Monday, April 13, 2009

இன்னும் 3 முதல் 5 வருடங்களில் இந்தியாவில் எலக்ட்ரிக் கார் : மாருதி சுசுகி திட்டம்

விற்பனையில் இந்தியாவின் மிகப்பெரிய கார் கம்பெனியாக இருக்கும் மாருதி சுசுகி, இன்னும் 3 முதல் 5 வருடங்களில் எலக்ட்ரிக் மற்றும் எல்.பி.ஜி. கார்களை தயாரித்து வெளியிட முடிவு செய்திருக்கிறது. இவ்வகை கார்களில் மூன்று முதல் நான்கு மாடல்களை தயாரித்து இந்திய சந்தையில் விற்பனைக்கு விட அது முடிவு செய்திருக்கிறது. இந்தியாவில் சிறிய கார் சந்தையில், பெட்ரோல் டீசலுக்கு பதிலாக மாற்று எரிபொருளை பயன்படுத்தும் முறையை அறிமுகப்படுத்த அது திட்டமிட்டிருக்கிறது. இது குறித்து மாருதி சுசுகியின் மேலாண் இயக்குனர் ஷின்சோ நாகானிஷி தெரிவிக்கையில், நாங்கள் இந்திய சந்தையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு விட திட்டமிட்டிருக்கிறோம். ஆனால் அதற்கு ஐந்து அல்லது அதற்கு மேல் வருடங்கள் ஆகலாம் என்றார். இது குறித்து மாருதி சுசுகியின் சேர்மன் பார்கவா தெரிவிக்கையில், நாங்கள் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்று எரிபொருளில் இயங்கும் கார்களை தயாரிப்பதில் கவனம் செலுத்துகிறோம். இப்போது ஒரு காரை எல்.பி.ஜி. காராக மாற்ற வேண்டுமானால் அதற்கான சாதனங்களின் விலை ரூ.40 ஆயிரமாக இருக்கிறது. அது கொஞ்சம் விலை உயர்வுதான். எனவேதான் நாங்கள் அவ்வகை கார்களை தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்திருக்கிறோம். ஆனால் அது 2010 அல்லது 2011 ல் தான் வெளிவரும் என்றார்.
நன்றி : தினமலர்