Tuesday, July 28, 2009

இந்தியாவின் பழங்கள் ஏற்றுமதி இன்னமும் குறைவாகவே இருக்கிறது

இந்தியாவின் பழங்கள் ஏற்றுமதி முன்பை விட அதிகரித்திருந்தாலும், உற்பத்தியுடன் ஒப்பிடும்போது மிக மிக குறைவாகவே இருக்கிறது. உற்பத்தி அதிகமாக இருந்தாலும் அதற்கு தகுந்த ஏற்றுமதி இல்லாமல் போனதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் உபயோகம் அதிகமாகி இருப்பது, உற்பத்தி ஆன பழங்கள் உபயோகிப்போருக்கு சென்று அடைவதில் ஏற்படும் சிக்கல், விவசாயிகளிடம் கொஞ்சம் கொஞ்சமாக நிலங்கள் இருப்பது, சரியான உள்கட்டமைப்பு இல்லாதிருப்பது, பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்லும்போது ஏற்படும் செலவு அதிகமாக இருப்பது, உலக அளவிலாள தரத்திற்கு பழங்களை உற்பத்தி செய்ய முடியாமல் போனது, சர்வதேச அளவில் போக்குவரத்து செலவு அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் இந்தியாவில் இருந்து அதிக அளவில் பழங்கள் ஏற்றுமதி ஆவதில்லை என்று மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா தெரிவித்தார். கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிட்டால், 2008 - 09 நிதி ஆண்டில் ஜனவரி வரை உள்ள காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஏற்றுமதி 17 சதவீதம் மட்டுமே அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 2007 - 08 நிதி ஆண்டில் மொத்தம் 17.24 லட்சம் டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி ஆகி இருக்கிறது. அது 2008 - 09 நிதி ஆண்டில் ஜனவரியுடன் முடிந்த காலத்தில் 20.26 லட்சம் டன்னாக மட்டுமே உயர்ந்திருக்கிறது என்றார் அவர்.
நன்றி : தினமலர்


No comments: