Wednesday, July 8, 2009

சென்னையில் டீசல் இஞ்சின் தயாரிப்பை துவங்கும் ஹூண்டாய்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா, சென்னைக்கு அருகே இருக்கும் அதன் தொழிற்சாலையில், அடுத்த ஆண்டு முடிவில் இருந்து டீசல் இஞ்சின் தயாரிப்பை துவங்குகிறது. 50,000 இஞ்சின்களை தயாரிக்க வசதியுள்ள ஹண்டாய் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் டீசல் இஞ்சின்கள், அதன் ஐ - 20 மற்றும் வெர்னா மாடல் டீசல் கார்களுக்கு பயன்படுத்தப்படும். இப்போதைக்கு நாங்கள் டீசல் இஞ்சின்களை இறக்குமதிதான் செய்து கொண்டிருக்கிறோம். இங்கேயே அடுத்த வருடத்தின் இறுதியில் இருந்து தயாரிக்க இருக்கிறோம் என்றார் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் மேலாண் இயக்குனர் மற்றும் சி.இ.ஓ., ஹெச்.எம்.லீம். டில்லியில் ஐ - 20 டீசல் காரை அறிமுகப்படுத்தி பேசிய அவர், இதனை தெரிவித்தார். ஐ - 20 டீசல் கார்களின் விலையில் 25 சதவீதம், அதன் டீசல் இஞ்சினுக்கே போய் விடுகிறது என்றார் லீம். இங்கேயே டீசல் இஞ்சின்களையும் மற்ற உதிரி பாகங்களையும் தயாரித்தால் மொத்த காரின் விலை குறிப்பிட்ட அளவு குறைந்து விடும் என்று சொன்ன லீம், நாங்கள் டீசல் கார்களை அதிக அளவில் இங்கு விற்க முயற்சிப்பதற்கு அது மிக உதவியாக இருக்கும் என்றார். நேற்று ஹூண்டாய் நிறுவனம், அதன் ஐ - 20 கார்களின் டீசல் மாடலை டில்லியில் அறிமுகம் செய்தது. 1.4 லிட்டர் டீசல் இஞ்சின் பொருத்தப்பட்ட அதன் ஆரம்ப மாடல் விலை ரூ.6.19 லட்சமாகவும், அதிலேயே உயர் ரக மாடல் ரூ.7.20 லட்சமாகவும் இருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: