Thursday, November 19, 2009

'ஜெட்' வேகத்தில் தங்கம் : ஒரு சவரன் 13 ஆயிரம் ரூபாய்

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்தது. நேற்று ஒரு சவரன் 12,984 ரூபாய்க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை குறைவதாக இல்லை; நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே போகிறது. கடந்த மாதத்தில் 11 ஆயிரத்திற்கு விற்ற தங்கம், இந்த மாத துவக்கத்தில் 12 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது. தொடர்ந்து, தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
நேற்று முன்தினம் ஒரு கிராம், 1,605 ரூபாயாகவும், சவரன் 12,840 ரூபாயாகவும் இருந்தது. நேற்றும் கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்தது. நேற்று மாலை ஒரு கிராம், 1,623 ரூபாயாகவும், ஒரு சவரன், 12,984 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரே நாளில் சவரனுக்கு 144 ரூபாய் அதிகரித்தது.

இந்நிலையில், இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 1,625 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 13 ஆயிரமாக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை 17 ஆயிரத்து 475 ரூபாயாகவும், பார் வெள்ளியின் விலை 29 ஆயிரத்து 945 ரூபாயாகவும் உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை(சில்லரை) 32.05 ரூபாயாக உள்ளது.

இதுகுறித்து தங்க நகை வியாபாரிகள் கூறுகையில், 'சர்வதேச அளவிலான பொருளாதார மாற்றமும், தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என கருதி உலக நாடுகள் தங்கத்தை வாங்கிக் குவிப்பதாலும் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜெட் வேகத்தில் ஏறும் தங்கத்தின் விலை இப்போதைக்கு குறையாது, சில நாட்களில் 13 ஆயிரம் ரூபாயைத் தாண்டிவிடும்' என்றனர்.
நன்றி : தினமலர்

No comments: