Sunday, July 26, 2009

கம்பெனிகளின் காலாண்டு முடிவால் தொடர்கிறது பங்குச் சந்தை ஏற்றம்

சிறப்பான காலாண்டு முடிவுகள் தான் சந்தை நிலவரத்தை நிர்ணயிக்கின்றன. வியாழனும், வெள்ளியும் சந்தையில் மின்னியதற்கு காரணம் காலாண்டு முடிவுகள் தான். பெரிய சாப்ட்வேர் கம்பெனிகள் அனைத்தும் நல்ல காலாண்டு முடிவுகளைத் தருவது தொடர்கிறது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் சிறிது நாட்களாக 48 அளவிலேயே நிற்பதும், சாப்ட்வேர் கம்பெனிகளுக்கு ஒரு சாதகமான அம்சம். ஆதலால், சந்தை வியாழனன்று மும்பை பங்குச் சந்தை 219 புள்ளிகள் மேலே சென்று முடிவடைந்தது.
வெள்ளியன்று காலையில் சிறிது டல்லாக இருந்த பங்குச் சந்தை மதியத்திற்கு மேலே சென்றது. ஆட்டோ, கட்டுமானத்துறை, மெட்டல் ஆகிய துறைப் பங்குகள் மேலே சென்றன. குறிப்பாக ஆட்டோ பங்குகள் பறந்தன; வங்கிப் பங்குகள் கீழே சரிந்தன.
ஏன் சரிந்தது? : அடுத்த வாரம் ரிசர்வ் வங்கியின் காலாண்டு மானிடரி பாலிசி அறிவிப்புகள் வருகின்றன; ஆதலால் தானா? வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 148 புள்ளிகள் கூடி 15,378 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 44 புள்ளிகள் கூடி 4,568 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. சந்தை மறுபடி ஜம்மென 15 ஆயிரத்தைத் தாண்டி சென்றிருக்கிறது.
புதிய வெளியீடுகள்: சமீபத்திய மகிந்த்ரா ஹாலிடே ரிசார்ட் புதிய வெளியீடு ஒன்பது தடவைகளுக்கு மேல் செலுத்தப் பட்டது ஞாபகமிருக்கலாம். அந்த கம்பெனியின் பங்குகள் சென்ற வாரம் பட்டியலிடப்பட்ட பிறகு 30 சதவீதம் கூடியுள்ளது. இது மற்ற கம்பெனிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். வைத்திருப்பவர்களுக்கு இதுவரை 30 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது. ராஜ் ஆயில் மில் வெளியீடு முடிவு தேதி அன்று முழுதாகச் செலுத்தப்பட்டது. சிறிய முதலீட்டாளர்கள் பகுதி ஒரு தடவைக்கும் கீழாகத்தான் செலுத்தப்பட்டிருந்தது. இருந்தாலும், எண்ணெய் விலை கூடி வருவதால் பட்டியலிடப்படும் போது பிரிமியத்தில் பட்டியலிப்படலாம் என்று கூறப்படுகிறது. அடுத்த வாரம் அதானி பவர் வருகிறது. பெரிய வெளியீடாக இருப்பதால் எப்படி செலுத்தப்படுகிறது என்பது மிகவும் முக்கியமான விஷயம்.
ஒரே மார்க்கெட் பிரிமியம்: கொஞ்ச நாளாக புதிய வெளியீடுகளுக்கான க்ரே மார்க்கெட் பிரிமியம் இல்லாமல் இருந்தது. தற்போது மறுபடி தலைதூக்க ஆரம்பித்துள்ளது. வரவிருக்கிற அதானி பவருக்கு 8 முதல் 12 ரூபாய் வரையும், என்.எச்.பி.சி., வெளியீட்டிற்கு 11 முதல் 13 ரூபாய் வரையும் பிரிமியம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பணவீக்கம்: சென்ற வார பணவீக்கம் மைனஸ் 1.21 சதவீதமாக இருந்தது. அது 0.04 சதவீதம் குறைந்து மைனஸ் 1.17 சதவீதமாக உள்ளது. பொருட்களின் விலை 100 சதவீதத்திற்கு மேலே கூடியுள்ளது. ஆனால், பணவீக்கம் அசைவதாக இல்லை.
கூடி வரும் நேர்முக வரிகள்: இந்த வருடத்தின் முதல் காலாண்டு முடிவில் நேர்முக வரி கலெக்ஷன் 3.65 சதவீதம், சென்ற வருடம் இதே காலாண்டை விடக் கூடியுள்ளது ஒரு நல்ல அறிகுறி.
காலாண்டு முடிவுகள்: விப்ரோ சென்ற வருடம் இதே காலாண்டை விட 12 சதவீதம் அதிகமாக லாபம் ஈட்டியுள்ளது. இது தவிர ஹெச்.டி.எப்.சி., கனரா வங்கி, மாருதி, ஐ.டி.சி., மாரிகோ, பார்தி டெலிகாம் ஆகிய கம்பெனிகளும் நல்ல காலாண்டு முடிவுகளைத் தந்துள்ளன. செலவுகளைக் கட்டுப்படுத்தினால் சேமிக்க முடியும் என்பதற்கு கம்பெனிகளின் இந்த காலாண்டு முடிவுகள் ஒரு எடுத்துக்காட்டு. இது கம்பெனிகளுக்கும் பொருந் தும்; வீட்டுக்கும் பொருந்தும். கம்பெனிகளே செலவுகளைக் கட்டுப்படுத்தும் போது, வீட்டிலும் கட்டுப்படுத்தி இன்னும் சேமிக்கலாம் அல்லவா? செய்ய ஆரம்பியுங்கள்.
வெளிநாடு முதலீட்டு நிறுவனங்கள்: வெளிநாடு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவது மறுபடி அதிகரித்துள்ளது, பங்குச் சந்தை கூடுவதற்கு ஒரு காரணம்; இது தொடருமென எதிர்பார்க்கப் படுகிறது. ஏனெனில், உலகளவில் அவர்கள் வருமானங்கள் பார்ப்பதற்கு இந்தியா ஒரு நல்ல சந்தை.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்? : உலகளவில் பங்குச் சந்தைகளின் ஏற்றம், நல்ல காலாண்டு முடிவுகள் போன்றவை சந்தையை தூக்கிச் சென்றிருக்கின்றன. மேலும், சந்தையை 15 ஆயிரம் புள்ளியில் நிறுத்தியும் வைத்திருக்கின்றன. சந்தையின் ஏற்றம் தொடரும்.
-சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்


No comments: