Thursday, March 19, 2009

மூலப்பொருட்கள் விலை குறைந்தாலும் உற்பத்தி பொருளில் மாறுதல் இல்லை

மூலப்பொருள் விலை குறைந்தாலும், இன்ஜினியரிங் பொருள்களின் விலையில் மாற்றம் பெரிய அளவில் ஏற்படவில்லை; சில இடங்களில் மட்டும் விலை குறைப்பு செய்து ஏற்றுமதி செய்கின்றனர். கோவையில் இன்ஜினியரிங் உற்பத்திப் பொருட்களான வெட்கிரைண்டர், வாகன உதிரி பாகங்கள், ரயில்வேக்கு தேவையான பொருட்களும் உற்பத்தியாகி வருகின்றன. காஸ்டிங் பொருட்களின் ஏற்றுமதி நன்றாக இருக்கிறது. சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்குலைவு இந்தியாவிலும் எதிரொலித்தது. ஒலிம்பிக் நடத்த பல லட்சம் டன் இரும்பை இந்தியா ஏற்றுமதி செய்தது. சீனாவின் தேவை குறைந்ததும், சர்வதேச மார்க்கெட்டில் இரும்பின் விலை குறைந்தது. இதையடுத்து, இரும்பு ஏற்றுமதியில் முன்னணி வகுத்த நாடான இந்தியாவிலும் விலை சரிந்தது. ஒரு கிலோ இரும்பு 55ல் இருந்து 30 ரூபாயாகக் குறைந்துள்ளது. இரும்பு விலை சர்வதேச அளவில் குறைந்ததோடு, கச்சா எண்ணெய் விலையிலும் மாற்றம் ஏற்பட்டது. ஒரு பேரல் 140 ரூபாய் வரை சென்று, இப்போது 40 ரூபாய் அளவில் உள்ளது. எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டாலும், அது பெரிதும் எதிரொலிக்கவில்லை.
இன்ஜினியரிங் பொருட்கள் அனைத்தும் உலோகம் தொடர்பானவை. எனவே, சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்களும் உள்ளூர் மார்க்கெட்டில் எதிரொலிக்கும். இரும்பு விலை குறைந்தாலும், தாமிரம் விலை ஏற்றம் கண்டுள்ளது. கிலோ 300 ரூபாய் வரை இறங்கிய தாமிர விலை, தற்சமயம் ஏறுமுகமாக உள்ளது; ஒரு கிலோ 380 ரூபாயாக உயர்ந்துள்ளது. எனவே, மோட்டார் பம்ப் செட்களின் விலை குறைய வாய்ப்பில்லை. வாகனங்களில் பயன்படும் இரும்பு உருக்கின் தேவை குறைந்துள்ளது. வாகன விற்பனையில் காணப்படும் மந்த நிலையால், கார் உற்பத்தி குறைந்துள்ளது. 'காஸ்டிங்' பொருட்களின் விலையும் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. காஸ்டிங் பொருள் ஏற்றுமதி செய்வோருக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, சாதகமானதாக மாறியுள்ளது. இரும்பு விலை குறைவும், டாலர் மதிப்பு உயர்வும் ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இன்ஜினியரிங் உற்பத்தி பொருட்களின் விலை குறைப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், விரைவில் அதன் விலையும் குறையலாமென பலரும் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி : தினமலர்

No comments: