Wednesday, June 17, 2009

காலியான விமானத்தை ஓட்டி வர மறுத்த பைலட்டுக்கு ஏர் இந்தியா நோட்டீஸ்

பயணிகள் யாரும் இல்லாத காலி விமானம் ஒன்றை ரியாத்தில் இருந்து மும்பைக்கு ஓட்டி வர மறுத்த ஏர் இந்தியாவின் மூத்த பைலட் ஒருவருக்கு அந்நிறுவனம் ஷோ காஸ் நோட்டீஸ் கொடுத்திருக்கிறது. அது ஒரு பாதுகாப்பில்லாத விமானம். எனவே அதனை என்னால் ஒட்டி வர முடியாது என்று அந்த பைலட் ஓட்ட மறுத்து விட்டார். சரியான காரணம் எதுவுமின்றி கேப்டன் என்.கே.பெர்ரி என்ற பைலட் விமானத்தை ஓட்ட மறுத்ததால் அவருக்கு ஷோ காஸ் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் ஏர் - இந்தியா உயர் அதிகாரிகள். ஆனால் பெர்ரியோ, அந்த விமானத்தில் ஒரு கோளாறு இருக்கிறது. லேண்டிங் கியர் சரியில்லை. எனவே விமானத்தை லேண்ட் செய்யும்போது பிரச்னை வரும். இந் நிலையில் நான் எப்படி அதை ஓட்டி வருவது என்கிறார். ஆனால் அந்த விமானத்தில் அந்த கோளாறு இருப்பது உண்மைதான். மே 27 ம் தேதி ரியாத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட வேண்டிய அந்த விமானத்தில் ( பிளைட் நம்பர் ஏஐ - 882 ) லேண்டிங் கியரில் கோளாறு இருப்பது தெரிய வந்து, அதிலிருந்த பயணிகள் இறக்கப்பட்டு வேறு விமானம் மூலம் மும்பைக்கு அனுப்பப்பட்டனர். அந்த விமானத்தை சரி செய்ய ஏர் இந்தியாவுக்கு ரியாத்தில் வசதியில்லாததால்தான் கேப்டன் பெர்ரியை கொண்டு அதை மும்பைக்கு ஓட்டி வர சொன்னார்கள். ஆனால் அதை பெர்ரி ஓட்ட மறுத்ததால் வேறு பைலட்டை கொண்டு அந்த விமானத்தை மும்பைக்கு கொண்டு வந்து விட்டனர். இப்போது பெர்ரிக்கு, ஏன் விமானத்தை ஓட்ட மறுத்தீர்கள் என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: