Thursday, August 27, 2009

ஏர்-இந்தியாவில் சம்பள குறைப்பு: பேச்சில் உடன்பாடு இல்லை

ஏர்-இந்தியா நிர்வாகம் மற்றும் அதன் ஊழியர் சங்கங்கள் இடையே, சம்பளம் மறுசீரமைப்பு குறித்து நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஏர்-இந்தியா நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க, பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பணியாளர்களுக்கு வழங்கப்படும், 'பிளையிங் அலவன்சில்' 50 சதவீதம் குறைக்கும் திட்டம் குறித்து, பணியாளர்கள் சங்கங்களுடன் பேச்சு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. ஏர்-இந்தியா நிறுவனம், 1,400 கோடி ரூபாய் வரை பிளையிங் அலவன்சாக வழங்கி வருகிறது. தங்கள் நிறுவனத்தின் நஷ்டத்தை குறைக்க, அதை 700 கோடி ரூபாயாக குறைக்க திட்டமிட்டது.
இது குறித்து ஏர் கார்ப்பரேஷன் பணியாளர்கள் சங்க மண்டல செயலர் விவேக் ராவ் கூறியதாவது: ஏர்-இந்தியா நிர்வாகத்தினருடனான பேச்சு நேற்று முன்தினம் மதியம் தொடங்கி நேற்று காலை வரை நீடித்தது. ஆனால், அதில், எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. பணியாளர்களின் சம்பளம் குறைப்பதைத் தவிர்த்து, கம்பெனியை நஷ்டத்தில் இருந்து காக்க, வேறு மாற்று வழிகள் உள்ளன. எந்த வகை சம்பள குறைப்பையும் நாங்கள் எதிர்க்கிறோம். மற்ற வீணான செலவினங்கள் குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களை பொறுத்தவரை, சம்பள குறைப்பு என்பது ஒரு தீர்வாகாது. எங்கள் நிலையில், தொடர்ந்து உறுதியாக இருப்போம். இவ்வாறு விவேக் கூறினார்.

நன்றி : தினமலர்





No comments: