தி வரும் முகவர்கள் தான் சந்தோஷமாக இல்லை.
நன்றி : தினமலர்


1 comment:

வனம் said...

வணக்கம்

அட பொதுச்சேவை மையம் உள்ளடக்கம் நல்லாத்தான் இருக்கு ஏன் இது நல்லா இயங்கவில்லை ?

நல்லா இருக்கனுமே

இராஜராஜன்