Tuesday, August 4, 2009

ஹூண்டாய் மோட்டாஸில் ஆகஸ்டு மாதத்தில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா, இம்மாதத்தில் புதிதாக 1,000 பணியாளர்களை தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளது. மேலும் வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து தொழிற்சாலைகளின் உற்பத்தி திறனை சுமார் 20 சதவீதம் அதிகரிக்கவும் முடிவு செய்திருக்கிறது. வெளிநாடுகளில் இந்நிறுவனத்தின் கார்களுக்கான தேவை அதிகரித்து வருவதையடுத்து மேற்கண்ட நடவடிக்கைகளில் இறங்க உள்ளது. ஹூண்டாய் நிறுவனம், சென்னையில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளில் ஏற்கனவே ஜூலை மாதத்திலிருந்து அதன் கார்கள் உற்பத்தியை சுமார் 25 சதவீதமும், பணியாளர்களின் எண்ணிக்கையை 1,000-த்துக்கும் அதிகமான அளவிலும் உயர்த்தியுள்ளது. சென்ற மாதத்தில் உற்பத்தி உயர்ந்த பிறகு, இந்நிறுவனம் நாள் ஒன்றுக்கு சுமார் 2,000 கார்களை தயாரித்து வருகிறது. இரண்டாவது தொழிற்சாலையில் மூன்றாவது ஷிஃப்ட் தொடங்கும்போது நாள் ஒன்றுக்கு மேலும் 400 கார்களை தயாரிக்க இயலும். நடப்பு ஆகஸ்டு மாதத்தில் மேலும் 1,000 புதிய பணியாளர்களை நியமிக்கும் பட்சத்தில், நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 12,000 என்ற அளவை தாண்டும் என ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எச்.எஸ்.லீம் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


No comments: