Thursday, November 26, 2009

சிமென்ட் ஆலைகள் அதிகரிப்பு: விலை மூட்டைக்கு ரூ. 45 குறைவு


தமிழகத்தில், சிமென்ட் உற்பத்தி, ஆலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், சிமென்ட் விலை மூட்டைக்கு 45 ரூபாய் வரை குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பால், 200 ரூபாய்க்கு விற்ற அரசு சிமென்ட் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில், ஒன்றரை ஆண்டுக்கு முன் சிமென்ட் விலை மூட்டை 280 ரூபாய் வரை உயர்ந்தது. இரண்டு மாதத்துக்கு முன், ராம்கோ, செட்டிநாடு, டால்மியா, பிர்லா, அல்ட்ராடெக் நிறுவனங்களின் சிமென்ட் விலை, மூட்டை 260 ரூபாய்க்கும், ஆந்திராவிலிருந்து வரும் மகா, பிரியா, பென்னா ஆகிய நிறுவனங்களின் சிமென்ட் மூட்டை 230 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
கடுமையான விலை உயர்வால் கட்டடப் பணிகள் பாதிக்கப்பட்டன. முதல்வர் கருணாநிதி, 'வெளிநாடுகளிலிருந்து சிமென்ட் இறக்குமதி செய்து, ஒரு மூட்டை 200 ரூபாய்க்கு அரசே விற்பனை செய்யும்' என, அறிவித்தார். இதையடுத்து, தமிழக சிமென்ட் ஆலை உரிமையாளர்கள், அரசுக்கு குறிப்பிட்ட அளவு சிமென்ட் மூட்டை வழங்க சம்மதித்தனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம், சிமென்ட் கொள்முதல் செய்து, தாலுகா வாரியாக நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளில், 200 ரூபாய்க்கு சிமென்ட் விற்பனையை அரசு துவக்கியது. கட்டட வரைபடம், ரேஷன்கார்டு நகல் ஆகியவை வழங்கினால்தான், சிமென்ட் வழங்குவதாக அரசு முதலில் அறிவித்தது. 'சிமென்ட்டுக்கான தொகையை டி.டி.,யாக மட்டுமே செலுத்த வேண்டும். அதுவும் 200 மூட்டைகள் தான் வழங்கப்படும்' என, நிபந்தனை விதித்தது.

இந்த நிபந்தனைகளால், சிமென்ட் விற்பனை துவக்கத்தில் மந்தமாகவே இருந்தது. இதையடுத்து, விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. 'ரேஷன் கார்டு நகல் மட்டும் இருந்தால் போதும், 25 மூட்டை, 50 மூட்டை என, தவணை முறையில் பெறலாம்' என, அரசு அறிவித்தது. இதையடுத்து, அரசு சிமென்ட் விற்பனை சூடுபிடித்தது. நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களின் முறைகேடுகளால், மக்கள் பதிவு செய்து இரண்டு மாதம் வரை சிமென்டுக்கு காத்திருக்க வேண்டியிருந்தது. குறைந்த விலையில் சிமென்ட் கிடைத்தும், அதை பயன்படுத்த முடியாமல், மக்கள் கூடுதல் விலைக்கு வெளி மார்க்கெட்டில் வாங்கும் நிலை ஏற்பட்டது.

இதனிடையே, புதிய சிமென்ட் ஆலைகள் தமிழகத்தில் உற்பத்தியை துவக்கியுள்ளன. 'ராம்கோ' சிமென்ட் நிறுவனம், ஐந்து மாதத்துக்கு முன் அரியலூரிலும், இரண்டு மாதங்களுக்கு முன் வாழப்பாடியிலும் புதிய ஆலையை துவக்கியுள்ளது. 'டால்மியா' மற்றும் 'செட்டிநாடு' சிமென்ட் நிறுவனங்கள் அரியலூரில் தலா ஒரு யூனிட்டை துவக்கியுள்ளன. இதன் விளைவாக, சிமென்ட் உற்பத்தி அதிகரித்து, சிமென்ட் விலை மூட்டைக்கு 45 ரூபாய் வரை குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில், சராசரியாக மாதம் 40 முதல் 45 ஆயிரம் டன் சிமென்ட் விற்பனையாகும். அரசின் சிமென்ட் விற்பனையால், 15 ஆயிரம் டன் வரை விற்பனை குறைந்தது. தற்போது, தனியாரிடம் விலை குறைந்ததால், அரசின் சிமென்ட் விற்பனை குறைந்து விட்டது. தனியார் கடைகளில் மீண்டும் விற்பனை அதிகரித்து, சென்ற மாதம் 45 ஆயிரம் டன் சிமென்ட் விற்பனையானது.

ஈரோடு மொத்த விற்பனையாளர் பரிமளம் வேல்முருகன் கூறுகையில், 'அரசின் நேரடி விற்பனையால், தனியார் சிமென்ட் விற்பனை பாதித்தது. தற்போது, சிமென்ட் நிறுவனங்கள் கூடுதலாக ஆலைகளை துவக்கியுள்ளன. சிமென்ட் உற்பத்தி அதிகரிப்பால், சென்ற மாதம் முதல் மூட்டைக்கு 45 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. தமிழக ஆலைகளின் சிமென்ட் மூட்டை 215 ரூபாய்க்கும், ஆந்திரா ஆலைகளின் சிமென்ட் மூட்டை 185 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது' என்றார்.


No comments: